Powered By Blogger

ஞாயிறு, 30 டிசம்பர், 2012


கடந்த 40 வருடங்களாக செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன், கடந்த 1.6 மில்லியன்  ஆண்டுகளாக பூமியின் மேலும் அடித்தளங்களிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவற்றின் மூலமாக கனிம வளங்கள், நீர் வளங்கள், எண்ணெய் வளங்கள், நதியின் வாழ்க்கை வரலாறு, கடல் மற்றும் பாலைவனங்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவர், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  முனைவர் சோம. இராமசாமி. அவர், நீர் நிலைகள் மற்றும் அவற்றைக் காக்கும் முறைகள் பற்றியும் கூறிய கருத்துக்களில் சில:

நதிகள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயரும்போது அவை விட்டுச்சென்ற வழித்தடங்களில் முந்திரிப் பூ வடிவில் அங்குமிங்குமாக   புதையுண்ட குளங்கள் இருக்கும். இந்தக் குளங்களுக்கும் தற்போது அப்பகுதிகளில் ஓடும் நதிகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கும் (Underground drainage link). இந்தக் கழிமுகக்குளங்கள் என்பது அருமையான வரப்பிரசாதம்.

நதிகள் உருவாகும்போதே நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம், எவ்வளவு வேகமாகப் பயணிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்து விடும். நதிகளின் ஒரே குறிக்கோள், எவ்வளவு வேகமாக கடலை அடைய முடியுமோ அவ்வளவு வேகமாக அடைய வேண்டும் என்பதே. உயரமான மலைகளைக் கடந்து சமவெளிக்கு வரும்போது, நதியின் வேகம் குறையும். இதனை watch and walk face  என்று அழைப்பார்கள். கடலோரப் பகுதிகளை அடைந்த பின்னர், அலைகளின் தாக்கத்தால் தள்ளாடித் தள்ளாடி கடலில் நதிகள் சேரும். நதியின் வாழ்க்கையும் மனிதனின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான்.

உலகில் உள்ள பல டெல்டாக்களில் தமிழகத்தில் உள்ள டெல்டாக்களே அபூர்வமானவை. ஏனென்றால், அவை இயற்கையாகவே உருவானவை.வடசென்னை, பொன்னேரி, புதுக்கோட்டை வெள்ளாறு, மணமேல்குடி, சுந்தரபாண்டியங்குளம்,தேவகோட்டை மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

உலகில் எந்தப் பகுதியிலும் காண இயலாத டெல்டாதான் வைகை. இது ஏறக்குறைய 25,000 குளங்களை உருவாக்கி உள்ளது. பூமி மேலே எழும்புகிற காரணத்தாலும், கடல் உள்வாங்குகிற காரணத்தாலும் உருவான பல பிறை வடிவக் குளங்கள் எல்லாமே வைகை நதியுடன் இணைக்கப்பட்டதுதான். எனவே, வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இந்த  அனைத்துக் குளங்களும் நிரம்பிவிடும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.

முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை:
அக்காலத்துக் கோயில்கள் நீர்த் தேக்கத்திற்கும், மழைநீர் சேகரிப்பிற்கும் நல்ல எடுத்துக்காட்டு.  மழைக்காலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மழைநீர்-கோபுரங்கள், மேல் மதில்கள், பிரகாரங்கள்  வழியாக பொற் தாமரைக்குளத்தினை வந்தடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிப்பிரகாரங்களில் விழும் மழைநீர், பக்தர்களின் கால் படுபவை. எனவே, அவை வெளியே அனுப்பப்படுகிறது. இவ்வாறு மழைநீர் சேகரிப்பின் மூலம் குளங்களை உருவாக்கலாம். இதுமட்டுமின்றி, கோயில்களைச் சுற்றி நந்தவனங்கள் காணப்படும்.அவற்றில் இருந்து வரும் நீரும் குளத்திலேயே விடப்படும். எனவே, அங்கு உள்ள நீர், மூலிகைத் தன்மை வாய்ந்ததாகவும் கருதப்பட்டு தெவீகத்தன்மையுடன் குளங்கள் காக்கப்பட்டன.

ஆனால், இன்று நந்தவனங்களும் இல்லை. அதனால்தான்  காலப்போக்கில் கண்மாய்கள் காணாமல் போய்விட்டன.எனினும் காளையார்கோயில், கண்டவராயன்பட்டி போன்ற பகுதிகளில் காணப்படும் தெப்பக்குளங்களில் 7 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வரத்துக் கால்வாய்கள் காணப்படுகின்றன. இவற்றைப் பராமரிக்க, செயற்கைக் கோள் படங்கள் மற்றும் அக்காலத்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட Hatchood map (for surveying) நமக்கு உதவும்.

குளங்களின் தன்மை, அங்குள்ள சுற்றுச்சுழல் போன்றவைகளை வைத்தே பெரும்பாலும் குளங்களுக்கு பறவைகள் வந்து செல்கின்றன. அவை சரியான முறையில்  பராமரிக்கப்பட்டால் சுற்றுலாவும் வளரும். கிராம மக்களின் வாழ்வும் செழிக்கும். மீன்வளர்ப்புக் குளங்கள் மேலாண்மைக்கு உதவும், எடுத்துக்காட்டாக, வைகை நதியில் மீன் வளர்ப்பு (VIFI aqua culture ).

நீர்நிலைகளின் உயிர் என்பது நம் கையில்தான் உள்ளது. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி,   நீர்நிலைகளை நன்முறையில் பாதுகாக்க முடியும்."

உமிழ்நீர் மூலம் மரபணு நோய்களைக் கண்டறியும் பரிசோதனை சென்னையில் செய்யப்படுகிறது

ப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத் தாத்தாவும் நமக்கு சேர்த்து வைத்துவிட்டுப் போவது பரம்பரைச் சொத்து மட்டுமல்ல; அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயம், ரசனை, பழக்க வழக்கங்கள் எல்லாமே உங்களை ஏதோ ஒருவிதத்தில் தாக்கத்துக்குள்ளாக்குகிறது.

நமது மரபணுக்களில் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சமாச்சாரம் இது என்று அறிவியல்  சொல்கிறது. உங்கள் தாத்தா நாதஸ்வர வித்வானாக இருந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அட்டகாசமாக சாக்ஸபோன் வாசிப்பவராக இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இவை மட்டுமின்றி, அவர்களுடைய நோய்களையும் நம் மரபணுக்களில் விதையாக ஊன்றிச் செல்கிறார்கள் என்பதுதான் வேதனை. அவர்கள் விட்டுச் செல்லும் சொத்து மட்டும் வேண்டும், நோய்கள் வேண்டாம் என்றால் எப்படி?

கவலைப்படாதீர்கள், இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவும் அறிவியல் ஒருவழியை கண்டுபிடித்துத் தந்திருக்கிறது.

செர்ஜி மிகாலோவிச் ப்ரின் என்று பெயர் சொன்னால் உடனே தெரியாது. ஆனால், ‘கூகுள்’ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்று சொன்னால் தெரியுமில்லையா? இந்த செர்ஜியின் மனைவி ஓர் உயிரியல் தொழில்நுட்பப் பட்டதாரி. கம்ப்யூட்டர் விற்பன்னரும், உயிரியல் தொழில்நுட்பம் தெரிந்தவரும் இணைந்தால் என்னாகும்? ஆராய்ச்சிதான். மனித மரபணுக்கள் தொடர்பாக நிறைய துறை சார்ந்த பேராசிரியர்களிடம் நாட்கணக்கில் பேசிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது நமது மூதாதையர்களிடமிருந்து நமது மரபணுக்களில் கடத்தப்படும் செய்திகள், கம்ப்யூட்டரில்  சேமிக்கப்படும் டேட்டாபேஸ் மாதிரி அவற்றை வாசித்துப் புரிந்து கொண்டால், மென்பொருளை திருத்துவது மாதிரி நமக்குத் தேவையான சில திருத்தங்களை செய்துகொள்ளலாம்.

இதெல்லாம் தேவையற்ற வேலை. எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளாத வாழ்க்கையே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்றெல்லாம் நிறைய பேர் செர்ஜியை விமர்சித்தார்கள்.

செர்ஜி மெனக்கெட்டு இவ்வளவு ஆராய்ச்சிகளுக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ள ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது. அவரது தாயாரை பார்கின்சன் நோய் தாக்கியிருந்தது. இது பரம்பரையாக தாக்கக்கூடிய நோய் என்று அவர் நினைத்தார். இதிலிருந்து தன்னை எப்படி எதிர்காலத்தில் காத்துக்கொள்வது என்கிற தேடலில் மூழ்கியதன் விளைவே இதெல்லாம் (பிற்பாடு அந்த நோய் பரம்பரையாக கடத்தப்படுவதல்ல என்ற முடிவுக்கு அவர் வந்தது வேறு கதை).

இப்படியாகத்தான் 23andMe என்கிற மரபணு பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிற ஒரு நிறுவனத்தை தம்பதி சமேதரரா தொடங்கினார்கள். 23 என்கிற எண் நம்முடைய குரோமோசோம் ஜோடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

2007ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மரபுரீதியாக நமக்கு என்ன நோய்கள் வரும் என்பதை அறிந்துகொள்ள ஓர் எளிமையான முறையைக் கண்டறிந்தது. அதாவது நம் எச்சிலைத் துப்பினால் போதும், அதில் இருக்கும் டி.என்.ஏ.க்களை ஆராய்ந்து, அவர்கள் வாசித்துக்கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு நமக்கு வரக்கூடிய மரபார்ந்த நோய்களை அறிவார்கள். இவற்றைத் தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ எப்படி என்று மருத்துவர்கள் மூலமாக ஆலோசனை சொல்வார்கள். 2008ம் ஆண்டு இந்தச் சோதனை முறையை வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக, ‘டைம்’ பத்திரிகை அறிவித்தது. அமெரிக்கர்கள் பலரும் கடந்த ஐந்தாண்டுகளில் இச்சோதனையை மேற்கொண்டு, எதிர்காலத்தில் தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நோய்களின் தாக்குதலை சமாளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா..? அவர்களுக்கு மட்டும்தான் பரம்பரை நோய்கள் வருமா..? இந்த நவீன சோதனைமுறை அவர்களுக்கு மட்டும்தானா என்று அவசரமாக மனம் குமுறாதீர்கள்.

நமக்கும் இந்த வசதி வந்துவிட்டது. அதிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மரபணு நோய்களை முன்கூட்டியே கண்டறியும் பரிசோதனையை செய்யும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்கோட் லைஃப் சயின்சஸ் என்கிற நிறுவனம் இந்தக் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள மட்டுமே பெரும் முதலீட்டில் களமிறங்கியிருக்கிறது. அதற்காக சோதனைக்கு நம்முடைய சொத்தையே எழுதி வாங்கிவிடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியதில்லை. சோதனைக் கட்டணம் ரொம்பவும் அதிகமல்ல, அதே நேரம் ரொம்பவும் குறைவுமல்ல.

இச்சோதனையை மேற்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

www.xcode.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று, உங்கள் மரபணுக்களை சேகரிக்க வேண்டிய kitஐ கோரலாம். இரண்டு நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். எச்சிலை சிறிய ட்யூப்பில் துப்பிவிட்டு, அவர்கள் குறிப்பிடுவதைப்போல தயார் செய்துவிட்டு போன் செய்தால் போதும், கூரியர் மூலமாக அவர்களே வீட்டுக்கு வந்து பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள். மருத்துவமனைக்கோ, பரிசோதனைக்கூடத்துக்கோ அலைய வேண்டியதில்லை.

மொத்தமே அவ்வளவுதான். உங்களுடைய ரிப்போர்ட்டை நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள்ளாக உங்கள் வீட்டுக்கே அனுப்பிவிடுவார்கள்.

சர்க்கரை நோய், கொழுப்பு, இதயநோய், வாதம் தொடர்பான நோய்களுக்கான சோதனை முறைகள்தான் இப்போதைக்கு இருக்கின்றன. எதிர்காலத்தில் மரபுரீதியாக வரக்கூடிய மற்ற நோய்களைக் கண்டறிவதற்கான வசதியும் இங்கே கிடைக்கும். உங்களுக்கு என்னென்ன நோய்கள் வரக்கூடுமென்று சொல்லுவதோடு, அவற்றைத் தவிர்க்கவோ கட்டுப்படுத்தவோ என்னென்ன மாதிரியான உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம் என்று மருத்துவ ஆலோசனையும் தருகிறார்கள். இப்போது இருக்கும் சோதனை முறைக்கு அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்வரைதான் செலவாகும்.

அப்புறமென்ன? என்னென்ன நோய் வருமோ என்று அஞ்சி நடுங்காமல், ஒரு சோதனையை எடுத்துவிட்டு வருமுன் காக்கத் தயாராகுங்கள்.

 டிசம்பர் 11, 2012

அடையாறிலிருந்து சி 51 எண் கொண்ட மாநகரப் பேருந்து ஒன்று தாம்பரத்திற்கு சென்று கொண்டிருந்தது. பாலவாக்கம் அடுத்த வெட்டுவாங்கேணி அருகே பேருந்து சென்றபோது, நடத்துநர் செல்வராஜ் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த  10 கல்லூரி மாணவர்களிடம், ‘பாஸ் இருந்தால் காண்பியுங்கள், இல்லாவிட்டால் டிக்கெட் எடுங்கள்’ என்று கூறியுள்ளார்.  டிக்கெட் எடுக்க முடியாது  என்று ரகளை செய்த மாணவர்களை, பேருந்தை விட்டுக் கீழே இறங்கும்படி தெரிவித்துள்ளார் நடத்துநர். இதில் ஆத்திரம் அடைந்த 10 கல்லூரி மாணவர்களும் சேர்ந்து, செல்வராஜை கொடூரமாகத் தாக்கியுள்ளனர், இதில் அவருடைய கை எலும்பு முறிந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 நவம்பர் 23, 2012

நம்பியூரில் இருந்து  சத்தியமங்கலத்துக்குச் சென்றுகொண்டிருந்தது அந்த அரசு நகரப்பேருந்து.  பேருந்தை ஓட்டுநர் செல்வராஜ் ஓட்டிக் கொண்டிருந்தார். பேருந்து ஊஞ்சப்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று செல்வராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ஓட்டுநர் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை அருகில் இருந்த ஒரு வீட்டுச் சுவரில் மோதி, நிலைதடுமாறி நின்றது. மயங்கிய நிலையில் இருந்த ஓட்டுநர் செல்வராஜ், சிறிது நேரத்தில் இறந்து போனார். அவரது மாரடைப்புக்குக் காரணம், ஓய்வற்ற தொடர் பணிஅழுத்தம். அன்று கூட அவர்  பணி முடிந்த பிறகும் கூடுதலாக அடுத்த ஷிப்டும் தொடர்ந்து பேருந்தை இயக்கும்படி பணிக்கப்பட்டிருந்தார்.

ஏப்ரல் 16, 2012

ஈரோட்டில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை நவாப் ஜான் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். பேருந்து ஈரோடு அருகே கணபதிபாளையம் என்ற இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, நவாப் ஜானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தாங்க முடியாத வலியால் துடித்த அவர் வலியைப் பொருட்படுத்தாமல், பேருந்தை ஓரங்கட்டினார். வலியோடு பேருந்திலிருந்து கீழே இறங்கியவர் மயங்கி விழுந்தார்.  அவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல்  இறந்தார்.

நவம்பர் 11, 2011

கவுந்தப்பாடி அரசு போக்குவரத்துக்கழகக் கிளையில் நகரப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்த ஜேக்கப், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தை ஓட்ட, இருக்கையில் அமர்ந்ததும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.  ஆனால், மருத்துவமனை செல்வதற்கு முன், வழியிலேயே ஜேக்கப்பின் உயிர் பிரிந்தது.

பணி நேரத்தில் தாக்கப்பட்ட மற்றும் உயிர் துறந்த சில அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களைப் பற்றிய தகவல்கள் இவை. இறந்தவர்கள் அனைவரும் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இன்றைய பணிச்சூழலில் தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள் பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் கூறுகிறார்கள். ஏன் இந்த மன அழுத்தம்? காரணங்களை,‘புதிய தலைமுறை’ ஆராய்ந்தது. கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இதோ அரசு போக்குவரத்துக்கழகப் பணியாளர்களின்   மறுபக்கம்

இயந்திரங்களாக்ப்பட்டுவிட்ட ஓட்டுநர்கள்

தற்போது தமிழகத்திலுள்ள 20,500 அரசுப் பேருந்துகளை இயக்க 1.24 லட்சம் ஓட்டுநர்கள்  தேவை, ஆனால், ஓட்டுநர்களாகப் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை வெறும் 48,000 மட்டுமே. மீதமுள்ள 76,000 ஓட்டுநர்களின் பற்றாக்குறையால், அவர்களின் பணியையும் இப்போதுள்ள அரசுப் பேருந்து ஓட்டுநர்களே செய்துவருகின்றனர். பணியாளர் பற்றாக்குறை. இதன் காரணமாக  ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தொடர்ந்து அதிக நேரம் வேலை செய்யவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர். இந்தத் தொடர் பணிச்சுமையால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், உடல்நலக் குறைபாடுகள் ஏராளம்.

பொதுவா திருவண்ணாமலை டூ சென்னை மொத்தம் 190 கி.மீ. ஓரு நாளைக்கு இந்த ரூட்டில் ஒரு டிரைவர் 760 கி.மீ. தூரத்தை 21 மணிநேரத்தில் ஓட்டி முடிக்க வேண்டும் என்று எங்களுக்கு டார்கெட் இருக்கு. ஆனா, ஒரு டிரைவர் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் அல்லது 500 கி.மீ. தூரம் மட்டுமே பஸ்ஸை ஓட்டணும்னு மோட்டார் வாகன விதி இருக்கு. ஆட்கள் பற்றாக் குறையால் அந்த விதியை யாரும் இங்கே முறையா பின்பற்றுவதே கிடையாது. அதிகாரிகளின் வற்புறுத்தலால், நாங்கள் அரசு விதிகளுக்கு மாறாகப் பணியாற்ற வேண்டியுள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் எங்களுக்குக் கிடைக்கும் இடைவெளி, அரைமணி நேரம் மட்டுமே, அந்த இடைவெளியிலும் பாதி நேரம் பயணிகளை  பஸ்ஸில் ஏத்துறதிலேயே சரியா போயிடும். ஒரு டீ குடிச்சிட்டு, மீண்டும் அடுத்த டிரிப் அடிக்க கிளம்பணும். இதுக்கு நடுவே இன்னொரு முக்கியமான விஷயம், எவ்வளவு கட்டுப்பாடாக வண்டியை ஓட்டினாலும் வண்டி ஒரு லிட்டர் டீசலுக்கு 4.5 முதல் 5 கி.மீ.க்கு மேல் கொடுக்காது. பஸ்களை  வடிவமைத்துக் கொடுத்த கம்பெனியே லிட்டருக்கு 5 கி.மீ. ஓட்டினாலே, அது அவங்களோட தயாரிப்புக்கு கிடைச்ச வெற்றினு சொல்றாங்க. ஆனால், நாங்கள் லிட்டருக்கு 6 கி.மீ. ஓட்டியாக வேண்டும் என்று அதிகாரிகள் நெருக்கடி தர்றாங்க. அவங்க சொல்றதை மறுத்து, யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டினால் உடனே மெமோ கொடுக்கறாங்க" என்கிறார், புறநகர்ப் பேருந்து ஓட்டுநர் ஒருவர்.

புறநகர்ப் பேருந்து ஓட்டுநர்களின் நிலைமை இப்படி இருக்க, இன்னொரு புறம் மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் நிலைமையோ இன்னும் மோசம். லிட்டருக்கு 6 கி.மீ. ஓட்டவில்லை என்ற காரணத்தைக் கூறி, பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஓட்டுநர்கள் பயிற்சி ஓட்டுநர் பேருந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு,  போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஓட்டுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அப்போது, லிட்டருக்கு  6 கி.மீ. ஓட்டாத பட்சத்தில், பேருந்தை ஓட்டுவதற்குத் தகுதி இல்லை என்று கூறிவிடுகிறார்கள். இதனால், என்ன செய்வதென்று புரியாமல் திகிலுடன் தவித்துக் கிடக்கின்றனர் சில மூத்த மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள்.

நாங்க டியூட்டியில் போயிட்டு இருக்கும்போது, மதியஉணவு வேளை வந்துட்டா, அதிகாரிகள் சொல்ற ஓட்டலில்தான் வண்டியை நிறுத்திச் சாப்பிடணும். மீறி வேறு எந்த  ஓட்டலிலாவது சாப்பிட்டால், எங்க மேல நடவடிக்கை பாயும். அவங்க சொல்ற ஓட்டலில் நல்ல சாப்பாடு இருக்காது. இதனால், அந்த பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் எங்களைக் கடுமையாக, பாடாவதி ஓட்டலில் சாப்பாட்டுக்கு நிறுத்திவிட்டதாக சபிப்பார்கள். அவர்களுக்குத் தெரியாத விஷயம், அந்தச் சாப்பாட்டை சாப்பிட்டு சிலநாட்களில் நாங்கள் வாந்தி, அஜீரணக் கோளாறு போன்ற சில பிரச்சினைகளில் துன்பப்பட்டது"  என்று மன வேதனையுடன் குமுறினார், சென்னையைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் .

பாதுகாப்பை பலி கேட்கும் பராமரிப்பு

அரசு ஒருபுறம் புதிது புதிதாக நவீன ரகப் பேருந்துகளை வாங்கிக் குவித்தாலும் இங்கு காயலான் கடைப் பேருந்துகளுக்கும் பஞ்சமில்லை. காரணம், இங்கு முறையாகப் பேருந்துகள் பராமரிக்கப்படுவதில்லை என்பதுதான். இத்தகைய பராமரிப்பில்லாத பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களின் மன அழுத்தம் சொல்லி மாளாது. தினமும் புலம்பல்களுடனே இவர்களது பயணம் தொடர்கிறது.

 ஓட்டுநர் ஷாஜகானுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு இது. நவம்பர் 21 அன்று கிருஷ்ணகிரி, பழைய பையனப்பள்ளியில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை ஓட்டுநர் ஷாஜகான் ஓட்டிச் சென்றார். சாலையில், எதிரே ஒரு பைக் வர, அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சாலையோரம் இருந்த மண்திட்டின் மீது வலது பக்கம் சாய்ந்தபடியே பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது ஓட்டுநரின்  பக்கவாட்டுக் கதவின் தாழ்ப்பாள் சரியில்லாதால் கதவு தானாகத் திறந்துகொண்டது. அதன் வழியாக ஓட்டுநர் ஷாஜகான் நிலைதடுமாறி  சாலையில் விழுந்தபோது, அவர் ஓட்டிச் சென்ற பேருந்தின் பின்புற டயரே அவர் மீது ஏற, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கடந்த ஆண்டு விபத்தில் இறந்தவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது, தேசிய குற்ற ஆவணப் பதிவகம் (National Crime Records Bureau). அதன்படி  2011ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் ஏற்பட்ட விபத்துகளின் மூலம் மட்டுமே 1,317 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ்களை ஒழுங்காகப் பராமரித்து டிரைவர்களின் பணி நேரத்தையும் முறைப்படுத்தினாலே இதில் பாதிக்கும் மேற்பட்ட விபத்துகளைத் தவிர்க்க முடியும்" என்கிறார், திருச்சியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர்.  

டிரைவருக்குத்தான் பஸ்ஸில் உள்ள பழுதுகள் தெரியும். அதைப் பற்றி டெப்போவில் உள்ள லாக் ஷீட் புத்தகத்தில் எழுதி வைக்கவேண்டும். எழுதி வைக்கப்பட்ட குறைகள் உடனுக்குடன் சரி செய்யப்படணும்.  சரி செய்யவில்லை என்றால், மீண்டும் எழுதணும். பஸ்ஸில் நட்டு, போல்டு  கழன்று விழுந்தால் கூட நாங்க அந்தப் புத்தகத்தில் எழுத வேண்டும். பஸ்ஸின் ஆட்டோமேட்டிக் கதவு, சீட், என்ஜின் மேல்பாகம் என பல பாகங்களைக்  கயிறு மூலம் கட்டியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். மழைக் காலத்துல பஸ்ஸின் கண்ணாடியில் வழியும் தண்ணீரை விலக்கி விடும் வைப்பர் கருவி பெரும்பாலான வண்டியில் இயங்குவது இல்லை. சில பஸ்கள் மழையில் ஒழுகுவது கூட உண்டு. சில பஸ்களில் ஷட்டர்கள் கிழிந்திருக்கும். ‘என்னயா பஸ் வெச்சிருக்கீங்க?’ என்று எங்களைத்தான் பயணிகள் விமர்சனம் செய்வார்கள். இத்தகைய நெருக்கடிகளுக்கு நடுவில்தான் நாங்கள் பஸ்களை இயக்கிக் கொண்டிருக்கிறோம்" - இது சென்னையில் நாம் சந்தித்த சில மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் புலம்பல் தொகுப்பு.

நரகத்தில் நடத்துநர்கள்

ஓட்டுநர்களின் நிலை அப்படி என்றால், நடத்துநர்களின் நிலையும் நெருக்கடிகளில் தத்தளிக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் நகரப் பேருந்தின் கண்டக்டர்களாக இருப்பதும் நரகத்தில் இருப்பதும் ஒன்றுதான்" என்கிறார், சென்னையில் நடத்துநராகப் பணிபுரியும் பிச்சையப்பன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரே தொடர்ந்து, சென்னை மாநகரத்தில் மட்டும் சுமார் 3,200 பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பஸ்களை பயன்படுத்துகின்றனர். பீக் அவர்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.  எள் போட்டால் எண்ணெயாகும் அந்தக் கூட்ட நெரிசலில் நீந்திச் சென்று டிக்கெட் தருவதும் ஒரு வகையில் சர்க்கஸில் ஜிம்னாஸ்டிக்ஸ் பண்ணுவது போலத்தான். அதுக்கெல்லாம் தனித்திறமை வேணும்" என்கிறார் அவர்.   

தொடர்ந்து அவரே, புதிதாகப் பணியமர்த்தப் பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் சரியாக டியூட்டி கொடுக்க மாட்டாங்க. பணி ஆணை கிடைத்தவுடன் 220 பணி நாட்கள் வேலை செய்ய வேண்டும். அதன் பிறகுதான் பணி நிரந்தரம் செய்வார்கள். எங்களுக்கு இவர்கள் டியூட்டி தராததால் எங்களது  220 பணி நாட்கள் நிறைவு என்பது தள்ளிப் போகும். இதனால், எங்களது பணி நிரந்தரமும் தள்ளிப் போகும்.

 விடியற்காலை ஐந்து மணிக்கு டியூட்டிக்கு வந்துவிடு என்று நேரக் காப்பாளர் முதல்நாள் சொல்லிவிடுவார். ஆனால் காலையில் போனால் பஸ் இல்லை, டிரைவர் இல்லை என்று கூறி வேறு ஒரு நேரம் சொல்லி, அந்த நேரத்திற்கு வரச்சொல்லுவாங்க. இதனால், எங்க சொந்த வேலைகளைக் கூட சரியா செய்ய முடியாத நிலைமையில் இருக்கோம்.

காலேஜ் பசங்க பஸ்ஸில் ஏறும்போது, உள்ளே இடம் இருந்தாலும், படிக்கட்டுலே நின்னுக்கிட்டு இருப்பாங்க. ‘உள்ளே போங்கப்பா’ என்று எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டாங்க, படிகளிலே பயணம் செய்வார்கள். சில பேரு ஓடுற பஸ்ஸில் இறங்கி, ஏறி சர்க்கஸ் பண்ணுவாங்க. அப்போதெல்லாம் எங்க ரத்த அழுத்தம் எகிறும். பையனைக் கடிந்து கொள்ளவும் முடியாது. அது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரச்சினையாகிவிடும்" என்கிறார் பிச்சையப்பன்.

சில்லறைப் பிரச்சினை

பேருந்தில் நடத்துநருக்கும் பயணிக்கும் இடையில் நடக்கிற ‘சில்லறை மோதல்’ சகஜமானது. இதுகுறித்து மாநகரப் பேருந்து நடத்துநர் ஒருவர் கூறியது: காலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகம் இருக்கும்போது, சில பயணிகள் ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு நூறு ரூபாய் கொடுப்பார்கள். அதுக்கு நேரம் எடுத்துக்கும். ரெண்டு மூணு பேருக்குச் சில்லறை கொடுத்து முடிவதற்குள்  அடுத்த ஸ்டாப்பிங் வந்து,  சில பேரு டிக்கெட் வாங்காமலே இறங்கிடுவாங்க. இதனால்தான் சில்லறையா கொடுங்கனு கேக்குறோம் " என்று ஆதங்கத்துடன் கூறினார்.

இலவச மருத்துவம்!

அரசு போக்குவரத்துக்கழகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, உடல்நலக்குறைவு ஏதேனும் இருப்பின், அதற்கான இலவச மருத்துவ வசதி, பெருந்துறையில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின்கீழ் இயங்கும் ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. மேலும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் இங்கு இலவச சிகிச்சை உண்டு. தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் இத்தகைய மருத்துவமனைகள் இருந்தால் இவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வது  எளிதாக இருக்கும் என்கிறார்கள் ஓட்டுநர்கள்.

45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் தங்களின் உடல் தகுதியினை அறிந்துகொள்ள, முழு உடல் தகுதி பரிசோதனையும் இங்கு செய்யப்படுகின்றது. தமிழக அளவில் 1,300 ஓட்டுநர்கள் இங்கு வந்து பரிசோதனை மேற்கொண்டதில், 400 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் மேல்சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தமுறை அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் போது ஏற்படும் அசௌகர்யங்கள், தாமதங்கள் காரணமாக ஆத்திரம் பொங்கும்போது, அதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல, அவர்கள் வெறும் கருவிகளாகக் கூட இருக்கலாம் என்பதையும் நிமிட நேரம் நினைத்துப் பாருங்கள். உங்கள் மன அழுத்தம் மறைந்துகூடப் போகலாம்!

போதுமான பணியாளர்கள் இல்லை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (CITU) பொதுச் செயலாளர் அன்பழகன், இதுகுறித்துக் கூறும்போது, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தனியார் கையில் இருந்த சில பஸ் கம்பெனிகளை அரசுடைமையாக்கி, 214 பஸ்களுடன் ஆரம்பிக்கப்பட்டது அரசு போக்குவரத்துத் துறை. பல தொழிலாளர்களின் கடுமையான உழைப்பினால் இன்று அது 21,207 பஸ்களாக (31.03.2012 நிலவரப்படி) உயர்ந்திருக்கு.

01.01.1972ம் ஆண்டு பட்டாபிராமன் கமிட்டியும், 1991ம் ஆண்டு தில்லைநாயகம் கமிட்டியும் போக்குவரத்துத் துறையில் அமல்படுத்த வேண்டிய பல முக்கியமான அம்சங்களை அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. அதில் 100 பஸ்களுக்கு 750 பேர் பணி செய்ய வேண்டும். அதில் 250 டிரைவர்கள், 250 கண்டக்டர்கள் மற்றும் 250 தொழில்நுட்பப் பணியாளர்கள் என்கிற கணக்கில் இருக்க வேண்டும்.  

ஆனால், தற்போதைய நிலையில் 100 பஸ்களுக்கு 100 தொழில்நுட்பப் பணியாளர்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதிலும் இரவு நேரப் பணியில் கூடுதல் பஸ்களை பழுது பார்ப்பதினால், அவசரத்தில் சரியான முறையில் பஸ்களை பராமரிப்பு செய்ய முடியாமல் போகின்றது. தற்போது உள்ள பஸ்களின் எண்ணிக்கையைப் பொருத்து கணக்கிட்டுப் பார்த்தால், 27,500 தொழில்நுட்பப் பணியாளர்கள் தேவை.

சென்னை போன்ற மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியில் 80 கி.மீ. ஓட்டச் சொல்லும்போது, அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் 80 கி.மீ. அடையாத டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் அதிகாரிகள் நிர்ணயிக்கும் டார்கெட் தொகையை கலெக்‌ஷனில் கொண்டுவரா விட்டால் தினப்படிகள் குறைத்துக் கொடுக்கப்படுன்றன.

மேலும் கூடுதல் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு, அதற்குரிய சம்பளம் பாதியாகவே வழங்கப்படுகின்றன. 900 கி.மீ. செல்லும் பஸ்களில் 3 டிரைவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும், ஆனால், தற்போது 2 டிரைவர்கள் மட்டுமே பஸ்ஸினை இயக்குகின்றனர்.

மேலும் கண்டக்டர்களே டிரைவர்களாகப் பணிபுரியும் அவலநிலையும் அரங்கேறி வருகிறது. பண்டிகை நாட்களிலும், முகூர்த்த நாட்களிலும் தொடர்ந்து மூன்று நாட்கள் பஸ்ஸை இயக்கி வருகின்றனர். இருக்கின்ற பஸ்களை இயக்கப் போதிய ஆட்கள் இல்லாமல் இருக்கும் நிலையில், புதிய வழித்தடங்களில் அரசால் விடப்பட்டுள்ள பஸ்களை எப்படி இயக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. முறையான பராமரிப்புடன், போதுமான ஆட்களை தேர்வு செய்வதன் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்" என்கிறார் அன்பழகன்.

ஓய்வின்மையும் உடல்நலப்  பிரச்சினைகளும்...

தொடர்ந்து பணி புரிவதால் ஏற்படும் மன அழுத்தத்தால் ஓட்டுநர்களின் பணித்திறன் குறைவதோடு, அவர்கள் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள். அது குறித்து உளவியல் நிபுணர் டாக்டர். செந்தில்குமார் கூறுகையில், பொதுவா ஒரு மனிதன் சராசரியா 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். அப்போதுதான் அவர் நல்ல உடல்நலத்துடனும் மன ஒருமையுடனும் விளங்க முடியும். டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அதற்கான சூழல் அமைவதில்லை. இப்போது அவங்க தூங்குற சில மணிநேரத் தூக்கம் போதுமானதா இல்லை. இந்தத் தூக்கமின்மை அவர்களுக்குப் பல்வேறு உடல் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. இதனால், கண் சோர்வு, உடல் சோர்வு, மனச் சோர்வு ஏற்படும். டிரைவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஓய்வு அறையில் அவர்கள் தூங்காமல் பஸ்ஸுக்குள்ளே தூங்குவாங்க. அந்த மாதிரி சமயத்தில் நன்றாகத் தூங்கமுடியாது. இரவு நேரங்களில் பஸ்ஸை ஓட்டும்போது, எதிரே வரும் வண்டிகளில் வெளிப்படும் ஒளிகளை, அவர்களின் கண்கள் நேரடியாகப் பார்க்கும்போது,  கண் பார்வை எரிச்சல் அதிகரிக்கும். இதனைத் தவிர்க்க ஆன்டி கிளார் கிளாஸ் (Anti Glare Glass) அணிந்துகொண்டு பஸ்ஸை இயக்கினால், இது மாதிரியான பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

சாலையோரத்தில் தரமற்ற ஓட்டல்களில் சாப்பிடும்போது, அஜீரணக் கோளாறு, தேவையற்ற கொழுப்பு சேர்ந்து சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கோடைக் காலத்தில் வேர்வையினால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும். பஸ்ஸை இயக்கும் டிரைவர் 8 மணி நேரத்திற்குமேல் பஸ்ஸை ஓட்டக் கூடாது, அதையும் மீறி தொடர்ந்து பஸ்ஸை ஓட்டினால் கடுமையான மாரடைப்பு Massive Heart Attack) ஏற்பட்டு இறக்க நேரிடும். அவர்களுக்கு முறையான  தூக்கமும், சீரான இடைவெளியில் புத்தாக்கப் பயிற்சியும், மன அழுத்த நீக்கப் பயிற்சியும் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு ஏற்படும் உடல்  சம்பந்தமான  பிரச்சினைகளை தவிர்க்க முடியும்" என்கிறார்.

‘‘விரைவில் 14,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

பணிச்சுமை பிரச்சினைகளால் ஊழியர்கள் பாதிக்கப்படுவது குறித்து மண்டல மேலாளர் ஒருவரிடம் கேட்டோம். தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர் கூறியவை : ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை சில காலமாகவே இருந்து வருகிறது. போதிய ஆட்கள் இல்லாத காரணத்தால், விழாக் காலங்களில் கூடுதல் பணி பார்க்கச் சொல்லவேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படுகின்றது. பணிச்சுமை எல்லா நாட்களிலும் இருக்கிறது போன்ற குற்றச் சாட்டுகள், அனைத்து மண்டலங்களிலும் இருப்பதில்லை. ஒரு சில மண்டலங்களில் நிர்வாகக் குறைபாட்டினால் தொழிலாளர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகின்றது. முன் அறிவிப்பு இன்றி விடுப்பு எடுக்கின்ற நிலை தொழிலாளர்களிடம் அதிகமாக உள்ளது. இதனால், விடுப்பு எடுத்த தொழிலாளர்களின் பணியை, மற்ற தொழிலாளர்கள் செய்ய வேண்டிய நெருக்கடி. மேலும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மனச் சோர்வுகளில் இருந்து விடுபட, அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மாதம் ஒரு முறை யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் இயற்கை உணவு முறைகளின் அவசியத்தைப் பற்றியும் அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனைத்துப் பணியாளர்களுக்கான உணவும் நல்ல முறையில்தான் கிளை அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. தொழிலாளர்களிடமிருந்து அதிகப் பணி வாங்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமில்லை. சிறிதளவு ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் மட்டுமே இந்தப் பணிச்சுமை. இந்த ஆட்கள் பற்றாக்குறைக்குத் தீர்வாக, விரைவில் 14,000 போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பணி இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன" என்கிறார். அதைச் சீக்கிரமா செய்யுங்க.

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றிய இதுவரை வெளிவராத தகவல்களை அவருடன் நெருக்கமாக இருந்த இருவர் இங்கே பகிர்ந்துகொள்கின்றனர்

எம்.ஜி.ஆர். திமுகவில் சேர்வதற்கு முன்பு காங்கிரஸ்காரராக இருந்தார் என்பது பலரும் அறிந்ததே. 1933களில் காங்கிரஸ் இயக்கத்தில் உறுப்பினராக அல்லாமல் அக்கட்சியின் உண்மை ஊழியனாக மட்டுமே இருந்த எம்.ஜி.ஆரை அக்கட்சிக்குள் இழுத்ததற்கு காந்தியின் கொள்கைகளே முதல் காரணம். என்றாலும் சுபாஷ் சந்திரபோஸூம் அவருக்கு மிகவும் பிடித்தமான தலைவராக இருந்ததுதான். அந்த காலகட்டங்களில் காங்கிரஸில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக கதர் ஆடைகளை அணிந்து வந்தார். அந்த காலகட்டங்களில் கள்ளுக்கடை, சாராயக் கடைக்கு எதிராக மறியல் போராட்டம் நடைபெற்று வந்தபோது எம்.ஜி.ஆர்.  தனது பங்களிப்பை நல்கியவர். திரையில் குடிப்பழக்கம் உள்ள கதாபாத்திரங்களில்கூட நடிக்க விரும்பாததற்கு காரணம், இளமைக்காலம் தொட்டே அதன் எதிர்ப்பில் தீவிரமாக இருந்ததே.

அப்போது தனது 12வது வயதில், சென்னை வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் தனது தாயார், அண்ணன் சக்ரபாணியுடன் வசித்துவந்த எம்.ஜி.ஆர்., மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி சென்னையில் ஒற்றைவாடைத் தியேட்டரில் நடத்திவந்த, ‘பதிபக்தி’ நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நாடகம் குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்குவதாக அமைந்தது. அப்போது ஒரு சமயம் எம்.ஜி.ஆர். குடியிருந்த இல்லத்திற்கு முன்பு கள்ளுக்கடைகளுக்கு எதிராக மறியல் நடைபெற்றது. அந்த மறியலில் தானும் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர்., தனது அண்ணனிடம், ‘நான் நாடகக் கொட்டகை வரை சென்றுவருகிறேன்’ என்று கூறி, மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

நீண்ட நேரமாகியும் தம்பி எம்.ஜி.ஆர். வீடு திரும்பாததால், அண்ணன் சக்ரபாணி நாடகக் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது அங்கு எம்.ஜி.ஆர். இல்லாதது கண்டு திடுக்கிட்டு, பயத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், வீட்டிற்கு அருகே இருந்த சாராயக்கடை முன்பு மறியலில் ஈடுபட்டிருந்த, காந்தி குல்லாய் அணிந்திருந்த ஏராளமான  காங்கிரஸ்காரர்களை போலீசார் வேனில் ஏற்றிக் கொண்டிருந்ததைக் கண்ட அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், அந்தக் கூட்டத்தில் குல்லாய் அணியாத  எம்.ஜி.ஆரை வேனில் கண்டதுதான்.

வேனில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களுடன் எம்.ஜி.ஆரும் ஏற்றப்பட்டு, காவல்நிலையம் நோக்கிப் புறப்பட்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த சக்ரபாணி, நேராக அங்கிருந்து யானைக்கவுனி காவல்நிலையம் நோக்கி ஓடினார். அங்கு, அந்த வேன் செல்லவில்லை என்று அறிந்து, பூக்கடை காவல்நிலையம் நோக்கி ஓடியுள்ளார். அங்கு அவர் சென்றபோது காவலர் ஒருவர், மூன்று சிறுவர்களை வெளியே தள்ளிக்கொண்டு வந்து, ‘ஒழுங்காக வீடு போய் சேருங்கள்’ என்று கூறியுள்ளார்.

அவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆர். இருந்தது கண்டு ஆறுதல் அடைந்த சக்ரபாணி, ஒருபுறம் வருத்தமும் ஆத்திரமும் அடைந்த நிலையில் எம்.ஜி.ஆரிடம் ‘ஏம்ப்பா இதுல எல்லாம் போய் தலையிடுற... உள்ளே உன்னை அடிச்சாங்களா, மூணுபேரை மட்டும் எப்படி விட்டாங்க? ‘என்று அடுக்கடுக்காய்  கேள்வி கேட்க... எம்.ஜி.ஆரோ மிகச் சாதாரணமாக அவரிடம் ‘இங்கே ஏன் வந்தீங்க... அம்மாவிற்கு தெரிந்துவிட்டதா?’ என்று கூற ‘பின்ன... நான் எங்கப்பா போறது, நீ செய்த இந்த வேலைக்கு?’ என்று கடிந்துகொண்டு, ‘உள்ளே என்னதான் நடந்தது?’  என்று கேட்டார்.

‘நூற்றுக்கணக்கானவர்களைப் பிடித்துவந்தாச்சு... அதில் முக்கியமானவர்களும் இருக்க, அதில் என்னைப் போன்ற சிறுவர்களைக் கண்டு ஏண்டா! நீங்களெல்லாம் சுதந்திரம் வாங்கித் தருபவர்களா? போங்கடா என்று தலையில் இரண்டு தட்டு தட்டிவிட்டு அனுப்பிவிட்டார்கள்’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். வீட்டிற்குச் சென்றபின்பு எம்.ஜி.ஆர். தாயாருக்கு விவரம் தெரியாததால், சக்ரபாணியும் விஷயத்தைச் சொல்லாமலேயே மறைத்துவிட்டார்.

நாடகங்களில் சிறுவயதுக் காலங்களில் நடித்துக்கொண்டிருந்த  எம்.ஜி.ஆருக்கு எப்படியும் காந்தியடிகளைச் சந்தித்து, அவரது ஆசியைப் பெற்றுவிடவேண்டும் என்பது ஆழ்மனக் கனவாக இருந்து வந்தது. அதற்கான பொன்னான நேரமும் கனிந்து வந்தது.  

அப்போது எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் நடித்துக்கொண்டிருந்த ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி சென்னையை விட்டு வெளியூர்களுக்கு நாடகங்கள் நடத்த புறப்பட்டது. அக்கம்பெனி காரைக்குடியில் நாடகம் நடத்திக்கொண்டிருந்த சமயம், தமிழகத்திற்கு சுற்றுப்பயணமாக வந்திருந்த காந்தியடிகள், காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார்.  

விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர்., நாடகம் முடிந்த கையோடு அண்ணன் சக்ரபாணி மற்றும் கே.பி.கேசவன் உள்பட மேலும் இரு நாடக நடிகர்களுடன் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தச் சமயம் பாகிஸ்தானில் குவெட்டா பூகம்பச் செய்தியின் காரணமாக பூகம்பத்தில் அவதிப்படுபவர்களுக்கு நிதியுவி வழங்குமாறு காந்தியடிகள்  கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களிடம் இருந்த பணம், பொருட்களை காந்தியடிகளிடம் கொடுத்தனர். பெண்கள், தங்களிடம் இருந்த வளையல்களையும், கம்மல்களையும் காந்தியிடம் கொடுத்தனர். சக்ரபாணி உட்பட உடன்  வந்திருந்த யாரிடமும் அப்போது எதுவும் இருக்கவில்லை. உடனே எம்.ஜி.ஆர்.,அன்று நாடகத்திற்காக, தான் பெற்று வைத்திருந்த  இரண்டு அணாவை காந்தியடிகளிடம் கொடுத்து, மகாத்மாவின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்று, தனது நீண்ட நாள் ஆவலை நிறை வேற்றிக்கொண்டார்.

இவ்வாறு தனது சிறுவயது முதலே நாட்டுப் பற்றையும் தேசத்தின் நலனையும் தன்னுள் பதித்துக்கொண்டு, நாட்டிற்காகப் பாடுபடும் மகாத்மா போன்ற தலைவர்களின் கரங்களுக்கு தன்னால் ஆன வலு சேர்க்கவேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர். 1962ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - சீனா யுத்தத்தின்போது யுத்தநிதி வழங்குமாறு பிரதமர் நேரு, வானொலியில் கேட்டுக்கொண்டவுடன் தனது பங்காக 75,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்த மறுநாளே,  தனது முதல் தவணைப் பணமாக 25,000 ரூபாயை அப்போதைய முதல்வர் காமராஜரிடம் வழங்கினார். அதைப்  பெற்றுக்கொண்ட நேருவும் எம்.ஜி.ஆருக்கு கடிதம் அனுப்பி, அவரைப் பாராட்டினார்.

மீண்டும் 1965ல் இந்தியா-பாகிஸ்தான் போர். இதிலும் அந்நியத் தாக்குதலை முறியடிக்க தன் பங்காக பெங்களூர் லால்பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற  யுத்த நிதி வழங்கும் பிரமாண்ட  விழாவில் 10,000 ரூபாய் கொடுத்து, தனது நாட்டுப்பற்றை நிரூபித்தார். இவ்வாறு  தனது இளம்பருவத்திலிருந்தே  தேச நலனில் அக்கறைகொண்டு, தனது இறுதி மூச்சுவரை இம்மியளவும் பின்வாங்காது காந்தி, நேரு, காமராஜர் போன்ற தலைவர்களின்  ஆசியையும் பாராட்டுதல்களையும் பெற்ற எம்.ஜி.ஆருக்கு மிகப் பொருத்தமாக இந்திய அரசு, பாரத ரத்னா பட்டமளித்ததும் நினைவுகூரத்தக்கது.
எழுத்து: ஆர். கோவிந்தராஜ்


‘‘ஆகாதவங்களாயிருந்தாலும் நியூட்ரல்லே வெச்சுக்கணும்!’’

ஆர். சீனிவாசமூர்த்தி
(தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர். மூத்த பத்திரிகையாளர். எழுத்தாளர். தற்போது வயது 82)

டைக்காலப்  பிரதமர்னு ஒரு பதவி அரசியல்  சட்டத்திலே இருக்கா?  அப்படி ஒருவர் இருந்து, அவர் கையெழுத்து போட்டா செல்லாதுன்னு எங்காவது இருக்கா?!’ என்று என்னைப் பார்த்து முதல்வர் எம்.ஜி.ஆர். கேட்டார்.

நான், ‘அண்ணா’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். பிரதமர் பதவியில் சரண்சிங் இருந்தார். சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அவர் சென்னை வர இருந்தார். அவருடைய பிரதமர் பதவி சில மாதங்கள்தான்   நீடிக்கும் என்ற நிலை. அவர் இடைக்காலப்  பிரதமர் என்றே கருதப்பட்டார். அழைக்கப்பட்டார்.

பிரதமர் சரண்சிங் வருகைக்குத் தேவையான ஏற்பாடுகள்  அனைத்தும் அரசு சார்பில் செய்யப்பட்டு வந்தன. சென்னை விமான நிலையத்தில் இருந்து எழும்பூர் பெரியார் திடல்வரை, பிரதமர் சரண்சிங் செல்லும் வழியில் 16 வரவேற்பு வளைவுகள் அமைக்கத் திட்டம். அஇஅதிமுக சார்பில் அதற்கான  ஏற்பாடுகள் நடைபெற்றன.

முதல்வர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, ‘அந்த  வரவேற்பு வளைவுகளில் சரண்சிங்கைப் பாராட்டியும் வாழ்த்தியும் வரவேற்றும் சில வாசகங்கள் இடம்பெற வேண்டும். அதை எழுதுங்கள்’ என்று கூறினார். நானும் அவற்றை எழுதிக் காண்பித்தேன். ‘ஆங்கிலத்திலும்  வேண்டும்’ என்றார். அதையும் எழுதிக் காண்பித்தேன். அவற்றைத் துணிப் பதாகைகளில் எழுதி, வரவேற்பு வளைவுகளில் பொருத்தவேண்டும். அதற்கான பணிகள், பந்தல் காண்டிராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இப்போதுபோல்  அப்போது Flex Board  தொழில்நுட்பம் இல்லை. கையால்தான்  எழுதவேண்டும். எழுதப்பட்ட துணி பேனர்கள் வரவேற்பு வளைவுகளில் மாட்டப்பட்டு விட்டன. ‘அதையெல்லாம் போய் பார்த்துவிட்டு வாங்க’ என்றார்.  நானும் அஇஅதிமுக கழகத் தலைமை நிலையப் பணியாளர்களும் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்.

மழை பெய்யத் தொடங்கியது. பேய் மழை. கீற்றுகளால் போடப்பட்ட வரவேற்பு வளைவுகள் நனைந்து, எழுதப்பட்ட துணிப் பதாகைகள் சாயம் போய்விட்டன. பந்தல் காண்டிராக்டர் மிகவும் பிரபலமானவர். சில லட்சம் ரூபாய்கள் பட்டியல் கொடுத்திருந்தார். மழை காரணமாக வரவேற்பு வளைவுகள்  சேதமாகிவிட்டனவே! எப்படி எம்.ஜி.ஆரிடம்  பணம் கேட்பது என்று அவருக்குப் பதைப்பு. எதுவானாலும் முதல்வரிடம் கூறிவிடுவோம் என்று தீர்மானித்து, மற்றவர்களின் வற்புறுத்தல் பேரில் பட்டியலை எடுத்துக்கொண்டு நானே சென்றேன்.

கலகலப்பாக முதல்வர் எம்.ஜி.ஆர். பேசினார். நான் விவரங்களைச் சொன்னேன். ‘வரவேற்பு வளைவுகளை நீங்கள்  பார்த்தீர்களா?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘நானே பார்த்தேன். 16 இடங்களில் வளைவுகள் போட்டுள்ளார்கள். ஆனால், மழையில் நனைந்துவிட்டது! சரண்சிங் வரும்போது மழை நீடிக்கும்போல தோன்றுகிறது!’ என்றேன்.

‘அதனால் என்ன? தலைமைக் கழகத்தில் சொல்லி, பணம் கொடுக்கச் சொல்லிவிடுங்கள்’ என்றார் எம்.ஜி.ஆர். நான் சற்றுத் தயங்கியபடி, ‘ஒரு விஷயம் சொல்லணும்’ என்றேன். சகஜமான குரலில், ‘என்ன?’ என்றார். ‘இந்த சரண்சிங் ஆட்சி என்பது இடைக்கால ஏற்பாடு. இவரை வரவேற்று இத்தனை வளைவுகள் இவ்வளவு லட்சம் செலவழிக்க வேண்டுமா?’ என்றேன்.

அப்போதுதான் முதல்வர் எம்.ஜி.ஆர். சொன்னார்: இடைக்காலப் பிரதமர்னு ஒரு பதவி அரசியல் சட்டத்திலே இருக்கா? சரண்சிங் கையெழுத்து போட்டா செல்லாது அப்படின்னு எங்காவது இருக்கா?  எத்தனை நாள் அவர் பிரதமர் என்பது அல்ல; அவர் பிரதமர். அந்தப் பதவிக்கு உள்ள சகல அதிகாரமும் அவருக்கு உண்டு. அவர் காரில் போகும்போது வரவேற்பு வளைவுகளைப் பார்த்து படிக்கப் போகிறாரா? இல்லை. ஆனால், மத்திய உளவுத் துறை இதைக் கவனிக்கும். வாசகங்களைக் குறிப்பெடுக்கும். அது பிரதமர் கவனத்துக்குப் போகக்கூடும். அதுதான் விஷயம்! இதில் சில லட்சம் செலவாகிறதேன்னு பார்க்கக்கூடாது. பிரதமர் என்றால் அதற்குரிய  மதிப்பைக் கொடுத்தே ஆகணும்’ என்றவர், சற்றுக் குரலைத் தாழ்த்திக்கொண்டு, ‘ஆகாதவங்களாயிருந்தாலும் நியூட்ரல்லே வெச்சுக்கணும்’ என்றார். அவரது அபாரமான அணுகுமுறையைக் கண்டு பிரமித்து விட்டேன்.

எம்.ஜி.ஆர். போட்ட கணக்கு!

அனைத்திந்திய அண்ணா தி.மு. கழகத்துக்கு  ப.உ.சண்முகம் பொதுச் செயலாளராக ஆனது முதல், கட்சிக்கு  கட்டிடம் வாங்கவேண்டும் என்று அவர் எம்.ஜி.ஆரிடம் வற்புறுத்திக் கொண்டே வந்தார். எம்.ஜி.ஆர். பதவிக்கு வந்தபிறகு, ராமாவரம் தோட்டத்தில் அன்றாடம் அல்லது அடிக்கடி எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர் ப.உ.சண்முகம்.

இந்த நிலையில் சென்னை, அண்ணாசாலையில் ஒரு பழம் பெரும் தமிழ்ப் பத்திரிகை (சுதேசமித்ரன்)யின் சொத்துக்கள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் பரவியது. இதை ப.உ.ச. பிடித்துக்கொண்டு, எப்படியாவது அதனை வாங்கிவிட வேண்டும் என்று துடித்தார்.

எம்.ஜி.ஆர். எங்களைக் கூப்பிட்டு, ‘என்ன விஷயம்?’ என்று விசாரித்து வருமாறு கூறினார். ஒரு பிரபலமான தேசியமய வங்கியில் உதவி பெற்று, ரஷ்யாவில் இருந்து அச்சு எந்திரம் வாங்கி இருக்கிறார்கள். பிறகு, அந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. இரண்டு மூன்று வருடங்கள் அந்த எந்திரம் துறைமுகத்திலேயே கிடந்த காரணத்தால் அபராதம், - இட வாடகை , வட்டி என  ஏராளமாக தொகை ஏறிவிட்டது. அதற்காக அந்த பத்திரிகையின் கட்டிடம், சொத்துக்களையும் அந்த வங்கி  கையகப்படுத்திக் கொண்டது.

செய்தி தெரிந்து அந்த வங்கியின் தலைமை நிர்வாகியை நான் சென்று சந்தித்து, விவரங்களைத் தெரிந்து கொண்டேன். ‘எம்.ஜி.ஆர். அவர்கள் (கட்சிக்காக) வாங்குவதாக இருந்தால் அதிகபட்ச சலுகைகள் தருவோம். எப்படியாவது எங்களுக்கு கடன் அசல் வசூல் ஆனால் போதும்’ என்றார் அந்த நிர்வாகி.

நான் முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து, விவரங்களைத் தெரிவித்தேன். இரண்டு நாட்கள் கழித்துக் கூப்பிட்டு அனுப்பினார். ‘நமக்கு அந்த இடம் வேண்டாம். போய் சோல்லிவிடுங்கள். பிரதான சாலையில் கட்சிக்கு இடம் என்றாலும் பார்ப்பவர்கள் கண்ணை உறுத்தும்! வேண்டாம்’ என்றார் எம்.ஜி.ஆர்.

விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை.  பிறகு, ‘அலை ஓசை’ பத்திரிகை - கட்டிடம் - எந்திரம் உட்பட விலைக்கு வருவதாகத் தகவல் வந்தது. ப.உ.ச. முழு மூச்சாக இறங்கிவிட்டார்.  வாங்கியே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். ஏதோ ஒரு தொகை பேசப்பட்டது. பத்திரிகைத் துறையில் இருந்த ஒரு சிலரை விட்டு, கருத்து சேகரித்தார் எம்.ஜி.ஆர். (நான் அப்போது எந்த வேலையிலும் இல்லை. சில காரணங்களால் வீட்டில் இருந்தேன். சம்பளம் மட்டும் வந்துகொண்டு இருந்தது). அப்போது ப.உ.ச. ஒப்புக்கொண்ட தொகைக்கும் வேலூர் நாராயணன் கேட்ட தொகைக்கும் இடையே பெரிய வேறுபாடு இருந்தது.

All India Anna DMK Exam Perarignar Anna Trust என்ற பெயரில் டிரஸ்ட் தொடங்கப்பட்டது. என்றாலும் பேரம் முடியவில்லை. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ‘வேலூர் நாராயணனைப் போய் பார்த்து என்ன விஷயம் என்று விசாரித்துவிட்டு வாருங்கள்’. என்றார். நான் வேலூர் நாராயணனைப் பார்த்து, விவரங்களைக் கேட்டேன். ப.உ.ச. ஒப்புக்கொண்ட தொகைக்கும் வேலூர் நாராயணன் கேட்கும் தொகைக்கும் இடையே 7 லட்ச ரூபாய் வித்தியாசம் இருந்தது.

‘மின்சாரக் கட்டணம் செலுத்தாமல் விட்டது ஒரு லட்ச ரூபாய். அதை அஇஅதிமுக கொடுக்கவேண்டும்’ என்று வேலூர்  நாராயணன் பிடிவாதம் பிடித்தார். இந்த இரண்டு விஷயத்திலும் இருதரப்பும் பிடிவாதமாக இருந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். சொன்னார்: ‘ ஒரு காரியம் பண்ணுங்கள். 7 லட்ச ரூபாய் நான் ஏற்பாடு செய்கிறேன். அதை வேலூர் நாராயணன்கிட்டே கொடுங்கள். எலெக்ட்ரிக் கட்டணத்தை, ‘அண்ணா பத்திரிகையிலேர்ந்து கட்டச் சொல்லிவிடுங்கள்’ என்றார். நான் சொன்னேன்: ‘எல்லா வசதியும் இருக்கு. கட்டிடம், மெஷின் இருக்குன்னாலும் வேலூர் நாராயணன் கேட்கிற தொகை எப்படிப் பார்த்தாலும் அதிகம்தான். அந்த எந்திரம் காலம் கடந்தது. எதிர்காலத்தில் உபயோகப்படாது...’ என்று நான் இழுத்தேன்.

‘நீங்க 7 லட்ச ரூபாயைப் பார்க்கறீங்க.  நாம வாங்கலைன்னு வெச்சுக்குங்க.  வேறே யாராவது வாங்கினாலோ அல்லது வேலூர் நாராயணனே எப்படியாவது தொடர்ந்து நடத்தினாலும் நம்மைத்தானே திட்டிக்கிட்டு இருப்பாங்க. இதிலெல்லாம் கணக்குப் பார்க்கக் கூடாது. நமக்கு ஒரு எதிரின்னா, அவங்களை நம் நண்பனா ஆக்கிக்கணும். முடியலையா, அவங்க நம்ம மேலே பாயாம பார்த்துக்கணும். புரியுதா?’ என்றார் எம்.ஜி.ஆர்.

அந்த அளவு எம்.ஜி.ஆர். கணக்கு போடுவார். ஏனென்றால், அவர் யதார்த்தவாதி.

எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல்

இது 1973 மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சி.

மதுரையிலிருந்து வேன் மூலம் கோவை செல்கிறார் எம்.ஜி.ஆர்.  உடன், கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம். இருவரும் முக்கியமான விஷயமாக தனித்துப் பேசிக் கொண்டு வந்தனர். திண்டுக்கல் தாண்டி, ஒட்டன் சத்திரம். அந்த ஊரைத் தாண்டியதும் சாலையில் ஒருவர் கையைக் காட்டியதும்  ஒரு தோட்டத்திற்குள், ‘வேன்’ நுழைந்தது. பம்ப் செட், கிணறு, தென்னை மரங்கள். நடுவே ஜமுக்காளம் விரித்து,  சாப்பிட இலைபோடத் தயார் நிலை. கை, கால் கழுவிக்கொண்டு அமர்ந்தார்கள். கல்யாணசுந்தரம் சைவ உணவுக்காரர். அதற்காக விசேஷமாக கீரை, பாயசம் போன்ற அயிட்டங்கள். கல்யாண சுந்தரத்துக்கு பிரமிப்பு. ‘எப்படி இவ்வளவு ஏற்பாடுகள்?’ என்று கேட்டார். ‘இன்று காலை நாம் மதுரையிலிருந்து புறப்படுவதற்கு முன்பே ஓர் உதவியாளர் குழு புறப்பட்டுவிட்டது. இன்னின்ன அயிட்டங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அவர்கள் திண்டுக்கல் சென்று தகுந்த உணவகத்தைப் பிடித்து - உணவைத் தயார் செய்து - கொண்டுவந்து விட்டனர். சாப்பிட ஆள் நடமாட்டம்  அதிகம் இல்லாத இடத்தையும்  கண்டுபிடித்தனர்’ என்று சொல்லிய எம்.ஜி.ஆர். மேலும் கூறினார்:

‘உங்களுக்காக இன்று எல்லோருக்கும் சைவச்  சாப்பாடு’ என்று கண்சிமிட்டியவாறே எம்.ஜி.ஆர். கூறவும் கல்யாண சுந்தரம் மெதுவான குரலில், ‘வள்ளல் என்று தெரியாமலா அழைக்கிறார்கள்! ஆனால், இப்படி ஓர் உதவியாளர் படை கிடைத்ததே அதுதான் ஆச்சரியம்’ என்றார்.

நீங்கள் சாப்பிடவில்லை?

ஒரு பிரபல தொழில் அதிபர், பிரபல கல்வி நிறுவனங்களின்  தலைவர், முதல்வர் எம்.ஜி.ஆரைக் காண தோட்டத்துக்கு வந்தார். முன்னதாக அவரிடம் ‘காலையில் தோட்டத்துக்கு  வந்துவிடுங்கள். காலை டிபன் அங்கு சாப்பிடவேண்டும்’என்று எம்.ஜி.ஆர். சொல்லி இருந்தார்.  எம்.ஜி.ஆர்., மேல் மாடியிலிருந்து கீழே வருவதற்கு சற்று தாமதமானது. அந்தத் தொழில் அதிபர் வந்தார். அவரை டிபன் சாப்பிட அழைத்தார்கள். ‘சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டேன்’ என்று கூறினார்.

முதல்வர் எம்.ஜி.ஆர். கீழே உள்ள அறைக்கு வந்ததும் அந்தத் தொழில் அதிபருக்கு அழைப்பு வந்தது.  உள்ளே போனார். ‘வாங்க! சாப்பிட்டீர்களா?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘ஓ! சாப்பிட்டேனே’ என்றார் அந்தத் தொழில் அதிபர். ‘அப்படியா! என்ன சாப்பிட்டீர்கள்?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘இட்லி, பொங்கல், தோசை, வடை’என்றார் தொழில் அதிபர்.  ‘நீங்கள் இங்கே சாப்பிடவில்லை என்று தெரிகிறது. இன்று காலை இங்கு இட்லி, கிச்சடி, பூரி, வடை இதுதான் மெனு’ என்றார் எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் சாப்பிட்டேன் என்று சொன்ன அந்தத் தொழில் அதிபர் சங்கடத்துடன்  மன்னிப்பு கேட்டார்.

சனி, 22 டிசம்பர், 2012


சென்னை :பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி, தங்களைப் பற்றிய விவரங்களை, பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு, மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி, ஏப்ரலில் முடிகிறது. இந்த தேர்வை, 10.5 லட்Œம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், "சிடி'யில் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட மையங்களில் ஒப்படைத்து, பின் அவை, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.தேர்வுத் துறையில், பல்வேறு திட்டங்கள், இணையதளம் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரங்களையும், இணையதளம் வழியாக பதிவு செய்ய, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.மாணவ, மாணவியர், தங்களது பள்ளிகளில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, ஆசிரியர் உதவியுடன், தங்களைப் பற்றிய விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.பதிவு செய்யப்படும் தகவல்களில் தவறுகள் இருந்தால், அதை உடனடியாக சரி செய்து கொள்ளவும், வழி செய்யப்பட்டுள்ளது. ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி, வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து, வசுந்தரா தேவி கூறுகையில், ""தேர்வுத் துறை இணையதளத்தில், ஒவ்வொரு பள்ளியும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள, "பாஸ்வேர்டை' பயன்படுத்தி, இணையதளத்திற்குள் சென்று, விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை, தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்,'' என,தெரிவித்தார்.இணையதளத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள், "நிக்' மையங்கள் மூலம் பெறப்பட்டு, சென்னையில் உள்ள தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.பின், மாணவ, மாணவியர் குறித்த விவர பட்டியல், தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த புதிய திட்டத்தால், தேர்வுப் பணிகள், பெரும் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இணையதள பதிவின் போது, மாணவ, மாணவியர்


கவனிக்க வேண்டிய, முக்கிய அம்சங்கள் குறித்து, தேர்வுத் துறை கூறியிருப்பதாவது:
* தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, எந்த மொழிகளில் தேர்வை எழுதுகின்றனர் என்ற விவரங்களை, ஒன்றுக்கு பலமுறை, மாணவர்கள் சரிபார்க்க வேண்டும்.
* மாணவர்களின் புகைப்படங்கள் மிகவும் முக்கியம். சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை, "அப்லோட்' செய்ய வேண்டும்.
* உடல் ஊனமுற்றவர்களாக இருந்தால், "ணீட' என, குறிப்பிட வேண்டும். இந்த விவரங்கள் மிகவும் முக்கியம் என்பதால், தலைமை ஆசிரியர் மேற்பார்வையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* சரியான தகவல்களை பதிவு செய்தால்தான், பிழையில்லாத மதிப்பெண் பட்டியலை வழங்க முடியும். இதை உணர்ந்து, தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். தவறுகள் நடந்தால், சம்பந்தபட்ட தலைமை ஆசிரியர் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தேர்வுத் துறை கூறியுள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள் திருத்தம் செய்யலாம்:பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்கள், தங்களை குறித்த விவரங்களை, பழைய முறையில், ஏற்கனவே வழங்கி உள்ளனர். எனினும், அந்த விவரங்களில், ஏதேனும் தவறுகள் இருந்தால், உடனடியாக, இணையதளம் வழியாக, திருத்தம் செய்யலாம் என, தேர்வுத் துறை இயக்குனர் தெரிவித்தார். ஜன., 4ம் தேதி வரை, இந்த திருத்தங்களை, அந்தந்த பள்ளிகளில் உள்ள இணையதளம் வழியாகச் செய்ய வேண்டும் என, அவர் அறிவுறுத்தி உள்ளார்

காவிரி. இந்த மூன்றெழுத்துச் சொல் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழர்களது வாழ்வோடும், வரலாற்றோடும், பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்று. உலகிற்குத் தமிழர்களின் ஆற்றல்களை எடுத்துரைக்கும் பிரம்மாண்டமான கோயில்கள், இலக்கியங்கள், கலைகள் எல்லாம் காவிரிக்கரையில் இன்றும் சான்றுகளாக இருந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அந்த நதியையே தங்கள் வாழ்வாதரமாகக் கொண்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டு எதிர்கொண்ட துயரங்கள் இதுவரை வரலாறு கண்டிராதது.ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தரமாட்டோம் என்று அறிவித்ததன் மூலம் தமிழ்நாட்டிற்கு அந்த நதி நீரில் உள்ள உரிமையை கர்நாடகம் நிராகரித்தது. உரிமையை அங்கீகரித்து கர்நாடகத்தைக் கண்டித்து வைத்திருக்க வேண்டிய உச்ச நீதிமன்றமோ, இரண்டு முதலமைச்சர்களும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று இடையில் ஒதுங்கிக் கொள்ளப் பார்த்தது.

இந்தச் சூழ்நிலையில், காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு இம்மாத இறுதிக்குள் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய நீர் வளத்துறைச் செயலர் துருவ விஜய் சிங் அறிவித்திருப்பது தமிழகத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும். தமிழகத்திற்கு ஆண்டொன்றுக்கு 419 டி.எம்.சி காவிரி நீர் வழங்க ஆணையிடும் இந்தத் தீர்ப்பு, 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதமே வழங்கப்பட்டும் அதனை இத்தனை காலம் அரசிதழில் வெளியிட மத்திய அரசு முன் வரவில்லை; இப்போதும் கூட எப்போது வெளியிடுவீர்கள் என உச்சநீதி மன்றம் கடிந்து கொண்டதற்குப் பின்னரே இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டால் இந்த வெற்றியின் பரிமாணம் விளங்கும்.

இந்த வெற்றி எளிதில் கிடைத்து விடவில்லை. சற்றும் சளைக்காமல், சோர்ந்து விடாமல், அரசியல் பேரங்களுக்கு மயங்கிவிடாமல், நம்பிக்கையோடும், உறுதியோடும் தமிழக முதல்வர் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி இது.

காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டால் நான்கு மாநில முதலமைச்சர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட, பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் கூடிப் பேசித் தீர்வுகாண வேண்டும். பிரதமர்தான் அந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். 2003க்குப் பின் அந்த ஆணையத்தின் கூட்டம் நடைபெறவே இல்லை. கூட்டத்தைக் கூட்டும்படி மே மாதத்திலும் பின் ஜூலை மாதத்திலும் முதல்வர் அனுப்பிய கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் அமைதி காத்தார். முதல்வர் உச்ச நீதிமன்றத்தை அணுக, உச்ச நீதி மன்றம் பிரதமரைக் கடிந்து கொண்ட பின்னர் செப்டம்பர் 19ம் தேதி கூட்டம் நடைபெற்றது. பிரதமர் அக்டோபர் 15 வரை வினாடிக்கு 9000 கன அடி நீர் திறந்துவிடும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார். கர்நாடகம் மறுத்தது.மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றார் முதல்வர். நீதிமன்றம் பிரதமரின் ஆணையை உறுதி செய்தது. ஆனால் அக்டோபர் 15 வரை தண்ணீர் திறந்து விட வேண்டிய கர்நாடகம், இடையிலேயே தண்ணீரை நிறுத்தியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார் முதல்வர்.

வழக்குகள் வேண்டாம், பேசித் தீர்த்துக் கொள்ளலாம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று ஒவ்வொரு திசையிலிருந்தும் எழுந்த குரல்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சட்ட பூர்வமான முறையில் போராடி வெற்றி கண்ட முதல்வரைப் பாராட்டுகிறோம்.

இத்தனை பிடிவாதம் பிடிக்கும் கர்நாடகா, அரசிதழில் வெளியிட்டாலும் தீர்ப்பை நிறைவேற்றுமா என்று சந்தேகம் ஏற்படுவது இயற்கை. தீர்ப்பின்படி காவிரி மேலாண்மைக் குழு (Cauvery Management Board) ஒன்று உருவாக்கப்படும். அது காவிரியில் உள்ள 8 அணைகளிலும் தனது ஆணைகளை நிறைவேற்றத் தனது பிரதிநிதிகளை நியமிக்கும். எனவே அணைகளின் நிர்வாகம் கர்நாடகத்தின் கையில் அல்ல, இந்த மேலாண்மைக் குழு வசம் இருக்கும். எனவெ நியாயம் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவோம்.

நம்பிக்கைதானே வென்றது! 

சனி, 15 டிசம்பர், 2012


கடந்த திமுக ஆட்சியில் பொருளாதார வசதியில்லாதவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு,  ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’  தொடங்கப்பட்டது. அடுத்து ஆட்சி மாறியவுடன் இந்த ஆண்டு ஜனவரி மாதம்  ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்" என்ற பெயரில் அந்தத் திட்டம் சில புதிய மாற்றங்களுடன் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.   இந்த விரிவாக்கத்தில்  1,016 வகையான சிகிச்சை முறைகளும், 23 முக்கிய பரிசோதனைகளும், 113 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும். இதன்மூலம் ஒரு பயனாளிக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட 77 நோய்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்வரை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சில முக்கிய உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளில் இந்தத் திட்டத்திற்கென வரையறுக்கப்பட்ட தொகையையும் தாண்டி செலவாவதால் இந்தத் தொகையை நோயாளிகளே ஏற்கும் நிலை ஏற்படுகிறது. இதனை உணர்ந்த தமிழக அரசு சில முக்கிய உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளில் கூடுதலாய் ஆகும் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து கடந்த 2ம் தேதி முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், ‘இதுவரை இந்தத் திட்டத்தின்கீழ், 1,64,365 பயனாளிகளுக்கு 384 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய மருந்துகள்,  எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை,  காது நுண் எலும்புக் கருவி பொருத்தும் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை ஆகிய சிகிச்சைகளை மேற்கொள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக செலவு ஆகிறது என்பதால் இந்த கூடுதல் செலவினத்தை, ஏழை எளிய  நோயாளிகளே ஏற்கும் நிலைமை உள்ளது என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இத்தகைய ஏழை, எளிய நோயாளிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக ஏற்படும் கூடுதல் செலவினத்தையும் அரசே ஏற்கும் வகையில் ஒரு சிறப்புத் தொகுப்பு நிதி, அதாவது Corpus Fund ஒன்று உருவாக்கப்படும். இந்தச் சிறப்புத் தொகுப்பு நிதிக்கு முதற்கட்டமாக  10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்பதையும்; இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் காப்பீட்டுத் தொகையிலிருந்து இந்தச் சிறப்புத் தொகுப்பு நிதிக்காக  ஆண்டொன்றிற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்பதையும்  பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பிட்ட மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டும் அதிகம் செலவாவதேன்?
பொதுவாக ஒரு சாதாரண அறுவைச் சிகிச்சை செய்யும்போது குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவர்கள்தான் சிகிச்சை மேற்கொள்வார்கள். ஆனால், மாற்று அறுவைச் சிகிச்சை என்று வரும்போது, அதற்கென்று அனுபவமும் திறமையும்  வாய்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் (Surgeons), மயக்கவியல் நிபுணர்கள் (Anaesthetists) என ஒரு திறமை வாய்ந்த குழு, சிகிச்சையை மேற்கொள்கிறது. உதாரணமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தவரையில் தானம் பெறப்படும் சிறுநீரகத்தை (Donor) அறுவைச் சிகிச்சை செய்து எடுப்பதற்கு ஒரு குழு, அதை நோயாளிக்கு பொருத்துவதற்கு (Recipient) ஒரு குழு என இரண்டு குழுக்களாக செயல்படுவது அவசியமாகிறது.

மேலும் இது போன்ற அறுவைச் சிகிச்சைகள் செய்வதற்கான நேரமும் அதிகம். குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சமாக 7 அல்லது 8 மணிநேரங்கள் ஆகின்றன. அதற்கு மேல் ஆகும் சிகிச்சைகளும் இருக்கின்றன. எனவே, இந்தச் சிகிச்சைகளின்போது பயன்படுத்தப் படும் கருவிகளுக்கான (Ventilator, Boyle’s Apparatus, Catheters  போன்றவை) செலவுகளும் அதிகம் பிடிக்கின்றன. மேலும் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பின்னரும் நீண்டநாள் கண்காணிப்பு தேவைப்படுகிறது.  அதற்குத் தேவைப்படுகின்ற மருந்துகளும் செலவு பிடிக்கின்றன. உதாரணமாக சைக்ளோஸ்போரின் (Cyclosporine) அல்லது டாக்ரோலிமஸ் (Tacrolimus) ஆகிய மருந்துகளில் ஒன்று கண்டிப்பாக பரிந்துரைக்கப்படும். இவை ஒரு குப்பி 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை செலவாகும் (ஒரு குப்பி 3 வாரங்கள் வரை வரும்). இவை தவிர அஸாதியோப்ரைன் (Azathioprine),Monoclonal Antibodies மற்றும் ஸ்டீராய்டுகளும் (Steroids) தேவைப்படுகின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் அறுவைச் சிகிச்சை செய்த பின்னர் வாழ்க்கை முழுவதும் உட்கொள்ள வேண்டிய மருந்துகளாகும். எனவே செலவுகள் எகிறுகின்றன.

இந்தக் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதெப்படி?
இத்திட்டத்தின்கீழ் ஏழைப் பயனாளிகள் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையைக் கொண்டு தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்துகொள்ளலாம். மருத்துவமனையில் சேர்ந்த பின்பு அங்கு உங்கள் அடையாள அட்டையைக் காண்பித்தால் அவர்கள் காப்பீட்டுத் திட்ட அலுவர்களிடம் உங்களின் தகவல்களைக் கொடுத்து, அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவார்கள். பின்னர் அறுவைச் சிகிச்சை செய்யப்படும். அதன் பின்னர் சிகிச்சைக்கான தொகையினை காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவமனை நிர்வாகம் பெற்றுக்கொள்ளும். நோயாளிகளிடமிருந்து எந்தத் தொகையும் வாங்கப்படுவதில்லை. வாங்கவும் கூடாது. சிகிச்சைகளுக்குப் பிந்தைய கண்காணிப்புக்கான மருந்துகளுக்கான தொகையும் காப்பீட்டின்கீழ் வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நோயாளிகளோ அவர்களின் உறவினர்களோ எதற்காகவும் அலைய வேண்டாம். நீங்கள் உங்கள் அடையாள அட்டையைக் கொடுத்தால் போதும். காப்பீடு பெறுவதற்கான  மற்ற நடைமுறைகளெல்லாம் மருத்துவமனை நிர்வாகம் கவனித்துக்கொள்ளும்.

அடையாள அட்டை பெறுவது எப்படி?
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் குடும்பங்களின் குடும்பத்தலைவரின் ஆண்டு வருமானம் 72,000 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும். குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வருமானத்திற்கான சான்றிதழ் (இச்சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்) ஆகியவற்றுடன் தங்கள் ஊரின் கிராம நிர்வாக அலுவலரை அணுக வேண்டும். அவரின் பரிந்துரையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இத்திட்டத்திற்கெனப் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியரை சந்திக்க வேண்டும். அவர் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து,  அதனுடன் சான்றிதழ்களை இணைத்துத் தரவேண்டும். அங்கு பயனாளி குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் அனைவரின் புகைப்படத்தையும் எடுத்துக்கொள்வார்கள். பின்னர் பயனாளியின்  குடும்பம் பதிவு செய்யப்பட்டு அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடும்.

சென்னையில் சாஃப்ட்வேர் என்ஜினீயராகப் பணியாற்றும் 23 வயதுப்  பெண் ஒருவர், தீபாவளிக்கு விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டுத் திரும்ப பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அவர் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது என்ற செய்தி, கடந்த வாரம் எல்லா ஊடகங்களிலும் வெளியானது. அதைப் படித்த நாம் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தோம். அனுதாபத்தில் கசிந்தோம்.

இதுபோன்ற நிகழ்வுகளைத்தான் பெண்கள் மீதான வன்முறை என நம்மில் பலர் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால், பெண்கள் மீதான எல்லா வன்முறைகளும் இப்படி அப்பட்டமாக, வெளிப்படையாக நடத்தப்படுவதில்லை.

வீட்டிலும் வீதியிலும் அலுவலகத்திலும் பெண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொற்களாலும் செயல்களாலும் எதிர்கொள்ளும் வன்முறை நம் சமூகத்தில் வெளியே தெரியாமல் அன்றாடம் ஆயிரக்கணக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதில் கொடுமை என்னவென்றால், குடும்ப உறவுகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும்  வன்முறை என்பது இங்கே இயல்பானதாகவே கருதப்படுகிறது என்பதுதான். மாப்பிள்ளை அடிக்கிறார் என்று வீட்டுக்கு வரும் பெண்ணிடம் ‘ஆம்பிளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோ’ என்று மிகச் சாதாரணமாகச் சொல்லும் அம்மாக்கள்தான் அதிகம். தொலைக்காட்சிகளைத் திறந்தால்... தினம் ஏதாவது ஒரு தொடரில் ஏதேனும் ஓர் ஆண், அப்பாவோ, அண்ணனோ, கணவனோ, காதலனோ, ஒரு பெண்ணை அறைந்து கொண்டிருப்பதைக் காணலாம். நம் தமிழ் சினிமாக்கள், இன்னும் ஒருபடி மேலே. அதில் கதாநாயகியின் கன்னத்தில் கதாநாயகன் அறைந்ததும் பெரும்பாலும் அடுத்த காட்சி டூயட்தான். அதாவது அந்த வன்முறையைப் பெண் இயல்பாக எடுத்துக்கொண்டு எதுவுமே நடக்காததுபோல அவனோடு கொஞ்சத் தயாராகிவிட வேண்டும்.

இதை தமிழ்க் கலாசாரம் என்று கண்ணகி காலத்திலிருந்து கற்பித்து வந்திருக்கிறோம். ஆனால், உங்களுக்குத் தெரியுமா? நாட்டில் பதிவாகி உள்ள குடும்ப வன்முறை வழக்குகளில் தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ணா  திரத், மக்களவையில் அளித்த தகவல்படி  தேசிய குற்றப் பதிவு பீரோ சென்ற வருடம் 9,431 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கிறது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு ‡NFHS - 3  அறிக்கையின் படி இந்தியாவில் 30.4 சதவிகித  திருமணமான பெண்கள் தங்களது 15 முதல் 49 வயது வரை உடல், பாலியல், உணர்வு சார்ந்த வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதிலும் கணவனிடம் இருந்து முதல் அறையை திருமணமான முதல் ஐந்து வருடங்களுக்குள் அவர்கள் பெற்று விடும் ‘பாக்கியம்’ உடையவர்களாம்.

இதுபோலான வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க 2005ம் வருடம்  குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப்பட்டது. பெண்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பை மையமாகக்கொண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டம், பெண்கள் மீது எத்தகைய வன்முறையும் நடைபெறாமல் இருக்கும் தொலைநோக்குப் பார்வையோடு உருவானதுதான். அக்காக்கள், தங்கைகள், அம்மாக்கள் (தத்தெடுத்துக் கொண்டவர்கள் என்றாலும் கூட)  வன்முறைக்கு ஆளாக்கப்பட்டால், அவர்கள் ஒரு  பாதுகாப்பு அதிகாரியை அணுகலாம் என்று அச்சட்டம் சொல்கிறது. அதே போல் பாதிக்கப்பட்ட பெண்களின் உறைவிடமும் மிக முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், இதுபோன்ற சட்டங்கள் நிஜமாகப் பாதிக்கப்படும் பல பெண்களுக்குத் தெரிவதில்லை என்பதே உண்மை.

ஆனால், சட்டங்களும் நீதி மன்றங்களும் மட்டுமே நம் பெண்களைப் பாதுகாத்து விடுமா? சமூகத்தின் பொதுப் புத்தி மாறாமல், பங்கேற்பு இல்லாமல் பெண்கள் மீதான வன்முறையை முற்றிலும் நிறுத்திவிடமுடியாது. அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?  வாருங்கள் பேசுவோம்!

த்திய அரசு, மக்களுக்கு வரும் புத்தாண்டில் ஒரு ‘பரிசு’ அளிக்கவிருக்கிறது. சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், உணவு, உரம், முதியோர் ஓவூதியம், கல்வி, 100 நாள் வேலைத் திட்டம் இவற்றுக்கு இப்போது அளித்துக் கொண்டிருக்கும் மானியங்கள், உதவித் தொகைகள், இவற்றை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடும் திட்டம் ஒன்றை வரும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த உள்ளது. முதலில் ஆதார் அட்டையின் அடிப்படையில் 15 மாநிலங்களில் உள்ள 52 மாவட்டங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பின்னர் 2013ம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுக்க இது அமலுக்கு வந்துவிடும்.

மானியங்களுக்காக அரசு ஆண்டுதோறும் பெருந்தொகை செலவிட்டு வருகிறது, அதில் முறைகேடு நிகழ்ந்துவிடாமல் தடுக்கும் பொருட்டு இந்த ஏற்பாடு என்கிறது அரசு.

நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால், இது நடைமுறையில் சாத்தியமா என்பதுதான் கேள்வி.

இந்தாண்டு ஏப்ரல் நிலவரப்படி 120 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் 20 கோடிப் பேருக்கு மாத்திரமே ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்களில் 35 சதவிகிதம் அளவிற்குத்தான் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார்கள். மாதச் சம்பளம் பெறாத, முறைப்படுத்தப்படாத துறைகளில் உள்ள பலருக்கு வங்கிக் கணக்கே கிடையாது. நாடு நெடுகிலும் 14,475  வங்கிக் கிளைகள்தான் கிராமப்புறங்களில் உள்ளன என்று ஒரு குறிப்புத் தெரிவிக்கிறது.  இந்த மாதிரியான சூழ்நிலையில் மானியங்களை வங்கிக் கணக்கில் நேரடியாக அளிப்பது சாத்தியமா?

இந்த மானியங்கள் எப்போது நம் கணக்கில் சேர்க்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. உர மானியத்திற்கு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முறையின்படி, ஒரு விவசாயி உரம் வாங்கிய பின் அந்த விற்பனையை உறுதி செய்துகொண்டு மானியத்தை உர நிறுவனத்திற்கு அளிக்கிறது அரசு. அதேபோன்ற நடைமுறை இங்கேயும் பின்பற்றப்பட்டால், நடுத்தரக் குடும்பங்கள் சிரமத்தை சந்திக்கும். ஏனெனில், இப்போது சில மானியங்கள் நாம் ஒன்றைப் பெறும்போதே நமக்குக் கிடைத்து விடுகின்றன. உதாரணமாக எரிவாயு உருளை நம் வீட்டில் டெலிவரி செய்யப்படும்போது மானிய விலையில்தான் டெலிவரி செய்யப்படுகிறது. அதைப்போல ரேஷனில் சர்க்கரை வாங்கும்போது அதை மானிய விலையில்தான் வாங்குகிறோம். ஆனால், புதிய முறையில் இவற்றை நாம் சந்தை விலையில் வாங்குவோம். பின் அந்தத் தகவல் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து நமது கணக்கிற்கு மானியம் அனுப்பி வைக்கப்படலாம். இதில் தாமதம் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் ஏதுமில்லை.

இவற்றையெல்லாம்விடக் கவலையளிப்பது வேறு இரண்டு அம்சங்கள். ஒன்று, மெல்ல மெல்ல மானியங்களை ஒழித்துக்கட்ட அரசு எண்ணுகிறதோ, இது அதற்கான முதல்படியோ என்ற சந்தேகம். இந்த சந்தேகத்திற்கு ஆதாரம், அண்மைக்காலமாக பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், மானியங்கள் அரசுக்குப் பெரும் சுமையாகி வருகின்றன, அவற்றை இனி அரசால் தாங்க முடியாது எனப் பேசி வருவது.

மற்றொன்று, இது 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, நடுத்தர வர்க்கத்தின் ‘ஓட்டுக்கு நோட்டு’ அளிக்கும் முயற்சியோ என்ற சந்தேகம். இதற்கான அடிப்படை, இன்னும் ஆதார் அட்டை முழுமையாகக் கொடுத்து முடியாத நிலையில், பெரும்பாலானோருக்கு வங்கிக்கணக்கு இல்லாத நிலையில் இந்தத் திட்டத்தை 2013க்குள் நாடு முழுக்க நடைமுறைப்படுத்த அரசு காட்டும் அவசரம்.

அரசியல் அவசரங்கள் அலங்கோலத்தில் முடிவதை நாடு அநேக முறை பார்த்து விட்டது.

வெள்ளி, 7 டிசம்பர், 2012


‘தொழில்நுட்ப வளர்ச்சியில் குஜராத் எப்போதும் முன்னோடியாக இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டும் நாள் இது’ என்று சாதாரணமாகத் துவங்கி, சட்டென்று காங்கிரசையும், தன்னை விமர்சிப்பவர்களைக் காரமாகவும் கிண்டலடித்தும் தன் தேர்தல் பிரசாரத்தில் முழங்குகிறார் நரேந்திர மோடி. மேடையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டும் பேசுகிறார். நடு நடுவே தண்ணீர் குடித்துக் கொள்கிறார்.

இவை அனைத்தையும் நான்கு வெவ்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கில் திரண்டிருப்பவர்கள் ஒரே நேரத்தில் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள், பார்க்கிறார்கள் என்றால், டி.வி.யில் பார்ப்பதைப்போல அல்ல. நிஜமாக நேரில் பார்ப்பதைப்போல 3டியில் பார்க்கிறார்கள். எப்படி?

மோடி பயன்படுத்திக் கொண்டது நவீன 3டி ஹோலோகிராபிக் தொழில்நுட்பம். இங்கிலாந்தைச் சேர்ந்த மியூசன் என்ற நிறுவனம் 10 மில்லியன் டாலர் செலவில் காசுமணி எண்டர்பிரைசஸ் என்ற ஹைதராபாத் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை மோடிக்குத் தந்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் பிரிட்டீஷ் நிறுவனத்தை தொடர்புகொண்டு இந்தியாவில் பயன்படுத்த லைசென்ஸ் பெற்றோம். செயல்படுத்த வாய்ப்புத் தேடியபோது மோடியின் அலுவலகத்திலிருந்து பேசினார்கள். புதிய தொழில்நட்பத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருந்தார் மோடி" என்கிறார், இதன் இயக்குநர் மணிசங்கர். மோடியின் இந்தத் தேர்தல் பிரசாரத்தை ஒளிப்பதிவு செய்தவர், தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள யு.கே. செந்தில்குமார்.

ஹோலோகிராப் தொழில்நட்பம் இதற்கு முன் இணையதளத்தில் உள்ள பைபர் சேனல்கள் உதவியுடன் செயல்படுத்தப்பட்டது. தற்போது மோடியின் பிரசாரம் செயற்கைக்கோள் உதவியுடன் சாத்தியமாகி உள்ளது. காந்தி நகரில் உள்ள ஸ்டுடியோவிலிருந்து  3டி தொழில்நுட்பத்தில் மோடி பேசியதைப் பார்க்க,  ஸ்பெஷல் கண்ணாடியெல்லாம் தேவை இல்லை.

தொழில்நுட்பத்தை மோடி தனது பேச்சுக்களுக்குப் பயன்படுத்திக் கொள்வது புதிதல்ல. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தொகுத்து வழங்கிய நேரலை நிகழ்ச்சியில் கூகுள் பிளஸ் ஹேங்க் அவுட் உதவியுடன் ஒரு டஜன் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான தன் ரசிகர்களுடன் மோடி பேசினார்.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் செய்ய விரும்பும் மோடிக்கு ஹோலோகிராப் 3டி பெரிய வரம். ஓர் அரசியல்வாதி இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது உலகில் இதுவே முதன்முறை.

சரி, எதிர்க்கட்சிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? ஒவ்வொரு முறை பயன்படுத்துவதற்கும் 5 கோடி செலவு பிடிக்கும் என்று கேள்விப்பட்டோம். இது வீண் செலவு. 500 கோடிக்கு மேல் செலவு செய்து பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்கும் குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, இந்த நிதி எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்த தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தப் போவதாகக் கூறுகிறார்.

இதற்குப் பதிலடியாக காங்கிரசும் இந்தத் தொழில்நுடபத்தைப் பயன்படுத்துமா? ராகுல் காந்திக்கும் சோனியாவிற்கும் ஆசை இருந்தாலும் 3டியில் பிரசாரம் செய்ய முடியாது. காரணம், 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரை மோடி மட்டுமே இதைப் பயன்படுத்தும் விதமாக காப்புரிமை (patented) செய்யப்பட்டு உள்ளது.

விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் 3டி ஹோலோகிராப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மோடி தேர்தல் பிரசாரம் செய்ததை இளைஞர்கள் ஆர்வத்தோடு  பார்க்கிறார்கள்.

பின்குறிப்பு: நவம்பர் 25ம் தேதி ABP News - AC Nielsen வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு,  மீண்டும் மோடி இப்போதிருப்பதைவிட அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பார் எனத் தெரிவிக்கிறது.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மீது நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக வந்திருக்கிறது புது சட்டம். இந்தச் சட்டத்தின் பெயர் - பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012. இந்தச் சட்டம் நவம்பர் 14, 2012 முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

 14 வயது வரையான குழந்தைகள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டால், அதற்கு ஏற்கெனவே சட்டம் இருக்கிறது. இப்போது அந்த வயதை 18 ஆக உயர்த்தியிருக்கிறார்கள். இந்தச் சட்டம் சொல்லும் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்குகிறார், கோவை வழக்கறிஞர் திவ்யா.

 18 வயதிற்குக் கீழிருக்கும் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாவதைத் தடுக்கும் இந்தச் சட்டம் ஆண் குழந்தைகளையும் சேர்த்தே கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இந்தியாவில் 52 சதவிகிதப் பாலியல் குற்றங்கள் 18 வயதிற்கு கீழிருக்கும் குழந்தைகள் மீதே  நடக்கின்றன. இதில் ஆண் குழந்தைகளின் சதவிகிதம் 20 ஆகவும், பெண் குழந்தைகளின் சதவிகிதம் 32 ஆகவும் இருக்கின்றன.

குழந்தைகளைத் தவறான நோக்கோடு அணுகினாலே இந்தச் சட்டம் அதையும் குற்றமாகவே பார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளிடம் பாலியல் தொடர்பான விஷயங்களைக் கூறினாலோ, உறுப்புகளைத் தொடச் செய்தாலோ, ஆபாசப் படங்களைக் காண்பித்தாலோ அதுவும் குற்றமே. குற்றம் நடந்திருக்கவேண்டும் என்பதில்லை, அதற்கான முயற்சி கூட குற்றமே.

குற்றம் நடந்தது என்று குழந்தை சொன்னாலே போதும்... அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கிற பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்குத்தான் உண்டு.

குழந்தை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். பெண் மருத்துவரே அந்தக் குழந்தையை பரிசோதிக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போது குழந்தையின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ உடன் செல்ல வேண்டும். அதேபோல் காவல்நிலையத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரத்தில் இருப்பவர்களே வழக்கை விசாரிக்க வேண்டும்.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 வருட சிறைத்தண்டனையும், அதிகபட்சம் ஆயுள்தண்டனையும் வழங்கப்படும்.

இந்த வழக்கை சிறப்பு சிறுவர் சீர்திருத்த (Special Juvenile court) விசாரிக்கும். இதற்கென சிறப்பு வழக்கறிஞரும் அரசால் நியமிக்கப்பட்டிருப்பார்.

விரைவாக விசாரணை செய்து குற்றம் நடந்த 30 நாட்களுக்குள் குழந்தையின் வாக்குமூலத்தை நீதிமன்றம் வாங்கிவிட வேண்டும். வழக்கை ஒரு வருடத்திற்குள் முடித்துவிட வேண்டும்.

நீதிமன்ற அனுமதியின்றி ஊடகங்கள் வழக்குத் தொடர்பான விவரங்களை வெளியிடக் கூடாது என்று இந்தச் சட்டம் சில வரையறைகளையும் கூறியிருக்கிறது.


தாமதமாய் வந்த சட்டம்
1982ல் க்‡ˆ கொண்டு வந்த குழந்தைகள் உரிமைச்சட்டமானது 1989ல் இந்தியாவில் விவாதிக்கப்பட்டது. 1992ல் நடைமுறைக்கு வரவேண்டிய இந்தச் சட்டம் 20 வருடங்கள் கழித்து, இப்போதுதான் நடைமுறைக்கு வந்திருக்கிறது.  2011ல்     சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் மே 2012ல் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு குழந்தைகள் தினமான நவம்பர் 14, 2012 அன்றிலிருந்து நடைமுறைக்கு வந்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேசப் போட்டிகளில் தமிழக தடகள வீரர்கள் கலந்துகொள்வதை அரிதாகவே பார்க்க முடிகிறது. லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ஒரு தமிழருக்குக் கூட கிடைக்கவில்லை. ஒருபக்கம் கேரளாவும் ஆந்திராவும் விளையாட்டுத்துறையில் வீரநடை போட்டு முன்னேறிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் நம் தமிழக வீரர்கள், சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்கே தத்தளிக்கும் நிலைதான் நீடிக்கிறது. உண்மையிலேயே நம்மிடம் திறமையான இளைஞர்கள் இல்லையா?

இருக்கிறார்கள். ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்தும் இருக்கிறார்கள். கடந்த அக்டோபர் கடைசி வாரத்தில் லக்னோவில் தேசிய ஜூனியர் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து முடிந்தன. இதில் நம்முடைய 90 இளம் தடகள வீரர்கள் கலந்துகொண்டு 45 பதக்கங்களை வென்று ஊர் திரும்பியுள்ளனர். இப்போட்டியில் பல தேசிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர் இந்த ஜூனியர்கள். கடந்த சில வருடங்களில் இது சிறப்பான பதக்க வேட்டை. பதக்கம் வென்ற பல இளம் வீரர்கள் மிகக் கடுமையான சூழல்களிலிருந்து வந்து சாதித்துள்ளனர்.

விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் காண மிக முக்கியமான முதற்படி... திறமைகளைக் கண்டறிவது. அதற்குப் பிறகுதான் திட்டமிடுதல், பயிற்சி கொடுத்தல், போட்டிகளுக்குத் தயார் செய்வது எல்லாமே! இதோ நம் கண் முன்னே 45 பேர் பதக்கங்களை வென்று அடுத்த உச்சம் தொடக் காத்திருக்கிறார்கள். அவர்களை நாம் என்ன செய்ய போகிறோம்? அவர்கள் மேலும் மேலும் முன்னேறி சர்வதேச அளவில் மிளிர என்ன செய்யப் போகிறோம்?  ஒவ்வொரு ஆண்டும் இதுபோல பலரும் பதக்கம் வென்று திரும்புவதும் பின் அவர்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறதுதான். ஆனால் விளையாட்டுத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிற நாம் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து அறிந்துகொள்ள விளையாட்டு வீரர்களையும் சில பயிற்சியாளர்களையும் விளையாட்டுத்துறையின் மூத்த அதிகாரிகள் சிலரையும் சந்தித்தோம். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

பதக்கம் வென்று திரும்பியிருக்கிற இவர்களுக்கு இதுவரைக்கும் எந்தப் பாராட்டோ, பரிசுத்தொகையோ அறிவிக்கப்படவில்லை. இது வாடிக்கையாக நடப்பதுதான் என மனதை தேற்றிக்கொண்டோம். ஆனால் லக்னோ போட்டிக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட 131 இளம் வீரர்களில் 90 பேர்தான் கலந்துகொண்டிருக்கிறார்கள். மீதி 40 பேர் ஏன் லக்னோ செல்லவில்லை என்பதற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை.

இது குறித்து விசாரித்தோம். லக்னோ போட்டி தொடங்குவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்புதான் பலருக்கும் இது குறித்த அறிவிப்புக் கடிதமே போய் சேர்ந்திருக்கிறது. பல வீரர்களுக்கு இந்தக் கடிதமே போய்ச் சேரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு இந்தப் பிள்ளைகளுக்கு போக்குவரத்து வசதிகளையும் நம்முடைய விளையாட்டுத்துறை செய்துதரவில்லை என்றும், அவர்களாகவே கடைசி நேரத்தில் அடித்துப் பிடித்து லக்னோவிற்கு செல்கிற ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பெருங்கூட்டத்தோடு கூட்டமாகப் பயணித்தே சென்று சேர்ந்திருப்பதும் தெரியவருகிறது.

போட்டிகளில் கலந்துகொள்ளச் சென்ற வீரர்களுக்கு உணவுக்காக வழங்கப்பட்ட தொகை பத்து நாட்களுக்கு வெறும் 1,600 ரூபாய்தான்! பத்து நாட்களுக்கு ஒரு விளையாட்டு வீரனுக்கு இந்த சொற்பத் தொகை போதுமானதாக இருக்குமா என்ன?

லக்னோவில் நடந்த போட்டிகளில் பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் 15,000 ரூபாய் பரிசுத் தொகையை உடனடியாக அறிவித்திருக்கிறது கேரள அரசு. லக்னோ போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வீரரும் தங்களுடைய ஊரிலிருந்து லக்னோ சென்று அங்கே விளையாடி திரும்புகிற வரைக்கும் போக்குவரத்து தொடங்கி சகல உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறது அம்மாநில அரசு.

போட்டி மைதானத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே சென்று முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் கேரள வீரர்கள். பதக்கங்களை வென்று திரும்பிய இந்த விளையாட்டு வீரர்களுக்கு பாலக்காட்டிலும், எர்ணாகுளத்திலும் மகத்தான வரவேற்பையும் கொடுத்து அசத்தியுள்ளனர். அங்கே விளையாட்டும் வீரர்களும் சர்வதேச அளவுக்கு வளர்வதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இங்கே எல்லாமே தலைகீழாக நடைபெறுகிறது.

அதுபோகட்டும்... தமிழகத்தின் இந்த இளம் வீரர்களை நல்லபடியாகக் கவனித்து திறமையான சீனியர் வீரர்களாக மாற்றுவதற்காக நம் அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள சில மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினோம்.

இவர்களுக்கு பரிசு, பாராட்டு குறித்து எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் அடுத்த ஆண்டு ஸ்காலர்ஷிப் கொடுக்கப்படும்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார், எஸ்டிஏடியின் ஜெனரல் மேனேஜரான ராசாத்தி.

நம்முடைய தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவரான வால்டர் தேவாரத்தையும் சந்தித்தோம். அவரிடம் இந்தக் குழந்தைகளுக்கென ஏதாவது வருங்கால திட்டங்கள் இருக்கிறதா என்பது குறித்துக் கேட்டோம்.

அதற்காகத்தான் ஃப்யூச்சர் சாம்பியன்ஸ் ப்ரோகிராம் என்கிற ஒன்று ஏற்கெனவே இருக்கிறதே! அதோடு இவர்கள் நம்முடைய ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கிப் படிக்க இயலும். இந்தியன் கேம்புக்கு தேர்வானால் உணவு, உடை, உறைவிடம் எல்லாமே இலவசம்தானே. அதுபோக ஆண்டுதோறும் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம். சீனியர் வீரர்களாக ஆகிவிட்டால் முதலமைச்சர் கோப்பைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால் ஒருலட்ச ரூபாய் பரிசுகூட கொடுக்கப்படுகிறதே! இதற்குமேல் என்ன செய்ய வேண்டும்?, ஜூனியர்கள் நிறையப் பயிற்சி செய்தாலே போதும்" என்றார்.

அட ஆமாம்ல... இவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது. அரசுதான் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறதே... அதோடு விளையாட்டு விடுதிகளை நடத்துகிறதே... இதற்குமேல் என்னதான் செய்யவேண்டும் என்கிற கேள்விகள் நம்மிடமும் எழுந்தன. அதே சமயம் இத்தனையும் இருந்தும் ஏன் நம்மால் ஒலிம்பிக்கிற்கு ஒற்றை ஆளைக்கூட அனுப்பமுடியவில்லை? சில பயிற்சியாளர்களை சந்தித்துப்பேசினோம்.

தற்போது ஜூனியர் போட்டிகளில் வென்ற இந்த வீரர்கள் அடுத்த ஆண்டுதான் ஸ்காலர்ஷிப்புக்காக விண்ணப்பிக்க இயலும். அந்த விண்ணப்பங்கள் அதற்கடுத்த ஆண்டுதான் பரிசீலிக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.

அதுவும் எவ்வளவு தொகை கிடைக்கும் தெரியுமா? மாதம் ஆயிரம் ரூபாய்தான்! ஒரு சர்வதேச சாம்பியனை உருவாக்க இந்தத் தொகை போதுமானதாக இருக்குமா? அதோடு நம்முடைய விளையாட்டு விடுதிகளிலிருந்து உருவாகி வந்த ஒரே ஒரு சாம்பியனை உங்களால் காட்ட முடியுமா? சொல்லப்போனால் நம்முடைய விளையாட்டு விடுதிகள் உருப்படியான விளையாட்டு வீரனையும் ஒன்றுக்கும் உதவாதவனாக மாற்றிவிடும் அபாயகரமான இடங்களாகவே உள்ளன" என்று வருத்ததோடு பேசினார், பெயர் வெளியிடவேண்டாம் என மறுத்துவிட்ட ஒரு தடகளப் பயிற்சியாளர்.

அரசின் செயல்பாடுகளும் திட்டமிடலும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சரி, என்னதான் செய்வது? இந்தக் குழந்தைகளை சரியாக வளர்த்து எப்படித்தான் சாம்பியன்களாக உருவாக்குவது?

ஒரு சர்வதேச சாம்பியனை உருவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை. பத்து வயதிலிருந்தே அவனை தயார் செய்ய வேண்டும். பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு திட்டமிட வேண்டும். அவனுடைய உணவுப்பழக்க வழக்கங்களிலிருந்து பயிற்சி, படிப்பு எனப் பலதையும் திட்டமிடவேண்டும். அப்படிச் செய்தால் மட்டும்தான் நம்மால் உருப்படியான ஒரு விளையாட்டு வீரரை உருவாக்க இயலும்" என்கிறார், ப்ரைம் ஸ்போர்ட்ஸ் அகாதெமியின் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன். இன்று தமிழ்நாட்டில் சொல்லிக்கொள்ளும்படி உருவாகியுள்ள தடகள வீராங்கனையான காயத்ரியை உருவாக்கியவர், பயிற்சியாளர் நாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அழைத்து அந்தக் குழந்தையின் பெற்றோர், பயிற்சியாளரோடு பேசி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திட்டமிடவேண்டும். பொருளாதார ரீதியில் என்ன உதவி வேண்டும், பயிற்சியில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து அதற்கேற்ப நம்முடைய அரசும் விளையாட்டுத்துறையும் உதவ வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்தக் குழந்தைகளில் பத்து பேரையாவது ஒலிம்பிக்வரை அழைத்துச்செல்ல இயலும், இல்லையென்றால் படிப்பை காரணம் காட்டி பாதிப் பேர், வறுமையால் மீதிப் பேர் என ஒருவர் கூட தேறிவர முடியாமல் போகலாம். அதோடு தடகள விளையாட்டில் இருக்கிற வெவ்வேறு விளையாட்டுகளில் எது உகந்தது என்பதைக் கண்டறிதல், அதற்கேற்ப பயிற்சிகளை தீர்மானித்தல் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன" என்கிறார், தடகளப் பயிற்சியாளர் ராஜன்.

ஒரு பக்கம் அரசின் அலட்சியப்போக்கு தொடர்ந்தாலும் இன்னொரு பக்கம் நிறைய தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் கிளப்புகள் இந்த ஜூனியர்களில் திறமையான வீரர்களை தேர்ந்தெடுத்து உதவுகின்றன.

செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியின் உதவியோடு நடக்கிற ப்ரைம் ஸ்போர்ட்ஸ் அகாதெமி 150க்கும் மேற்பட்ட இளம் வீரர்களுக்கு இலவசமாக  உணவு, உடை, இருப்பிடமும் தந்து இலவசமாகப் பயிற்சியளிக்கிறது. அதோடு அவர்களுடைய கல்விக்கும் உதவுகிறது. லக்னோவில் நடந்த போட்டியில் தமிழகம் வென்ற 45 பதக்கங்களில் இந்த அகாதெமியிலிருந்து மட்டுமே 20 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. இவர்கள் தவிர கார்ல் மார்க்ஸ் அகாதெமி, யுஎஸ்எஃப், ராயல் அத்லெடிக் கிளப் என இன்னும் ஏகப்பட்ட தனியார் அகாதெமிகள் தொடர்ந்து இளம் வீரர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து உதவுகின்றன.

எச்பிசிஎல் நிறுவனம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓட்டப்பந்தய வீரர் அகஸ்டின் யேசுதாஸுக்கு கொடுத்து உதவுகிறது. நீளம் தாண்டுதல் வீரரான பிரேம்குமாரை வெளிநாட்டிற்கு அனுப்பி, பயிற்சி கொடுக்க மிட்டல் டிரஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இன்னொரு தடகள வீராங்கனையான காயத்ரிக்கு கோல்ட் க்வஸ்ட் நிறுவனம் உதவுகிறது. ஆனால் இது போதாது என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள். தமிழ்நாட்டில் இதுபோல உதவக்கூடிய தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்றும், ஜூனியர் லெவலிலேயே உதவிகள் கொடுத்தால் மட்டும்தான் நல்ல மாற்றத்தை உண்டாக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

இந்த 45 வீரர்களும் வெவ்வேறு சூழல்களில் வறுமையோடு போராடி, சரியான உணவின்றி, போதிய மைதானங்கள், உபகரணங்களின்றி வெற்றி பெற்றவர்கள். இவர்களுக்கு இவை அனைத்தையும் மிகச் சரியாக அக்கறையோடு கொடுத்தால் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் இந்த 45 பேரில் நான்கு பேராவது கலந்துகொள்ளுவார்கள் என்பது உறுதி. தவறினால் அடுத்த முறையும் தமிழ்நாட்டிலிருந்து யாருமே இல்லையே என புலம்பத்தான் வேண்டியிருக்கும்.
 


சில நம்பிக்கை நாயகர்கள்!

இவர்தான் நம்பர் ஒன்!
ஒலிம்பிக்வரைக்கும் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படும் இளம் தடகள வீரர்களில் முதன்மையானவர் 19 வயது பிரேம்குமார். இந்திய அளவில் நீளம் தாண்டுதலில் சீனியர், ஜூனியர் எல்லாவற்றிலும் பிரேம்குமார்தான் நம்பர் ஒன். குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்து , அம்மா சர்ச் ஒன்றில் சமையல் வேலை பார்த்து சம்பாதிக்க... வறுமையோடு போராடி இன்று தேசிய சாம்பியனாக வளர்ந்து நிற்கிறார் பிரேம்குமார். கடந்த பிப்ரவரியில் சீனாவில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பிலும், இலங்கையில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். லக்னோவில் நடந்த போட்டியிலும் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தற்போது மிட்டல் டிரஸ்ட் நிறுவனம் இவரை வெளிநாட்டிற்கு அனுப்பி, பயிற்சி செய்ய தேவையான ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்து தரவுள்ளது. 2014 காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய தடகளப் போட்டியிலும் சாதிக்க வேண்டும் என்பதே இவருடைய தற்போதைய லட்சியம். சாதிக்க நினைப்பவனுக்கு வறுமையோ, வசதியோ ஒரு தடையல்ல என்பதற்கு சாட்சியாக இருக்கிறார் பிரேம்குமார்.

அதிரடி அக்ஷயா!
அக்ஷயாவுக்கு ஆதர்சன நாயகர் காலி ஃபியர்சன். 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் ஒலிம்பிக்கில் வென்ற ஆஸ்திரேலிய வீரர் அவர். அவரைப்போலவே அக்ஷயாவுக்கும் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் ஒலிம்பிக்வரை முன்னேற வேண்டும் என்கிற லட்சியமும் விடாமுயற்சியும் இருக்கின்றன. சென்னையில் 11ம் வகுப்பில் படிக்கும் அக்ஷயா, லக்னோவில் நடைபெற்ற  16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவின் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு கொச்சியில் நடைபெற்ற தென்மண்டல தடகளப் போட்டியில் தடை தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக இப்போதே தயாராகி வருகிறார் அக்ஷயா. பயிற்சியாளரின் கண்டிப்பும் அப்பாவின் அக்கறையும் அம்மாவின் அன்பும்தான் தன்னுடைய வெற்றிக்கு காரணம் என்கிறார் அக்ஷயா.

உருவாகிறார் ஓர் உசேன் போல்ட்!
அகஸ்டின் யேசுதாஸ், 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் தொடர்ந்து சாதித்துவரும் இளம் வீரர். லக்னோ போட்டியில் 100 மீ. மற்றும் 200 மீ. என இரண்டு போட்டிகளிலும் கலந்துகொண்டு இரண்டு தங்கங்களை வென்று திரும்பியுள்ளார். அப்பா ரயில்வேயில் சாதாரண கிளார்க், பெரிய வசதிகள் கிடையாது. பதினோறாம் வகுப்பு படிக்கும்போது விளையாட்டாக தொடங்கிய ஓட்டப்பந்தய ஆர்வம் இன்று தேசிய சாம்பியனாக மாற்றியிருக்கிறது. லயோலா கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கும் இவர், தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் தங்கமும் வெள்ளியுமாகக் குவித்து வருகிறார். தற்போது 10.79 விநாடிகளில் 100 மீ. ஓட்டத்தில் ஓடி சாதனை படைத்திருந்தாலும், இதைவிட இன்னும் மூன்று அல்லது நான்கு மைக்ரோ செகண்டுகள் குறைவாக ஓட முயற்சி செய்துவருவதாக சொல்கிறார். 2020 ஒலிம்பிக்தான் இவருடைய லட்சியமும். இவருக்கு எச்பிசில் நிறுவனம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஸ்காலர்ஷிப்பாக கொடுத்து உதவுகிறது. அந்த உதவியால்தான் தன்னால் இந்த அளவுக்கு வரமுடிந்திருக்கிறது என்கிறார்.

நிற்காத ஓட்டம்!
திருவண்ணாமலைக்கு அருகிலிருக்கும் அணுக்குமலை என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பிரியா. தினமும் பல கிலோமீட்டர்கள் நடந்துதான் வேட்டவலம் அரசுப் பள்ளிக்கு வந்து படிக்கிறார். விவசாயம் செய்யும் சாதாரணக் குடும்பம். இருந்தும் விளையாட்டின் மீது தீராத ஆர்வம். 11ம் வகுப்பு படிக்கும் பிரியாவுக்கு பி.டி.உஷாவைப் போல சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வென்று, இந்தியாவுக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்பதே லட்சியம். அவர் படித்த பள்ளியின் தலைமையாசிரியரும் உடற்பயிற்சி ஆசிரியர் சீனிவாசனும் கொடுத்த உத்வேகம்... தொடர்ந்து 800 மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டார். பயிற்சி பெற பெரிய மைதானங்கள் கிடையாது, உபகரணங்கள் கிடையாது, போதிய டயட் எதுவுமே கிடையாது. இருந்தும் வெற்றி பெற வேண்டும் என்கிற நம்பிக்கையை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு சாலைகளிலும், மலைகள் மீதும் தன் பயிற்சியை தொடர்கிறார் இந்த வீராங்கனை. லக்னோவில் நடைபெற்ற 1,000 மீட்டர் போட்டியில் வெண்கலம் வென்று திரும்பியுள்ளார். இதுவரை தேசிய அளவில் 6 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளார். முதலில் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, தன்னுடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதே இவருடைய லட்சியம்.

வறுமை தடையல்ல
கோவையைச் சேர்ந்த நந்தினியின் அப்பா ஒரு டெம்போ டிரைவர். பெரிய வருமானமெல்லாம் இல்லை. கிடைக்கிற சொற்பப் பணத்தில் நந்தினியையும் தங்கையையும் படிக்க வைக்கிறார். ஐந்தாம்வகுப்பு படிக்கும்போதே விளையாட்டில் ஆர்வங்காட்டினார் நந்தினி.  தன்னுடைய கஷ்டங்கள் குறித்து கவலைப்படாமல் அவருடைய தந்தை சத்தியநாராயணன் முழு மனதோடு குழந்தைக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுத்திருக்கிறார். இதோ இப்போது லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 14 வயதிற்குட்பட்டோருக்கான நீளம் தாண்டுதலில் 5 மீட்டர் தூரம் தாண்டி, தங்கம் வென்று ஊர் திரும்பியிருக்கிறார். அவருடைய பெற்றோரும் பயிற்சியாளர் நந்தகுமாரும் மகிழ்ச்சியில் கொண்டாடுகின்றனர். தற்போது 100 மீட்டர் ஹர்டுள்ஸ் மற்றும் நீளம் தாண்டுதலில் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நந்தினி, சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தரவேண்டும் என்கிற லட்சியத்தோடு பயிற்சி பெற்று வருகிறார்.

பெரில் ஹட்சன்!
ஆறடிக்கு மேல் இருப்பார் போலிருக்கிறது பெரில் ஹட்சன். இவ்வளவு உயரமான தடகள வீரர்கள் நமக்கு கிடைப்பதே அரிதிலும் அரிது. அதிலும் பெரில் ஹட்சன் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வருகிற இளம் வீராங்கனை. சென்னையின் நேரு விளையாட்டரங்கில் தினமும் மாலை நேரத்தில் கடும் பயிற்சியில் ஈடுபடுகிறார் பெரில். நான்காம் வகுப்பு படிக்கும்போதே, ‘நல்லா உயரமா இருக்கியே... நீ ஹை ஜம்ப்பில் கலந்துக்கோ’ எனப் பலரும் கூறியதைக் கேட்டு ஹைஜம்ப் விளையாடத் துவங்கினார். ஆனால் ஒன்பதாம் வகுப்பு வரை அதுதான் தொடர்ந்தது. அதில் பெரிய வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. இவருடைய பயிற்சியாளர் ராஜன், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள வற்புறுத்தினார். கைமேல் பலன். லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 400 மீ. தனிநபர் பிரிவில் தங்கம், 400 மீ. மெட்லி ரிலேவில் வெண்கலம் என அசத்தியிருக்கிறார். உசேன் போல்ட்தான் இவருக்கு ஆதர்சனம். சென்ற ஆண்டு போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் வெள்ளி வென்றுள்ளார்.