Powered By Blogger

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

வரலாற்றின் குரல்

ஒடுக்கப்பட்டவர்களிடம் பேரெழுச்சியை ஏற்படுத்திய மார்ட்டின் லூதர் கிங்கின் உரை நிகழ்த்தப்பட்ட பொன்விழாவைக் கடந்த  வாரம் அமெரிக்கா கொண்டாடியது.

பல படிகளைத் தாண்டித்தான் அந்த உயரத்தை அடைய முடியும். பயணம் சற்று நீண்டதுதான். என்றாலும் முடிவு இனிமையானது.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள லிங்கன் நினைவகத்தின் படிகள் பலவற்றைக் கடந்து  மேலே போய்த் திரும்பிப்  பார்த்தால் தெரியும், சீவி வைத்த பிரம்மாண்டப் பென்சிலை போன்ற ஜார்ஜ் வாஷிங்டனுக்கான நினைவுத் தூணும் பொடாமாக் நதியில் அமைந்துள்ள நீரூற்றும் வசீகரமானவை. ஆனால்  அந்தப் படிகள் கண்ட வரலாறு துயரமும் எழுச்சியும் நிறைந்தவை.

50 ஆண்டுகளுக்கு முன் 28 ஆகஸ்ட் 1963-இல் இந்தப் படிகளில் நின்றுதான் மார்ட்டின் லூதர் கிங் அந்த எழுச்சிமிக்க  உரையை நிகழ்த்தினார். அந்த உரையைக் கேட்க நாடு முழுவதிலிருந்தும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் திரண்டனர்.

யார் அவர்கள்?

கறுப்பர்களுக்கென்று தனியே பிரித்து ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் படித்தவர்கள். உணவு விடுதிகளில் கறுப்பர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட மூலைகளில் அமர்ந்து உண்டவர்கள். தங்கள் ஊர்  நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள்.காதலித்த பெண்ணை/ஆணை மணந்துகொள்ள முடியாதவர்கள். தங்கள் கண்ணெதிரே தங்கள் அருமைக் குழந்தைகள்  அடித்துத் துன்புறுத்தப்படுவதைக் காண நேர்ந்த துர்பாக்கியவான்கள். தங்களுக்கு உரிமையும் கௌரவமும் மறுக்கப்பட்ட  நிலையிலும் அமெரிக்காவின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் காப்பதற்காகப் போர் புரிந்த படை வீரர்கள்.

ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள்,  ஆசிரியர்கள், சுமை  தூக்கும் தொழிலாளிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், உருக்காலைத் தொழிலாளிகள் போன்ற வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறாத சாதாரணர்கள், டி.வி. நிகழ்ச்சிகளில் தலை காட்டாதவர்கள்,  ஒடுக்கப்பட்டவர்களும் சுதந்திர தாகம் கொண்டவர்களுமாக 2,50,000 பேர் தலைநகரத்தை நோக்கி பேரணியாகத் திரண்டார்கள். தங்கள் சொற்பக் கூலியில் மிச்சம் பிடித்த அல்லது பீராய்ந்த பணத்தைக் கொண்டு பஸ் ஏறி வந்தவர்கள், ஆங்காங்கு வாகனங்களில் ஓசி லிப்ட் கேட்டு வந்தவர்கள், ஏன் நடந்தே வந்தவர்கள் கூட உண்டு. பல கிராமங்களில் மொத்தக் கிராமமே திரண்டு வந்து உணவும் தண்ணீரும் கொடுத்து வழி அனுப்பி வைத்தது என ஒபாமா தனது உரையில் நினைவு கூர்ந்தார்.

அவ்வளவு பெரிய மக்கள் சக்தியைக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். இனக் கலவரத்தை உண்டாக்கியிருக்க முடியும். உள்நாட்டுப் போரை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் பிரார்த்தனை செய்தார் மார்ட்டின் லூதர் கிங். வன்முறை தவிர்த்த அறவழியில் போராட முடிவு செய்தார். அதற்கான நம்பிக்கையையும் மன உறுதியையும் ஆன்ம பலத்தையும் தந்தவர் ஓர் இந்திய ‘அரை நிர்வாணப் பக்கிரி’. அவர் பெயர் மகாத்மா காந்தி.  

மார்ட்டின் லூதர் கிங்கின் உரை ஓர் இயக்கத்தைத் துவக்கியது. அந்த இயக்கத்தின் அறப்போராட்டம் மாற்றங்களைக் கொண்டுவந்தது. இன ஒதுக்கல் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டது. வாக்குரிமை அளிக்கப்பட்டது. கல்வியிலும் வேலையிலும் சம வாய்ப்பளிக்கப்பட்டது.  ‘ஊராட்சிகள் மாறின. மாநிலச்  சட்டமன்றங்கள் மாறின. நாடாளுமன்றங்கள் மாறின.ஏன் வெள்ளை மாளிகையும் மாறியது’ என ஒபாமா இதழ்க் கடையில் ஒரு புன்னகையை ஒளித்துக்கொண்டு சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்துக் கூச்சலிட்டது.

குற்றாலச் சாரல் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூறல் விழத் தொடங்கிய நிமிடத்தில் உரையாற்ற வந்தார் ஒபாமா. அவருக்குமுன் மார்ட்டின் லூதர் கிங்கின் மகள் உணர்ச்சி பொங்க உரையாற்றி முடித்திருந்தார். கிங்கின் போராட்டத்தின்போது, உரிமை மணி ஊரங்கும் ஒலிக்கட்டும் எனச் சொல்லி மாதா கோயில் மணியை அடிப்பார்கள். அதை நினைவுகூரும் விதத்தில், அவர் ஒலித்த மணியைக் கொண்டு வந்திருந்தார்கள். அலபமாவில் ஒரு மாதா கோயிலில் இருந்த மணி அது. அந்த மாதா கோயில், வாஷிங்டனில் கிங் வரலாற்றுச் சிறப்பு உரை ஆற்றிய 15-ஆம் நாள், குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. ஆனால் மணியைக் காப்பாற்றிப் பத்திரப்படுத்தி விட்டார்கள். கிங்கின் மகள் உரையாற்றிய பின் அந்த மணியை ஒரு சிறுமி ஒலித்தார்.

எனக்கு ஒரு கனவு இருக்கிறது என்கிற மார்டின் லூதர் கிங்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்தப்பட்ட 50-ஆம் ஆண்டு விழாவிற்கும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். அவர்களைப் போல பசியோடும் தாகத்தோடும் நெடுந்தூரம் நடந்துவந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அல்ல இவர்கள். ஒபாமாவின் உரையை ஐபேட் மூலம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்.

கிங்கின் அறப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களுக்கு இல்லை என்றாலும்  தங்கள் குழந்தைகளுக்கு  உரிமை கிடைக்கும் என்கிற  நம்பிக்கையில் சிறைக்குப் போனார்கள். அவர்கள் அனுபவித்திராத உரிமைகளும் வாய்ப்புகளும் அவர்களது குழந்தைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவர்களுக்கு அவர்கள் அனுபவித்த துன்பங்கள் தெரியாது என அவர் சொன்னபோது இந்தியாவில் இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்காகத் தங்கள் உயிரையே அளித்த அந்த முகம் தெரியாத மூதாதையர்களை நினைத்து என் கண்கள் கசிந்தன. அந்த இருண்ட நாள்களில் இருந்த அந்த நம்பிக்கை, இந்தியாவே இன்று உனக்கு இருக்கிறதா?

கிங்கின் அறப்போராட்டம் மாற்றங்களைக் கொண்டு வந்தது என்பது உண்மை. ஆனால் எல்லா அடித்தள மக்களின் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடவில்லை. ‘வேலை இல்லாதவர்களுக்குக் கனவுகள் இல்லை’ என்று ஒரு பதாகையைக் கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

‘உணவு வாங்க சக்தி இல்லாதபோது ஒன்றாக உட்கார்ந்து உண்ணக் கிடைத்திருக்கும் உரிமையால் என்ன பயன்?’ என்று கேள்வி எழுப்பிய ஒபாமா, கிங்கின் கனவு திசை திருப்பப் பட்டுவிட்டது எனக் குறைபட்டுக் கொண்டார்.

‘உலகளவிலான போட்டியும் தொழில்நுட்பங்களும் நம் வேலைகளைக் கவர்ந்து சென்றுவிட்டன. நம் தொழிலாளர்கள் (தங்கள் உரிமைகளுக்காகப்) பேரம் பேசும் வலிமையை இழந்து விட்டார்கள்’ என்றார் ஒபாமா. இது இந்தியாவிற்கும் கச்சிதமாகப் பொருந்தும் உண்மை என்பதை ஸ்ரீபெரும்புதூரிலோ, சிறுசேரியிலோ போய் விசாரித்தால் புரிந்துகொள்ளலாம். பணத்தாசை நல்லது, பரிதாபப்படுவதால் பிரயோஜனமில்லை  எனச் சொல்லி சில சக்திகள் அடித்தள மக்களுக்கு அரசு நன்மைகள் செய்ய முற்படும்போது முட்டுக்கட்டைகள் போடுவதாக ஒபாமா குறைபட்டுக் கொண்டபோது ஆடம் ஸ்மித்தைப் பார்த்துக் கண்ணடித்துக் கேலிச் சிரிப்பொன்றை உதிர்த்திருப்பார் கார்ல் மார்க்ஸ்.

இன்று இந்தியாவிற்குத் தேவை, அமெரிக்காவை பொருளாதாரத்திலிருந்து மீட்ட பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் என்று  நரேந்திர மோடியைக் குறிப்பிட்டு சில நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். எனக்கென்னவோ இந்தியாவின் இன்றைய தேவை அதன்  மன உறுதியைத் தட்டியெழுப்பக் கூடிய ஒரு மார்ட்டின் லூதர் கிங் எனத் தோன்றுகிறது.

காணாமல் போன கச்சத்தீவு



பேரதிர்ச்சி.

இந்த ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்து கிடக்கிறது தமிழ் மக்களது உணர்வுகள். அண்மைக்காலமாகத் தமிழக மீனவர்கள் அன்றாடம் சந்தித்து வரும் தொல்லைகளுக்கு ஒரு தீர்வாக அவர்கள் நம்பியிருப்பது  கச்சத்தீவைத் திரும்பப் பெறுவது. ஆனால் கச்சத்தீவு இந்தியாவிற்கு உரிமையானதே அல்ல என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது மத்திய அரசு. நமக்கு உரிமையானது அல்ல என்று மட்டும் சொல்லவில்லை, அது இலங்கைக்கு உரிமையானது என்றும் சொல்லி விட்டது.

இதை ஏதோ ஒரு கடை அல்லது இடை நிலை அதிகாரி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போக வில்லை. உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பிரமாணப் பத்திரத்தில் அது தெரிவித்திருக்கிறது.  கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்கிற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது; அதைத்தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக்கோட்டை நிர்ணயித்தபோது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது என்று அது அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறது.

இந்தக் கருத்தை அது தெரிவித்துள்ள நேரமும் சூழலும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி, இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368-ஆவது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து, ஒப்புதல் பெற்று அதற்கான  சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத்தீவு விஷயத்தில்  அப்படி ஏதும் செய்யப்படவில்லை.  1974-ஆம் ஆண்டு இந்திய அரசு வெறுமனே ஓர்  ஒப்பந்தத்தின் வாயிலாக இலங்கைக்குத்  தாரை வார்த்து விட்டது என்றும், அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது என்றும் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த வழக்கில் பதில் சொல்லும் விதமாக மத்திய  அரசு இப்படி ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றதாகவோ, அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டதாகவோ மத்திய அரசால் எந்த ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாது. ஏனெனில் அப்படி ஓர் ஆவணமே இல்லை. ஒப்புதல் பெற்றிருந்தால்தானே  ஆவணம் இருக்கும். ஒப்புதலே பெறவில்லையே. எனவே வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, கச்சத்தீவு இந்தியப் பகுதிக்குள்ளேயே  இல்லை என்று. சொல்லிவிட்டால் வழக்கே இல்லாமல் போய்விடுமே என்பதற்காக மத்திய அரசு இப்படி ஓர் நிலை எடுத்திருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

1974-ஆம் ஆண்டு  இலங்கை அரசோடு இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, 23-7-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது இராமநாதபுரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த  பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த  மூக்கையா தேவர், ‘எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது’ என்று  ஆட்சேபம் தெரிவித்தார். கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதில் ரகசியப் பேரம் நடந்துள்ளது என்று அப்போது எதிர்க்கட்சியில் இருந்த வாஜ்பாய் குற்றம் சாட்டினார். மக்களவையில் இரா. செழியனும், மாநிலங்கள் அவையில் ராஜ்நாராயணன், எஸ்.எஸ்.மாரிசாமி, அப்துல் சமது ஆகியோரும் ஒப்பந்தத்தை விமர்சித்தனர். ஆனால் அப்போதெல்லாம்  கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது அல்ல என்று மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

மத்திய அரசு கச்சத்தீவு இந்தியாவினுடையது அல்ல என்று சொன்னாலும் இலங்கையைச் சேர்ந்தவர்களே  கச்சத்தீவு இராமநாதபுரம் அரசருக்குச் சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு அதனைப் பயன்படுத்த அவரோடு ஒப்பந்தம் செய்துகொண்டதற்கான ஆவணங்கள் உண்டு. ஆங்கிலேயர் ஆண்டபோது அவர்கள் மேற்கொண்ட நில அளவையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சர்வே எண் 1250-ன் கீழ் அந்தத் தீவு வருவதாகக் குறித்து அதை கெஜட்டிலும் வெளியிட்டனர்.

உண்மை இப்படி இருக்க... கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தமானது மாயை என்கிறது இந்திய அரசு. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் இந்த முயற்சியில் பாதிக்கப்படப்போவது இந்திய மீனவர்கள்தாம். மக்களைக் காக்க வேண்டிய அரசு, கடந்தகாலத் தவறுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மக்களைக் கைவிடுவது என்கிற விசித்திரம் இந்தியாவில் மட்டுமே நடக்கும்.

நாடு சந்திக்கும் நெருக்கடி நாம் எப்படி உதவ முடியும்?


மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத சரிவு. ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிலவரப்படி  68.80 ரூபாயாக ஆக வீழ்ந்தது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பார்த்தால் சரிவு விகிதம் 21.12.

வரலாறு காணாத பொருளாதார  நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோருகின்றன. அதற்குப் பின் அரசியல் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் பதவி விலகுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து  விடாது.  இன்னும் சொல்லப் போனால் பிரச்சினை தீவிரமாகும். அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு நாடு நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த  நேரத்தில் அதிலிருந்து மீள நாம் என்ன செய்ய வேண்டும்  என்பதைப் பற்றி சிந்திக்கலாம்.

அதற்கு  முதலில் இந்த நெருக்கடிக்கான காரணங்கள் என்னவென்று தெரிய வேண்டும்.

அந்நிய முதலீடுகள் வெளியேறுகின்றன. டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு, ரயில் சரக்குக் கட்டணம் உயர்வு ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாவதற்கான அறிகுறிகள். இவற்றுடன் 25,000 கோடி ரூபாய் அளவு அதிக செலவு பிடிக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.  

முக்கியமாக ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது.  உலக நாடுகளின் நாணயங்களின் மதிப்போடு ஒப்பீடு செய்துதான் இந்திய ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. எனினும் அமெரிக்க டாலரை சர்வதேச நாடுகள் பொது கரன்சியாக ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால்தான் அமெரிக்க டாலர் இந்த நாணய ஒப்பீடுகளில் முதலிடம் வகிக்கிறது.  இந்நிலையில் ஒரு டாலரை வாங்கவேண்டுமானால் எவ்வளவு ரூபாய் கொடுக்கவேண்டும் என்பதை வைத்து, ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. டாலரை வாங்குவதற்கு கூடுதல் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தால்,  ரூபாய் மதிப்பு குறைந்தது என்று சொல்கிறோம். குறைவான ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்க முடிந்தால், ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்கிறோம்.

2012 ஜனவரியில் 45 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை நாம் வாங்கினோம். 2013 ஏப்ரல் மாதம் 55 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்கினோம்.

நடப்புக் கணக்கில் பற்றாக்குறை அதிகரிப்பு

நாம் பிற நாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்து சம்பாதிக்கும் டாலர்களின் தொகை குறைவாகவும் இறக்குமதி செய்வதற்கு நாம் செலவிடும் டாலர்கள் அதிகமாகவும் இருக்கின்றன. அதாவது அந்நியச் செலாவணியில் வரவை விட செலவு அதிகமாக இருக்கிறது. இதனால் நடப்புக் கணக்கில் துண்டு விழுகிறது (Current Account Deficit). இது மேலும் மேலும் அதிகரித்தபடி உள்ளது.

நாம் அதிகபட்சமாக இறக்குமதி செய்வது கச்சா எண்ணெய். அதற்கு அடுத்தபடியாக தங்கத்தை இறக்குமதி செய்கிறோம். இந்த இறக்குமதிகளுக்கு டாலர்களை அதிக அளவில் செலவிடுகிறோம். நமது ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளாக குறைந்துள்ளது. சென்ற ஜூலை மாதம்தான் 11 சதவிகிதம் அதிகரித்தது. பொதுவாக சர்வதேச மந்தநிலையின் காரணமாக  நமது ஏற்றுமதி குறைந்து, அதனால் டாலர் வரத்து குறைந்துவிட்டது. டாலர் வரத்து குறைந்தது, ரூபாய் மதிப்பு சரிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம்.

ஃபெடரல்  ரிசர்வின் அறிவிப்பு

இரண்டாவதாக அமெரிக்க ரிசர்வ் வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அந்நாட்டுப் பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் முன்னதாக டாலரை அதிக அளவில் புழக்கத்தில் விட்டிருந்தது. அங்கு பொருளாதாரம் மீட்சி அடைந்துவிடும் நிலையில், புழக்கத்தில் விட்டிருந்த டாலரை படிப்படியாகக் குறைத்துக்கொள்ள உத்தேசித்திருப்பதாக (Quantitative Easing) அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. டாலர் புழக்கம் குறையுமானால், அதன் மதிப்பு சந்தையில் உயரும் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் உலகின் பல நாடுகளின் நாணயங்களின் மதிப்பு சரிந்தது. அவற்றில் இந்தியாவும் ஒன்று.

வெளியேறும் அந்நிய முதலீடுகள்

அமெரிக்கப் பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்லத் தொடங்கிவிட்டன. இந்தியாவுக்கு புதிய முதலீடுகளின் வரத்தும் குறைந்துவிட்டது.

ஊக பேர வணிகர்களின் கைவரிசை

மேற்கூறிய காரணங்கள் தவிர, ஊக பேர வணிகர்கள் அந்நியச் செலாவணியில் புகுந்து விளையாடியதும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கடந்த சில மாதங்களில் ரிசர்வ் வங்கி அவ்வப்போது பணச் சந்தையில் கணிசமான அளவு டாலர்களை பாய்ச்சிய பிறகும் நிலைமை சீரடையாமல் போனதற்கு ஊக பேர வணிகமும் ஒரு காரணம்.

‘மருந்தே நோய் முற்றிட காரணமானது’

ரிசர்வ் வங்கி பணப் புழக்கத்தைக் குறைத்து ஊக பேர வணிகத்தைக் கட்டுப்படுத்த முயன்றது. இதனால் வட்டி விகிதம் உயர்ந்தது. இது ஆரோக்கியமான தொழில் மற்றும் வர்த்தகத்தைப் பாதித்தது. அவர்களது வட்டிச் செலவினங்கள் அதிகரித்தன. இதனால் தொழில் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி 14.8.2013-இல் 2 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்திய கம்பெனிகள் தமது சொந்த மூலதனத்தைப் போல் 4 மடங்குவரை மூலதனத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்று முன்பு இருந்தது. இனி சொந்த மூலதனத்துக்குச் சமமான தொகையை மட்டுமே முதலீடு செய்யலாம் என அறிவித்தது.

இரண்டு, ஒரு குடிமகன் வெளிநாடுகளுக்கு ஒரு வருடத்தில் 2 லட்சம் டாலர் வரை அனுப்பலாம் என்று இருந்ததை, 75,000 டாலர் வரை மட்டுமே அனுப்பலாம் என மாற்றியது.

இவை, டாலர்கள் வெளிநாடுகளுக்குப் போவதைக் குறைக்கவும் ரூபாய் மதிப்பை உயர்த்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட முறையான முடிவுகளே. ஆனால், இந்த அறிவிப்பு வெளியானவுடன் ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்ததுதான் விநோதம். காரணம், அறிவிப்புகள் ஒரு தவறான சமிக்ஞையைக் கொடுத்தது. வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும் பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம்

இச்சட்டத்தை செயல்படுத்துவதற்குக் கூடுதலாக 25,000 கோடி ரூபாய் செலவாகும். இதனால் நடப்புக் கணக்கு இடைவெளி மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சத்தினால் ரூபாய் மதிப்பு மீண்டும் சரிந்தது. திட்டம் நல்ல திட்டம் என்றாலும் அதை அறிமுகம் செய்வதற்கு இது சரியான தருணம் அல்ல என்பதே வல்லுநர்களின் கருத்தாகும்.

சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல்

அண்மையில் புதிதாக ஒரு காரணமும் சேர்ந்து கொண்டது. சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் பற்றிய செய்தியும் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சமும் ரூபாய் மதிப்பு சரியக் காரணமாய் இருந்தது.

விளைவுகள் என்ன? யாருக்குப் பாதிப்பு?
  • பொதுவாக ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை; இறக்குமதியாளர்களுக்கு இழப்பு எற்படும். பணவீக்கமும் விலைவாசியும் உயரும்
  • இந்தியாவின் கச்சா எண்ணெ இறக்குமதிச் செலவு 2 லட்சம் கோடி ரூபாய் அளவு அதிகரிக்கும்.
  • வெளிநாடு சென்று உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம். உதாரணமாக, அமெரிக்காவில் 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு 45,000 டாலர் செலவு என்று வைத்துக் கொள்வோம். மார்ச் மாதத்துக்கு முந்திய நிலவரப்படி அவருக்கு செலவு 25 லட்சம் ரூபாய் ஆகும். வங்கிக் கடன் இதனை அனுமதிக்கிறது. தற்போதைய நிலவரப்படி 31 லட்சம் ரூபாய் செலவாகும். இதனால் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
  • வியாபார நிமித்தம் வெளிநாடுகள் செல்லும் பயணிகளுக்கும் அதே போல் செலவு அதிகமாகும்.
  • பணப் புழக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளின் விளைவாக கடனுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. சிறு வணிகர்கள், சிறு தொழில் முனைவோர் மற்றும் வீட்டுக் கடன்,  வாகனக் கடன், தனி நபர் கடன் ஆகியவற்றிற்கு வட்டி உயரும்.
  • இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரானிக்  சாதனங்களின் விலை உயரும்.
யாருக்கு நன்மை?
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வசிக்கும்  தங்களது குடும்பத்தினருக்கு அனுப்பும் டாலருக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வீடு கட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பினால், குறைந்த டாலருக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும்.
  • இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு லாபம்.
தீர்வு என்ன?

அந்நியச் செலாவணி கையிருப்பு இப்போது 277 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) டாலராக உள்ளது. இதை தக்கவைத்துக் கொள்வது அவசியம்தான். எனினும் அவசியம் ஏற்படும்போது, பணச் சந்தையில் தேவையான டாலர்களைப் பாய்ச்சி டாலர் மதிப்பைக் குறைத்து, ரூபாயின் மதிப்பைத் தாங்கிப்பிடிக்க வேண்டும்.

அந்நிய நேரடி முதலீடு

அந்நிய நேரடி முதலீடுகள் வரும்போது டாலர்கள் வரத்து அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு உயரும். அண்மையில் நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு  பல துறைகளில் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான பலன் நம்மை வந்து அடைய கால அவகாசம் தேவை. எனவே, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களை விரைந்து பரிசீலித்து, அரசின் முடிவுகளை வெளியிடவேண்டும். இது தொடர்பான அரசின் நடைமுறைகள் வெளிப்படையானவையாக இருத்தல் வேண்டும். இதுதொடர்பான விதிமுறைகளை அரசு முன்தேதியிட்டு மாற்றம் செய்யாது என்கிற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

ஏற்றுமதிக்குத் தேவை கூடுதல் சலுகைகள்

2009-இல் செய்ததுபோல், ஏற்றுமதியைப் பெருக்குவதற்கு சிறப்பு ஊக்குவிப்புகளை அறிவிக்க வேண்டும். ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள சிறு தொழில்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கிடவேண்டும். மொத்த ஏற்றுமதியில் 40 சதவிகிதம் சிறுதொழில்களின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதிக்கு அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளை மட்டும் நம்பி இராமல், லத்தீன் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் கஜகஸ்தான் போன்ற புதிய வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கும் ஏற்றுமதியை விரிவுபடுத்த வேண்டும்.

ஈரான் எண்ணெயை ரூபாய் கொடுத்து வாங்கலாம்

டாலர் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஓரளவு குறைத்திட ஈரானிடமிருந்து ரூபாய் கொடுத்து எண்ணெய் வாங்கலாம்.

பிரிக் நாடுகளுடன் ரூபாய் வர்த்தகம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் வர்த்தகத்தை அந்தந்த நாட்டு நாணயத்தில் மேற்கொள்வது என்று  கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ள விஷயத்தை நடைமுறைக்கு கொண்டுவர முனைப்பு காட்டவேண்டும்.

சாவரின் பாண்டுகள்

கடந்த காலத்தில் செய்ததுபோல், வெளிநாடுவாழ் இந்தியர்களின் சேமிப்பையும் முதலீடுகளையும் டாலரில் திரட்டுவதற்கு ஏதுவாக  சாவரின் பாண்டுகளை வெளியிட வேண்டும். இதனால் தேச பக்தி நிறைந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் பெற முடியும்.

நாம் எப்படி உதவ முடியும்?

இறக்குமதியைக் குறைப்பதற்கு நாம் உதவ முடியும். உதாரணமாக, மக்கள் வாரத்தில் ஒருநாள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருக்கலாம். பல அலுவலகங்களில் வீட்டிலிருந்து கணினி மூலம் வேலை செய்வதை அனுமதிக்கிறார்கள். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முடிந்தவரை பொதுப் போக்குவரத்து, சைக்கிள் ஆகியவற்றின் மூலம் பெட்ரோல் பயன்பாட்டை, அதன் இறக்குமதியைக் குறைக்க உதவலாம்.

1. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள், ஓ.எம்.ஆர். போன்ற ஒரே பகுதியில் வசிக்கக் கூடும். அவர்கள் 4 பேர் இணைந்து ஒரே காரைப் பயன்படுத்தலாம். தலா ஒரு நாள் வாகனத்தை எடுப்பதன் மூலம்  பெட்ரோல் மட்டும் அல்லாமல் போக்குவரத்துச் செலவையும் மிச்சப்படுத்தலாம். போக்குவரத்து நெருக்கடியையும் இதனால் குறைக்க முடியும். சுற்றுச் சூழலுக்கும் நல்லது.

2. தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது.  இப்போது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறி இறங்குகிறது. முதலீடு நோக்கில் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் விலை  ஸ்திரம் அடையும் வரை சில மாதங்களுக்காவது தள்ளிப் போடலாம். சமீபத்தில் தங்கம் விலை 1,000 ரூபாய் குறைந்தபோது, அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு, நகைக் கடைக்கு வந்ததாக ஒரு பெண், தொலைக்காட்சியில் சொன்னதைக் கேட்டிருப்பீர்கள்.

3. அயல்நாட்டில் இருக்கும் உறவினர்களை இந்தியாவில்  முதலீடு செய்யச்  சொல்லலாம். பல நாடுகளில் கிடைப்பதைவிட இந்தியாவில் கூடுதல் வட்டி கிடைக்கிறது என்பதை எடுத்துச் சொல்லலாம்.

இப்படியாக அவரவர் சக்திக்கு ஏற்ப உதவலாம். நாம் ஏதேனும் செய்யவேண்டும் என்கிற உந்துதலே முக்கியம்!

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

வீட்டிலிருந்தே மின்கட்டணம் செலுத்தலாம்!

வீட்டிலிருந்தே மின்கட்டணம் செலுத்தலாம்!


மின்கட்டணம் செலுத்துவதற்கோ, மின்சார வாரியத்திடம் புகார் தெரிவிப்பதற்கோ இனி நாம் மின்சார அலுவலகத்திற்கு ஓடவேண்டியதில்லை. வீட்டிலிருந்தபடியே அத்தனையும் செய்யும்படியான கருவி ஒன்றை மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

வ்வொரு வீட்டிலும் நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ப இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்காளர் வீட்டிற்கு வருவார். மீட்டர் எவ்வளவு ஓடியிருக்கிறது என்பதை பார்த்து விட்டு, எவ்வளவு தொகை என்பதைக் குறித்துவிட்டு  செல்வார். அதைப் பார்த்துவிட்டு, மின்சார அலுவலகத்திற்குச்  சென்றால் அங்கே தெரு  நீளத்திற்கு வரிசை நிற்கும். அப்படி நின்று மின் கட்டணத்தைக் கட்ட வேண்டும். வீட்டில் வரும் மின் இணைப்பில் குறைந்த மின்னழுத்தம் இருக்கும். திடீர் என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும். இதனை புகாராக பதிவு செய்ய வேண்டுமென்றாலும் மின்சார அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள புகார் நோட்டில் எழுதி வைக்க வேண்டும். அதை அவர்கள் பார்த்துவிட்டு எப்போது சரி செய்வார்கள் என்று நாள் கணக்கில் காத்திருக்கவேண்டும். இனி அப்படி மின்சார அலுவலகம் தேடி ஓடவும் வேண்டாம். இனி காத்திருக்கவும்  வேண்டாம். அதற்கென ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கின் மூலம் புதுவழி ஒன்றை, மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் துறை மாணவிகளான கீதா, ரேவதி, யுவஸ்ரீ, வெண்ணிலா ஆகியோரடங்கிய குழு கண்டுபிடித்திருக்கிறது. இக்கருவிக்கு ‘ஜி.எஸ்.எம். நெட்வொர்க் இ.பி. பில்லிங் சிஸ்டம்’ என பெயரிட்டிருக்கிறார்கள்.

மக்களுக்குப் பயன்படும் ஜி.எஸ்.எம். நெட்வொர்க் இ.பி. பில்லிங் திட்டம் - இவர்களது பி.இ. இறுதியாண்டு புராஜக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் கருவியில் ஒரு ஜி.எஸ்.எம்.சிம், மைக்ரோ கண்ட்ரோலர் சிப், எல்.சி.டி. டிஸ்ப்ளே மானிட்டர், ரிலே ஸ்விட்ச், பஸ்ஸர் அலாரம், மினி பேட்டரி போன்றவற்றைக் கொண்டு வடிவமைத்திருக்கிறோம். இக்கருவியை ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மீட்டர் பெட்டியுடன் இணைத்திட வேண்டும். இதில் உள்ள ஜி.எஸ்.எம். சிம் நெட்வொர்க்கை இணைக்கும் விதமான சர்வர் ஒன்று, இ.பி. ஆபீஸில் நிறுவப்பட்டிருக்கும். இந்த இரண்டும்தான் இரண்டு இடங்களில் இருந்து, தகவல்களை பரிமாறிக் கொள்ளும் சாதனங்களாக வடிவமைத்திருக்கிறோம்.

இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின்சார அளவீடு செய்யும் நேரம் வந்ததும், தானியங்கி முறையில் அலுவலகத்தில் இருக்கும் சர்வர், வீட்டில் இருக்கும் ஜி.எஸ்.எம். சிம்மிற்கு மெஸேஜ் ஒன்றை அனுப்பி, கணக்கீடு எடுக்க கட்டளை அனுப்பும். இதனைப் பெற்றுக் கொண்ட அந்த சிம்,  மீட்டரில் எவ்வளவு யூனிட் ஓடியிருக்கிறது என்பதை துல்லியமாக கணக்கீடு செய்து அனுப்பும். அக்கணக்கீடைப் பெற்றுக் கொண்ட சர்வர், எத்தனை யூனிட் ஓடியிருக்கிறதோ, அதற்கான தொகையை கணக்கிட்டு, இவ்வளவு தொகையை, இந்த தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று எழுத்து வடிவிலான தகவலை அக்கருவிக்கு அனுப்பி விடும். அத்தகவலை பெற்றுக் கொண்ட மறுவினாடியே, அக்கருவியில் உள்ள பஸ்ஸர் அலாரம் வீட்டில் இருப்பவர்களை அலர்ட் செய்யும். அந்த தகவல் அக்கருவியில் இணைக்கப்பட்டிருக்கும் எல்.சி.டி. திரையில் தெரியும். எவ்வளவு யூனிட் செலவாகி இருக்கிறது? எவ்வளவு தொகை கட்டவேண்டும்? என்ன தேதிக்குள் கட்ட வேண்டும் உள்ளிட்ட அனைத்துத் தகவலும் இதில் தெரியும்.  இது மட்டுமின்றி, வீட்டின் உரிமையாளருடைய மொபைலுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் இந்த தகவல் அனுப்பப்பட்டுவிடும்.

கிராமத்தில் உள்ளவர்களுக்கும், வயதானவர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும் பயன்படும் விதமாக வாய்ஸ் காலும் அனுப்பப்பட்டு  விடும். உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்டை இந்த சர்வரில் இணைத்துவிட்டால் போதும். கட்டணத்தை அதிலிருந்து செலுத்தி விடலாம். வங்கிக் கணக்கு இல்லாதோர், இக்கருவியில் இருக்கும் ஜி.எஸ்.எம். சிம்மினை ப்ரீபெய்டு முறையில், ஒரு குறிப்பிட்ட தொகையினை ரீசார்ஜ் செய்துவிட்டால் போதும். அதிலிருந்து இ.பி. பில் தானியங்கி முறையில் செலுத்தப்பட்டுவிடும். இக்கருவியின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் எஸ்.எம்.எஸ் மற்றும் வாய்ஸ் கால் மூலம் பயனாளருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு விடும்” என்கிறார் கீதா.

“வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ, மின்சார இணைப்பில் பிரச்சினை இருந்தாலோ, பியூஸ் போனாலோ, குறைந்த மின்னழுத்தம் எனப்படும்  லோ வோல்டேஜ் இருந்தாலோ இந்தக் கருவியில் இருந்தே உங்களது புகாரைப் பதிவு செய்து விடலாம். இதற்கென தனித்தனியே நான்கு பட்டன்களை வடிவமைத்திருக்கிறோம். மின்சாரம் இல்லாதபோதும் புகாரை சர்வருக்கு அனுப்ப மினி பேட்டரியை இக்கருவியில் பொருத்தி இருக்கிறோம்.   பயனாளி ஒருவர் கடைசி தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், தானியங்கி முறையில் மின்சாரத்தை இக்கருவி நிறுத்திவிடும். பயனாளர் எப்போது பணம் கட்டுகிறாரோ, கட்டிய மறுவினாடியே தானியங்கி முறையில் மின்இணைப்பு கொடுக்கப்பட்டு விடும். நம் மீட்டர் பெட்டியிலிருந்து நமக்குத் தெரியாமல் யாரேனும் திருட்டுத்தனமாக கரண்ட் கனெக்ஷன் எடுக்க முடியாது. அப்படி யாரேனும் திருட்டுத்தனம் செய்ய முயன்றால், அதையும் இக்கருவி கண்டுபிடித்து, சர்வருக்கும், பயனாளரின் மொபைலுக்கும் உடனே தகவல் அனுப்பிவிடும். இதற்கான தயாரிப்புச் செலவு 2,500 ஆகும். அதிக அளவில் இக்கருவியை தயாரித்தால் செலவு 1,500 ஆக குறைத்து விடலாம்” என்கிறார் ரேவதி.

“இந்த வடிவமைப்பிற்கு எங்களது ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் ராஜபார்த்தீபன் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்தக் கண்டுபிடிப்பிற்கான பேடண்ட் உரிமையை விரைவில் வாங்க இருக்கிறோம்.  நவம்பர் மாதம் பெங்களூருவில் ஆசிய அளவில் நடைபெற இருக்கும் ‘இன்னோவேட்டிவ் ஸ்மார்ட் கிரிட் டெக்னாலஜி ஆசியா கான்பரன்ஸ்’-ல் பங்கேற்கப் போகிறோம். அது எங்களது கண்டுபிடிப்புக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என நம்புகிறோம்” என்று மேலும் உற்சாகத்துடன் கூறி முடித்தார் ரேவதி.

பாண்டிச்சேரி பவர் கிரிட் அரசு நிறுவனத்தில் அடிஷனல் மேனேஜர் ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, “அருமையான கண்டுபிடிப்பு இது. இன்னும் சிற்சில மாற்றங்களைச் செய்தால் போதும். நிச்சயம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துவிடலாம்” என்றார். “இந்தக் கண்டுபிடிப்பிற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்துவிட்டால் போதும், நிச்சயம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும்” என்றார் இம்மாணவிகளின் ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் ராஜபார்த்தீபன்.

நிரந்தரத் தீர்வு.

னது நாட்டில் மகிழ்ச்சியான மனிதன் யார் எனக் கண்டறிய உத்தரவிட்டான் அரசன். படை வீரர்களும் அதிகாரிகளும் பலரையும் சந்தித்து விசாரிக்க ஆரம்பித்தனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு மனக்குறை இருந்தது. வருமானம் போதவில்லை. குடும்பச் சச்சரவுகளைத் தீர்க்க அரசு உதவவில்லை. சொத்துப் பிரிவினையில் நியாயம் கிடைக்கவில்லை. தங்கள் பகுதியில் வாழ்க்கைத் தரம் உயர உரிய நடவடிக்கைகள் இல்லை. எவருமே நாட்டில் மகிழ்ச்சியாக இல்லையா என அரசன் அயற்சி அடைந்த நேரத்தில் புல்வெளியொன்றில் மாடுகளை மேய விட்டுக்கொண்டு, ஆற்றுநீரில் காலை நனைத்துக்கொண்டு அரச மரத்து இலையைக் குழலாகச் சுருட்டி  பீப்பி ஊதிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டான். பார்வைக்கு அவன் சந்தோஷமாக இருப்பதைப் போலத்தான் பட்டது. ‘ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய் போலிருக்கிறது?’ என்றான் அரசன். ‘ஆமாம். எனக்கென்ன குறை’ என்றான் சிறுவன். ‘நிறைய பணம் வைத்திருக்கிறாய் போல் இருக்கு? ‘சந்தோஷமாக இருக்கப் பணம் எதற்கு?’ ‘பணம் இல்லாமல் சாப்பாட்டிற்கு என்ன செய்வாய்?’  ‘எனக்கு வேண்டும் உணவை இந்தப் பசுக்கள் கொடுக்கும். இந்த மரத்துக் கனிகள் கொடுக்கும். இந்தப் பசுங்கீரைகள் கொடுக்கும். நிலத்தில் புதைந்திருக்கும் கிழங்குகள் கொடுக்கும். ஆற்றில் நீந்தும் மீன்கள் கொடுக்கும். அதுவும் இல்லாமல் போனால் நதியில் ஓடும் நீரில் இரு கை அள்ளிக் குடித்தால் பசி அடங்கும். இயற்கை கொடுக்காத உணவையா உங்கள் பணம் கொடுத்துவிடும்?’ என்றான் சிறுவன்.

இயற்கை ஏராளமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் எல்லோருக்குமாக அது  கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சார்ந்து வாழ்பவர்களை அது கைவிட்டதில்லை. அரசைச் சார்ந்து வாழ்பவர்கள் எல்லோரும் ஆனந்தமாக இருப்பதாகச் சொல்வதற்கில்லை.

தமிழக மீனவர்கள் ஓர் வாழும் உதாரணம். எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ் மீனவர்கள் பலர் இலங்கைச் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை இதோ இதோ என அருகில் வந்து, வழக்கில் வாங்கப்படும் வாய்தாக்களால் தள்ளிப் போகிறது. தண்ணீரில் வாழ்ந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் இன்று கண்ணீரில் ஆழ்ந்திருக்கின்றன.

இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். மத்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டிருக்கிறது. ஆனால் தீர்வு ஏதும் கிடைப்பதில்லை.

இதற்கு முக்கிய காரணம், இலங்கை அரசு இறுகிப் போன ஓர் நிலையை மேற்கொண்டிருப்பதுதான். அண்மைக்காலமாக அதன் அமைச்சர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் இதை அப்பட்டமாக உணர்த்துகின்றன. ‘இந்திய மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி வருவதாகவும் தங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துச் செல்வதாகவும், அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல, அந்தக் கொள்ளையைத் தடுக்கவே சிறைவாசம்’ என ஓர் இலங்கை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ‘சர்வதேசக் கடல் எல்லைக்கோடு கருத்துருவை, அனைத்து நாடுகளும் ஏற்று  அதற்கான ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளன. எனவே, தமிழக அரசோ அல்லது அம்மாநில மீனவர்களோ சர்வதேசக் கடல் எல்லையை மீற முடியாது’ என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே கடந்த வாரம் கூறியிருக்கிறார்.

ஆனால் இரு நாட்டு மீனவர்களும் இயற்கையின் கொடை இருவருக்குமானது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இந்திய, இலங்கை கடற்பகுதியை, பரஸ்பரம் இருநாட்டு மீனவர்களும் 70 நாள்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான செயல் திட்டம் ஒன்றை மீனவர் அமைப்புகள் உருவாக்கியுள்ளனர்.

ஆனால் அதை ஏற்க முடியாது என இலங்கை அமைச்சர் தெரிவிக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணத்தைக் கேட்டால் அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. ‘மீனவர் சங்கங்களின் செயல் திட்டம் ஏற்கப்பட்டால், இலங்கையின் வடக்குப்பகுதி மீனவர்களுக்கு அநீதி இழைத்ததாகி விடும். சிங்கள மீன்வளத் துறை அமைச்சர், இலங்கைத் தமிழ் மீனவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு என் மீது வரும்’ என்கிறார் அந்த அமைச்சர்.

ஏதோ இத்தனை நாள் இலங்கை அரசு வடபகுதித் தமிழர்களிடம் நியாயமாக நடந்துகொண்டதைப் போலவும் இப்போது கெட்ட பெயருக்கு அஞ்சுவதைப் போலவும் ஒலிக்கும் அவர் பேச்சு, ஆடு நனைகிறதே என அழுத ஓநாயை நினைவூட்டுகிறது.

மீனவர்களின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இது மீனவர் துயரத்திற்கு ஓர் உடனடித் தீர்வு. கச்சத்தீவை திரும்பப் பெறுவதும், தமிழக மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்பை மேற்கொள்ள ஊக்குவிப்பதும் அதற்கான உதவிகளை அளிப்பதும்தான் நிரந்தரத் தீர்வு.