Powered By Blogger

சனி, 27 அக்டோபர், 2012

பவர் கட்... பளிச் ஐடியாக்கள்!


பகலில் லைட்டை அணைங்க!
உங்க ஊரு; எங்க ஊரு என்று தமிழகம் முழுவதும் பல ஊர்கள்ல இரவில் தெருவிளக்கு எரியுதோ, இல்லையோ மின் ஊழியர்களின் கவனக் குறைவால் பட்டப் பகலில் தெருவிளக்குகள் எரிஞ்சிக்கிட்டே இருக்கு. இதை  முதல்ல குறைக்கணும். குண்டு பல்புகளைப் பயன்படுத்தினா அதிக மின்சாரம்செலவாகும்; சி.எஃப்.எல். விளக்குகளைப் பயன்படுத்தினால் மின்சாரம் குறைவாகத்தான் செலவாகும்னு அரசாங்கம் சொல்லுது. இதையே கொஞ்சம் கட்டாயப்படுத்தினா, கண்டிப்பா மின்சாரத்தைச்சேமிக்க முடியும்" என்கிறார், தென்சென்னையைச் சேர்ந்த எம். ராஜேந்திரன்.


மானிட்டரை ஆஃப் செய்யுங்கள்!
தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மட்டுமல்லாமல் இப்போது எல்லா இடங்களிலும் கணினிப் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவோர் வீட்டில் இருப்பவர்களானாலும், தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருந்தாலும், பணிக்கு இடையே சற்று ஓய்வு எடுக்கும்போது மானிட்டரை மட்டுமாவது சுவிட்ச் ஆஃப் செய்யலாம். இந்த வகையிலும் மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், வீட்டில் அனைவரும் தனித்தனி அறைகளில் தூங்காமல் ஒரே அறையில் தூங்குவது, பிடித்த பாடல்களைக் கேட்க அதிக மின்சாரத்தைஉறிஞ்சும் ஹோம் தியேட்டர் பயன்படுத்தாமல் இருப்பது, குடும்ப விழாக்களில் மின் அலங்காரத்தைக் குறைப்பது போன்றவை கைகொடுக்கும்" என்கிறார், குளித்தலையைச் சேர்ந்த பாலாமணி கார்த்திகேயன்.


மின் நுகர்வை வரையறைப்படுத்தலாமே!
இவ்வளவு மின்சாரம்தான் உபயோகிக்க முடியும் என்ற வரையறை வகுக்க வேண்டும்.  அதாவது ஒருவர் சராசரியாக கடந்த 6 மாத மின் பயன்பாட்டின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு 200 யூனிட் பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொண்டால், தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அவர் 140 யூனிட் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.  இந்த 140 யூனிட் மின்சாரத்தைஅவரது தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்துகொண்டு உபயோகிக்கலாம். மாதம் ஒன்றுக்கு 140 யூனிட் மின்சாரத்திற்கு மேல் அவர் பயன்படுத்தும் பட்சத்தில்,அவர் பயன்படுத்தும் அதிகப்படியான மின்சாரத்திற்கு மானியம் இல்லா மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒருவேளை அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அளவை விட குறைவாகப் பயன்படுத்தியிருப்பின், அடுத்த மாத அளவுடன் சேர்த்து அதனைப் பயன்படுத்த வரையறை செய்யலாம். அதேபோல யு.பி.எஸ். என்பது மின் உற்பத்திச் சாதனம் இல்லை. மின்தேக்கிச் சாதனம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். விளக்கு எரிக்கவே மின்சாரம் இல்லாதபோது, அனைத்து வீடுகளிலும் யு.பி.எஸ். பயன்படுத்துவதைத் தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும். பத்து லட்ச ரூபாய் மதிப்பிற்கு மேலாகக் கட்டப்படும் ஒவ்வொரு கட்டடத்திற்கும் (குடியிருப்பு, தொழில் நிறுவனங்கள் எதுவானாலும்) சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று யோசனை தருகிறார் நத்தம், இரா.சு.மதிமாறன்.


மின்மாற்றியை பராமரிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான மின்மாற்றிகள்  (டிரான்ஸ்ஃபார்மர்கள்) மூலம்தான் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்மாற்றிகள் இயங்குவதற்கு ஒரு வகையான ஆயில் ஊற்றப்படுகிறது. இந்த ஆயிலை குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியாகவேண்டும் (இருசக்கர வாகனங்களுக்கு குறிப்பிட்ட கி.மீ. ஓடியதும் ஆயில் மாற்றுவோமே... அதுபோல!). ஆனால், இந்த ஆயில் முறையாக மாற்றப்படுவதில்லை. இதன்மூலம் ஒரு மின்மாற்றியில்5 சதவிகித மின் இழப்பு ஏற்படுகிறது. மின்மாற்றியை முறையாகப் பராமரித்தாலே மின்சாரத்தைச் சேமிக்க முடியும்" என்கிறார், நல்லூரைச் சேர்ந்த ஜவஹர்.


ஜீரோ வாட்ஸ்க்கும் வாட்ஸ் உண்டு!
நிறைய பேர் மின்சாரத்தை சிக்கனமா செலவழிக்கிறேன் பேர்வழின்னு, குளியல் அறை, பூஜை அறை, டாய்லெட்டுன்னு சகல இடங்கள்ல ஜீரோ வாட்ஸ் பல்பை பயன்படுத்திட்டு இருக்காங்க. ஜீரோ வாட்ஸ்னா, மீட்டர் என்ன ஓடவா போகுதுன்னு நினைச்சிக்கிட்டு நாள் முழுவதும் இந்த லைட் வீடுகள்ல எரிஞ்சிக்கிட்டே இருக்கும். ஆனா, ஜீரோ வாட்ஸ் பல்பு ஒன்று எரிய 15 வாட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்படுது. இது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு வீட்டுக்கு மூணு ஜீரோ வாட்ஸ் பல்பு தொடர்ந்து எரிஞ்சுதுன்னா 45 வாட்ஸ் மின்சாரம் செலவாகும். அப்படின்னா ஒரு நாளைக்கு, ஒரு மாசத்துக்கு எத்தனை யூனிட் மின்சாரம் செலவாகுதுன்னு கணக்குப் பாருங்க. தலை சுத்தும். அதனால ஜீரோ வாட்ஸ் பல்பு கூட அளவா பயன்படுத்தினா, அதுவே மின்சார சிக்கனம்தான்" என்கிறார், திருப்பூரைச் சேர்ந்த விஜயகுமார்.


சூரிய மின்சாரத்தைக் கட்டாயமாக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப் படும் மின்சாரத்தின் பெரும்பகுதியை, தொழில் நிறுவனங்களும், உற்பத்திக்கூடங்களும்தான்  பயன்படுத்துகின்றன. தொழில் நிறுவனங்களின் அபரிமிதனமான பெருக்கத்தின் காரணமாகவே தற்போது மின்பற்றாக்குறை நிலவுகிறது. ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும், உற்பத்திக்கூடங்களும் தங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தின் 75 சதவிகிதத்தை சூரிய ஒளி மூலமே பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும் சோலார் பேனல் பொருத்தி அவர்களாகவே மின்சாரம் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இதைச் செயல்படுத்த அரசு சார்பில் மானியமும் அளிக்கலாம். மழைநீர் சேகரிப்பை அரசு எப்படி கட்டாயமாக்கியதோ அதேபோல், தொழிற்கூடங்களுக்கு சோலார் பேனல் இணைப்பைக் கட்டாயமாக்கினால் மின் பற்றாக்குறையை தவிர்க்கலாம்" என்கிறார், திருச்சியைச் சேர்ந்த  சதீஷ்குமார்.

தொகுப்பு : என். சுரேஷ்குமார்

காவிரி: உண்மை நிலை என்ன?



கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் காவிரி நீர் ஹோகேனகலைத் தாண்டி, மேட்டூர் அணைக்கு வருகிறது. பின், ஈரோட்டின் வடக்கேயுள்ள கூடுதுறையில் பவானியைச் சேர்த்துக்கொண்டு நாமக்கல், கரூர் மாவட்டங்கள் வழியாக திருச்சி அருகேயுள்ள கல்லணையில் வந்து சற்று இளைப்பாறுகிறது. பின் தஞ்சாவூரை நோக்கி நடந்து, திருவாரூரைக் கடந்து, பூம்புகாரில் வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

மேட்டூர் அணை
கர்நாடகத்தில் மழையின் காரணமாக நதியில் நீரின் அளவு அதிகரித்தபோது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12.185 கன அடி நீர் வந்தது. ஆனால் கர்நாடகம் எந்த முன்னறிவிப்புமின்றி நீரை நிறுத்தியதால் வரத்து குறைந்தது.

அணையில், 93.470 கன அடிநீர் இருந்தால்தான் அணையிலிருந்து  நீர் திறந்து விடப்படும். ஆனால் தற்போது அணையில் 70.580 கன அடி நீர் மட்டுமே இருந்த போதிலும் மக்களின் நலன் கருதி டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு இதே நாளில் அணையின் நீர் அளவு 82.70 கன அடியாக இருந்தது.

மேட்டூர் அணையின் நீரைச் சார்ந்து சுமார் 14.93 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அங்குள்ள மின் நிலையங்களுக்கும் நீர் தேவைப்படுகிறது" என்கிறார், மேட்டூர் பகுதி சமூக ஆர்வலர் மு.அருண்குமார்.

-மேட்டூரிலிருந்து மு. கிருபாகரன்


பவானி கூடுதுறை
30 ஆயிரம் கன அடி தண்ணீர் தேவை. ஆனால் 15 ஆயிரம் கன அடி மட்டும் நீர்வரத்து இருந்து வருகிறது. என்றாலும் பாசனத்திற்கு 20 ஆயிரம் கன அடி வரை நீர் திறந்து விடப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது" என்கிறார், பொதுப்பணித்துறைப் பொறியாளர்.

சம்பா பயிருக்கு பருவம் தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் அறுவடை காலமான ஜனவரி மாதம் வரை நீர் தேவைப்படும் இந்தப் பகுதியில் நெல் மட்டுமன்றி, மஞ்சள், கரும்பு போன்றவையும் முக்கியப் பயிர்கள். ஒரு மாதத்திற்கு முன்னர் தண்ணீர் கிடைத்திருந்தால் ஓரளவிற்கு சமாளித்திருக்கலாம். இப்போது இவை மட்டுமன்றி, ஆடிப்பட்டத்தில் பயிரிடப்படும் புஞ்சை நிலப் பயிர்களான நிலக்கடலை மற்றும் பயறு வகைகளும் பாதிக்கப்பட்டுள்ளன" என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார், விவசாயி துரைசாமி.

-பவானி கூடுதுறையிலிருந்து ரா.விஜயகுமார்


கல்லணை
முதலாம் நூற்றாண்டில் கரிகாலன் கட்டிய கல்லணைதான் காவிரி நீரைத் தமிழ்நாட்டில் கடைசியாகச் சேமித்து வைக்கும் இடம். இங்கிருந்துதான் டெல்டா பகுதிகளுக்கு வெண்ணாறு, கல்லணை என்ற இரண்டு கால்வாய்கள் வழியாக நீர்அனுப்பப்படுகிறது. வெண்ணாறு கால்வாய் 3.78 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கும், கல்லணைக் கால்வாய் ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்களுக்கும் நீர் தருகின்றன. இதைத் தவிர காவிரியில் வெள்ளம் வரும்போது பாதுகாப்புக் கருதி உபரி நீரைக் கொள்ளிடத்திற்கு அனுப்ப உள்ளாறு என்று ஒரு வடிகால் இருக்கிறது. பொதுவாக ஜூன் -ஜூலையில் துவங்கி ஜனவரி வரை சலசலப்புடன் நீர் ஓடும் இந்தக் கால்வாய்களில் இப்போது நீர் அதிகம் இல்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது 20 சதவிகிதம் விவசாயம் மட்டுமே நடந்துள்ளது. வரும் ஜனவரி மாசம் வரைக்கும் தினம்  2 டி.எம்.சி.நீரைத் திறந்துவிட்டால்தான் பயிரும், வயலும் காஞ்சி போகாம ஓரளவுக்காவது முழுசா  விவசாயம் பார்க்க முடியும்" என்கிறார், ஆறுமுகம் என்ற விவசாயி.

அடுத்த மாதம் வடகிழக்குப் பருவ மழை ஆரம்பிக்க வேண்டும். வழக்கமான அளவு மழை பெய்தாலும் அதனால் விவசாயத்திற்கு எந்தப் பலனும் இல்லை என்றுதான் பல விவசாயிகள் கூறுகிறார்கள்.


கடைமடைப் பகுதிகள்
விவசாய நிலங்களுக்கு 5 நாட்களுக்கு  நாளைக்கு ஒருமுறை என்று முறை வைத்துத் திறந்து விடுகிறார்கள். காவிரி தண்ணீர் வராதப்போய் நிலத்தடி நீரைப்பயன்படுத்திக்கலாம்னு பார்த்தா, நிலத்தடி நீர் குறைஞ்சிருக்கிறதுனால அதுவும் முடியலை. காவிரியில தொடர்ந்து ஆறு மாசம் நீரோடை இருந்தாதான் நிலத்தடியில நீர்த்தேக்கம்  ஏற்பட்டு மோட்டார் மூலமா இறைக்கலாம். அதுமட்டுமில்லாம, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 12 மணிநேரம் மின்சாரம் அறிவித்த அரசு இப்போ மூணு மணிநேரம் தான் கொடுக்கிறாங்க. மின்சாரமும் இல்லாம தண்ணீரும் இல்லாம 50 சதவிகித விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கு. மேலும் கர்நாடகா 30 ஆயிரம் கன அடி தண்ணீர் விட்டால்தான் காவிரி முடியும் இடமான கடைக்கோடி பூம்புகார் வரைக்கும் நீர் வந்து பாயும். கர்நாடகம் தண்ணீர் விடும்ங்கிற நம்பிக்கையிலதான் இப்போ நாற்று நட்டிருக்கோம். பயிர்களைக் காப்பாத்த முடியுமா, முடியாமப் போகுமான்னு கவலையாத்தானிருக்கு" என்கிறார், தங்கப்பன் என்னும் விவசாயி.

கல்லணை மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பூ.சர்பனா

அச்சம் தவிர்


டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வந்தால், தற்காத்துக் கொள்வது எப்படி?

மீண்டும் தமிழகத்தை மிரட்டத் துவங்கியிருக்கிறது டெங்கு.

அக்டோபர் 12ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில், திருவல்லிக்கேணியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த சாம்ஜி சாலமன் ராஜா என்ற 26 வயது இளைஞர் இறந்து போனார். சனிக்கிழமையன்று திருவேற்காடு சக்திவேல் நகரைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் சுதாகர்,  ராஜீவ் காந்தி பொது மருத்துவ மனையில் மரணமடைந்தார். வேலூரைச் சேர்ந்த அபர்ணா என்ற 5ம் வகுப்பு மாணவி, சேர்ப்பாடியைச் சேர்ந்த விஜயகுமார், கதிரவன், கடையநல்லூர் அருகே முதலியார்பட்டியில் 10ம் வகுப்பு மாணவி சுமதி, திருப்பூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் மூவர், காஞ்சிபுரத்தில் ஏழு வயதுக் குழந்தை பவுசியா எனப் பலர் டெங்கு காய்ச்சலுக்குப் பலியானதாக செய்திகள் வெளியாகின.

தஞ்சாவூரில் 10, நாகையில் 12, புதுக்கோட்டையில் 15, திருவாரூரில் 4, மதுரையில் 4 குழந்தைகள், வேலூரில் 7 (இதில் ஒரே நாளில் 2 பேர்), சென்னையில் 34 என்று டெங்கு பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது.  

டெங்கு காய்ச்சலுக்குப் பலியாவோர் பற்றிய தகவல்கள் ஏதும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் நெல்லை, மதுரை, வேலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவிற்கென்று தனிப் பிரிவு துவக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் என்று காவிரி டெல்டா முழுவதும் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதும் சுகாதார ஆய்வாளர்களின் கண்காணிப்பில் கொண்டு வரப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலுமுள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் ரத்தப் பரிசோதனைக்கும் டெங்கு சிகிச்சைக்கும் தனிப் பிரிவு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

சென்னை நகரத்தில் 26 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்ததாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தாலும்  சென்னையிலுள்ள   பல்வேறு பகுதிகளைச்  சேர்ந்த 100க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலுக்கு  சிகிச்சை  வேண்டி  தனியார்  மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். ‘அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கமானதுதான்’ என்று அக்டோபர் 13ம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்த மாநகராட்சி ஆணையர், அதை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் கடந்த திங்களன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஜெயலலிதா, ‘டெங்கு குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.

அரசியல் டெங்கு

இதற்கிடையில் டெங்கு காய்ச்சலை வைத்து அரசியல் நடத்தவும் அரசியல்வாதிகள் முயற்சித்துவருகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, ‘தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை மறைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறது. டெங்கு காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது காய்ச்சல் தீவிரமாகப் பரவி உயிரிழப்பு இருப்பதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தமிழகத்திற்கு வந்து ஆய்வு நடத்தியுள்ளார்’ என்று கூறினார். டெங்கு காய்ச்சலால் 1,000 பேருக்கு மேல் இறந்திருப்பதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறுகிறார்.

ஆனால் அதே வெள்ளிக்கிழமை சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், ‘மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது. அதிகாரபூர்வமாக 31 பரிசோதனை நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. இது மற்ற மாநிலங்களைவிட அதிகம். இதுவரையிலும் 30 ஆயிரம் பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது’ என்று சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்வது உண்மைதான். தில்லியில் கடந்த சிலதினங்களில் 400 கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினமும் 20 கேஸ்கள் வருகின்றன. கடந்த சனிக்கிழமை மட்டும் 30 கேஸ்கள் பதிவாகின. டெங்கு காய்ச்சல் ஆந்திராவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 400 பேர் டெங்குவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடமாநிலங்களில் தில்லியில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

தமிழக அரசு மட்டுமல்ல, கருணாநிதியின் தோழமைக் கட்சியான காங்கிரஸ் ஆளும் தில்லியிலும் டெங்கு மரணங்கள் மறைக்கப்படுகின்றன. அங்கு இதுவரை ஒரே ஒருவர்தான் டெங்குவிற்குப் பலியானதாக தில்லி அரசு சொல்கிறது.

மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கருணாநிதி சொல்வது போல், தமிழக அரசின் பணிகளை ஆய்வு செய்ய வரவில்லை. தென் மாநிலங்களில் ஒட்டுமொத்த சுகாதார நிலை குறித்து நடந்த ஒரு கூட்டத்தில்  கலந்துகொள்ள வந்திருந்தார்.

சென்னை வந்த குலாம் நபி ஆசாத் டெங்குவிலிருந்து தப்பிக்க ஒரு யோசனை தெரிவித்துள்ளார். ‘குறைந்தபட்சம் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் வரும்வரை பள்ளிக் குழந்தைகள் உடல் முழுவதும் மூடும் வகையில் முழுக்கை சட்டை, பேண்ட் அணிய பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை அறிவுறுத்த வேண்டும். இதனால் கொசுக்கள் கடிப்பது கட்டுப்படுத்தப்படும். கல்வி அமைச்சர் இதை ஒரு வழிகாட்டியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். பெரியவர்களும் உடை விஷயத்தில் இதைப் பின்பற்றலாம். மாநிலத்தில் மின் வெட்டு அதிகமாக உள்ளதால் கிடைத்த நேரத்தில், இடத்தில் தண்ணீர் சேமித்து வைக்கிறார்கள். இதுவும் கொசு உற்பத்திக்கு காரணம்’ என்கிறார் ஆசாத்.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?      அது எப்படிப் பரவுகிறது?    

டெங்கு என்ற வைரஸ் நம் உடலைத் தாக்கும்போது ஏற்படும் காய்ச்சல்தான் சாதாரண மக்களின் பேச்சு வழக்கில் டெங்கு என அழைக்கப்படுகிறது. ஏடஸ் என்ற வகைக் கொசுக்களால் - குறிப்பாக ஏடஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற வகைக் கொசுவால் டெங்கு பரவுகிறது. மற்ற கொசுக்களைப் போல் சாக்கடை நீரில் அல்ல, நல்ல தண்ணீரிலேயே இவை வளரக் கூடியவை. மற்ற கொசுக்களைப் போல் அல்லாமல் பகலில் மனிதர்களைக் கடிக்கக் கூடியவை.பெண் கொசுதான் கடிக்கும். காரணம் அதன் முட்டை ஆரோக்கியமாக இருக்க, நம் ரத்தத்திலுள்ள புரதம் அதற்குத் தேவை. அது நம்மைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சும்போது அதன் வயிற்றில் உள்ள வைரஸ் நம் உடலுக்குள் புகுந்து விடுகிறது. ஒரு கடியிலேயே கூட வைரஸ் நம்மைத் தாக்கும்.

ஏடஸ் கொசுவின் வாழ்நாள் இரண்டு வாரங்கள் மட்டுமே. இந்த 2 வாரங்களில் 3 முறை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 100 முட்டைகள் வரை இடும். உலர்வான சூழல் இருந்தால் 9 மாதங்கள் வரை இந்த முட்டைகள் உயிர்ப்புடன் இருந்து அதன்பிறகு அதற்குத் தகுந்த சுத்தமான நீர், உணவு கிடைத்தால் குஞ்சுகளாகப் பொரிக்கும். ஒரு கொசுவில் டெங்கு வைரஸ் இருந்தால் அதிலிருந்து வரும் முட்டை, குஞ்சு என்று அதன் மூலம் பெருகும் அனைத்துக் கொசுவிலும் இந்த வைரஸ் இருக்கும்

டெங்கு காய்ச்சல் உயிர்க்கொல்லியா?

டெங்கு காய்ச்சல் அத்தனை பயங்கரமான உயிர்க் கொல்லியா என்ற கேள்வியை குளோபல் மருத்துவமனை பொதுமருத்துவர் டாக்டர். மதுபாஷிணியிடம் கேட்டபோது, முதலில் இந்த அளவிற்கு பயப்படத் தேவையே இல்லை. டெங்கு காய்ச்சல் எல்லா காய்ச்சலையும் போலவேதான் முதல் 2 நாட்கள் இருக்கும். பாராசிட்டமால் மருந்துகளை எடுத்துக் கொண்டால் போதுமானது. இதிலேயே 99 சதவிகிதம் பேருக்கு சரியாகி விடும். காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மயக்கம், வாந்தி (இதில் ஏதாவது ஒன்று இருக்கலாம்) ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் சேர்ந்தும் வரலாம்" என்றார்.

2009ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் டெங்கு காய்ச்சலை இரண்டு வகையாகப் பிரித்தது. 1.சிக்கலில்லாத சாதாரணக் காய்ச்சல்.  2. ரத்தக் கசிவு உள்ள தீவிரக் காய்ச்சல்.

டெங்குவினால் ஏற்படும் சாதாரணக் காய்ச்சலுக்குப் பொதுவாக, பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலே சரியாகிவிடும்.பெரும்பாலானோருக்கு ஏற்படுவது இந்தக் காய்ச்சல்தான்.

2வது வகையில் ரத்த அழுத்தம் குறையும். உடனே மருத்துவ ஆலோசனை வேண்டும். ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்த வகை டெங்கு ஏற்படுகிறது. இதில் நம் ரத்தத்திலுள்ள தண்ணீர் உள் உறுப்புகளில் கசியக் கூடும். இதுதான் ஆபத்தானது. நம் ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை தட்டணுக்கள் உள்ளன. இந்தத் தட்டணுக்கள் குறைந்தால் ஆபத்து. தட்டணுக்கள் 10 ஆயிரத்திற்குக் கீழே குறையும்போதே நாங்கள் உடலில் தட்டணுக்களைச் செலுத்துவோம். டெங்கு பாதிப்பு உள்ளது என்று தெரிந்தால் முதலிலேயே தட்டணுக்களை செலுத்தலாமே என்று சிலர் கேட்கிறார்கள். அதனால் எந்தப் பலனும் கிடையாது. தேவை இல்லாதபோது செலுத்தும் தட்டணுக்கள் அழிந்து போய்விடுமே தவிர உடலில் தங்காது" என்கிறார், டாக்டர். மதுபாஷிணி.

அம்மை, போலியோ இவற்றுக்கெல்லாம் தடுப்பு மருந்து (வாக்சின்) கொடுப்பதுபோல இதற்கு தடுப்பு மருந்து கிடையாதா?

நான்கு வகை டெங்கு வைரஸ்கள் இருக்கின்றன. ஒருமுறை நம்மைப் பாதித்த வைரஸ் மீண்டும் நம்மைத் தாக்கினால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், நம் உடல் அதற்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டுவிடும். ஆனால் அதே சமயம் அந்த எதிர்ப்பு சக்தி மற்ற மூன்று வைரஸ்களைப் பொறுத்தவரை பலனளிக்காது. ஒரு முறை பாதிக்கப்பட்டவர் இரண்டாம் முறை பாதிக்கப்படும் போது அதன் விளைவுகள் தீவிரமாக இருக்க வாய்ப்புண்டு.

ஆன்ட்டிபயாட்டிக்கள்?

ஆன்ட்டிபயாட்டிக்கள் பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே பலன் தரக்கூடியவை. தேவையில்லாமல் டெங்கு காய்ச்சலுக்கு சிலர் அதைச் சாப்பிடுகிறார்கள். சிலர் வலி நிவாரணிகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். இது இரண்டுமே மிகத் தவறு. வலி நிவாரணிகள் ரத்தத் தட்டணுக்களைக் குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

அப்படியானால் டெங்கு காய்ச்சலுக்கு    என்ன செய்வது?

காய்ச்சல், உடல்வலி இருந்தால் 2 நாட்கள் பாராசிட்டமால்மாத்திரைகளை சாப்பிடுங்கள். நிறைய திரவ உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியும் குறையவில்லை என்றால், டாக்டரிடம் முறையாக ஆலோசனை பெறுவது நல்லது. மற்றபடி இந்த அளவிற்கு பீதியடையத் தேவையில்லை.  ஏனெனில், டெங்கு காய்ச்சலினால் இறப்பவர்கள் ஒரு சதவிகிதம் பேர்தான்.

இந்த நோய் ஏற்படாமல் எப்படித் தடுப்பது?

சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சாக்கடை நீர் மட்டுமல்ல, சாதாரணத் தண்ணீர் கூடத் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓவர் ஹெட் டாங்க் மூடி, ஏர் கூலர், மொட்டை மாடியிலும் தோட்டத்திலும் சும்மா போட்டு வைத்திருக்கும் கிண்ணங்கள், தட்டுகள், மூடிகள் இவற்றில் நீர் தங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது சாத்தியமில்லை என்றால், தேங்கிய நீரில் கொசு மருந்து அடித்து வையுங்கள். குலாம் நபி ஆசாத் சொல்லும் முழுக்கைச் சட்டை கூட ஒரு பயனுள்ளயோசனைதான்.
              
உலகம் முழுவதும்

ஆண்டுக்கு உலகம் முழுவதும் ஐந்து முதல் 10 கோடி மக்களை டெங்கு தாக்குகிறது. 1960ல் இருந்ததை விட 2010ல் அதன் தாக்கம் முப்பது மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கு நகர்மயமாதல் உள்ளிட்ட பல காரணங்கள். புவி வெப்பமயமாதல் ஒரு காரணம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ‘கடந்த ஆண்டு முதல் டெங்குவின் பாதிப்பு பெரிய அளவில் இருக்கிறது. தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லாததே முக்கியக் காரணம்’ என்கிறார், திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைபொதுநல மருத்துவர் டாக்டர். ஜே.பாரத். ‘கொசு உற்பத்தியை முற்றிலும் ஒழிப்பதால்மட்டுமே டெங்குவைத் தடுக்க இயலும்’ என்கிறார் அவர்.

என்ன செய்வது?
  • டெங்குவிற்கென்று பிரத்யேக சிகிச்சை கிடையாது.
  • காய்ச்சல், உடல் வலி என்று டெங்குவிற்கான அறிகுறிகள் இருந்தால் முதல் 2 நாட்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை மட்டும் சாப்பிடுங்கள்.
  • காய்ச்சல் குறையவில்லை என்றால், டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
  • கண்டிப்பாக ஆன்ட்டிபயாட்டிக் மருந்து சாப்பிடக் கூடாது. வலி நிவாரணிகளையும் தவிர்க்க  வேண்டும். இதனால் ரத்தத் தட்டணுக்கள் குறைய வாய்ப்பு உண்டு.
  • நிறைய திரவ உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தடுப்பு நடவடிக்கை

  • சுத்தமான நீரில்தான் கொசுக்கள் முட்டையிடும் என்பதால், எந்தவிதத்திலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • நீரை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • குறைந்தது வாரம் ஒரு முறை தண்ணீர்த் தொட்டியில் மருந்து தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.
  • நீர் தேங்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், ஏர் கூலர், ஹெட் டாங்க் மூடி, சும்மா போட்டு வைத்திருக்கும் கிண்ணங்கள், தட்டுகள், மூடிகள் இவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

‘‘ஏழாண்டுகளாக ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறவில்லை’’எம்.சிவராஜ், பொதுச் செயலாளர், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்துவார்கள். இது எல்லாமாவட்டங்களிலும் கட்டாயம் நடத்தப்பட வேண்டிய ஒன்று. இதில் மாவட்ட சுகாதாரப் பணியாளர் துறையைச் சேர்ந்த 2 இயக்குனர்கள் கலந்துகொள்வார்கள். தங்கள் மாவட்டத்தில் இந்தப்   பருவத்தில் எந்த மாதிரியான தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது, அப்படி இருந்தால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ஓர் ஆய்வறிக்கையைக் கொடுப்பார்கள். இந்த ஆய்வறிக்கை கிராமப்புறங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் வீடு வீடாகச் சென்று மாதம் ஒருமுறை எடுக்கும் விவரங்கள், நகராட்சிகளில் நகராட்சி நல அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று எடுக்கும் விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஆய்வுக் கூட்டம் நடக்கவில்லை. அந்தந்தப் பருவத்திற்கு குறிப்பிட்ட பகுதியில் என்ன மாதிரியான தொற்று நோய்கள் வரும் என்பதை ஆய்வு செய்து பருவ நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் இந்தப் பிரச்சினையே வராது.

திங்கள், 22 அக்டோபர், 2012

கடிதங்கள்,


புதியதலைமுறைபெருமதிப்பிற்குரிய ’போராளி’ உதயகுமார்,

முற்றுகைப் போராட்டத்தில் முடங்கிக் கிடக்கும் உங்களை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல ஆசை. முதலில் ஓடந்துறை போகலாம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறிய பஞ்சாயத்துதான் ஓடந்துறை. ஓடந்துறை போனால் பவானி ஆற்றைப் பார்க்கிறோமோ இல்லையோ, சண்முகத்தைப் பார்க்க வேண்டும். உங்களைப் போல் அயல்நாட்டில் போய்ப் படிக்க, ஏன் கல்லூரிக்குப் போகக் கூட, வாய்ப்புக் கிடைக்காத எளிய கிராமத்து மனிதர் அவர்.

இந்த எளிய மனிதர்தான் இந்தியாவிலேயே யாரும் செய்ய நினைத்திராத அரிய செயலைச் செய்தவர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரை ஓடந்துறை மக்கள் ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அவருக்கு அப்போது நிர்வாகத்தில் பெரிய அனுபவம் ஏதும் கிடையாது. காடும் கழனியும் கற்றுக் கொடுப்பதைவிடவா பாடப் புத்தகங்கள் பயிற்றுவித்துவிடப் போகின்றன?

பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் உட்கார்ந்த பிறகுதான் ஓர் உண்மை அவருக்கு உறைக்கத் துவங்கியது. வரிப் பணத்தில் 40 சதவிகிதம் தெருவிளக்குகளின் மின்சாரக் கட்டணமாகச் செலவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அந்த உண்மை. நூறு சதவிகிதம் வரி வசூலித்தாலும் கரண்டு பில் கட்டியே கிராமம் திவாலாகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த அவர், என்ன செய்வது என்று அண்ணாந்து பார்த்து யோசிக்க ஆரம்பித்தார். வானம் வழி காட்டியது.  ஆம், தெருவிளக்குகள் எல்லாம் சூரிய ஒளியில் கிடைத்த மின்சாரத்தில் எரிய ஆரம்பித்தன.

அவர் அதோடு நிற்கவில்லை. அவரது பஞ்சாயத்து உடுமலைப்பேட்டைக்கருகில் உள்ள மயிலாடியில் ஒரு காற்றாலையை நிறுவியது (கடன் வாங்கித்தான்). சின்னக் காற்றாலைதான். ஆண்டுக்கு ஆறே முக்கால் லட்சம் கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாம். அவர்கள் கிராமத்தின் தேவை நாலரை லட்சம் கிலோவாட். மிச்சத்தை மின்வாரியத்திற்கே விற்றுக் கடனைக் கட்டி வருகிறார்கள். ஒரு காலத்தில் பஞ்சாயத்து மின்வாரியத்திற்குப் பணம் கட்டிக் கொண்டிருந்தது. இன்று மின்வாரியம் பஞ்சாயத்திற்குப் பணம் கொடுக்கிறது. தலைகீழ் மாற்றம்!

ஓடந்துறையிலிருந்து இறங்கி வந்தால் கூத்தம்பாக்கத்திற்கும் போய் வர வேண்டும். இங்கேதான், சென்னைக்குப் பக்கத்தில் பூவிருந்தவல்லியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அங்கே போய்ப் பார்த்தால் அசந்து போவீர்கள். குடிசைகளே கிடையாது. கான்கிரீட் வடிகால்கள். தார்ச்சாலைகள். சூரிய ஒளியில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் விளக்குகள் ஒளிர்கின்றன. விசிறிகள் சுற்றுகின்றன. அடுப்புகள் சுடுகின்றன.

இத்தனைக்கும் காரணம் இளங்கோ என்று ஒருவர். விஞ்ஞானியாகப் பார்த்துக் கொண்டிருந்த வேலையைக் கடாசிவிட்டு களம் இறங்கினார். காட்சிகள் மாறின.

சண்முகத்தையும் இளங்கோவையும் பற்றி ஊடகங்கள் அதிகம் எழுதியதில்லை. உங்களுக்குக் கிடைக்கும் விளம்பரத்தில் ஒரு பத்து சதவிகிதம் கூட அவர்களுக்குக் கிடைத்ததில்லை.

ஆனால் ஊரறிந்த ஓர் உதாரணம் ஒன்றுண்டு, அவர்தான் குரியன்.

உங்கள் முற்றுகைப் போராட்டம் பற்றிய செய்திகள் வந்திருக்கும் நாளிதழ்கள் அவர் மரணத்தைப் பதிவு செய்திருக்கின்றன. கந்து வட்டிக்குக் கடன் வாங்கி நொடித்துக் கொண்டிருந்த கிராமத்து மனிதர்கள் வயிற்றில் பால் வார்த்து நிமிர்த்தியவர்.

அணுமின் நிலையத்திற்கு எதிரான உங்கள் ஆட்சேபங்களையெல்லாம் இரண்டு வல்லுநர் குழுக்களும், உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சும் ஒதுக்கித் தள்ளிவிட்டன. அச்சம் தவிர் என்று அறிவுரை தந்துவிட்டன. அவற்றையெல்லாம் நீங்கள் ஏற்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

இனி நீங்கள் செய்யக் கூடியது என்ன? இரண்டு வழிகள் உங்கள் முன்னால் இருக்கின்றன. ஒன்று ஊர் மக்களைத் திரட்டி, உள்ளூர் போலீசோடும் கலெக்டரோடும் முரண்டிக் கொண்டிருப்பது.  ஆனால் அதில் அர்த்தம் இல்லை. ஏனெனில் அணு உலையை நடத்த வேண்டுமா, மூட வேண்டுமா என்ற முடிவை எடுக்கப்போகிறவர்கள் அவர்கள் அல்ல. இதைத்தான் இன்று நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.  

இன்னொரு வழி இருக்கிறது. அணு உலையில் உருவாகும் மின்சாரம் எங்களுக்கு வேண்டாம், காற்றையும் கதிரொளியையும் நம்பி எங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொள்கிறோம் என மக்களை முடிவெடுக்கச் செய்து காற்றாலை கொண்டும், சூரியனைக் கொண்டும் அந்தப் பகுதி கிராமங்களை ஒளியேற்றுவது. இது ஒன்றும் இயலாத காரியமல்ல என்பதற்கு  இளங்கோவும் சண்முகமும் சாட்சி.

அப்படி ஒரு மாற்றத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டிவிட்டு உங்கள் வாதங்களை வைத்தால் ஒருவேளை உலகம் அதற்குச் செவிசாய்க்கக் கூடும்.

ஆரவாரமான போராட்டங்களை விட, ஆக்கபூர்வமான மாற்றங்களை வரலாறு வாழ்த்தியே வந்திருக்கிறது.
நம்பிக்கையுடன்,
இளந்தமிழன்

கிரிக்கெட்டின் அசல் வெற்றி


ஜூன் 23, 1979. லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் ப்ரூடென்ஷியல் உலகக் கோப்பையை உயர்த்திப் பிடிக்கிறார் மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் க்ளைவ் லாயிட். மீண்டும் அதேபோன்ற ஒரு தருணத்தை தரிசிக்க மேற்கிந்தியத் தீவுகளுக்கு முப்பத்தி மூன்று ஆண்டுகள் பிடித்திருக்கிறது. இப்போது டி20 உலகக்கோப்பை போட்டி சாம்பியன் அணியில் இருக்கும் ஒரு வீரர் கூட 79ல் உலகக் கோப்பையை அந்த அணி வென்றபோது பிறந்திருக்கவில்லை. தற்போதைய அணியிலேயே வயதான வீரரான கிறிஸ் கெல் கூட மூன்று மாதங்கள் கழித்துதான் பிறந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

‘அந்தக் காலத்துலே கவாஸ்கர்லாம் ஆடுறப்போ...’ என்று பழம்பெருமை பேசும் பெருசுகளுக்கு வேண்டுமானால், வெஸ்ட் இண்டீஸ் அணி கனவுகளிலும் பயமுறுத்தும் கிரிக்கெட் அசுரனாக இருக்கலாம். கடந்த முப்பது ஆண்டுகளில் யானை தேய்ந்து எறும்பாய் மாறிய கதைதான். மேற்கிந்தியத் தீவுகளில் இப்போது கிரிக்கெட்டுக்கு மவுசு குறைந்துவிட்டது. இளைஞர்கள் கால்பந்து மோகம் கொண்டு அலைகிறார்கள். இதனால்தான் டி20 கோப்பையை வென்றதுமே அடக்கமாகப் பேசுகிறார் அவ்வணியின் தலைவர் டேரன் சம்மி. நாங்கள் மீண்டும் வந்துவிட்டதாக எல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. சரியான பாதைக்கு இப்போதுதான் வந்திருக்கிறோம்."

டி20 போட்டிகளின் தொடக்கத்தின்போது மேற்கிந்தியத் தீவுகள் கோப்பையை வெல்லும் என்று அந்த அணியினரைத் தவிர வேறு யாருமே நம்பியிருக்க வாய்ப்பில்லை. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி. அயர்லாந்துடனான போட்டி மழையால் ரத்து. தட்டுத் தடுமாறி ரன்ரேட் அடிப்படையில்தான் சூப்பர் 8 சுற்றுக்கே முன்னேறினார்கள்.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை சூப்பர் 8 சுற்றில் வீழ்த்தியதுமே மேற்கிந்தியத் தீவுகளின் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆனால் அடுத்த போட்டியில் இலங்கையிடம் படுதோல்வி. நியூசிலாந்துடன் தட்டுத்தடுமாறி ‘டை’ செய்து, சூப்பர் ஓவரில் அதிர்ஷ்ட வெற்றி என்று மீண்டும் மெல்லத் தடுமாறியபடியேதான் அரையிறுதிக்கும் வந்தார்கள். அரையிறுதியில் வெற்றி தேவதை மேற்கிந்தியத் தீவுகளை நோக்கி கண்ணடித்தாள். எழுபத்தி நான்கு ரன்கள் வித்தியாசத்தில்பலமான ஆஸ்திரேலியாவை பந்தாடினார்கள். இறுதிப்போட்டியில் இமாலய பலத்துடன் இருந்த இலங்கையை வென்றிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் சூப்பர் எட் ரவுண்டில் இதே மேற்கிந்தியத் தீவுகளை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில்சூறையாடியிருந்தது இலங்கை. சொந்த ஊரில் இலங்கை அணி கோப்பை வெல்வதைக் காண வந்திருந்த முப்பத்தைந்தாயிரம் இலங்கை ரசிகர்களுக்கும் இதயம் வெடிக்குமளவுக்கு இருந்தது இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் ஆட்டம். இறுதிப்போட்டி வரைக்கும் அந்த அணியை அழைத்துவந்த கிறிஸ் கெய்ல் படுமோசமாக சொதப்பியிருந்தார். இருபத்தியாறு பந்துகளில் மூன்றே மூன்று ரன்கள் எடுத்து அவுட் ஆகியிருந்தார். மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமான போலார்ட் இரண்டு ரன்களில் அவுட். நட்சத்திரங்கள் வீழ்ந்தாலும் நம்பிக்கை இழக்காமல் இளம் வீரர்கள் ஒன்றிணைந்து இலங்கையை வீழ்த்தி, கோப்பையை வென்றிருக்கிறார்கள். குறிப்பாக இலங்கையின் இணையற்ற பவுலரான மலிங்காவை சுளுக்கெடுத்திருக்கிறார்கள். அவரது நான்கு ஓவர்களில் ஐம்பத்தி நான்கு ரன்களை விளாசித் தள்ளியிருக்கிறார்கள்.

இறுதிப் போட்டிக்கு முன்பாக கிறிஸ் கெய்ல் கோப்பையை வெல்வோம் என்று சொன்னபோது, அது வழக்கமாக சொல்வதுதான் என்று எல்லோரும் நினைத்தார்கள். இலங்கையை தவிடுபொடியாக்குவோம். அந்த அணியில் உலகத்தரமான வீரர்கள் இருக்கிறார்கள் என்றாலும் நாங்கள்தான் வெல்வோம். கோப்பை எங்களுக்குதான்" என்று நம்பிக்கையோடு கூறினார். அவரது நம்பிக்கை அவர் மீது மட்டுமல்ல, அவரோடு இருந்த இளைய வீரர்களின் மீதும் சேர்த்துதான்.

முந்தைய போட்டிகளில் மிரட்டிய வீரர் என்றாலும் கிறிஸ் கெய்ல் சாதாரணமானவர்தான். அவரை சுலபமாக வீழ்த்துவோம்" என்றார், இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே. இலங்கை அணியின் மொத்த வியூகமும் இறுதிப் போட்டியில் கெய்லை வீழ்த்துவதிலேயே இருந்தது. அந்த வியூகத்தில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் மேற்கிந்தியத் தீவுகளின் பதினோரு வீரர்களுமே, ‘கிறிஸ் கெய்ல்’தான் என்பதை அவர்கள் தோல்வி அடைந்தபின்னரே உணர்ந்தனர்.

மேற்கிந்திய அணிகள் பெற்றிருப்பது கூட்டுவெற்றி. ஒவ்வொரு வீரரும் தம் அணி சிறப்பானது என்று நிரூபிக்க உயிரைக் கொடுத்து விளையாடியிருக்கிறார்கள். நட்சத்திரங்களை நம்பித்தான் கிரிக்கெட் எனும் சமகால சம்பிரதாயத்தை உடைத்து எறிந்திருக்கிறார்கள். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று மூன்று துறைகளிலும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு விளையாடி வென்றிருக்கிறார்கள். மேற்கிந்தியத் தீவுகள் பெற்றிருக்கும் இந்த வெற்றி அவர்களுடைய வெற்றியல்ல. கிரிக்கெட்டின் நிஜமான வெற்றி.

மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி?


மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி?

நமக்கு நாமே
‘‘தேனியிலுள்ள ‘பிளாண்ட் எனர்ஜி நெட்வொர்க் (PEN)’ என்ற அலுவலகம் முழுவதும் சூரிய ஒளியால் கிடைக்கும் மின்சாரம் மூலம் செயல்பட்டு வருகிறது. 2 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 16 சோலார் பேனல்கள் மூலம் இந்த அலுவலகத்தில் உள்ள 8 கணினிகள்,10 டியூப் லைட்டுகள்,4 மின்விசிறிகள் இயக்கப்படுகின்றன. 2 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள இந்த சோலார் பேனல்கள் 25 வருட உத்தரவாதம் உள்ளவை. 4 வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரி மாற்றும் சூழ்நிலை வரலாமே தவிர வேறு எந்தப் பராமரிப்புச் செலவும் வராது.

ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் அமைக்க பேட்டரியுடன் 2,70,000 ரூபாய் செலவாகிறது. சோலார் பேனல் அமைப்பவர்களுக்கு மத்திய அரசு மொத்தச் செலவில் 30% மானியம் வழங்குகிறது. வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப மின்சாரத்தின் அளவு குறையுமே தவிர முற்றிலும் கிடைக்காமல் போக வாய்ப்பில்லை’’ என்கிறார், PEN  நிறுவனத்தின்நிறுவனர், பேராசிரியர் பழனியப்பன்.


பெரியார் வழி காட்டுகிறார்
தஞ்சாவூரிலுள்ள பெரியார் மணியம்மைபல்கலைக்கழகம் தனது மொத்த மின் தேவையில் 65 சதவிகிதத்தை, தானே உற்பத்தி செய்துகொள்கிறது. இங்கு வீணாகும் குப்பைகள்,கால்நடைக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளில் இருந்து உயிரி தொழில்நுட்ப முறையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் இங்கு விறகிலிருந்தும் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. வளாகம் முழுவதும் LED விளக்குகளும், சோலார் விளக்குகளும்,சோலார்  வாட்டர் ஹீட்டர்களும் மட்டுமேபயன்படுத்தப்படுகின்றன மற்ற  கல்லூரிகளும்,வணிக நிறுவனங்களும் இதனைப்பின்பற்றலாமே?
- சு.வீரமணி (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)


மின்சாரம் இல்லாத நேரத்திலும் நீர் இறைக்கலாம்
மின்சாரம் இல்லாவிட்டாலும் விவசாயிகள் நீர்ப்பாசனம் செய்ய உதவியாக ஜெருசலேம் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஜெனிஃபர், நிஷா இருவரும் சிஸ்டம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். விவசாயிகள் பயன்படுத்துகிற சாதாரண மோட்டாரில் சோலார் பேனலுடன் இவர்கள் கண்டுபிடித்திருக்கும் சிப்பை இணைத்தால் மோட்டார் சுற்ற ஆரம்பிக்கும். இதனால் மின்சாரம் இல்லாமலே நீர்ப்பாசனம் செய்து கொள்ளலாம். சோலார் பேனலுடன் பேட்டரி பொருத்திக் கொண்டால் சூரிய ஒளி அதிகமிருக்கும் சமயங்களில் பேட்டரியில் சக்தி சேகரிக்கப்பட்டு விடும். இந்த சிப்புக்கு 600 ரூபாய் செலவாகும். சோலார் பேனல் அளவைப் பொறுத்து ரூபாய் 1,000 முதல் கிடைக்கும். பேட்டரி 3,000 ரூபாயிலிருந்து கிடைக்கும். இதனால் வருடம் முழுவதும் மின்சாரம் இன்றி நீர்ப்பாசனம் செய்ய முடியும்.
- இவள் பாரதி


சென்னையும் செய்யலாமே?
சூரிய சக்தி மற்றும் காற்றினைக் கொண்டு இயங்கும் தெரு விளக்குகள் குஜராத்தில் செயல்பட்டு வருகின்றன.இந்த மின் விளக்குகள் சூரிய ஒளி இல்லாதபோது காற்றைக்கொண்டும், காற்றில்லாத போது சூரிய ஒளி கொண்டும் இயங்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள காற்றாலை மூலம் 300 வாட்  மின்சாரமும், சூரிய சக்தி மூலம் 90 வாட்  மின்சாரமும் உருவாக்க முடியும், இதனைப் பராமரிக்க பெரிய செலவு ஏதுமில்லை.

சென்னை நகரில் 111 உயர் கோபுர மின்விளக்குகள் உள்பட 2,16,116 தெருவிளக்குகள் உள்ளன. இதில் இந்த மின்விளக்குகளுக்கு மாநகராட்சி மின்கட்டணமாக ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வரை செலவு செய்கின்றது. சென்னை நகரிலும், நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற சோடியம் விளக்கிற்கு மாற்றாகவும் இது போன்ற தெருவிளக்குகளைப் பயன்படுத்தினால்மின்சாரம் மிச்சமாகும், செலவும் குறையும்.
- என்.ஹரிபிரசாத்


மின்சாரம் இல்லாவிட்டாலும் செல்போன் சார்ஜ்
மின்சாரம் இல்லாத நேரத்தில் செல்போனுக்கு எப்படி சார்ஜ் போடுவது? ஜெருசலேம் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த  வினோத், செந்தூர் செல்வம்  ஆகியோர் போர்ட்டபிள் சார்ஜரைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதை மின்சாரம் இருக்கும்போது சார்ஜ் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பயணங்களிலோ, மின்சாரம் இல்லாத நேரங்களிலோ இந்த சார்ஜரைப் பயன்படுத்தலாம்.

அண்டை மாநிலங்களிலிருந்து வாங்க முடியாதா?


அண்டை மாநிலங்களிலிருந்து வாங்க முடியாதா?

இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் மின் மிகை மாநிலங்கள். இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், திரிபுரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும்7 யூனியன் பிரதேசங்களில் தில்லி, நாகர் ஹவேலி ஆகியவற்றில்தான் மின்சாரம் மிகையாக உள்ளது, அண்டை மாநிலங்களாகிய ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றிலும் மின்பற்றாக்குறை நிலவுகிறது.

மின் விநியோகத்திற்காக இந்தியா 5 மண்டலங்களாகப் (grid) பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பொதுத் தொகுப்பிலிருந்து தென்னிந்திய கிரிட் மூலம் மின்சாரம் பெறுகிறது. ஆனால் அதன் உள்கட்டமைப்பு பழைமையானதாகவும் பலவீனமாகவும் உள்ளது. மொத்தமாகவே 2,000 மெகாவாட் வரைதான் அதில் மின்சாரம் எடுத்து வர முடியும். கடந்த ஆண்டு குஜராத்திலிருந்து தினம் 500 மெகாவாட் மின்சாரம் வாங்க ஏற்பாடு செய்தது. ஆனால் 235 மெகாவாட்தான் எடுத்துவர முடிந்தது. சுருக்கமாகச் சொன்னால் பணம் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று மின்சாரம்.

இவ்வளவு வெயில் கொளுத்துகிறதே, சூரிய சக்தியைப் பயன்படுத்தி நமக்கு வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியாதா?
ஜவஹர்லால் நேரு சூரிய மின் திட்டத்தின் கீழ் முதல் மின் உற்பத்தி நிலையம், தனியார் துறையில் தமிழ்நாட்டில்தான், மயிலாடுதுறையில் ஜூன் 2011ல் துவக்கப்பட்டது. அது ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரித்து மின்வாரியத்திற்குக் கொடுக்கிறது. சூரிய சக்தியைப் பயன்படுத்தி 20 முதல் 60 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஒரு சதுர கி.மீ. நிலம் வேண்டும். தமிழ்நாட்டில் நிலத்தின் தேவை அதிகமாக இருப்பதாலும், அதன் விலை அதிகமாக இருப்பதாலும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்க இயலாது. குஜராத்தில் நீர்ப்பாசனக் கால்வாய்களை சிமெண்ட் பலகைகளால் மூடி, அந்த இடத்தை சூரிய மின்சார உற்பத்தி செய்கிறார்கள். அதைப் போல ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்.

காற்றாலை?
உலகில் காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் இருக்கிறது (அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகியவை முதல் நாலு இடங்களைப் பெறுகின்றன). 2001ல் இருந்ததைவிட 2011ல் 10 மடங்கு அதிகமாக நாம் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்கிறோம். இந்தத் துறை ஆண்டுக்கு 20 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் ஆண்டு முழுதும் காற்றாலைகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியாது. எல்லா இடங்களிலும் காற்றலைகளை நிறுவ முடியாது.

தெரியுமா?
இந்தியாவில் மக்கள் தொகை அதிகமுள்ள உ.பி.யை விட, தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மகாராஷ்டிரத்தை விட தனிநபர்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு அதிகம். ஒரு நபர் ஒரு மணிநேரத்தில் பயன்படுத்தும் மின்சாரம் (கிலோவாட்களில்) கேரளம் 536.78,  கர்நாடகம் 873.05, ஆந்திரம் 1013.74, தமிழ்நாடு 1210.81

நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை !


நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை !

காசு கொடுத்துதானே பொருள் வாங்கிறோம் ….? நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை !

அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் நுகர்வோராய் இருக்கும் நாம் வியாபாரிகளை பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சொல்வோம் ஆனால் நுகர்வோரின் கடமைகள் என்ன? என்று நமக்குத் தெரியுமா? இது பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை இதோ…



முக்கியப் பேருந்து நிலையங்கள் போன்ற, அவசரகதியாக மக்கள் கூடும் இடங்களில் அமைந்திருக்கும் கடைகளில் சென்று பொருட்களை வாங்கும் போது பார்த்தால், பெரும்பாலும் இரண்டு மூன்று ரூபாய் அதிகம் விலை வைத்தே விற்பனை செய்கிறார்கள். என்னது இது? எம்.ஆர்.பி இவ்வளவு தானே, ஏன் அதிகமான விலைக்கு இந்த பொருட்களை விற்கிறீர்கள் என்று கேட்டு விட முடியாது. அப்படிக் கேட்பின் சுற்றி நிற்பவர்களும், கடைக்காரரும் நம்மைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே… கொடுமை. அத்தனை ஏளனம் இருக்கும். நாம் வாங்குகின்ற பொருளுக்கு காசு குடுக்கின்ற நாம் எஜமானர்கள் கிடையாது. இது தான் நடப்பில் உள்ள நிதர்சனமான உண்மை. சரி, அதட்டித்தான் கேட்க வேண்டாம், “என்ன சார் இது? இப்டிப் பண்றீங்களே” என நியாயமான முறையில் கேட்டாலும் கூட… அதான் எல்லாரும் வாங்கிட்டுப் போறாங்களே.. உனக்கு மட்டும் என்னய்யான்னு துரத்தாத குறையாக, ஒரு அலட்சியப் பதில் வரும். ஏன் இந்த நிலை? எப்படி நாம் இந்த சூழலுக்குத் தள்ளப் பட்டோம்?

நம் மனமும் இது போன்ற அநியாயங்களுக்கு வேறு வழியின்றி இசைந்து,சகித்துக் கொள்ளப் பழகி விட்டது போலும்… மற்றவர்களும் வாங்கி விட்டுத் தானே செல்கிறார்கள். நமக்கு மட்டும் என்ன? என்று போகவும் மனமில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வாங்கிவிட்டுச் செல்லும் அத்துனை பேர்களும் 1% அளவாவது எரிச்சல் படாமல் இல்லை. இது தான் நம் தலையெழுத்து போலும். நாம்(சாமானியர்கள்) ஒடுக்கப்படும் போது, எங்குமே குரல் எழுப்பக் கூட முடியாதபடி தான் நம் குரல்வளைகள் குடும்பம் என்ற கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன.சரி.. ஒரு சாமானிய மனிதனாக… இதை எப்படித் தட்டிக் கேட்பது? இல்லையென்றால் யாரிடம் புகார் அளிப்பது என விசாரித்ததில் கிடைத்த தகவலைப் பார்ப்போம்.
 

MRP -ஐ விட பத்து பைசா அதிகம் வாங்கினாலும் அதற்கான பில்லை முதலில் வாங்குங்கள். அப்படியே சென்று நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் ஒரு புகார் செய்தால் போதும். மற்றவை தானாகவே நடந்துவிடும். அல்லது உங்கள் ஊரில் உள்ள நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் உணவுகலப்பட தடுப்புப் பிரிவில் சென்று புகார் தாருங்கள். ஏனெனில் அவர்கள் தான் இதை ஆய்வுசெய்து கண்டுபிடிக்க கடமைப் பட்டவர்கள். எனவே புகார் அளிப்பதற்கு ரசீது(பில்) வேண்டும். அது சரி.. நம் நாட்டில் எல்லாக் கடைகளிலும் பில்லிங் வசதி உண்டா? அதையும் பார்ப்போம்..

விற்பனைவரி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காத ஒரு சிறு அல்லது சாலையோரக் கடைகளில் மட்டுமே பில் இருக்காது. மற்றபடி பதிவு செய்யப்பட்டிருக்கும் கடைகள் அனைத்திலும் பில் கண்டிப்பாக இருக்கவேண்டும். இப்பொழுது கேள்வி என்னவென்றால் அனைத்துக் கடைகளிலும் பில்லிங் வசதியைக் கட்டாயப் படுத்தினால் தான் என்ன? இது சாத்தியமா? இதனால் உண்டாகும் நன்மைகள் என்ன? என ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

பில்லிங் முறையை அனைத்துக் கடைகளிலும் கட்டாயப்படுத்தினால் என்ன நன்மை? நிச்சயமாக பில் போட்டு வாங்கினால் தான் அந்த பொருளுக்கான வரி அரசாங்கத்திற்குச் செல்லும். அரசாங்கம் நினைத்தால் எதுவுமே சாத்தியம் தான். ஆனால் சிறு, குறு மற்றும் நடைபாதைக் கடைகள் வரிவிதிப்பில் கொண்டுவந்தால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர். மிகப்பெரிய லஞ்சத்திற்கு வழிவகை செய்யும். விலைவாசி மிகக்கடுமையாக உயரும்.

இதையெல்லாம் சரி செய்ய வரிவிதிப்பில் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அது மிகவும் எளிமையாகவும், வியாபாரிகளுக்கும் அரசுக்குமான நேரடி தொடர்பில் நடக்க வேண்டும். வியாபாரிகளை தாமாக வரிகட்ட முன்வரவைக்க வேண்டும். இது மிகவும் சாத்தியம் தான். அரசுக்கும் இப்பொழுது உள்ளதை விட அதிக வருமானம் கிடைக்கும், விலைகளும் பெறுமளவில் குறையும். வியாபாரிகளும் நிம்மதியாக மக்களுக்கு இன்னும் பல வசதிகளுடன் கூடிய சேவையைத் தருவார்கள். ஆனால் இதையெல்லாம் அரசியல்வாதிகளும்அதிகாரிகளும் செய்யமாட்டார்கள். காரணம் அவர்களது தனிப்பட்ட வருமானம் நின்று போகும்.

சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், ஸ்மக்லிங் ப்ராடக்ட்ஸைத் தவிர்ப்பதற்கும், கடைகள் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருத்தல் நலம். இது நன்மையா என அலசி ஆராய்ந்து பார்ப்போம். சரி, எல்லாக் கடைகளையும் விற்பனை வரி அலுவலகத்தில் பதிவு செய்துகொள்வது நல்லதா என்றால் அது யாருக்கு நல்லது? என்ற உப கேள்வியோடு இருக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட மூன்று பிரிவினருக்கான நல்லது கெட்டதுகளைப் பற்றிச் சொல்லவேண்டும்.

1. கடைக்காரர்கள், 2. அரசாங்கம், 3. மக்கள்

பதிவு செய்யாமல் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் தெருவோர சிறுகடைக்காரர்களுக்கும், கிராமத்து கடைக்காரர்களுக்கும் இது நல்லது அல்ல. அதனால் அந்தக் கடைகளின் வாடிக்கையாளர்களான தினக்கூலி வாங்கிப்பிழைக்கும் மக்களுக்கும் இது நல்லது அல்ல. ஏனென்றால், தெருவோரக்கடை வைத்திருப்பவர்கள் யாரும் மாடிவீட்டில் வாழ்வது இல்லை தான்! அவர்கள் வயிற்றில் நாம் ஏன் அடிக்க வேண்டும்? வேறு வழியே இல்லை என்கிறபோது – இந்த நிலை எப்பொழுது வரும்? ஒரு குக்கிராமத்திலோ, காட்டுப்பகுதியிலோ, மக்கள் தொகை மிக மிக குறைவாக (அதிக வியாபாரத்திற்கு வழியில்லாத பகுதிகளிலோ ) உள்ள பகுதிகளிலோ தான் இந்த மாதிரி கடைகள் இருக்கும்.

அங்குள்ள சொற்பமானவர்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் காத தூரம்போக வேண்டும். அதற்கான செலவைப் பாருங்கள். அதிக வியாபார வாய்ப்பு இல்லாத இடங்களில் ஒருவனுக்கு எப்படி பிரேக் ஈவன் வரும்? அப்படி அதையும்தாண்டி லாபம் என்ற ஒன்றை அவன் பார்க்க வேண்டும் என்றால் இப்படி விலையைக் கொஞ்சம் அதிகம் வைத்துத் தான் விற்க வேண்டி வரும். ஒரு உதாரணத்திற்கு உங்கள் தெருவில் ஒரு சிறிய பலசரக்கு கடை இருக்கும், அதில் மளிகை, காய்கறி, கூல்ட்ரிங்க்ஸ் உட்பட அனைத்துமே இருக்கும். ஆத்திர அவசரத்திற்கு தினமும் ஏதாவது ஒன்றை அங்கு தான் வாங்கவேண்டியிருக்கும்.இல்லையென்றால் கொஞ்சம் தூரம் அதிகம் சென்று வாங்க வேண்டியிருக்கும்.

அந்த மாதிரி கடைகள் கொஞ்சம் அதிகம் விலை வைத்து விற்பதுவாடிக்கையான விஷயம் தான். அவர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுத்தால் என்ன ஆகும்? நீங்கள் தினமும் அவசர ஆத்திரத்திற்கு உங்கள் வீட்டுக்காரரையோ அல்லது பிள்ளையையோ தொலைதூரத்திற்கு அனுப்பவேண்டிவரும்! அவர்களுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும். இது ஒரு சிச்சுவேசன்.

ஆனால், இதை அப்படியே.. டி.நகர் போன்ற பெரிய பசார் தெருக்களில் உள்ள சிறு சிறு கடைகளை மனதில் இருத்திப் பார்ப்போம். இங்கே எப்படி வியாபரம் நடக்கிறது? தி.நகரில், நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை, வேறு எங்கும் வாங்குவதை விட குறைவாகத்தான் இருக்கும். நெருக்கடியான சந்தை,அல்லது மக்கள் அதிகம் வந்து விற்பனையாகும் பகுதிகளில் உள்ள கடைகள்(ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் தவிர்த்து – இங்கெல்லாம் மக்களின் முன்திட்டமிடாமையையும், அவசரத்தையும் அவர்கள் பயன்படுத்திக் காசாக்குகிறார்கள்) நிச்சயமாக எம்.ஆர்.பி ஐ விட அதிகமாக விற்கமாட்டார்கள். சொல்லப்போனால் அதைவிடக் குறைவாகத்தான் விற்பார்கள்.சரி தான்.. ஆனால் பொருட்களின் தரம் மற்றும் அரசுக்கு வரும் வருவாய் இழப்பீடு(வரி) இவற்றைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும்? இது எப்படி மேற்கூறிய கிராமங்களில் இருக்கும் கடைகளின் சிச்சிவேசனோடு ஒத்துப் போகும்?

அடுத்ததாக அரசாங்கம். அனைத்து கடைகளையும் பதிவுசெய்ய வலியுறுத்தினால் அரசுக்கு 100 ரூபாய் வருமான அதிகரிப்பு ஏற்படும் என்று கணக்கிட்டால் அதில் 80 சதவிகிதத்தை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், மற்றும் உயரதிகாரிகள் முதற்கொண்டு, கடைநிலை ஊழியர் வரையிலும் தான் சாப்பிடுவார்கள். வெறும் 20 ரூபாய் வருமானத்திற்காக, வியாபாரிகளிடம் பெறுமளவிலான அதிருப்தியையும், விலையேற்றம் காரணமாக மக்களிடம் பெரிய அளவிலான எதிர்ப்பும் தான் மிஞ்சும். இதனால் விலைவாசி கடுமையாக உயர்வதோடு, பல சிறு, குறு வியாபாரிகளும், தெருவோரக் கடைக்காரர்களும்,தொழிலைவிட்டு வெளியேறும் அவலங்களும் ஏற்படும்.

அடுத்ததாக மக்கள். ஒரு வரிவிதிப்பு அல்லது அனைத்து கடைகளுக்கும் வரிகட்டும் அவசியமாதல் நடைமுறைக்கு வந்தாலே, உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படப்போவது பொது மக்கள் தான். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்களின் வாழ்க்கை படு திண்டாட்டமாகிவிடும்.

எவை நம் நாட்டில் அதிகம் இருக்கின்றன? எங்கு வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது? அரசுக்கு இதனால் எவ்வளவு வரி இழப்பு. அதை விட இன்னும் கொடுமைகள் பெரிய பெரிய கடைகள் வைத்திருந்தாலும், பில்லிங் வசதி இருந்தாலும், அங்கும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் அதிகம். அவர்களும் வரியை ஒழுங்காக கட்டுகிறார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். வரிக் கட்டுதலும் நம் ஜனநாயகக் கடமைகளில் ஒன்றெனெக் கொள்வோம். பில் போடாமல் பொருள்(உதாரணத்திற்கு தங்கம்) வாங்கினால் அதற்கு ஒரு விலை. அரசைக் குறை சொல்லும் நாம், இவை எல்லாம் நம் ஜனநாயகக் கடமை எனவும், ஒரு வகையான ஒழுக்கம் எனவும் உணர்தல் வேண்டும். வேறு வழியாகவும் இந்த வரி வசூலித்தல் பற்றி யோசித்துப்பார்க்கலாம்.

மாத்தி யோசி:

பொருட்களுக்கு வரி போடக் கூடாது. வியாபாரிகளின் விற்பனை அளவிற்கு ஏற்றார் போல குறைந்த பட்சம் ஒன்றிலிருந்து அதிக பட்சமாக 5 வரையிலும் வரிவிதிக்க வேண்டும். அதாவது மாதம்1000 ரூபாய் விற்பனை செய்பவர் 10 ரூபாய் வரி கட்ட வேண்டும். 5000 ரூபாய் விற்பனைசெய்பவர் 250 ரூபாய் வரி கட்ட வேண்டும்.

அப்படியிருந்தால் அனைத்து வகையான கடைகளுக்கும் நேராகவே வணிகவரி அலுவலர் வந்து அவர் விவரங்களைக் கேட்டு வாங்கி கையோடு பதிவுச் சான்றிதழை வழங்க வேண்டும். ஒருகடைக்காரர் பதிவு செய்யப்படவில்லை என்றால் அது அவரின் குற்றமாக ஆகாது, மாறாக அது அந்த வணிக வரி அலுவலரின் குற்றமாகக் கருதப்படும்.

அதேப்போல் அவரே மாதாமாதம் வந்து வரியையும் வசூல் செய்துவிட்டுப் போய்விடவேண்டும். இப்படிச் செய்தால் அனைவரும் வரிகட்டுவார்கள். மக்களுக்கும் விலையேற்ற பிரச்சினை வராது. அரசாங்கத்திற்கும் இப்பொழுது உள்ளது போல நூறு மடங்கு வருமானம்அதிகரிக்கும்.



Read more: http://kathirrath.blogspot.com/2012/10/blog-post_20.html#ixzz2A2qfHk1d

புதன், 10 அக்டோபர், 2012

சீர்திருத்தம் தேசத்தைப் பலி கொடுக்கும்!


சீர்திருத்தம் தேசத்தைப் பலி கொடுக்கும்!
விசித்திரமான முரணாகத்தான் இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் வால்மார்ட்டிற்கு சிவப்புக் கம்பளம் விரித்த அதே நாளன்று (செப்டம்பர்-14) அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமான நியூயார்க் நகரில் வால்மார்ட்டிற்கு கதவுகள் சாத்தப்பட்டன. சிறிய சில்லறை வர்த்தகங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று அந்நிய முதலீட்டின் ஆதரவாளர்கள் சொன்ன அதே வெள்ளிக்கிழமையன்று அட்லாண்டிக்சிட்டிஸ் என்ற இணைய செய்தித்தாள், ‘பரவும் மரணம்: அருகிலுள்ள சிறிய வர்த்தக நிறுவனங்களை வால்மார்ட் விரட்டியடித்தது  எப்படி?’ என்ற திகைப்பூட்டும் தலைப்புச் செய்தியை வெளியிட்டது. பல வாரங்களுக்கு முன்பு, அதாவது ஜூன் 30ம் தேதியன்று, பத்தாயிரம் மக்கள் அமெரிக்காவின் பணக்கார நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வீதிகளில், ‘வால்மார்ட் = வறுமை’ என்று முழக்கமிட்டுக்கொண்டு சென்றார்கள். ஜூன் 1-ம் தேதி நூற்றுக்கணக்கானவர்கள் வாஷிங்டன் டிசி வால்மார்ட் முன் திரண்டு, ‘வால்மார்ட் வேண்டாம் என்று சொல்லுவோம்’ எனப் போராட்டம் நடத்தினார்கள்.

ஏன் வால்மார்ட்டைக் குறிவைக்க வேண்டும்? அது உலகின் மிகசக்தி வாய்ந்த சில்லறை வர்த்தக  நிறுவனம். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு ஐ.மு.கூட்டணி அனுமதி தருவதற்கு நிறைய மெனக்கிட்டவர்கள். இங்குள்ளவர்கள் வால்மார்ட்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அது எங்கு பிறந்ததோ அந்த அமெரிக்காவில் அது தீண்டத்தகாததாக ஆகிவிட்டது .

வால்மார்ட் மீது ஏன் இந்த வெறுப்பு? வால்மார்ட் முழு வர்த்தகத்தை நாசப்படுத்தி விடுகிறது என்று நியூயார்க் தொழிற்சங்கங்களும் மக்களும் கூறுகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் அதையேதான் சொல்கிறார்கள். வால்மார்ட்டிற்கு இதயமோ, தார்மீக நெறிகளோ கிடையாது என்று அவர்கள் குரலெழுப்புகிறார்கள். அமெரிக்க அரசியல்வாதிகள் நம் ஐ.மு.கூ. அரசியல்வாதிகளைப் போலத்தான். பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்குத் தடைவிதிப்பது என்று கடந்த மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகராட்சி முடிவெடுத்தது. அதற்கு ஒரு நாள் முன்னதாக வால்மார்ட் தனது கட்டிடத்திற்கான அனுமதியைப் பெற்றது. 2ஜி உரிமம் வழங்குவதற்கான கெடு தேதி விஷயம் நினைவிற்கு வருகிறதா?

சில்லறை வியாபாரிகள், விவசாயிகள் ஆகியோரிடம் வால்மார்ட் கருணையோடு நடந்துகொள்ளும் என்றும் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும் என்றும் ஐ.மு.கூ. சான்றிதழ் அளிக்கிறது. ஆனால் அமெரிக்காவில் நடந்தது அதற்கு நேர் எதிராக இருக்கிறது. சிகாகோவிலுள்ள ஆஸ்ட்டின் நகர்ப்புறப் பகுதியில் வால்மார்ட் 2006ம்ஆண்டு அடியெடுத்து வைத்தது. 2008க்குள் அங்கிருந்த 306 சிறிய கடைகளில் 82 கடைகள் மூடப்பட்டுவிட்டன என்று, ‘அட்லாண்டிக்சிட்டீஸ்’ கட்டுரை சொல்கிறது. வால்மார்ட் உள்ள பகுதிகளில் 35 முதல் 60 சதவிகிதம் கடைகள் மூடப்படுவதாக, ‘எகனாமிக் டெவலெப்மெண்ட்’  என்ற காலாண்டிதழ் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. வேலைகளைப் பொருத்தவரை அது இரண்டு பேருக்கு வேலை கொடுத்தால் ஏற்கெனவே வேலையில் இருக்கும் மூன்று பேரை வீட்டிற்கு அனுப்புகிறது. எனவே வேலைகளை அது உருவாக்கும் என்ற வாதமும் பொய்யானது.

விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பது ஒரு கெட்டிக்காரப் புளுகு. எப்படி என்று பார்ப்போம். வால்மார்ட் விலைபொருட்களை விளைந்தவுடன் சந்தை விலையில்  வாங்குவதோ, பணம் கொடுப்பதோ இல்லை. அடுத்த ஆண்டு வரப்போகும் மகசூலை இந்த ஆண்டே முன்கூட்டியே ஒரு விலை நிர்ணயித்து வாங்க ஏற்பாடு செய்துகொள்கிறது.

ஜனவரி 2007ல் இருந்ததைவிட ஏப்ரல் 2008ல் அமெரிக்க மற்றும் உலகச் சந்தைகளில் அரிசியின் விலை மூன்று மடங்கு உயர்ந்தது. அதற்குக் காரணம் அரிசியின் கையிருப்பு குறைவாக இருந்தது அல்ல என, ‘யு.எஸ்.ஏ. டுடே’ (ஏப்ரல் 23, 2008) தெரிவித்துள்ளது. அதற்குக் காரணம் சாம்ஸ் கிளப் என்ற வால்மார்ட்டின் மொத்த வியாபாரத்தைக் கவனிக்கும் பிரிவு தன் கையிருப்பில் வைத்திருந்த ஏராளமான அரிசியை நல்ல விலைக்கு விற்பதாக விலைகளை உயர்த்தியதுதான்.

2007 துவக்கத்தில் இருந்ததைவிட 2008 ஏப்ரலில் கோதுமை விலை நான்கு டாலரிலிருந்து பதினான்கு டாலராக உயர்ந்துள்ளது. முன்கூட்டியே விலை நிர்ணயித்து வால்மார்ட் வாங்கியதால் அமெரிக்க விவசாயிகளுக்கு நஷ்டம், வால்மார்ட்டிற்கு லாபம்.

அமெரிக்க விவசாயிகளுக்கு வால்மார்ட் நல்ல விலை தருகிறது என்றால் அமெரிக்க அரசு, அதன் மக்கள்தொகையில் இரண்டு சதவிகிதமே உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏன் இருநூறு கோடி டாலர் அளவிற்கு மானியம் கொடுக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்."

(செப்டம்பர் 20ம் தேதி, ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கம்).
நன்றி: ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.’

அறிவியலைக் கையிலெடுப்போம் அடுத்தவர்க்கு கை கொடுப்போம்


அறிவியலைக் கையிலெடுப்போம் அடுத்தவர்க்கு கை கொடுப்போம்
வழிந்தோடும் நீரைத் தடுப்போம்!

இளம் விஞ்ஞானிகள்
அனிருத், நவீன்குமார்
ஸ்ரீஜெயேந்திரர் வித்யாலயா பள்ளி,மகாராஜாநகர், பாளையங்கோட்டை


தண்ணீர்த் தொட்டி நிரம்பி நீர் வழிந்தோடுவதைப் பார்த்தால் இவ்வளவு நீர்வீணாகிறதே என்று வருத்தமாக இருக்கும். பொதுவாக வழிந்தோடும் நீரை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இதற்கு ஏதாவது செய்யலாமே என்று தோன்றியபோது உருவானதுதான் தானியங்கி நீர்க்குழாய் திட்டம்"  என்கிறார்கள், பாளையங்கோட்டை மகாராஜாநகர் ஸ்ரீஜெயேந்திரர் வித்யாலயா பள்ளி மாணவர்கள் அனிருத் மற்றும் நவீன்குமார்.

ஆற்றலைச் சேமிக்கும் தானியங்கி நீர்க்குழாய் திட்டம் (Energy Saving Automatic Hydro Pump System) தான் இவர்களது கண்டுபிடிப்பு. இத்திட்டத்தைச் செய்து முடிக்க ஆர்க்கிமிடீஸ் தத்துவம் மற்றும் மிதப்பாற்றல் கொள்கை (Buoyancy) பெரிதும் எங்களுக்கு உதவியது. இன்னும் எங்கள் திட்டத்தை நவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறோம்" என்கிறார்கள்.

தண்ணீர்த் தொட்டிகளில் பொருத்தினால் வழிந்தோடும் நீரைத் தடுக்க முடியும்.

வீணாகும் மின்சாரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.  ஒரு காற்றுப்புகாத பெட்டி, தண்ணீர் பைப், பிளாஸ்டிக் இன்சுலேட்டர் இவைகள் போதும். சுலபமாக உருவாக்கி விடலாம்.

இக்கருவியைக் கொண்டு வழிந்தோடும் நீரை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.

இக்கருவி நீர் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருப்பதால் தண்ணீர் வீணாகும்போது மோட்டாருக்குச் செல்லும் மின்சப்ளை தானாகவே நின்றுவிடும்.

சாதாரண நீர்த்தொட்டிகளில் கூட இதைப் பயன்படுத்த முடியும்.

சா. சின்னதுரை (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)

 

கைகொடுக்கும் கழிவுநீர்

இளம் விஞ்ஞானிகள்
கலிஸ், தீபாபாரதியார் நூற்றாண்டு பள்ளி, உடுமலைப்பேட்டை

தற்போது நம் முன்னுள்ள முக்கியச் சவால் என்ன என்று பார்த்தால் நீர் மற்றும் எரிபொருள் தேவை. இதை அடிப்படையாக வைத்துதான் பயன்படுத்திய நீரை மறுசுழற்சி (recycle of used water and fire extinguisher) மற்றும் பயன்படுத்திய எண்ணெய் மறுசுழற்சி (recycle of used) என்ற 2 வடிவங்களையும் செய்தோம்" என்கின்றனர், திருப்பூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு பள்ளி மாணவிகள்  கலிஸ் மற்றும் தீபா.

நாம்  தினசரி பயன்படுத்துகின்ற நீரை அதாவது சமையல் மற்றும் குளியலுக்குப் பயன்படுத்தும் நீரை வீணாக வெளியில் விட்டால் அது கொசுக்கள் தங்கி பல்கிப் பெருக வாய்ப்பாக அமையும். எனவே அந்த நீரை வீட்டுக்கு வெளியில் இரண்டு தொட்டிகள் அமைத்து அதில் விட வேண்டும். முதலாவது தொட்டியில் கூழாங்கற்கள், கரி, ஜல்லி, மணல், மூலிகைகள் போன்றவற்றினை இட்டு நிரப்ப வேண்டும். இது அந்தக் கழிவு நீரை சுத்திகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட நீரை இரண்டாவது தொட்டியில் சேமிக்க வேண்டும்.

நிலத்தடி நீரைச் சேமிக்க

வீட்டுத் தோட்டத்தில் செலவிட

வீட்டில் ஏற்படும் எதிர்பாராத தீ விபத்தை தடுக்கக் கூட இந்த நீரைப் பயன்படுத்தலாம்.    
   
எவ்வாறு என்றால் நமது வீட்டில் துளையுடன் கூடிய குழாயை இணைக்க வேண்டும். சென்சார் அலாரமுடன் இணைந்த மோட்டாரை அதில் இணைக்க வேண்டும். தீயின் நாக்கு சென்சாரில் பட்டதும் மோட்டார் இயங்கி, துளையிடப்பட்ட குழாய் மூலம் நீர், வீட்டினுள் செலுத்தப்பட்டு தீ அணைக்கப்படும். பலத்த பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்படும்.

செ. இளந்தமிழ் பாண்டியன் (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)


கண்காணிக்கும் எந்திரன்

இளம் விஞ்ஞானிகள்
பி.பூபதி நிசாந்த், சி.விவியன் ரிச்சர்ட்
மௌண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி, புதுக்கோட்டை

ஜப்பான் நாட்டில் பெரும்பாலான வேலைகள் தானியங்கி ரோபோக்களால் செய்யப்படுகின்றன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகள் பரிமாறவும், கண்காணிப்புப் பணிகளுக்கும் ரோபோ வாகனங்கள் பயன்படுகின்றன. இதுபோல் ஏன் இந்தியாவிலும் செய்யக்கூடாது என்று சிந்தித்தபோதுதான் இந்த ரோபோ வாகனத்தை உருவாக்கத் தோன்றியது. இதன் பெயர் ‘–Multi purpose line follower robo vehicle’ என்கின்றனர், புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பி.பூபதி நிசாந்த் மற்றும் சி.விவியன் ரிச்சர்ட்.

இந்த ரோபோ வாகனத்தில் கறுப்பு நிறத்தை உணரும் இரு சென்சார்கள் பொருத்தப்பட்டு சென்ட்ரல் போர்டுடன் (–Main chip) இணைக்கப்படுகிறது.

கண்காணிக்கப்பட வேண்டிய இடங்களில் ரோபோ வாகனத்திற்கான கருநிற வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.

வாகனத்தின் மேற்பகுதியில் டார்ச் விளக்குகளும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கணினியுடன் இணைக்கப்படுகின்றன.

ரோபோவின் வடிவமைப்பு எளிய முறையில் உள்ளதால் இதற்கு குறைந்த திறனுடைய பேட்டரி போதுமானது.

தொழிற்சாலைகளில் மட்டுமல்லாமல், காடுகளில் விலங்குகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், விவசாயத்துறையிலும் பயன்படும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது சிறப்பம்சமாகும்.

எம். ஆன்டோ அலோசியஸ் (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)


கட்டளை கேட்க! உயிரைக் காக்க!

இளம் விஞ்ஞானிகள்
எஸ். சுதர்சன், கே.கார்த்திகேயன்
ஸ்ரீமாதா மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம்

விபத்துகள் ஏற்படுவதற்கு ஹெல்மெட் அணியாததும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும் முக்கியப் பிரச்சினையாக இருப்பதால் இரண்டுக்கும்  தீர்வைத் தர வேண்டும் என்று இந்தக் கருவியைக் கண்டுபிடித்தோம்" என்கிறார்கள், கும்பகோணம் ஸ்ரீமாதா மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் எஸ். சுதர்சன் மற்றும் கே. கார்த்திகேயன்.

ஹெல்மெட்டில் இரண்டு IR சென்சார் (SENSOR), ஒரு கேஸ் சென்சார் (GAS SENSOR) இணைக்க வேண்டும். தகவல்களை அனுப்ப ஒரு டிரான்சிஸ்டரும் இவற்றை இயக்க ஒரு பேட்டரியும் தேவை. திரையானது (DISPLAY) வாகனத்தின் முகப்பில் இருக்கும். இதற்கான தகவல்களைப்பெற ஒரு ரிசீவரும் உண்டு. திரையிலிருந்து சரியான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே வாகனம் ஸ்டார்ட் ஆகும் வகையில் என்ஜினில் ஒரு கிட் பொருத்தப்பட்டுள்ளது.

நீங்கள் ஹெல்மெட்  (HELMET) அணியாமல் வண்டியை ஸ்டார்ட் செய்கிறீர் என்றால் திரையில், ‘ஹெல்மெட் அணியவும்’(WEAR HELMET) என்ற வாசகங்கள் தோன்றி, உங்கள் வாகனம் இயங்க அனுமதிக்காது.நீங்கள் ஹெல்மெட் அணிந்த பின்னரே ஸ்டார்ட் செய்ய இயலும்.

ஒருவேளை நீங்கள் சிறிது தூரம் சென்றபிறகு ஹெல்மெட்டைக் கழட்டினாலும் சில நிமிடங்களில் வாகனம் தானாகவே நின்று விடும்.

உங்கள் ஹெல்மெட்டின் முன்புறமுள்ள கேஸ் சென்சார் நீங்கள் மது அருந்தி இருந்தால் ஆல்கஹால் இருப்பதை உணர்ந்து திரையில், ‘நீங்கள் குடித்துள்ளீர்கள்’ (SORRY YOU DRUNK) என்று காண்பித்து, உங்கள் வாகனம் இயங்க அனுமதிக்காது.

இதனை இரு சக்கர வாகனத்தில் மட்டுமல்ல, காரிலும் (CAR) கூட பயன்படுத்தலாம். முன்பு கூறிய வகையில் ஹெல்மெட்டுக்குப் பதில், காரில் சீட் பெல்ட் (SEAT BELT)அணிந்தால்தான் வாகனம் இயங்கும். ஆல்கஹால் இருந்தால் கார் ஸ்டார்ட் ஆகாது.

சு. வீரமணி (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட முடியாதா?


பொதுமக்களுக்கு  இடையூறு  இல்லாமல்  போராட  முடியாதா?
யுவன்

போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை அவதிக்குள்ளாக்குவது நியாயமா?

‘இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெள்ளிக்கிழமை காலை நடத்திய 20 நிமிடப் போராட்டம், இரண்டு மணி நேரத்திற்கு மேல் லயோலா கல்லூரியைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்தை முடக்கியது.’
- ‘தி ஹிண்டு’ 22 செப்டம்பர் 2012

இதைக் குறித்து அதே நாளில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வெளியாகி உள்ள செய்தி,

‘அலுவலகம் செல்பவர்களை இந்தப் போராட்டம் எப்படிப் பாதித்துள்ளது என்பதை தொலைக்காட்சி செய்தியாளரிடம் விவரித்துக் கொண்டிருந்த ஒரு வாகன ஓட்டி, விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் சிலரால் அடித்து உதைக்கப்பட்டார். காவல்துறையின் கண்ணெதிரேயே இது நடந்தது. ஆனால் காவல்துறை, தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு, இரண்டு நாள் கழித்து, திருமாவளவனின் உதவியாளர் இளஞ்சேகுவாரா என்பவரைக் கைது செய்திருக்கிறது.

செவ்வாயன்று மதியம், ஜன்னல்களில் சன் பிலிம் ஒட்டிய காரில் பயணம் செய்துகொண்டிருந்த தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் மீது போக்குவரத்துப் போலீசார் வழக்குப் பதிய முயன்றதை அடுத்து அவர் கோயம்பேட்டில் உள்ள வெளியூர் பேருந்து நிலையத்தின் அருகே சாலை மறியல் செய்தார்.’
- ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ 19 செப்டம்பர் 2012

‘செய்யாறில் உள்ள இரண்டு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் கதவுகளைப் பூட்டிவிட்டு நீதிமன்றத்தின் வெளியே அமர்ந்து போராட்டம் நடத்தினர். நீதிமன்றப் பணியாளர்களோ, பொதுமக்களோ மதியம் வரை நீதிமன்றத்திற்குள் செல்ல இயலவில்லை.’
- ‘தி ஹிண்டு’ 22 செப்டம்பர் 2012

‘நடைமுறையிலுள்ள கட்டண விகிதங்களை ஏற்க மறுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டிலுள்ள ஆட்டோஓட்டுநர்கள், ஐந்தாவது நாளாக இன்றும் தங்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.சனிக்கிழமையன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த பிரகாஷ் அந்தோனி என்ற பயணி, சென்ட்ரலில் இருந்து, நுங்கம்பாக்கம் செல்ல 300 கேட்கிறார்கள். இது அக்கிரமம் என்று தெரிவித்தார்.’
- ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ 22 செப்டம்பர் 2012  

இவையெல்லாம் கடந்த வாரத்தில் வெளியான செய்திகள். அதற்கு முந்திய வாரத்தில் அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டங்களை அடுத்து இரு தினங்கள் அண்ணா சாலை மற்றும் அதன் கிளைச் சாலைகளில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது .

இதைப் போன்ற போராட்டங்கள் நடக்கும்போது அவற்றால் பாதிக்கப்படுபவர்கள் ஒபாமாவோ, ராஜபக்ஷேயோ அல்ல. சர்சைக்குரிய திரைப்படம் உருவானதில் எந்தப் பங்குமற்ற ராஜபக்ஷேயின் வருகையை விரும்பாத அப்பாவிப் பொதுமக்கள்தான். நம்முடைய கை விரலைக் கொண்டே நம் கையைக் குத்திக்கொள்கிற அபத்தம் இது.

இரண்டு நீதிமன்றங்களை இணைக்கிற முடிவு முழுக்க முழுக்க நீதித்துறை எடுத்த முடிவு. மக்களா அந்த முடிவை எடுத்தார்கள்? அவர்களுக்குப் பங்கில்லாத ஒரு முடிவிற்காக ஏன் பொதுமக்கள் தண்டிக்கப்பட வேண்டும்?

போராடுவது ஜனநாயகம் எங்களுக்கு அளித்துள்ள உரிமை என்கிறார்கள் அரசியல் கட்சிகள். போராட்டங்களை நடத்த அவர்களுக்கு உரிமை உள்ளதைப் போல அந்தப் போராட்டங்களை விமர்சிக்கவும், அதனால் தங்களுக்கு ஏற்படும் அவதிகளை எடுத்துச் சொல்லவும் பொதுமக்களுக்கு உரிமை உண்டு. அதற்காக அவர்களைத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

போராட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களைத் துன்புறுத்துவது ஓர் அரசியல் கலாசாரமாகவே ஆகி வருகிறதோ எனக் கவலை எழுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்த முடியாதா? சாலை மறியல், பேரணி, கல்வீச்சு இவற்றைத் தவிர வேறு போராட்ட முறைகளே கிடையாதா?

ராஜபக்ஷேயின் வருகை விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். அவர் மத்தியப்பிரதேசத்திலுள்ள ஒரு நகருக்கு வருகிறார். அதற்கு சென்னையிலுள்ள சாலைகளில் போக்குவரத்தை முடக்குவதற்குப் பதிலாக, அந்த வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கலாமே அல்லது மம்தாவைப் போல ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கலாமே? குறைந்த பட்சம் சோனியா காந்தியையோ, பிரதமரையோ நேரில் சந்தித்துத் தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கலாமே?

இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலைகளுக்கு உள்ளான சம்பவங்கள், மூன்றாண்டுகள் ஆன பின்னும் இன்னும் எல்லாத் தமிழர்கள் மனதிலும் ஆறாப் புண்ணாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு நீதி கேட்டு நாம் போராட வேண்டியது சர்வதேச அரங்கில். உலகம் அந்த அநியாயத்தை அறிந்து கொள்ளும்போது நிச்சயம் உரக்கக் குரல் எழுப்பும். ஆனால் நம் அரசியல்வாதிகளால் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களிடம் கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இந்த அநியாயத்தை எடுத்துச் சொல்ல முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். அவர்கள் தங்கள் வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக்கொள்ள ரோடு ஷோக்கள் நடத்துவதிலேயே அக்கறை காட்டுகிறார்கள்.

வேலை நாட்களில் முக்கியச் சாலைகளில் பேரணி நடத்த அனுமதிக்கக் கூடாது என்று ஓர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. அப்படியிருக்க, வேலை நாட்களில் காலை 8:30 மணிக்கும், மாலை 4 மணிக்கும் சென்னைக் காவல்துறை அண்ணாசாலை, லயோலா கல்லூரி போன்ற பகுதிகளில் போராட்டம் நடத்த எப்படி அனுமதி அளித்தது என்பதுதான் விளங்காத புதிர்.

உணர்ச்சிமயமான போராட்டங்கள் குறித்தும் தமிழ் சமூகம் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறதா என்பது குறித்தும் ‘புதிய தலைமுறை’ ஓர் உரத்த சிந்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தது. காண்க உரத்த சிந்தனை.

கொள்கைக் காவலர் கருணாநிதி அவர்களுக்கு,


கொள்கைக் காவலர்  கருணாநிதி அவர்களுக்கு,

‘காகிதப்பூ மணக்காது, காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது.’

நினைவிருக்கிறதா இந்த வார்த்தைகள்? நெடுங்காலம் ஆகி விட்டது. என்றாலும் இன்றும் கூர்மையோடு இருக்கும் உங்கள் நினைவாற்றல் இதைச் சொன்னது யார் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. குழந்தைக்குத் தந்தையை அடையாளம் தெரியாமல் போகலாம். என்றானாலும் தந்தைக்குத் தன் குழந்தையைத் தெரியாமல் போகுமா? ஆம், இது நீங்கள் எழுதியதுதான். 1967ல் ஆட்சிக்குவரும் முன் ஆங்காங்கே காகிதப் பூ என்ற நாடகத்தை அரங்கேற்றி வந்தீர்களே... அதில் நீங்கள் எழுதிய வசனங்கள்தான் இவை.

அப்போது காங்கிரஸ் பணக்காரர்களின், பஸ் உரிமையாளர்களின், ஆலை அதிபர்களின், வணிகச் சக்கரவர்த்திகளின் ஆதரவைப் பெற்ற கட்சியாக இருக்கிறது எனக் கருதி அதை மேடை போட்டுத் தாக்கி வந்தீர்கள். அன்று உங்கள் கொள்கை சமதர்மம் என்றுதான் உறுதியாய் நம்பினோம். அன்று இளைஞர்களின் நம்பிக்கையை இழந்து விடாத கட்சியாகத்தான் இருந்தது கழகம்.

நாடக மேடைகளில் மட்டுமல்ல, ஆட்சிப் பீடத்திலும் சோஷலிசத்தில் நேசம் வைத்தவராகத்தான் அடையாளம் காட்டினீர்கள்.  அன்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் போக்குவரத்துத் துறையை அரசுடைமை ஆக்கினீர்கள். இந்திரா,  வங்கிகளை அரசுடைமைஆக்கியபோது அவரது கட்சியினரே அவரைக் கைவிட்ட போதும் அவரது அரசுக்கு ஆதரவளித்து அதை நிலைக்கச் செய்தீர்கள்.

காலங்கள் பல சென்ற பின்னும் காகிதப்பூ வண்ணமிழந்ததே தவிர, வாடிவிடவில்லை. தாராளமய யுகத்தில் கூட  சில தயக்கங்கள் உங்கள் மனசாட்சிக்கு இருந்தன. 2001ம் ஆண்டு தோகாவில் நடந்த உலக, வர்த்தக அமைப்பின் (WTO) கூட்டத்தில், முரசோலி மாறன், 2005ல் துவக்க வேண்டிய அன்னிய முதலீடுகள் குறித்த பேச்சுவார்த்தையை மேலும் இரண்டாண்டுகளுக்குத் தள்ளி வைத்ததையும், ஏகாதிபத்தியங்களுக்கு இணக்கமான தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியதையும் வியந்தும் கடிந்தும் அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதியதை மறந்திருக்க மாட்டீர்கள். India’s Mr. Maran became the man to see at Doha, frustrating U.S and European efforts to get an agreement. He spent the first five days refusing to negotiate and the last day threatening to walk out of the talks. என்று, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (‡November  15, 2001) முதல் பக்கச் செய்தியாக எழுதியது என் நினைவில் நிழலாடுகிறது.

இன்று மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டே, அதற்கு எதிரான பந்த்தில் பங்கேற்றதைக் குறித்துப் பலர் பகடி பேசியபோதும் இன்னும் பழைய வாசனை, கழகத்திற்குள் பாக்கியிருக்கிறது என்றுதான் எண்ணிக் கொண்டேன்.

இதனுடைய நீட்சியாக, மம்தாவைப் போல, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை நீங்கள் விலக்கிக் கொள்வதுதானே நியாயமாக இருக்கும்? ஆதரவை விலக்கிக் கொள்ளாவிட்டாலும் அமைச்சர்களை விலக்கிக் கொண்டிருக்கலாமே?

ஆனால் கொள்கை மாறுபாடு ஏற்பட்டால் ஒழிய, கூட்டணியிலிருந்து விலகுவது இல்லை என்று அறிவித்திருக்கிறீர்கள். இதற்கு அர்த்தம், அன்னிய முதலீடு என்ற கொள்கையில் மத்திய அரசுக்கும் உங்களுக்கும் மாறுபாடு இல்லை என்பதா? அப்படியானால் பந்த்தில் ஏன் பங்கேற்றீர்கள்? சரி, உங்கள் பொருளாதாரக் கொள்கைதான் என்ன? இன்று அப்படி ஏதேனும் ஒன்று உங்கள் கழகத்திற்கு உண்டா? இருந்தால் ஏங்கல்ஸ் மார்க்ஸ் போல விளக்க அறிக்கை எழுத வேண்டாம். கடிதத்திலாவது கோடிட்டுக் காட்டுங்கள்.

போகட்டும், பொருளாதாரத்தில் குழப்பம். அயலுறவு விஷயம் எப்படி? அங்கேயும் சம்மதம்தானா?. ஈழம் குறித்த மத்திய அரசின் கொள்கைக்கும் உங்கள் கொள்கைக்கும் மாறுபாடு இல்லையா? மாநாடு போட்டோமே என விவாதத்தை மடை திருப்பாதீர்கள். அந்த மாநாட்டில் எந்தத் தீர்மானமும் போடக்கூடாது என்று மேலிடத்திடமிருந்து தாக்கல்  வந்ததைக்கூட மாறுபடாமல், மனம் புழுங்காமல்தான் ஏற்றுக் கொண்டீர்களா?

 ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் என்ற கொள்கையும் உங்களுக்கு ஏற்புடையதுதானா? தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கும் மத்திய அரசின்அணுகுமுறையையும் ஏற்கிறீர்களா?

பெட்ரோல் விலை உயர்ந்தபோது கசப்புணர்வுடன் நீடிக்கிறோம் என்று அறிவித்தீர்கள்(‘தினகரன்’ மே 30). டீசல் விலை உயர்வின்போது கொள்கை மாறுபாடு ஏற்பட்டால் ஒழிய, கூட்டணியிலிருந்து விலகுவது இல்லை என்கிறீர்கள். அன்று கசந்தது இன்று இனிக்கிறதே எப்படி?

காகிதப் பூ நாடகமா? இல்லை இதுதான் நாடகமா?

வேடங்களை விளங்கிக் கொள்ள முடியாத

இளந்தமிழன்புதியதலைமுறை