Powered By Blogger

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

மகிழ்ச்சியில் மறந்துவிட வேண்டாம்

மகிழ்ச்சியில் மறந்துவிட வேண்டாம்

மாரிக்காலம் இன்னும் முழுமையாகக் கடந்துவிடவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே இந்தியா, குறிப்பாகத் தென்மாநிலங்கள், நல்ல மழையைச் சந்தித்திருக்கின்றன. கர்நாடகத்தில் அபரிமிதமாகப் பெய்த மழை காரணமாகப் பல ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் நிறைந்து, காவிரியும் கொள்ளிடமும் வெள்ளப் பெருக்கைக் கண்டிருக்கின்றன.

வேளாண் பெருமக்கள், மிகுந்த நம்பிக்கையோடும் ஆவலோடும் கழனியில் சம்பா பயிரிட இறங்கி இருக்கிறார்கள். இந்தாண்டு பொங்கல் தமிழர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன.

நீர் வரத்து கணிசமாக இருந்ததால் நீர் மின் உற்பத்தி அதிகரித்து மின்வெட்டு நீங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வறண்டு கிடந்த வீராணம் ஏரி நிரம்பத் துவங்குவதால் சென்னையின் குடிநீர்ப் பிரச்சினை மட்டுப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கேரளத்திலும் நல்ல மழை பெய்ததன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையும் நிரம்பத் துவங்கியுள்ளது. அணை பலவீனமாக உள்ளது. அதனால் 134 அடிக்கு மேல் நிரப்ப முடியாது என விதாண்டாவாதம் புரிந்து கொண்டிருந்த கேரள அரசு அதைத் தற்காலிகமாக மறந்து நீர் நிரம்பட்டும், இடுக்கி அணையை இப்போது திறக்க வேண்டியதில்லை எனச் சொல்கிறது.

மனிதர்களின் அவநம்பிக்கை, மனச் சோர்வு, ஆணவம், சுயநலம் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு, இதழ்க் கடையில் புன்னகையை ஒளித்துக் கொண்டு தன் இயல்புப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது இயற்கை.

என்றாலும் கடந்த காலம் நமக்களித்துச் சென்றுள்ள பாடங்களை நாம் மறந்துவிடலாகாது. கடந்த காலம் என்றால் ஏதோ நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை அல்ல. சென்ற வருடத்தை மனதில் ஒரு சில கணங்கள் உருட்டிப் பாருங்கள்.

சென்னையைத் தவிர எல்லா மாவட்டங்களும் வறட்சிப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. எல்லா நகரங்களிலும் குடிநீர்ப் பிரச்சினை. சிற்றூர்கள் கூட அதற்குத் தப்பவில்லை. 10 மணி நேரம், 12 மணி நேரம் என மின்வெட்டு வேறு கடுமையாகத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. வேளாண்மை, சிறு தொழில்கள், சிறு வணிகம் என வாழ்வாதாரங்கள் தத்தளித்து தவிப்பிற்குள்ளாயிற்று. விவசாயிகள் தற்கொலை குறித்த செய்திகள் வந்து நெஞ்சில் நெருப்பை வாரி இறைத்தன. இந்த நெருக்கடியான நேரத்தில்  தமிழ் மக்களோடு உணர்வு ரீதியாக ஒன்றி நின்ற ‘புதிய தலைமுறை’ வார இதழ், பொங்கலுக்கெனெ சிறப்பிதழ் வெளியிடும் வழக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது.

நிகழ்ந்தவை அனைத்தும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இனி அது போன்ற நிலை ஒருபோதும் வர வேண்டாம் என பிரார்த்தித்துக் கொள்கிறோம். ஆனால் வெறும் பிரார்த்தனை  மட்டும் போதாது. மனித முயற்சிகளும் தேவை. நியாயமான மனித முயற்சிகளை தெய்வம் எப்போதும் வாழ்த்தும்.

தனிநபர்களாகிய நமக்கு முதலில் வேண்டியது விழிப்புணர்வு. நீரின் அருமை நமக்குப் புரிய வேண்டும். அதைச் சிக்கனமாகவும் பயனுள்ள வகையிலும் செலவிடுவது என்பதை அறிவுப்பூர்வமாக மட்டுமின்றி, உணர்வு நிலையிலும் நாம் உணர வேண்டும்.

சமூகம் நீர்நிலைகளைப் பேணவும் காக்கவும் கற்க வேண்டும். நீர் மேலாண்மை என்பதை அறிவியல் இத்தனை வளர்ச்சி கண்டிராத காலங்களிலேயே மிகச் சீர்மையோடும் திறமையோடும் செய்து காட்டியிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். தொண்டைமண்டலத்தில் உள்ள ஏரிகளை அவர்கள் பராமரித்த விதமும்,  ஊருக்கு ஓர் ஏரி என்ற கொள்கையை அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டியதும் கண்ணெதிரே உள்ள சான்றுகள். நாம் குறைந்தபட்சம் நம்மூரில் உள்ள ஏரிகளைப் பராமரிக்கவும், பராமரிப்பதைக் கண்காணிக்கவும் முன்வர வேண்டும். அதற்காக உள்ளூர் அளவில் சிறு சிறு தன்னார்வ இயக்கங்கள் உருவாக வேண்டும்.

குறைந்தபட்சம் நம் வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவிப் பராமரிக்க முன்வர வேண்டும். மாரிக்காலத்திற்குப் பின் அதுதான் நமக்குப் பயனளிக்கும் என்ற யதார்த்தத்தை நாம் மழை கண்ட மகிழ்ச்சியில் மறந்துவிடலாகாது.

மேட்டூர் அணை நிரம்பி, கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 10  டிஎம்சி அளவு  நீர் வீணாகக் கடலில் சென்று கலந்தது என்று தகவல்கள் சொல்கின்றன. இதைத் தவிர்த்திருக்க இயலுமா எனத் தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற உபரி நீரைக் கொண்டு நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்க வழிகள் உண்டா என்பதை அரசு ஆராய வேண்டும். மழை நீர் சேகரிப்பு, வீடு தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்து கட்டாயப்படுத்த வேண்டும்.

நீர் இன்றி அமையாது உலகு என்றும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்றும் வள்ளுவன் எழுதி வைத்துவிட்டுப் போன வரிகள் வெற்று வார்த்தைகள் அல்ல.  அவை வாழ்வியலுக்கான மந்திரம்.

அரிசிக்கு ஆபத்து!

அரிசிக்கு ஆபத்து!

இந்திய மக்களுக்கு  உணவுப் பாதுகாப்பை  சட்டப்பூர்வ உரிமையாக்க வேண்டும் என்ற  நீண்டகால விருப்பம்  நிறைவேறுவதற்கான காலம் கனிந்திருக்கிறது. உணவுப் பாதுகாப்பு மசோதா  நாடாளுமன்ற மக்களவையில் தாக்கலாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் ஆதாயங்களை எதிர்பார்த்து அவசர அவசரமாக இம்மசோதா  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்  சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக  விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  என்றுமில்லாத  அதிசயமாய் ஜெயலலிதாவின் ஆட்சேபங்கள் நியாயமானவை என்று கருணாநிதியும் ஆமோதித்துள்ளார். ஏன் இந்த எதிர்ப்பு?

இச்சட்டத்தால் கிடைக்கவிருக்கும் நன்மைகளைக் காட்டிலும் பாதிப்புகள் அதிகம் என்ற விமர்சனங்கள் சரிதானா?

இந்த மசோதா இப்போதுள்ள நிலையில் நிறைவேறினால்  தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசிக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும்.

இந்தியாவிலேயே பொதுவிநியோகத் திட்டம் தனிச் சிறப்புடன் செயல்படுத்தப்படும் மாநிலம் தமிழ்நாடு. 20 கிலோ விலையில்லா அரிசி, குறைந்த விலையில் பாமாயில், சர்க்கரை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு எனப் பல்வேறு உணவுப் பொருட்கள் பொது விநியோக முறையில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுவது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான்.

இது கணிசமான பலன்களைக் கொடுத்திருக்கிறது.  நம் நாட்டில் உள்ள 15 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்களில்  35 சதவிகிதப் பெண்கள்  உடலில் சக்தியின்றி பலவீனமாக இருக்கிறார்கள். 5 வயதிற்குட்பட்ட  குழந்தைகளில் 43 சதவிகிதம் பேர், அவர்கள்  வயதுக்குரிய  உடல் எடையைவிடக் குறைவாக இருக்கிறார்கள். ஆனால் தமிழகப் பெண்களும் குழந்தைகளும் இந்த நிலையில் இல்லை.

வடஇந்திய மாநிலங்களைவிட தமிழகத்தில் உள்ள பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியமாகவே உள்ளனர். தமிழகத்துடன் ஒப்பிடும்போது உடல் வலு குன்றிய பெண்கள் பீகாரில்  45 சதவிகிதம்,  சத்தீஸ்கரில்  44 சதவிகிதம், ஜார்க்கண்ட்டில் 43 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 42 சதவிகிதம். மற்ற மாநிலங்களில்  உள்ள பெண்களில்  ஏறக்குறைய  பாதிப் பேர் உடல் வலு குறைந்து இருக்கும்போது, தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை கால்வாசிக்கும் சற்றே அதிகமாக 28 சதவிகிதமாக  இருக்கிறது.  அதேபோன்று வயதுக்கேற்ப உடல் எடை கொண்டிராத குறைந்த குழந்தைகள்  பீகாரில்  55 சதவிகிதம்,  சத்தீஸ்கரில்  47 சதவிகிதம், மேகாலயாவில்  48 சதவிகிதம், மத்தியப்பிரதேசத்தில்  60 சதவிகிதம் என்றிருக்கையில்   தமிழ்நாட்டில் இது  30 சதவிகிதம்தான்  (இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வுத் துறையின் மத்திய அமைச்சர் கிருஷ்ண தீர்த் நாடாளுமன்றத்தில் தெரிவித்தவை). தமிழ்நாட்டின் இந்த மேம்பட்ட நிலைக்கு தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்  அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச அரிசித் திட்டம் போன்றவற்றின் பங்கு கணிசமானது.  

ஆகவேதான், தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு மத்திய அரசு உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டமோ இதற்கு நேர்மாறாக, ஏற்கெனவே தமிழகத்தில் நல்ல முறையில் நடந்துகொண்டிருக்கும்  பொது விநியோகத் திட்டத்தைப் பலவீனப்படுத்துவதாக இருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 2 ஆட்சி துவங்கி 100 நாட்களுக்குள் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், பல 100 நாட்கள் கடந்த பிறகும் அச்சட்டம் கொண்டுவரப்படவில்லை. இப்போது அதன் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அவசரம் காட்டப்படுகிறது. மக்களின் உணவுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்ற முக்கியத்துவத்தின் அடிப்படையில், அந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, சட்டமாக்கப்பட வேண்டும். ஆனால், மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவற்கு மூன்று வார காலத்திற்கு முன்பாக, அதை அவசரச் சட்டமாகக் கொண்டு வந்தது மத்திய அரசு. தற்போது அதை சட்டமாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இப்படி அவசர கதியில் கொண்டுவரப்படும் சட்டத்தால்  தமிழகத்திற்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் சில :

தமிழகத்திற்கு மாதம் ஒன்றுக்கு 2.96 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியில், இச்சட்டத்தால் சுமார் ஒரு லட்சம் டன் குறைக்கப்பட்டு விடும். இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும். வறட்சிக் காலங்களில் வெளிச்சந்தையில் அரிசி கிடைக்காத சூழ்நிலை வரும்போது பொதுவிநியோகத் திட்டத்திற்கே பெரும் நெருக்கடி ஏற்படும்.

தமிழகத்தில் அனைத்துக் குடும்பங்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசின் சட்டம் முன்னுரிமைக் குடும்பங்கள் என்று வரையறை செய்து, அவர்களுக்கு மட்டும் உணவு தானியத்தை மானிய விலையில் வழங்குவது என்பது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுவிநியோகத் திட்டத்தையே சீரழிக்கும்.

தமிழகத்தில் 49 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வரும் நிலையில், 37.79 சதவிகித  மக்கள் மட்டுமே உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு கூறுவது நியாயமற்ற செயல்.

இந்தக் குற்றச்சாட்டுகள் சரியானவையா?

தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை இணைச் செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தைப் பொருத்தளவில் கிராமப்புற மக்களில் 62.55 சதவிகிதத்தினரும் நகர்ப்புற மக்களில் 37.79 சதவிகிதத்தினரும் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் எனக் கூறியுள்ளார். அப்படியென்றால், பொதுவிநியோகத் திட்டத்தில் தற்போது பயன்பெறுபவர்களில் கணிசமானோர் வெளியேற்றப்படுவார்கள். தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தை மத்திய அவசரச் சட்டம் சீரழித்துவிடும் ஆபத்து உள்ளது" என்கிறார், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.

மேலும், இந்தியாவிலேயே நகர்மயமாக்கல் அதிகமாக நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு. விவசாயம் நசிவடைவதாலும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்ததாலும் ஏராளமான மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுகின்றனர். அதனால் நகர்ப்புறங்களில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக நகர்ப்புற மக்களில் 37 சதவிகிதம் பேர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

நகர்ப்புறங்களில் உணவு தானிய உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என்பதன் அடிப்படையில், நகர்ப்புற மக்கள் குறைந்த விலையில் உணவுப்பொருட்களைப் பெறுவதற்காகத்தான் பொதுவிநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நகர்மயமாதல் அதிகமாக நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு. இங்கு 49 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அவர்களில், 37.79 சதவிகிதம் பேர் மட்டுமே உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் நியாயமற்ற செயல்" என்று முதல்வர் கூறியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் பயனாளிகள் குறித்த வரையறையை மத்திய அரசு தன்னிச்சையாக வெளியிட்டுள்ளது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது, கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

கூட்டாட்சி முறையில், மக்கள் நலத்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தும் அதிகாரத்தை மாநிலங்களிடம் விட்டுவிடுவதுதான் சிறந்தது. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பொதுவிநியோகத் திட்டத்தைக் கணக்கில் கொள்ளாமல், தவறான வறுமைக்கோட்டு அளவுகோலை அடிப்படையாக வைத்து, பயனாளிகள் யார் என்பதை மத்திய அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இது, கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகும்" என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது. அந்தந்த மாநிலங்களின் நிலைமைகளுக்கேற்ற செயலாக்கத்துக்கான விருப்புரிமையை மாநில அரசுகளுக்கு வழங்கிட மத்திய அரசு முன் வரவேண்டும்" எனக் கருணாநிதி கூறுகிறார்.

தமிழக அரசு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், மத்திய உணவுப் பாதுகாப்பு அவசரச்  சட்டம் இலக்கு பொது விநியோகத் திட்டத்தை (Targeted Public Distribution System) முன்வைக்கிறது. இது தமிழகத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் மாநில அரசுகள் உடனடியாக செய்ய வேண்டியது, குடும்பத்திற்கு 35 கிலோ உணவு தானியம் என்பதை நீக்கிவிட்டு, நபர் ஒருவருக்கு 5 கிலோ என்று மாற்ற வேண்டும். இதன்படி 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு 25 கிலோ மட்டுமே உணவு தானியம் கிடைக்கும். 10 கிலோ உணவு தானியத்தை இழக்க வேண்டியிருக்கும். நகர்மயமாக்கல் உட்பட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கூட்டுக்குடும்பங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. தனிக்குடித்தனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இச்சூழலில், ஒரு நபருக்கு 5 கிலோ என்று வரையறுத்திருப்பது மக்கள் மீதான நேரடித் தாக்குதல். இது, தமிழகத்திற்கான அரிசி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது, மத்திய தொகுப்பில் இருந்து மாதம் ஒன்றுக்கு 2.96 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் ஒரு லட்சம் டன் அரிசி குறைக்கப்பட்டு விடும்" என்பது தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு. ஒரு லட்சம் டன் என்பது மிகப்பெரிய அளவு. அந்த இழப்பை ஈடு செய்வதற்கு கூடுதல் அரிசியை வெளிச்சந்தையில் இருந்து தமிழக அரசு வாங்க வேண்டியிருக்கும். அதனால் ஆண்டுக்கு 3,000 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும்" என்கிறார் தமிழக முதல்வர்.

தற்போது மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்படாது" என்று மத்திய உணவு அமைச்சர் தாமஸ் கூறியிருக்கிறார். ஆனால், அது நடக்காது. அப்படி நடந்தாலும் அது தற்காலிகமானதாக இருக்கும். அவசரச்சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மாநில அரசுகளை சமாதானப்படுத்த அவ்வாறு அமைச்சர் கூறியிருக்கலாம். ஆனால், சட்டத்தில் தெளிவாக இதுபற்றி அறிவிக்காதவரை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்குத்தான் அரிசி வழங்கப்படும் என்பதுதான் உண்மை. ஆகையால், முதல்வர் கூறுவதுபோல ஒரு லட்சம் டன் அரிசி பற்றாக்குறை ஏற்படுமானால் அதை ஈடுசெய்ய முடியுமா? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

ஒரு லட்சம் டன் அரிசி பற்றாக்குறையை ஈடுகட்ட மாநில அரசு பல வகைகளில் முயற்சி செய்யும். வெளிச்சந்தையில் வாங்கலாம். மத்திய தொகுப்பில் இருந்தும் வாங்கலாம். வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்யலாம். எப்படியிருந்தாலும் தமிழக அரசிற்குப் பெரும் நிதிச்சுமை ஏற்படும். இன்னொருபுறம்   கள்ளச்சந்தை அதிகரிக்கும்.  ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று முதலமைச்சர் கூறுகிறார். அப்படியென்றால், வேறு நலத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை  இதற்குத் திருப்பிவிட வேண்டியிருக்கும். அதனால் மற்ற நலத் திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகும். மேலும், முதல்வர் கூறியுள்ளதைப்போல், வறட்சிக் காலங்களில் வெளிச்சந்தையில் அரிசி கிடைக்காத சூழ்நிலை வந்தால் பொதுவிநியோகத் திட்டம் பெரும் கேள்விக்குறியாகும்" என்கிறார், உணவுப் பாதுகாப்பு உரிமைக்கான பிரச்சாரத்தைச் சேர்ந்த சு.கண்ணையன்.

மேலும், உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தை 90 சதவிகிதம் பேர் பயன்படுத்துகின்றனர். 82  சதவிகிதம் பேர் அரிசி வாங்குகின்றனர்.  தமிழக அரசு தன்னுடைய நிதியையும் மத்திய அரசிடமிருந்து வரும் நிதியையும் சேர்த்து இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்துவிட்டால், அரிசி 3 ரூபாய்க்கும், கோதுமை 2 ரூபாய்க்கும், சிறு தானியங்கள் 1 ரூபாய்க்கும்  வழங்க வேண்டியிருக்கும். அதை மீறி இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசு விரும்பினால், அதற்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டியிருக்கும். தமிழகத்திற்கான மத்திய  அரசின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழும். இதனால், தமிழக அரசின் தனித்துவமான உணவுப் பாதுகாப்புத் திட்டம் பாதிக்கப்படும். அந்த வகையில் இச்சட்டத்தை ஏற்க முடியாது" என்கிறார், வழக்கறிஞர் வி.சுரேஷ். இவர் தமிழக அரசுக்கான உணவு ஆலோசகராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்.

ஆனால், உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்துக்கு எதிரான விமர்சனங்களை முற்றிலும் மறுக்கிறார், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி.

இது, உலகமே கண்டிராத மிகப்பெரிய நலத்திட்டம். இதன் மூலமாக, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கப்படவிருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக அத்திட்டத்தை சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். அத்திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கூறியுள்ள குற்றச் சாட்டுகள் அனைத்தும் நியாயமற்றவை. இந்தியாவிலேயே  மத்திய தொகுப்பிலிருந்து அதிகளவில் அரிசியை வாங்குவது தமிழகம்தான். தமிழகத்தில் மாநில ஆளுநர் தொடங்கி, யார் வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் என்ன நடக்கிறது? நடுத்தர மக்களும், உயர் நடுத்தர மக்களும் தங்களுக்கு உரிய அரிசியை ரேஷன் கடைகளில் வாங்குவதில்லை. அந்த அரிசி  சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. எனவே, தேவையற்றவர்களுக்கு அரிசியை ரத்து செய்ய வேண்டும். உண்மையில் யாருக்குத் தேவையோ அவர்களுக்கு மட்டும் அரிசி வழங்கப்பட வேண்டும்" என்கிறார் கே.எஸ்.அழகிரி.

இந்த வாதத்தில் நியாயம் இல்லை. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை நடுத்தர வர்க்க மக்கள் வாங்கிக் கொள்வது என்பது அவர்களுக்கு உள்ள உரிமை. அதைப் பயன்படுத்துவது என்பது அவர்களது விருப்பம்  சார்ந்தது. அதைப் பயன்படுத்தவில்லை என்று சொல்லி அந்த உரிமையைப் பறித்துக் கொள்ளலாமா? வாக்களிப்பது குடிமகனின் உரிமை. தேர்தல்களில் 40 சதவிகிதம் பேர் வாக்களிப்பதில்லை என்கிற காரணத்தைச் சொல்லி நாளை அந்த உரிமையைப் பறித்துக் கொள்வார்களா?

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதை முதல்வரோ, மற்ற கட்சியினரோ எதிர்க்கவில்லை. இந்தச் சட்டத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. திருத்தங்கள்தான் கோருகிறார்கள். முதல்வர் 5 திருத்தங்களை முன் வைக்கிறார். மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது, எந்தெந்தப் பிரிவுகளில் திருத்தம் வேண்டும் எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். கருணாநிதி இதை இன்னும் தெளிவாக விளக்குகிறார். இந்த மசோதாவால் தமிழகத்திற்குப் பாதகம்தான். சாதகம் இல்லை என்று ஜெயலலிதா உறுதியாக இருந்தால், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தமிழகம் ஏற்காது என்று அறிவித்ததைப்போல், இதையும் ஏற்காது என்று அறிவித்து விடலாம். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதாவும் மசோதாவில் திருத்தங்கள் தேவை என்றே கூறியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் திருத்தங்களையே கோருகின்றன. சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று யாரும் குரல் எழுப்பவில்லை" என்கிறார் கருணாநிதி.  

அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் என்பதை உறுதி செய்யும் வகையில்  இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், மத்திய அரசுக்கு அதில் உடன்பாடு இல்லை" என்கிறார் அழகிரி.

வறுமைக்கோட்டுக்கு மேல், வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்று பிரித்துத்தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்று கொண்டு வரும் அளவுக்கு நாம் இன்னும் வளரவில்லை. எல்லோரும் சமச்சீராக வளரும்போதுதான் அதைச் செய்ய முடியும். தற்போதைய சூழலில், அப்படிச் செய்ய முடியாது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு கண்டிப்பாக அரிசி தேவை. எனவே, அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் தோல்வியடைந்து விட்டது. எனவே, அதை உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது" என்கிறார் அழகிரி.

அப்படியென்றால், முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதைப் போல தமிழகத்தில் பெரிய அளவில் அரிசிப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. என்னதான் வெளிச்சந்தையில் வாங்கி, பற்றாக்குறையைச் சமாளிக்க முயற்சித்தாலும் வறட்சி போன்ற சூழலில்  அரிசித் தட்டுப்பாடு ஏற்படலாம். எதிர்காலத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, உணவு தானியங்களின் விலை அதிகரித்து, அதனால் ஏற்படும் கூடுதல் நிதிச்சுமையை தாங்க முடியாமல் பொதுவிநியோகத் திட்டத்தை வெட்டிச்சுருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம். அது தமிழகத்தில் பெரிய அளவுக்கு கொந்தளிப்பை உருவாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.


தேவைப்படும் திருத்தங்கள்

உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டிய முக்கியத் திருத்தங்கள் என உணவு உரிமைக்கான பிரச்சார இயக்கம் முன்வைத்துள்ள சில கோரிக்கைகள்:

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொதுவிநியோகத் திட்டத்தில் 33 சதவிகித மக்கள் உணவு பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுகிறார்கள். இதனால் நாட்டில் ஏராளமான ஏழை மக்கள் விடுபட்டுப் போகிறார்கள். எனவே, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ மட்டும் உணவுப்பொருள் வழங்கப்படும் என்றால், நாளொன்றுக்கு 166 கிராம் கிடைக்கும். அது போதாது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 7 கிலோவும் பெரியவர்கள் 14 கிலோவும் உணவு உட்கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. எனவே, நபர் ஒருவருக்கு 10 கிலோ உணவுப்பொருள் வழங்க வேண்டும்.

அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை மட்டுமே வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற ஊட்டச்சத்துகளை வழங்கும் உணவுப்பொருட்களையும் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 2.5 கிலோ பருப்பு, 900 கிராம் சமையல் எண்ணெய் வழங்கப்பட வேண்டும்.

தகுதியுள்ள குடும்பத்தினருக்கு அரிசி 3 ரூபாயிலும், கோதுமை 2 ரூபாயிலும் சிறுதானியங்கள் 1 ரூபாயிலும் என மூன்று ஆண்டுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. ஆனால், இந்த விலைகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்காவது உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உணவுக் கையிருப்பு இல்லாதபோது, உணவு தானியங்களுக்குப் பதிலாக பயனாளிகளுக்கு நேரடியாகப் பணத்தைக் கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.  இச்சட்டத்தின் மூலமாக, பொதுவிநியோகத் திட்டத்தின் ஒரு பகுதியாக,  ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற நிலை கொண்டுவரப்படுகிறது. அது கூடாது. பணத்தை நேரடியாகக் கொடுப்பது, ஆதார் அட்டையுடன் இணைப்பது என்கிற அம்சங்கள் அவசரச் சட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.



ஜெயலலிதாவை ஆதரிக்கும் கருணாநிதி

முதல்வரின் கோரிக்கைகள் நியாயமானவை: எந்த மாநிலத்திலும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உணவுப் பொருள் வழங்கு முறையினைச் சீர்குலைப்பதாக உணவு மசோதா இருக்கக் கூடாது. மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

இந்திய மக்கள் தொகையில் 67.5 சதவிகித மக்கள் மட்டும் பயன்படும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 90 சதவிகித மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா தெரிவித்துள்ள குறைபாடுகளும் கோரிக்கைகளும் அலட்சியப்படுத்தக் கூடியவை இல்லை. உணவு மசோதாவினால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஒட்டுமொத்தமாக தமிழக அரசுதான் சீர்தூக்கிப் பார்த்து கருத்துகளைத் தெரிவிக்க முடியும்".

- கருணாநிதி தனது அறிக்கையில் - தினமணி  10 ஆகஸ்ட் 2013

 

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தமிழகத்தில் ஜாதிய, மதவாத அரசியல் தலைதூக்குகிறதா?


தமிழகம் முழுக்க உள்ளூர ஒரு படபடப்பு ஊடுருவியிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நீறுபூத்த நெருப்பாக இருக்கிற ஜாதி, மத அரசியலை ஊதிப் பெருநெருப்பாக்கி, நாட்டின் ஒட்டுமொத்த அமைதியை கூறுபோட்டு விடுவார்களோ என மக்களின் மனசு மௌனமாகப் பதறிக் கொண்டிருக்கிறது.

தர்மபுரியில் இளவரசன்- திவ்யா காதல் திருமணத்தையொட்டி மூர்க்கமாக மூண்ட ஜாதிய வன்முறை சற்று தணிந்தது போலத் தோன்றும் சூழலில், பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதன் விளைவு... மத ரீதியான பதற்றம் தமிழகத்தைப் பற்றியுள்ளது. ஜாதியமும் மதவாதமும் தமிழக அரசியல் களத்திற்குள் ஊடுருகிறதோ என்று அச்சப்படும் அளவுக்கு அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன.  

சென்ற ஜூலை 1--ஆம் தேதி இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் கொலை செய்யப்பட்டார். அவரது ரத்தம் உலர்வதற்குள்ளாகவே, ஜூலை 19-ஆம் தேதி  பாஜக மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர சம்பவங்களைக் கண்டித்து பாஜக சார்பில் ஜூலை 22-ஆம் தேதி மாநில அளவிலான பந்த் நடைபெற்றது. அன்றைய தினம் ராமநாதபுரத்திலும் கோவையிலும் இரண்டு மசூதிகள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றன.  இப்படி இந்தக் கொலைச் சம்பவங்கள் அரசியலாக்கப்பட்டதன் காரணமாக பரபரப்பு அதிகரித்துள்ளது.

கொலையானவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு கொதித்துப் போயிருக்கின்றன பாஜக மற்றும் இந்து அமைப்புகள். 1980-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழகத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் 130-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்’ என்றும், தீவிரவாத அமைப்புகளுக்கு அதில் தொடர்பு இருக்கலாம்’ என்றும் பாஜக குற்றம் சாட்டியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக, பாஜகவின் குற்றச்சாட்டுக்கு இஸ்லாமிய அமைப்புகள் மறுப்பு தெரிவித்தன. ஒரு கொலை நடந்தால் முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு காவல்துறையுடையது. ஆனால், கொலை நடந்தவுடனே அதற்கு மத ரீதியாக உள்நோக்கம் கற்பிப்பதை ஏற்க முடியாது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அக்கொலைகளுக்கு பாஜக மதச்சாயம் பூசுகிறது" என்று தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு விமர்சித்தது.

ஆனாலும்,இந்தக் கொலைகளுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளே காரணம் என்ற தங்களின் நிலைப்பாட்டில் இந்து அமைப்புகள் உறுதியாக உள்ளன.

காரணம், அந்தப் பட்டியலில் உள்ள அனைவரும் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி ஆகிய அமைப்புகளைச் சார்ந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வந்தவர்கள். அதனால் பாஜகவும் இந்து அமைப்புகளும் பலம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்"  என்கிறார், பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன்.

இதே குற்றச்சாட்டை தீவிரமாக முன்வைக்கிறார், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்.

தேசவிரோதிகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிரானவர்கள் என்பதாலேயே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அமைப்புகளே அதற்குக் காரணம். ஒரு காலத்தில் ஃபாத்வா அறிவித்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். தற்போது குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர். தமிழ்நாட்டில் ஜிகாத் செயல்பாடுகள்  அதிகரித்துவிட்டன. அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று கொந்தளிக்கிறார் அர்ஜுன் சம்பத்.

ஆனால் இங்கு ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். அண்மைக் காலத்தில் ஆளும் அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மாணவரணி செயலாளர் கதிரேசன், கீழ்வேளூர் ஒன்றிய மாணவரணி நிர்வாகி சரவணக்குமார், கூடலூர் ஒன்றிய கவுன்சிலர் தங்கவேல், மேட்டூர் முன்னாள் நகரச்செயலாளர் பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் பலர் கொலை செய்யப்பட்டனர். திமுகவின் பொட்டு சுரேஷ், ராமஜெயம், மார்க்சிஸ்ட் கட்சியின் நாவலன், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டுள்ளது நாடறிந்த உண்மை. ஆனால், சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கொலைகளுக்கு மட்டும் ஒரே ஒரு காரணம் கற்பிக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு. இந்து அமைப்பினரின் கொலைகளுக்கு ரியல் எஸ்டேட், கந்துவட்டி, பெண் சமாச்சாரம் போன்றவையே காரணங்களென செய்திகள் வெளியாகியுள்ளன" என்று அடித்துச்  சொல்கிறார், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா.

இந்தப் படுகொலைகள் குறித்து அரசும் முனைப்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, வெள்ளையப்பன் மற்றும் ஆடிட்டர் ரமேஷ் கொலைகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து துப்புக்கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

தங்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள் என்றும், இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டிவந்த நிலையில், தமிழகக் காவல்துறை தலைவர் ராமானுஜம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் நிலத்தகராறு காரணமாக நாகப்பட்டினத்தில் பாஜக பொதுச்செயலாளர் புகழேந்தியும், பணப்பிரச்சினை காரணமாக வேலூரில் பாஜக மாநில மருத்துவரணி செயலாளர் அரவிந்த் ரெட்டியும், நிலத்தகராறு காரணமாக பாஜகவின் பரமக்குடி நகரச் செயலாளர் தேங்காய்க் கடை முருகனும் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலைகள் குறித்து சிறப்பு புலானய்வுக்குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இக்கொலைகளில் சில தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தவை. சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவே ஏராளமானோரை குறிவைத்துத் தாக்குவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுவது தவறானது, உண்மைக்கு புறம்பானது" என்றும் கூறியுள்ளார் டிஜிபி.

ஆனால், காவல்துறையின் அறிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்று பாஜகவின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் இப்பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, தேசிய அளவிலான  பிரச்சினையாக மாற்றுவதற்கு பாஜக தயாராகி வருகிறது.

ஆனால் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனின் கருத்தையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களின் கொலைகள் மிகவும் கவலைதரக் கூடியவை. அதேசமயத்தில், புலன் விசாரணை இப்போதுதான் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. காவல்துறை இன்னும் ஒரு தெளிந்த முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், அதை இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதைப் போன்ற சித்திரத்தைத் தீட்டுவதின் மூலமாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதலைத் திருப்புவது எந்த வகையிலும் சமூக நல்லிணக்கத்திற்கு சரியான சூழலை உருவாக்காது. பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும், சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களும் எல்லா மதங்களிலும், எல்லா ஜாதிகளிலும் உள்ளனர். எனவே ஒரு குறிப்பிட்ட மதத்தையோ குறிப்பிட்ட ஜாதியையோ குற்றம் சாட்டுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை ஒரு நாளும் கொண்டு வந்து சேர்க்க முடியாது. இதை பொறுப்புமிக்க அரசியல் கட்சித் தலைவர்களும் சமயத் தலைவர்களும் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்கிறார் தமிழருவி மணியன்.

இதற்கேற்ப, இவ்விவகாரத்தில் காவல்துறையின் சில நடவடிக்கை மற்றும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிடும் விதம் குறித்து இஸ்லாமிய அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

2011-ஆம் ஆண்டு அத்வானி வருகையின்போது திருமங்கலம் அருகே குண்டுவைக்கப்பட்ட வழக்கில் தேடப்படும் நபர்களின் புகைப்படங்களை காவல்துறை தற்போது திடீரென வெளியிட்டுள்ளது. ஆடிட்டர் ரமேஷ் கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், அவர்களின் புகைப்படங்களை இப்போது ஏன் வெளியிட வேண்டும்? இது தேவையற்ற சந்தேகங்களை எழுப்புகிறது. இதை வைத்து சில ஊடகங்கள் செய்திகளை, ‘சென்சேஷனலைஸ்’ செய்கின்றன. இவர்கள்தான் ஆடிட்டர் ரமேஷை கொலை செய்தனர்’ என்கிற ரீதியில் சில ஊடகங்கள் செய்திகளைத் திரித்து வெளியிடுகின்றன. முஸ்லிம் தீவிரவாதிகள் காரணம் என்று சில வாரப் பத்திரிகைகள் கட்டுக்கதைகளை எழுதுகின்றன. இது மிகவும் கவலைக்குரியது" என்கிறார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில்.

எரிகிற நெருப்பை அணைப்பதற்குப் பதிலாக, எண்ணெய் வார்க்கிற முயற்சிகளும் நடப்பதாக அச்சம் தெரிவிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களின் கொலைகள் கவலைக்குரியவை, கண்டனத்துக்குரியவை. அதேநேரத்தில், இந்து அமைப்பு தலைவர்களின் கொலைகளை மட்டும் தனியாகப் பிரித்து, அதற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று சொல்வதன் மூலமாக, சமூகத்தைப் பிளவுபடுத்தி மத ரீதியான பதற்ற அரசியலை உருவாக்குவது நல்லதல்ல. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள ஜாதிய சக்திகள் முனைகின்றன. அத்தகைய போக்கை அனுமதித்தால் அது தமிழக அரசியலை இன்னொரு ஆபத்தான பரிணாமத்திற்குக் கொண்டு சென்றுவிடும். அதற்கு பாஜக இடமளிக்கக்கூடாது" என்கிறார் ரவிக்குமார்.

தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரம், திவ்யா - இளவரசன் காதல் விவகாரம், இளவரசனின் துயர மரணம் என எந்தச் சம்பவமாக இருந்தாலும், தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் இடையிலான சில தவறான கற்பிதங்களே அனைத்திற்கும் காரணம். தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் இரண்டு சமூகங்களும் இணக்கமாக இருந்தால்தான், அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்கள் கெடாமல் வளமான பாதையை நோக்கி அவர்கள் நடைபோட முடியும். எனவே, இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிறார்போல், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நிலையோடு, ஒருவருக்கு ஒருவர் உயர்வு, தாழ்வு என்ற தவறான பள்ளத்தில் விழுந்துவிடாமல் இணக்கமாக தோளோடு தோள் உரச நடக்க வேண்டும்" என்கிறார் தமிழருவி மணியன்.

ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அரசியலாக்கி அதன் மூலம் குளிர் காய்வதற்கு முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். ஜாதிய அரசியலும் மதவாத அரசியலும் தலையெடுப்பது அமைதிப்பூங்காவான தமிழகத்திற்கு நல்லதல்ல.


அதிகரிக்கும் கொலைகள்

தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசிய குற்றப்புலனாய்வு ஆவண மைய அறிக்கையின்படி 2011-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2012-ஆம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 3.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் 2.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகத்தைக் காட்டிலும் காவல் துறையினர்-பொதுமக்கள் விகிதாச்சாரம் தமிழ்நாட்டில் அதிகம். எனவே, இதற்கான காரணங்களை ஆய்வு செய்து கொலைச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.