Powered By Blogger

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

வரலாற்றின் குரல்

ஒடுக்கப்பட்டவர்களிடம் பேரெழுச்சியை ஏற்படுத்திய மார்ட்டின் லூதர் கிங்கின் உரை நிகழ்த்தப்பட்ட பொன்விழாவைக் கடந்த  வாரம் அமெரிக்கா கொண்டாடியது.

பல படிகளைத் தாண்டித்தான் அந்த உயரத்தை அடைய முடியும். பயணம் சற்று நீண்டதுதான். என்றாலும் முடிவு இனிமையானது.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள லிங்கன் நினைவகத்தின் படிகள் பலவற்றைக் கடந்து  மேலே போய்த் திரும்பிப்  பார்த்தால் தெரியும், சீவி வைத்த பிரம்மாண்டப் பென்சிலை போன்ற ஜார்ஜ் வாஷிங்டனுக்கான நினைவுத் தூணும் பொடாமாக் நதியில் அமைந்துள்ள நீரூற்றும் வசீகரமானவை. ஆனால்  அந்தப் படிகள் கண்ட வரலாறு துயரமும் எழுச்சியும் நிறைந்தவை.

50 ஆண்டுகளுக்கு முன் 28 ஆகஸ்ட் 1963-இல் இந்தப் படிகளில் நின்றுதான் மார்ட்டின் லூதர் கிங் அந்த எழுச்சிமிக்க  உரையை நிகழ்த்தினார். அந்த உரையைக் கேட்க நாடு முழுவதிலிருந்தும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் திரண்டனர்.

யார் அவர்கள்?

கறுப்பர்களுக்கென்று தனியே பிரித்து ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் படித்தவர்கள். உணவு விடுதிகளில் கறுப்பர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட மூலைகளில் அமர்ந்து உண்டவர்கள். தங்கள் ஊர்  நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள்.காதலித்த பெண்ணை/ஆணை மணந்துகொள்ள முடியாதவர்கள். தங்கள் கண்ணெதிரே தங்கள் அருமைக் குழந்தைகள்  அடித்துத் துன்புறுத்தப்படுவதைக் காண நேர்ந்த துர்பாக்கியவான்கள். தங்களுக்கு உரிமையும் கௌரவமும் மறுக்கப்பட்ட  நிலையிலும் அமெரிக்காவின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் காப்பதற்காகப் போர் புரிந்த படை வீரர்கள்.

ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள்,  ஆசிரியர்கள், சுமை  தூக்கும் தொழிலாளிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், உருக்காலைத் தொழிலாளிகள் போன்ற வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறாத சாதாரணர்கள், டி.வி. நிகழ்ச்சிகளில் தலை காட்டாதவர்கள்,  ஒடுக்கப்பட்டவர்களும் சுதந்திர தாகம் கொண்டவர்களுமாக 2,50,000 பேர் தலைநகரத்தை நோக்கி பேரணியாகத் திரண்டார்கள். தங்கள் சொற்பக் கூலியில் மிச்சம் பிடித்த அல்லது பீராய்ந்த பணத்தைக் கொண்டு பஸ் ஏறி வந்தவர்கள், ஆங்காங்கு வாகனங்களில் ஓசி லிப்ட் கேட்டு வந்தவர்கள், ஏன் நடந்தே வந்தவர்கள் கூட உண்டு. பல கிராமங்களில் மொத்தக் கிராமமே திரண்டு வந்து உணவும் தண்ணீரும் கொடுத்து வழி அனுப்பி வைத்தது என ஒபாமா தனது உரையில் நினைவு கூர்ந்தார்.

அவ்வளவு பெரிய மக்கள் சக்தியைக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். இனக் கலவரத்தை உண்டாக்கியிருக்க முடியும். உள்நாட்டுப் போரை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் பிரார்த்தனை செய்தார் மார்ட்டின் லூதர் கிங். வன்முறை தவிர்த்த அறவழியில் போராட முடிவு செய்தார். அதற்கான நம்பிக்கையையும் மன உறுதியையும் ஆன்ம பலத்தையும் தந்தவர் ஓர் இந்திய ‘அரை நிர்வாணப் பக்கிரி’. அவர் பெயர் மகாத்மா காந்தி.  

மார்ட்டின் லூதர் கிங்கின் உரை ஓர் இயக்கத்தைத் துவக்கியது. அந்த இயக்கத்தின் அறப்போராட்டம் மாற்றங்களைக் கொண்டுவந்தது. இன ஒதுக்கல் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டது. வாக்குரிமை அளிக்கப்பட்டது. கல்வியிலும் வேலையிலும் சம வாய்ப்பளிக்கப்பட்டது.  ‘ஊராட்சிகள் மாறின. மாநிலச்  சட்டமன்றங்கள் மாறின. நாடாளுமன்றங்கள் மாறின.ஏன் வெள்ளை மாளிகையும் மாறியது’ என ஒபாமா இதழ்க் கடையில் ஒரு புன்னகையை ஒளித்துக்கொண்டு சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்துக் கூச்சலிட்டது.

குற்றாலச் சாரல் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூறல் விழத் தொடங்கிய நிமிடத்தில் உரையாற்ற வந்தார் ஒபாமா. அவருக்குமுன் மார்ட்டின் லூதர் கிங்கின் மகள் உணர்ச்சி பொங்க உரையாற்றி முடித்திருந்தார். கிங்கின் போராட்டத்தின்போது, உரிமை மணி ஊரங்கும் ஒலிக்கட்டும் எனச் சொல்லி மாதா கோயில் மணியை அடிப்பார்கள். அதை நினைவுகூரும் விதத்தில், அவர் ஒலித்த மணியைக் கொண்டு வந்திருந்தார்கள். அலபமாவில் ஒரு மாதா கோயிலில் இருந்த மணி அது. அந்த மாதா கோயில், வாஷிங்டனில் கிங் வரலாற்றுச் சிறப்பு உரை ஆற்றிய 15-ஆம் நாள், குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. ஆனால் மணியைக் காப்பாற்றிப் பத்திரப்படுத்தி விட்டார்கள். கிங்கின் மகள் உரையாற்றிய பின் அந்த மணியை ஒரு சிறுமி ஒலித்தார்.

எனக்கு ஒரு கனவு இருக்கிறது என்கிற மார்டின் லூதர் கிங்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்தப்பட்ட 50-ஆம் ஆண்டு விழாவிற்கும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். அவர்களைப் போல பசியோடும் தாகத்தோடும் நெடுந்தூரம் நடந்துவந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அல்ல இவர்கள். ஒபாமாவின் உரையை ஐபேட் மூலம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்.

கிங்கின் அறப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களுக்கு இல்லை என்றாலும்  தங்கள் குழந்தைகளுக்கு  உரிமை கிடைக்கும் என்கிற  நம்பிக்கையில் சிறைக்குப் போனார்கள். அவர்கள் அனுபவித்திராத உரிமைகளும் வாய்ப்புகளும் அவர்களது குழந்தைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவர்களுக்கு அவர்கள் அனுபவித்த துன்பங்கள் தெரியாது என அவர் சொன்னபோது இந்தியாவில் இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்காகத் தங்கள் உயிரையே அளித்த அந்த முகம் தெரியாத மூதாதையர்களை நினைத்து என் கண்கள் கசிந்தன. அந்த இருண்ட நாள்களில் இருந்த அந்த நம்பிக்கை, இந்தியாவே இன்று உனக்கு இருக்கிறதா?

கிங்கின் அறப்போராட்டம் மாற்றங்களைக் கொண்டு வந்தது என்பது உண்மை. ஆனால் எல்லா அடித்தள மக்களின் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடவில்லை. ‘வேலை இல்லாதவர்களுக்குக் கனவுகள் இல்லை’ என்று ஒரு பதாகையைக் கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

‘உணவு வாங்க சக்தி இல்லாதபோது ஒன்றாக உட்கார்ந்து உண்ணக் கிடைத்திருக்கும் உரிமையால் என்ன பயன்?’ என்று கேள்வி எழுப்பிய ஒபாமா, கிங்கின் கனவு திசை திருப்பப் பட்டுவிட்டது எனக் குறைபட்டுக் கொண்டார்.

‘உலகளவிலான போட்டியும் தொழில்நுட்பங்களும் நம் வேலைகளைக் கவர்ந்து சென்றுவிட்டன. நம் தொழிலாளர்கள் (தங்கள் உரிமைகளுக்காகப்) பேரம் பேசும் வலிமையை இழந்து விட்டார்கள்’ என்றார் ஒபாமா. இது இந்தியாவிற்கும் கச்சிதமாகப் பொருந்தும் உண்மை என்பதை ஸ்ரீபெரும்புதூரிலோ, சிறுசேரியிலோ போய் விசாரித்தால் புரிந்துகொள்ளலாம். பணத்தாசை நல்லது, பரிதாபப்படுவதால் பிரயோஜனமில்லை  எனச் சொல்லி சில சக்திகள் அடித்தள மக்களுக்கு அரசு நன்மைகள் செய்ய முற்படும்போது முட்டுக்கட்டைகள் போடுவதாக ஒபாமா குறைபட்டுக் கொண்டபோது ஆடம் ஸ்மித்தைப் பார்த்துக் கண்ணடித்துக் கேலிச் சிரிப்பொன்றை உதிர்த்திருப்பார் கார்ல் மார்க்ஸ்.

இன்று இந்தியாவிற்குத் தேவை, அமெரிக்காவை பொருளாதாரத்திலிருந்து மீட்ட பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் என்று  நரேந்திர மோடியைக் குறிப்பிட்டு சில நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். எனக்கென்னவோ இந்தியாவின் இன்றைய தேவை அதன்  மன உறுதியைத் தட்டியெழுப்பக் கூடிய ஒரு மார்ட்டின் லூதர் கிங் எனத் தோன்றுகிறது.

காணாமல் போன கச்சத்தீவு



பேரதிர்ச்சி.

இந்த ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்து கிடக்கிறது தமிழ் மக்களது உணர்வுகள். அண்மைக்காலமாகத் தமிழக மீனவர்கள் அன்றாடம் சந்தித்து வரும் தொல்லைகளுக்கு ஒரு தீர்வாக அவர்கள் நம்பியிருப்பது  கச்சத்தீவைத் திரும்பப் பெறுவது. ஆனால் கச்சத்தீவு இந்தியாவிற்கு உரிமையானதே அல்ல என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது மத்திய அரசு. நமக்கு உரிமையானது அல்ல என்று மட்டும் சொல்லவில்லை, அது இலங்கைக்கு உரிமையானது என்றும் சொல்லி விட்டது.

இதை ஏதோ ஒரு கடை அல்லது இடை நிலை அதிகாரி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போக வில்லை. உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பிரமாணப் பத்திரத்தில் அது தெரிவித்திருக்கிறது.  கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்கிற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது; அதைத்தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக்கோட்டை நிர்ணயித்தபோது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது என்று அது அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறது.

இந்தக் கருத்தை அது தெரிவித்துள்ள நேரமும் சூழலும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி, இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368-ஆவது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து, ஒப்புதல் பெற்று அதற்கான  சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத்தீவு விஷயத்தில்  அப்படி ஏதும் செய்யப்படவில்லை.  1974-ஆம் ஆண்டு இந்திய அரசு வெறுமனே ஓர்  ஒப்பந்தத்தின் வாயிலாக இலங்கைக்குத்  தாரை வார்த்து விட்டது என்றும், அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது என்றும் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த வழக்கில் பதில் சொல்லும் விதமாக மத்திய  அரசு இப்படி ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றதாகவோ, அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டதாகவோ மத்திய அரசால் எந்த ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாது. ஏனெனில் அப்படி ஓர் ஆவணமே இல்லை. ஒப்புதல் பெற்றிருந்தால்தானே  ஆவணம் இருக்கும். ஒப்புதலே பெறவில்லையே. எனவே வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, கச்சத்தீவு இந்தியப் பகுதிக்குள்ளேயே  இல்லை என்று. சொல்லிவிட்டால் வழக்கே இல்லாமல் போய்விடுமே என்பதற்காக மத்திய அரசு இப்படி ஓர் நிலை எடுத்திருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

1974-ஆம் ஆண்டு  இலங்கை அரசோடு இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, 23-7-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை அப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது இராமநாதபுரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த  பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த  மூக்கையா தேவர், ‘எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது’ என்று  ஆட்சேபம் தெரிவித்தார். கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதில் ரகசியப் பேரம் நடந்துள்ளது என்று அப்போது எதிர்க்கட்சியில் இருந்த வாஜ்பாய் குற்றம் சாட்டினார். மக்களவையில் இரா. செழியனும், மாநிலங்கள் அவையில் ராஜ்நாராயணன், எஸ்.எஸ்.மாரிசாமி, அப்துல் சமது ஆகியோரும் ஒப்பந்தத்தை விமர்சித்தனர். ஆனால் அப்போதெல்லாம்  கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது அல்ல என்று மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

மத்திய அரசு கச்சத்தீவு இந்தியாவினுடையது அல்ல என்று சொன்னாலும் இலங்கையைச் சேர்ந்தவர்களே  கச்சத்தீவு இராமநாதபுரம் அரசருக்குச் சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு அதனைப் பயன்படுத்த அவரோடு ஒப்பந்தம் செய்துகொண்டதற்கான ஆவணங்கள் உண்டு. ஆங்கிலேயர் ஆண்டபோது அவர்கள் மேற்கொண்ட நில அளவையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சர்வே எண் 1250-ன் கீழ் அந்தத் தீவு வருவதாகக் குறித்து அதை கெஜட்டிலும் வெளியிட்டனர்.

உண்மை இப்படி இருக்க... கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தமானது மாயை என்கிறது இந்திய அரசு. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் இந்த முயற்சியில் பாதிக்கப்படப்போவது இந்திய மீனவர்கள்தாம். மக்களைக் காக்க வேண்டிய அரசு, கடந்தகாலத் தவறுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மக்களைக் கைவிடுவது என்கிற விசித்திரம் இந்தியாவில் மட்டுமே நடக்கும்.

நாடு சந்திக்கும் நெருக்கடி நாம் எப்படி உதவ முடியும்?


மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத சரிவு. ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிலவரப்படி  68.80 ரூபாயாக ஆக வீழ்ந்தது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பார்த்தால் சரிவு விகிதம் 21.12.

வரலாறு காணாத பொருளாதார  நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோருகின்றன. அதற்குப் பின் அரசியல் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் பதவி விலகுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து  விடாது.  இன்னும் சொல்லப் போனால் பிரச்சினை தீவிரமாகும். அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு நாடு நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த  நேரத்தில் அதிலிருந்து மீள நாம் என்ன செய்ய வேண்டும்  என்பதைப் பற்றி சிந்திக்கலாம்.

அதற்கு  முதலில் இந்த நெருக்கடிக்கான காரணங்கள் என்னவென்று தெரிய வேண்டும்.

அந்நிய முதலீடுகள் வெளியேறுகின்றன. டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு, ரயில் சரக்குக் கட்டணம் உயர்வு ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவாவதற்கான அறிகுறிகள். இவற்றுடன் 25,000 கோடி ரூபாய் அளவு அதிக செலவு பிடிக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.  

முக்கியமாக ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது.  உலக நாடுகளின் நாணயங்களின் மதிப்போடு ஒப்பீடு செய்துதான் இந்திய ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. எனினும் அமெரிக்க டாலரை சர்வதேச நாடுகள் பொது கரன்சியாக ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால்தான் அமெரிக்க டாலர் இந்த நாணய ஒப்பீடுகளில் முதலிடம் வகிக்கிறது.  இந்நிலையில் ஒரு டாலரை வாங்கவேண்டுமானால் எவ்வளவு ரூபாய் கொடுக்கவேண்டும் என்பதை வைத்து, ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. டாலரை வாங்குவதற்கு கூடுதல் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தால்,  ரூபாய் மதிப்பு குறைந்தது என்று சொல்கிறோம். குறைவான ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்க முடிந்தால், ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்கிறோம்.

2012 ஜனவரியில் 45 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை நாம் வாங்கினோம். 2013 ஏப்ரல் மாதம் 55 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்கினோம்.

நடப்புக் கணக்கில் பற்றாக்குறை அதிகரிப்பு

நாம் பிற நாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்து சம்பாதிக்கும் டாலர்களின் தொகை குறைவாகவும் இறக்குமதி செய்வதற்கு நாம் செலவிடும் டாலர்கள் அதிகமாகவும் இருக்கின்றன. அதாவது அந்நியச் செலாவணியில் வரவை விட செலவு அதிகமாக இருக்கிறது. இதனால் நடப்புக் கணக்கில் துண்டு விழுகிறது (Current Account Deficit). இது மேலும் மேலும் அதிகரித்தபடி உள்ளது.

நாம் அதிகபட்சமாக இறக்குமதி செய்வது கச்சா எண்ணெய். அதற்கு அடுத்தபடியாக தங்கத்தை இறக்குமதி செய்கிறோம். இந்த இறக்குமதிகளுக்கு டாலர்களை அதிக அளவில் செலவிடுகிறோம். நமது ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளாக குறைந்துள்ளது. சென்ற ஜூலை மாதம்தான் 11 சதவிகிதம் அதிகரித்தது. பொதுவாக சர்வதேச மந்தநிலையின் காரணமாக  நமது ஏற்றுமதி குறைந்து, அதனால் டாலர் வரத்து குறைந்துவிட்டது. டாலர் வரத்து குறைந்தது, ரூபாய் மதிப்பு சரிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம்.

ஃபெடரல்  ரிசர்வின் அறிவிப்பு

இரண்டாவதாக அமெரிக்க ரிசர்வ் வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அந்நாட்டுப் பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் முன்னதாக டாலரை அதிக அளவில் புழக்கத்தில் விட்டிருந்தது. அங்கு பொருளாதாரம் மீட்சி அடைந்துவிடும் நிலையில், புழக்கத்தில் விட்டிருந்த டாலரை படிப்படியாகக் குறைத்துக்கொள்ள உத்தேசித்திருப்பதாக (Quantitative Easing) அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. டாலர் புழக்கம் குறையுமானால், அதன் மதிப்பு சந்தையில் உயரும் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் உலகின் பல நாடுகளின் நாணயங்களின் மதிப்பு சரிந்தது. அவற்றில் இந்தியாவும் ஒன்று.

வெளியேறும் அந்நிய முதலீடுகள்

அமெரிக்கப் பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்லத் தொடங்கிவிட்டன. இந்தியாவுக்கு புதிய முதலீடுகளின் வரத்தும் குறைந்துவிட்டது.

ஊக பேர வணிகர்களின் கைவரிசை

மேற்கூறிய காரணங்கள் தவிர, ஊக பேர வணிகர்கள் அந்நியச் செலாவணியில் புகுந்து விளையாடியதும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கடந்த சில மாதங்களில் ரிசர்வ் வங்கி அவ்வப்போது பணச் சந்தையில் கணிசமான அளவு டாலர்களை பாய்ச்சிய பிறகும் நிலைமை சீரடையாமல் போனதற்கு ஊக பேர வணிகமும் ஒரு காரணம்.

‘மருந்தே நோய் முற்றிட காரணமானது’

ரிசர்வ் வங்கி பணப் புழக்கத்தைக் குறைத்து ஊக பேர வணிகத்தைக் கட்டுப்படுத்த முயன்றது. இதனால் வட்டி விகிதம் உயர்ந்தது. இது ஆரோக்கியமான தொழில் மற்றும் வர்த்தகத்தைப் பாதித்தது. அவர்களது வட்டிச் செலவினங்கள் அதிகரித்தன. இதனால் தொழில் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி 14.8.2013-இல் 2 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்திய கம்பெனிகள் தமது சொந்த மூலதனத்தைப் போல் 4 மடங்குவரை மூலதனத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்று முன்பு இருந்தது. இனி சொந்த மூலதனத்துக்குச் சமமான தொகையை மட்டுமே முதலீடு செய்யலாம் என அறிவித்தது.

இரண்டு, ஒரு குடிமகன் வெளிநாடுகளுக்கு ஒரு வருடத்தில் 2 லட்சம் டாலர் வரை அனுப்பலாம் என்று இருந்ததை, 75,000 டாலர் வரை மட்டுமே அனுப்பலாம் என மாற்றியது.

இவை, டாலர்கள் வெளிநாடுகளுக்குப் போவதைக் குறைக்கவும் ரூபாய் மதிப்பை உயர்த்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட முறையான முடிவுகளே. ஆனால், இந்த அறிவிப்பு வெளியானவுடன் ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்ததுதான் விநோதம். காரணம், அறிவிப்புகள் ஒரு தவறான சமிக்ஞையைக் கொடுத்தது. வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும் பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம்

இச்சட்டத்தை செயல்படுத்துவதற்குக் கூடுதலாக 25,000 கோடி ரூபாய் செலவாகும். இதனால் நடப்புக் கணக்கு இடைவெளி மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சத்தினால் ரூபாய் மதிப்பு மீண்டும் சரிந்தது. திட்டம் நல்ல திட்டம் என்றாலும் அதை அறிமுகம் செய்வதற்கு இது சரியான தருணம் அல்ல என்பதே வல்லுநர்களின் கருத்தாகும்.

சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல்

அண்மையில் புதிதாக ஒரு காரணமும் சேர்ந்து கொண்டது. சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் பற்றிய செய்தியும் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சமும் ரூபாய் மதிப்பு சரியக் காரணமாய் இருந்தது.

விளைவுகள் என்ன? யாருக்குப் பாதிப்பு?
  • பொதுவாக ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை; இறக்குமதியாளர்களுக்கு இழப்பு எற்படும். பணவீக்கமும் விலைவாசியும் உயரும்
  • இந்தியாவின் கச்சா எண்ணெ இறக்குமதிச் செலவு 2 லட்சம் கோடி ரூபாய் அளவு அதிகரிக்கும்.
  • வெளிநாடு சென்று உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம். உதாரணமாக, அமெரிக்காவில் 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு 45,000 டாலர் செலவு என்று வைத்துக் கொள்வோம். மார்ச் மாதத்துக்கு முந்திய நிலவரப்படி அவருக்கு செலவு 25 லட்சம் ரூபாய் ஆகும். வங்கிக் கடன் இதனை அனுமதிக்கிறது. தற்போதைய நிலவரப்படி 31 லட்சம் ரூபாய் செலவாகும். இதனால் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
  • வியாபார நிமித்தம் வெளிநாடுகள் செல்லும் பயணிகளுக்கும் அதே போல் செலவு அதிகமாகும்.
  • பணப் புழக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளின் விளைவாக கடனுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. சிறு வணிகர்கள், சிறு தொழில் முனைவோர் மற்றும் வீட்டுக் கடன்,  வாகனக் கடன், தனி நபர் கடன் ஆகியவற்றிற்கு வட்டி உயரும்.
  • இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரானிக்  சாதனங்களின் விலை உயரும்.
யாருக்கு நன்மை?
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வசிக்கும்  தங்களது குடும்பத்தினருக்கு அனுப்பும் டாலருக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வீடு கட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பினால், குறைந்த டாலருக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும்.
  • இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு லாபம்.
தீர்வு என்ன?

அந்நியச் செலாவணி கையிருப்பு இப்போது 277 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) டாலராக உள்ளது. இதை தக்கவைத்துக் கொள்வது அவசியம்தான். எனினும் அவசியம் ஏற்படும்போது, பணச் சந்தையில் தேவையான டாலர்களைப் பாய்ச்சி டாலர் மதிப்பைக் குறைத்து, ரூபாயின் மதிப்பைத் தாங்கிப்பிடிக்க வேண்டும்.

அந்நிய நேரடி முதலீடு

அந்நிய நேரடி முதலீடுகள் வரும்போது டாலர்கள் வரத்து அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு உயரும். அண்மையில் நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு  பல துறைகளில் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், அதற்கான பலன் நம்மை வந்து அடைய கால அவகாசம் தேவை. எனவே, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களை விரைந்து பரிசீலித்து, அரசின் முடிவுகளை வெளியிடவேண்டும். இது தொடர்பான அரசின் நடைமுறைகள் வெளிப்படையானவையாக இருத்தல் வேண்டும். இதுதொடர்பான விதிமுறைகளை அரசு முன்தேதியிட்டு மாற்றம் செய்யாது என்கிற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

ஏற்றுமதிக்குத் தேவை கூடுதல் சலுகைகள்

2009-இல் செய்ததுபோல், ஏற்றுமதியைப் பெருக்குவதற்கு சிறப்பு ஊக்குவிப்புகளை அறிவிக்க வேண்டும். ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள சிறு தொழில்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கிடவேண்டும். மொத்த ஏற்றுமதியில் 40 சதவிகிதம் சிறுதொழில்களின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதிக்கு அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளை மட்டும் நம்பி இராமல், லத்தீன் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் கஜகஸ்தான் போன்ற புதிய வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கும் ஏற்றுமதியை விரிவுபடுத்த வேண்டும்.

ஈரான் எண்ணெயை ரூபாய் கொடுத்து வாங்கலாம்

டாலர் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஓரளவு குறைத்திட ஈரானிடமிருந்து ரூபாய் கொடுத்து எண்ணெய் வாங்கலாம்.

பிரிக் நாடுகளுடன் ரூபாய் வர்த்தகம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் வர்த்தகத்தை அந்தந்த நாட்டு நாணயத்தில் மேற்கொள்வது என்று  கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ள விஷயத்தை நடைமுறைக்கு கொண்டுவர முனைப்பு காட்டவேண்டும்.

சாவரின் பாண்டுகள்

கடந்த காலத்தில் செய்ததுபோல், வெளிநாடுவாழ் இந்தியர்களின் சேமிப்பையும் முதலீடுகளையும் டாலரில் திரட்டுவதற்கு ஏதுவாக  சாவரின் பாண்டுகளை வெளியிட வேண்டும். இதனால் தேச பக்தி நிறைந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் பெற முடியும்.

நாம் எப்படி உதவ முடியும்?

இறக்குமதியைக் குறைப்பதற்கு நாம் உதவ முடியும். உதாரணமாக, மக்கள் வாரத்தில் ஒருநாள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருக்கலாம். பல அலுவலகங்களில் வீட்டிலிருந்து கணினி மூலம் வேலை செய்வதை அனுமதிக்கிறார்கள். அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முடிந்தவரை பொதுப் போக்குவரத்து, சைக்கிள் ஆகியவற்றின் மூலம் பெட்ரோல் பயன்பாட்டை, அதன் இறக்குமதியைக் குறைக்க உதவலாம்.

1. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள், ஓ.எம்.ஆர். போன்ற ஒரே பகுதியில் வசிக்கக் கூடும். அவர்கள் 4 பேர் இணைந்து ஒரே காரைப் பயன்படுத்தலாம். தலா ஒரு நாள் வாகனத்தை எடுப்பதன் மூலம்  பெட்ரோல் மட்டும் அல்லாமல் போக்குவரத்துச் செலவையும் மிச்சப்படுத்தலாம். போக்குவரத்து நெருக்கடியையும் இதனால் குறைக்க முடியும். சுற்றுச் சூழலுக்கும் நல்லது.

2. தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது.  இப்போது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறி இறங்குகிறது. முதலீடு நோக்கில் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் விலை  ஸ்திரம் அடையும் வரை சில மாதங்களுக்காவது தள்ளிப் போடலாம். சமீபத்தில் தங்கம் விலை 1,000 ரூபாய் குறைந்தபோது, அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு, நகைக் கடைக்கு வந்ததாக ஒரு பெண், தொலைக்காட்சியில் சொன்னதைக் கேட்டிருப்பீர்கள்.

3. அயல்நாட்டில் இருக்கும் உறவினர்களை இந்தியாவில்  முதலீடு செய்யச்  சொல்லலாம். பல நாடுகளில் கிடைப்பதைவிட இந்தியாவில் கூடுதல் வட்டி கிடைக்கிறது என்பதை எடுத்துச் சொல்லலாம்.

இப்படியாக அவரவர் சக்திக்கு ஏற்ப உதவலாம். நாம் ஏதேனும் செய்யவேண்டும் என்கிற உந்துதலே முக்கியம்!

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

வீட்டிலிருந்தே மின்கட்டணம் செலுத்தலாம்!

வீட்டிலிருந்தே மின்கட்டணம் செலுத்தலாம்!


மின்கட்டணம் செலுத்துவதற்கோ, மின்சார வாரியத்திடம் புகார் தெரிவிப்பதற்கோ இனி நாம் மின்சார அலுவலகத்திற்கு ஓடவேண்டியதில்லை. வீட்டிலிருந்தபடியே அத்தனையும் செய்யும்படியான கருவி ஒன்றை மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

வ்வொரு வீட்டிலும் நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ப இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்காளர் வீட்டிற்கு வருவார். மீட்டர் எவ்வளவு ஓடியிருக்கிறது என்பதை பார்த்து விட்டு, எவ்வளவு தொகை என்பதைக் குறித்துவிட்டு  செல்வார். அதைப் பார்த்துவிட்டு, மின்சார அலுவலகத்திற்குச்  சென்றால் அங்கே தெரு  நீளத்திற்கு வரிசை நிற்கும். அப்படி நின்று மின் கட்டணத்தைக் கட்ட வேண்டும். வீட்டில் வரும் மின் இணைப்பில் குறைந்த மின்னழுத்தம் இருக்கும். திடீர் என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும். இதனை புகாராக பதிவு செய்ய வேண்டுமென்றாலும் மின்சார அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள புகார் நோட்டில் எழுதி வைக்க வேண்டும். அதை அவர்கள் பார்த்துவிட்டு எப்போது சரி செய்வார்கள் என்று நாள் கணக்கில் காத்திருக்கவேண்டும். இனி அப்படி மின்சார அலுவலகம் தேடி ஓடவும் வேண்டாம். இனி காத்திருக்கவும்  வேண்டாம். அதற்கென ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கின் மூலம் புதுவழி ஒன்றை, மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் துறை மாணவிகளான கீதா, ரேவதி, யுவஸ்ரீ, வெண்ணிலா ஆகியோரடங்கிய குழு கண்டுபிடித்திருக்கிறது. இக்கருவிக்கு ‘ஜி.எஸ்.எம். நெட்வொர்க் இ.பி. பில்லிங் சிஸ்டம்’ என பெயரிட்டிருக்கிறார்கள்.

மக்களுக்குப் பயன்படும் ஜி.எஸ்.எம். நெட்வொர்க் இ.பி. பில்லிங் திட்டம் - இவர்களது பி.இ. இறுதியாண்டு புராஜக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் கருவியில் ஒரு ஜி.எஸ்.எம்.சிம், மைக்ரோ கண்ட்ரோலர் சிப், எல்.சி.டி. டிஸ்ப்ளே மானிட்டர், ரிலே ஸ்விட்ச், பஸ்ஸர் அலாரம், மினி பேட்டரி போன்றவற்றைக் கொண்டு வடிவமைத்திருக்கிறோம். இக்கருவியை ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மீட்டர் பெட்டியுடன் இணைத்திட வேண்டும். இதில் உள்ள ஜி.எஸ்.எம். சிம் நெட்வொர்க்கை இணைக்கும் விதமான சர்வர் ஒன்று, இ.பி. ஆபீஸில் நிறுவப்பட்டிருக்கும். இந்த இரண்டும்தான் இரண்டு இடங்களில் இருந்து, தகவல்களை பரிமாறிக் கொள்ளும் சாதனங்களாக வடிவமைத்திருக்கிறோம்.

இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின்சார அளவீடு செய்யும் நேரம் வந்ததும், தானியங்கி முறையில் அலுவலகத்தில் இருக்கும் சர்வர், வீட்டில் இருக்கும் ஜி.எஸ்.எம். சிம்மிற்கு மெஸேஜ் ஒன்றை அனுப்பி, கணக்கீடு எடுக்க கட்டளை அனுப்பும். இதனைப் பெற்றுக் கொண்ட அந்த சிம்,  மீட்டரில் எவ்வளவு யூனிட் ஓடியிருக்கிறது என்பதை துல்லியமாக கணக்கீடு செய்து அனுப்பும். அக்கணக்கீடைப் பெற்றுக் கொண்ட சர்வர், எத்தனை யூனிட் ஓடியிருக்கிறதோ, அதற்கான தொகையை கணக்கிட்டு, இவ்வளவு தொகையை, இந்த தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று எழுத்து வடிவிலான தகவலை அக்கருவிக்கு அனுப்பி விடும். அத்தகவலை பெற்றுக் கொண்ட மறுவினாடியே, அக்கருவியில் உள்ள பஸ்ஸர் அலாரம் வீட்டில் இருப்பவர்களை அலர்ட் செய்யும். அந்த தகவல் அக்கருவியில் இணைக்கப்பட்டிருக்கும் எல்.சி.டி. திரையில் தெரியும். எவ்வளவு யூனிட் செலவாகி இருக்கிறது? எவ்வளவு தொகை கட்டவேண்டும்? என்ன தேதிக்குள் கட்ட வேண்டும் உள்ளிட்ட அனைத்துத் தகவலும் இதில் தெரியும்.  இது மட்டுமின்றி, வீட்டின் உரிமையாளருடைய மொபைலுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் இந்த தகவல் அனுப்பப்பட்டுவிடும்.

கிராமத்தில் உள்ளவர்களுக்கும், வயதானவர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும் பயன்படும் விதமாக வாய்ஸ் காலும் அனுப்பப்பட்டு  விடும். உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்டை இந்த சர்வரில் இணைத்துவிட்டால் போதும். கட்டணத்தை அதிலிருந்து செலுத்தி விடலாம். வங்கிக் கணக்கு இல்லாதோர், இக்கருவியில் இருக்கும் ஜி.எஸ்.எம். சிம்மினை ப்ரீபெய்டு முறையில், ஒரு குறிப்பிட்ட தொகையினை ரீசார்ஜ் செய்துவிட்டால் போதும். அதிலிருந்து இ.பி. பில் தானியங்கி முறையில் செலுத்தப்பட்டுவிடும். இக்கருவியின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் எஸ்.எம்.எஸ் மற்றும் வாய்ஸ் கால் மூலம் பயனாளருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு விடும்” என்கிறார் கீதா.

“வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ, மின்சார இணைப்பில் பிரச்சினை இருந்தாலோ, பியூஸ் போனாலோ, குறைந்த மின்னழுத்தம் எனப்படும்  லோ வோல்டேஜ் இருந்தாலோ இந்தக் கருவியில் இருந்தே உங்களது புகாரைப் பதிவு செய்து விடலாம். இதற்கென தனித்தனியே நான்கு பட்டன்களை வடிவமைத்திருக்கிறோம். மின்சாரம் இல்லாதபோதும் புகாரை சர்வருக்கு அனுப்ப மினி பேட்டரியை இக்கருவியில் பொருத்தி இருக்கிறோம்.   பயனாளி ஒருவர் கடைசி தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், தானியங்கி முறையில் மின்சாரத்தை இக்கருவி நிறுத்திவிடும். பயனாளர் எப்போது பணம் கட்டுகிறாரோ, கட்டிய மறுவினாடியே தானியங்கி முறையில் மின்இணைப்பு கொடுக்கப்பட்டு விடும். நம் மீட்டர் பெட்டியிலிருந்து நமக்குத் தெரியாமல் யாரேனும் திருட்டுத்தனமாக கரண்ட் கனெக்ஷன் எடுக்க முடியாது. அப்படி யாரேனும் திருட்டுத்தனம் செய்ய முயன்றால், அதையும் இக்கருவி கண்டுபிடித்து, சர்வருக்கும், பயனாளரின் மொபைலுக்கும் உடனே தகவல் அனுப்பிவிடும். இதற்கான தயாரிப்புச் செலவு 2,500 ஆகும். அதிக அளவில் இக்கருவியை தயாரித்தால் செலவு 1,500 ஆக குறைத்து விடலாம்” என்கிறார் ரேவதி.

“இந்த வடிவமைப்பிற்கு எங்களது ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் ராஜபார்த்தீபன் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்தக் கண்டுபிடிப்பிற்கான பேடண்ட் உரிமையை விரைவில் வாங்க இருக்கிறோம்.  நவம்பர் மாதம் பெங்களூருவில் ஆசிய அளவில் நடைபெற இருக்கும் ‘இன்னோவேட்டிவ் ஸ்மார்ட் கிரிட் டெக்னாலஜி ஆசியா கான்பரன்ஸ்’-ல் பங்கேற்கப் போகிறோம். அது எங்களது கண்டுபிடிப்புக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என நம்புகிறோம்” என்று மேலும் உற்சாகத்துடன் கூறி முடித்தார் ரேவதி.

பாண்டிச்சேரி பவர் கிரிட் அரசு நிறுவனத்தில் அடிஷனல் மேனேஜர் ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, “அருமையான கண்டுபிடிப்பு இது. இன்னும் சிற்சில மாற்றங்களைச் செய்தால் போதும். நிச்சயம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துவிடலாம்” என்றார். “இந்தக் கண்டுபிடிப்பிற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்துவிட்டால் போதும், நிச்சயம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும்” என்றார் இம்மாணவிகளின் ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் ராஜபார்த்தீபன்.

நிரந்தரத் தீர்வு.

னது நாட்டில் மகிழ்ச்சியான மனிதன் யார் எனக் கண்டறிய உத்தரவிட்டான் அரசன். படை வீரர்களும் அதிகாரிகளும் பலரையும் சந்தித்து விசாரிக்க ஆரம்பித்தனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு மனக்குறை இருந்தது. வருமானம் போதவில்லை. குடும்பச் சச்சரவுகளைத் தீர்க்க அரசு உதவவில்லை. சொத்துப் பிரிவினையில் நியாயம் கிடைக்கவில்லை. தங்கள் பகுதியில் வாழ்க்கைத் தரம் உயர உரிய நடவடிக்கைகள் இல்லை. எவருமே நாட்டில் மகிழ்ச்சியாக இல்லையா என அரசன் அயற்சி அடைந்த நேரத்தில் புல்வெளியொன்றில் மாடுகளை மேய விட்டுக்கொண்டு, ஆற்றுநீரில் காலை நனைத்துக்கொண்டு அரச மரத்து இலையைக் குழலாகச் சுருட்டி  பீப்பி ஊதிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டான். பார்வைக்கு அவன் சந்தோஷமாக இருப்பதைப் போலத்தான் பட்டது. ‘ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய் போலிருக்கிறது?’ என்றான் அரசன். ‘ஆமாம். எனக்கென்ன குறை’ என்றான் சிறுவன். ‘நிறைய பணம் வைத்திருக்கிறாய் போல் இருக்கு? ‘சந்தோஷமாக இருக்கப் பணம் எதற்கு?’ ‘பணம் இல்லாமல் சாப்பாட்டிற்கு என்ன செய்வாய்?’  ‘எனக்கு வேண்டும் உணவை இந்தப் பசுக்கள் கொடுக்கும். இந்த மரத்துக் கனிகள் கொடுக்கும். இந்தப் பசுங்கீரைகள் கொடுக்கும். நிலத்தில் புதைந்திருக்கும் கிழங்குகள் கொடுக்கும். ஆற்றில் நீந்தும் மீன்கள் கொடுக்கும். அதுவும் இல்லாமல் போனால் நதியில் ஓடும் நீரில் இரு கை அள்ளிக் குடித்தால் பசி அடங்கும். இயற்கை கொடுக்காத உணவையா உங்கள் பணம் கொடுத்துவிடும்?’ என்றான் சிறுவன்.

இயற்கை ஏராளமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் எல்லோருக்குமாக அது  கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதைச் சார்ந்து வாழ்பவர்களை அது கைவிட்டதில்லை. அரசைச் சார்ந்து வாழ்பவர்கள் எல்லோரும் ஆனந்தமாக இருப்பதாகச் சொல்வதற்கில்லை.

தமிழக மீனவர்கள் ஓர் வாழும் உதாரணம். எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ் மீனவர்கள் பலர் இலங்கைச் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை இதோ இதோ என அருகில் வந்து, வழக்கில் வாங்கப்படும் வாய்தாக்களால் தள்ளிப் போகிறது. தண்ணீரில் வாழ்ந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் இன்று கண்ணீரில் ஆழ்ந்திருக்கின்றன.

இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். மத்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டிருக்கிறது. ஆனால் தீர்வு ஏதும் கிடைப்பதில்லை.

இதற்கு முக்கிய காரணம், இலங்கை அரசு இறுகிப் போன ஓர் நிலையை மேற்கொண்டிருப்பதுதான். அண்மைக்காலமாக அதன் அமைச்சர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் இதை அப்பட்டமாக உணர்த்துகின்றன. ‘இந்திய மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி வருவதாகவும் தங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துச் செல்வதாகவும், அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல, அந்தக் கொள்ளையைத் தடுக்கவே சிறைவாசம்’ என ஓர் இலங்கை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ‘சர்வதேசக் கடல் எல்லைக்கோடு கருத்துருவை, அனைத்து நாடுகளும் ஏற்று  அதற்கான ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளன. எனவே, தமிழக அரசோ அல்லது அம்மாநில மீனவர்களோ சர்வதேசக் கடல் எல்லையை மீற முடியாது’ என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே கடந்த வாரம் கூறியிருக்கிறார்.

ஆனால் இரு நாட்டு மீனவர்களும் இயற்கையின் கொடை இருவருக்குமானது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இந்திய, இலங்கை கடற்பகுதியை, பரஸ்பரம் இருநாட்டு மீனவர்களும் 70 நாள்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான செயல் திட்டம் ஒன்றை மீனவர் அமைப்புகள் உருவாக்கியுள்ளனர்.

ஆனால் அதை ஏற்க முடியாது என இலங்கை அமைச்சர் தெரிவிக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணத்தைக் கேட்டால் அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. ‘மீனவர் சங்கங்களின் செயல் திட்டம் ஏற்கப்பட்டால், இலங்கையின் வடக்குப்பகுதி மீனவர்களுக்கு அநீதி இழைத்ததாகி விடும். சிங்கள மீன்வளத் துறை அமைச்சர், இலங்கைத் தமிழ் மீனவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு என் மீது வரும்’ என்கிறார் அந்த அமைச்சர்.

ஏதோ இத்தனை நாள் இலங்கை அரசு வடபகுதித் தமிழர்களிடம் நியாயமாக நடந்துகொண்டதைப் போலவும் இப்போது கெட்ட பெயருக்கு அஞ்சுவதைப் போலவும் ஒலிக்கும் அவர் பேச்சு, ஆடு நனைகிறதே என அழுத ஓநாயை நினைவூட்டுகிறது.

மீனவர்களின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இது மீனவர் துயரத்திற்கு ஓர் உடனடித் தீர்வு. கச்சத்தீவை திரும்பப் பெறுவதும், தமிழக மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்பை மேற்கொள்ள ஊக்குவிப்பதும் அதற்கான உதவிகளை அளிப்பதும்தான் நிரந்தரத் தீர்வு.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

மகிழ்ச்சியில் மறந்துவிட வேண்டாம்

மகிழ்ச்சியில் மறந்துவிட வேண்டாம்

மாரிக்காலம் இன்னும் முழுமையாகக் கடந்துவிடவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே இந்தியா, குறிப்பாகத் தென்மாநிலங்கள், நல்ல மழையைச் சந்தித்திருக்கின்றன. கர்நாடகத்தில் அபரிமிதமாகப் பெய்த மழை காரணமாகப் பல ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் நிறைந்து, காவிரியும் கொள்ளிடமும் வெள்ளப் பெருக்கைக் கண்டிருக்கின்றன.

வேளாண் பெருமக்கள், மிகுந்த நம்பிக்கையோடும் ஆவலோடும் கழனியில் சம்பா பயிரிட இறங்கி இருக்கிறார்கள். இந்தாண்டு பொங்கல் தமிழர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன.

நீர் வரத்து கணிசமாக இருந்ததால் நீர் மின் உற்பத்தி அதிகரித்து மின்வெட்டு நீங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வறண்டு கிடந்த வீராணம் ஏரி நிரம்பத் துவங்குவதால் சென்னையின் குடிநீர்ப் பிரச்சினை மட்டுப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கேரளத்திலும் நல்ல மழை பெய்ததன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையும் நிரம்பத் துவங்கியுள்ளது. அணை பலவீனமாக உள்ளது. அதனால் 134 அடிக்கு மேல் நிரப்ப முடியாது என விதாண்டாவாதம் புரிந்து கொண்டிருந்த கேரள அரசு அதைத் தற்காலிகமாக மறந்து நீர் நிரம்பட்டும், இடுக்கி அணையை இப்போது திறக்க வேண்டியதில்லை எனச் சொல்கிறது.

மனிதர்களின் அவநம்பிக்கை, மனச் சோர்வு, ஆணவம், சுயநலம் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு, இதழ்க் கடையில் புன்னகையை ஒளித்துக் கொண்டு தன் இயல்புப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது இயற்கை.

என்றாலும் கடந்த காலம் நமக்களித்துச் சென்றுள்ள பாடங்களை நாம் மறந்துவிடலாகாது. கடந்த காலம் என்றால் ஏதோ நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவை அல்ல. சென்ற வருடத்தை மனதில் ஒரு சில கணங்கள் உருட்டிப் பாருங்கள்.

சென்னையைத் தவிர எல்லா மாவட்டங்களும் வறட்சிப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. எல்லா நகரங்களிலும் குடிநீர்ப் பிரச்சினை. சிற்றூர்கள் கூட அதற்குத் தப்பவில்லை. 10 மணி நேரம், 12 மணி நேரம் என மின்வெட்டு வேறு கடுமையாகத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. வேளாண்மை, சிறு தொழில்கள், சிறு வணிகம் என வாழ்வாதாரங்கள் தத்தளித்து தவிப்பிற்குள்ளாயிற்று. விவசாயிகள் தற்கொலை குறித்த செய்திகள் வந்து நெஞ்சில் நெருப்பை வாரி இறைத்தன. இந்த நெருக்கடியான நேரத்தில்  தமிழ் மக்களோடு உணர்வு ரீதியாக ஒன்றி நின்ற ‘புதிய தலைமுறை’ வார இதழ், பொங்கலுக்கெனெ சிறப்பிதழ் வெளியிடும் வழக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது.

நிகழ்ந்தவை அனைத்தும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இனி அது போன்ற நிலை ஒருபோதும் வர வேண்டாம் என பிரார்த்தித்துக் கொள்கிறோம். ஆனால் வெறும் பிரார்த்தனை  மட்டும் போதாது. மனித முயற்சிகளும் தேவை. நியாயமான மனித முயற்சிகளை தெய்வம் எப்போதும் வாழ்த்தும்.

தனிநபர்களாகிய நமக்கு முதலில் வேண்டியது விழிப்புணர்வு. நீரின் அருமை நமக்குப் புரிய வேண்டும். அதைச் சிக்கனமாகவும் பயனுள்ள வகையிலும் செலவிடுவது என்பதை அறிவுப்பூர்வமாக மட்டுமின்றி, உணர்வு நிலையிலும் நாம் உணர வேண்டும்.

சமூகம் நீர்நிலைகளைப் பேணவும் காக்கவும் கற்க வேண்டும். நீர் மேலாண்மை என்பதை அறிவியல் இத்தனை வளர்ச்சி கண்டிராத காலங்களிலேயே மிகச் சீர்மையோடும் திறமையோடும் செய்து காட்டியிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். தொண்டைமண்டலத்தில் உள்ள ஏரிகளை அவர்கள் பராமரித்த விதமும்,  ஊருக்கு ஓர் ஏரி என்ற கொள்கையை அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டியதும் கண்ணெதிரே உள்ள சான்றுகள். நாம் குறைந்தபட்சம் நம்மூரில் உள்ள ஏரிகளைப் பராமரிக்கவும், பராமரிப்பதைக் கண்காணிக்கவும் முன்வர வேண்டும். அதற்காக உள்ளூர் அளவில் சிறு சிறு தன்னார்வ இயக்கங்கள் உருவாக வேண்டும்.

குறைந்தபட்சம் நம் வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவிப் பராமரிக்க முன்வர வேண்டும். மாரிக்காலத்திற்குப் பின் அதுதான் நமக்குப் பயனளிக்கும் என்ற யதார்த்தத்தை நாம் மழை கண்ட மகிழ்ச்சியில் மறந்துவிடலாகாது.

மேட்டூர் அணை நிரம்பி, கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 10  டிஎம்சி அளவு  நீர் வீணாகக் கடலில் சென்று கலந்தது என்று தகவல்கள் சொல்கின்றன. இதைத் தவிர்த்திருக்க இயலுமா எனத் தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற உபரி நீரைக் கொண்டு நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்க வழிகள் உண்டா என்பதை அரசு ஆராய வேண்டும். மழை நீர் சேகரிப்பு, வீடு தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்து கட்டாயப்படுத்த வேண்டும்.

நீர் இன்றி அமையாது உலகு என்றும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்றும் வள்ளுவன் எழுதி வைத்துவிட்டுப் போன வரிகள் வெற்று வார்த்தைகள் அல்ல.  அவை வாழ்வியலுக்கான மந்திரம்.

அரிசிக்கு ஆபத்து!

அரிசிக்கு ஆபத்து!

இந்திய மக்களுக்கு  உணவுப் பாதுகாப்பை  சட்டப்பூர்வ உரிமையாக்க வேண்டும் என்ற  நீண்டகால விருப்பம்  நிறைவேறுவதற்கான காலம் கனிந்திருக்கிறது. உணவுப் பாதுகாப்பு மசோதா  நாடாளுமன்ற மக்களவையில் தாக்கலாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் ஆதாயங்களை எதிர்பார்த்து அவசர அவசரமாக இம்மசோதா  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்  சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக  விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  என்றுமில்லாத  அதிசயமாய் ஜெயலலிதாவின் ஆட்சேபங்கள் நியாயமானவை என்று கருணாநிதியும் ஆமோதித்துள்ளார். ஏன் இந்த எதிர்ப்பு?

இச்சட்டத்தால் கிடைக்கவிருக்கும் நன்மைகளைக் காட்டிலும் பாதிப்புகள் அதிகம் என்ற விமர்சனங்கள் சரிதானா?

இந்த மசோதா இப்போதுள்ள நிலையில் நிறைவேறினால்  தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசிக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும்.

இந்தியாவிலேயே பொதுவிநியோகத் திட்டம் தனிச் சிறப்புடன் செயல்படுத்தப்படும் மாநிலம் தமிழ்நாடு. 20 கிலோ விலையில்லா அரிசி, குறைந்த விலையில் பாமாயில், சர்க்கரை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு எனப் பல்வேறு உணவுப் பொருட்கள் பொது விநியோக முறையில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுவது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான்.

இது கணிசமான பலன்களைக் கொடுத்திருக்கிறது.  நம் நாட்டில் உள்ள 15 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண்களில்  35 சதவிகிதப் பெண்கள்  உடலில் சக்தியின்றி பலவீனமாக இருக்கிறார்கள். 5 வயதிற்குட்பட்ட  குழந்தைகளில் 43 சதவிகிதம் பேர், அவர்கள்  வயதுக்குரிய  உடல் எடையைவிடக் குறைவாக இருக்கிறார்கள். ஆனால் தமிழகப் பெண்களும் குழந்தைகளும் இந்த நிலையில் இல்லை.

வடஇந்திய மாநிலங்களைவிட தமிழகத்தில் உள்ள பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியமாகவே உள்ளனர். தமிழகத்துடன் ஒப்பிடும்போது உடல் வலு குன்றிய பெண்கள் பீகாரில்  45 சதவிகிதம்,  சத்தீஸ்கரில்  44 சதவிகிதம், ஜார்க்கண்ட்டில் 43 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 42 சதவிகிதம். மற்ற மாநிலங்களில்  உள்ள பெண்களில்  ஏறக்குறைய  பாதிப் பேர் உடல் வலு குறைந்து இருக்கும்போது, தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை கால்வாசிக்கும் சற்றே அதிகமாக 28 சதவிகிதமாக  இருக்கிறது.  அதேபோன்று வயதுக்கேற்ப உடல் எடை கொண்டிராத குறைந்த குழந்தைகள்  பீகாரில்  55 சதவிகிதம்,  சத்தீஸ்கரில்  47 சதவிகிதம், மேகாலயாவில்  48 சதவிகிதம், மத்தியப்பிரதேசத்தில்  60 சதவிகிதம் என்றிருக்கையில்   தமிழ்நாட்டில் இது  30 சதவிகிதம்தான்  (இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வுத் துறையின் மத்திய அமைச்சர் கிருஷ்ண தீர்த் நாடாளுமன்றத்தில் தெரிவித்தவை). தமிழ்நாட்டின் இந்த மேம்பட்ட நிலைக்கு தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்  அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச அரிசித் திட்டம் போன்றவற்றின் பங்கு கணிசமானது.  

ஆகவேதான், தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு மத்திய அரசு உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டமோ இதற்கு நேர்மாறாக, ஏற்கெனவே தமிழகத்தில் நல்ல முறையில் நடந்துகொண்டிருக்கும்  பொது விநியோகத் திட்டத்தைப் பலவீனப்படுத்துவதாக இருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 2 ஆட்சி துவங்கி 100 நாட்களுக்குள் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், பல 100 நாட்கள் கடந்த பிறகும் அச்சட்டம் கொண்டுவரப்படவில்லை. இப்போது அதன் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அவசரம் காட்டப்படுகிறது. மக்களின் உணவுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்ற முக்கியத்துவத்தின் அடிப்படையில், அந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, சட்டமாக்கப்பட வேண்டும். ஆனால், மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவற்கு மூன்று வார காலத்திற்கு முன்பாக, அதை அவசரச் சட்டமாகக் கொண்டு வந்தது மத்திய அரசு. தற்போது அதை சட்டமாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இப்படி அவசர கதியில் கொண்டுவரப்படும் சட்டத்தால்  தமிழகத்திற்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் சில :

தமிழகத்திற்கு மாதம் ஒன்றுக்கு 2.96 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியில், இச்சட்டத்தால் சுமார் ஒரு லட்சம் டன் குறைக்கப்பட்டு விடும். இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும். வறட்சிக் காலங்களில் வெளிச்சந்தையில் அரிசி கிடைக்காத சூழ்நிலை வரும்போது பொதுவிநியோகத் திட்டத்திற்கே பெரும் நெருக்கடி ஏற்படும்.

தமிழகத்தில் அனைத்துக் குடும்பங்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசின் சட்டம் முன்னுரிமைக் குடும்பங்கள் என்று வரையறை செய்து, அவர்களுக்கு மட்டும் உணவு தானியத்தை மானிய விலையில் வழங்குவது என்பது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுவிநியோகத் திட்டத்தையே சீரழிக்கும்.

தமிழகத்தில் 49 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வரும் நிலையில், 37.79 சதவிகித  மக்கள் மட்டுமே உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு கூறுவது நியாயமற்ற செயல்.

இந்தக் குற்றச்சாட்டுகள் சரியானவையா?

தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை இணைச் செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தைப் பொருத்தளவில் கிராமப்புற மக்களில் 62.55 சதவிகிதத்தினரும் நகர்ப்புற மக்களில் 37.79 சதவிகிதத்தினரும் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் எனக் கூறியுள்ளார். அப்படியென்றால், பொதுவிநியோகத் திட்டத்தில் தற்போது பயன்பெறுபவர்களில் கணிசமானோர் வெளியேற்றப்படுவார்கள். தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தை மத்திய அவசரச் சட்டம் சீரழித்துவிடும் ஆபத்து உள்ளது" என்கிறார், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.

மேலும், இந்தியாவிலேயே நகர்மயமாக்கல் அதிகமாக நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு. விவசாயம் நசிவடைவதாலும், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்ததாலும் ஏராளமான மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுகின்றனர். அதனால் நகர்ப்புறங்களில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக நகர்ப்புற மக்களில் 37 சதவிகிதம் பேர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

நகர்ப்புறங்களில் உணவு தானிய உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என்பதன் அடிப்படையில், நகர்ப்புற மக்கள் குறைந்த விலையில் உணவுப்பொருட்களைப் பெறுவதற்காகத்தான் பொதுவிநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நகர்மயமாதல் அதிகமாக நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு. இங்கு 49 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அவர்களில், 37.79 சதவிகிதம் பேர் மட்டுமே உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் நியாயமற்ற செயல்" என்று முதல்வர் கூறியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் பயனாளிகள் குறித்த வரையறையை மத்திய அரசு தன்னிச்சையாக வெளியிட்டுள்ளது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது, கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

கூட்டாட்சி முறையில், மக்கள் நலத்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தும் அதிகாரத்தை மாநிலங்களிடம் விட்டுவிடுவதுதான் சிறந்தது. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பொதுவிநியோகத் திட்டத்தைக் கணக்கில் கொள்ளாமல், தவறான வறுமைக்கோட்டு அளவுகோலை அடிப்படையாக வைத்து, பயனாளிகள் யார் என்பதை மத்திய அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இது, கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகும்" என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது. அந்தந்த மாநிலங்களின் நிலைமைகளுக்கேற்ற செயலாக்கத்துக்கான விருப்புரிமையை மாநில அரசுகளுக்கு வழங்கிட மத்திய அரசு முன் வரவேண்டும்" எனக் கருணாநிதி கூறுகிறார்.

தமிழக அரசு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், மத்திய உணவுப் பாதுகாப்பு அவசரச்  சட்டம் இலக்கு பொது விநியோகத் திட்டத்தை (Targeted Public Distribution System) முன்வைக்கிறது. இது தமிழகத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் மாநில அரசுகள் உடனடியாக செய்ய வேண்டியது, குடும்பத்திற்கு 35 கிலோ உணவு தானியம் என்பதை நீக்கிவிட்டு, நபர் ஒருவருக்கு 5 கிலோ என்று மாற்ற வேண்டும். இதன்படி 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு 25 கிலோ மட்டுமே உணவு தானியம் கிடைக்கும். 10 கிலோ உணவு தானியத்தை இழக்க வேண்டியிருக்கும். நகர்மயமாக்கல் உட்பட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கூட்டுக்குடும்பங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. தனிக்குடித்தனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இச்சூழலில், ஒரு நபருக்கு 5 கிலோ என்று வரையறுத்திருப்பது மக்கள் மீதான நேரடித் தாக்குதல். இது, தமிழகத்திற்கான அரிசி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது, மத்திய தொகுப்பில் இருந்து மாதம் ஒன்றுக்கு 2.96 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் ஒரு லட்சம் டன் அரிசி குறைக்கப்பட்டு விடும்" என்பது தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு. ஒரு லட்சம் டன் என்பது மிகப்பெரிய அளவு. அந்த இழப்பை ஈடு செய்வதற்கு கூடுதல் அரிசியை வெளிச்சந்தையில் இருந்து தமிழக அரசு வாங்க வேண்டியிருக்கும். அதனால் ஆண்டுக்கு 3,000 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும்" என்கிறார் தமிழக முதல்வர்.

தற்போது மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்படாது" என்று மத்திய உணவு அமைச்சர் தாமஸ் கூறியிருக்கிறார். ஆனால், அது நடக்காது. அப்படி நடந்தாலும் அது தற்காலிகமானதாக இருக்கும். அவசரச்சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மாநில அரசுகளை சமாதானப்படுத்த அவ்வாறு அமைச்சர் கூறியிருக்கலாம். ஆனால், சட்டத்தில் தெளிவாக இதுபற்றி அறிவிக்காதவரை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்குத்தான் அரிசி வழங்கப்படும் என்பதுதான் உண்மை. ஆகையால், முதல்வர் கூறுவதுபோல ஒரு லட்சம் டன் அரிசி பற்றாக்குறை ஏற்படுமானால் அதை ஈடுசெய்ய முடியுமா? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

ஒரு லட்சம் டன் அரிசி பற்றாக்குறையை ஈடுகட்ட மாநில அரசு பல வகைகளில் முயற்சி செய்யும். வெளிச்சந்தையில் வாங்கலாம். மத்திய தொகுப்பில் இருந்தும் வாங்கலாம். வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்யலாம். எப்படியிருந்தாலும் தமிழக அரசிற்குப் பெரும் நிதிச்சுமை ஏற்படும். இன்னொருபுறம்   கள்ளச்சந்தை அதிகரிக்கும்.  ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று முதலமைச்சர் கூறுகிறார். அப்படியென்றால், வேறு நலத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை  இதற்குத் திருப்பிவிட வேண்டியிருக்கும். அதனால் மற்ற நலத் திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகும். மேலும், முதல்வர் கூறியுள்ளதைப்போல், வறட்சிக் காலங்களில் வெளிச்சந்தையில் அரிசி கிடைக்காத சூழ்நிலை வந்தால் பொதுவிநியோகத் திட்டம் பெரும் கேள்விக்குறியாகும்" என்கிறார், உணவுப் பாதுகாப்பு உரிமைக்கான பிரச்சாரத்தைச் சேர்ந்த சு.கண்ணையன்.

மேலும், உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தை 90 சதவிகிதம் பேர் பயன்படுத்துகின்றனர். 82  சதவிகிதம் பேர் அரிசி வாங்குகின்றனர்.  தமிழக அரசு தன்னுடைய நிதியையும் மத்திய அரசிடமிருந்து வரும் நிதியையும் சேர்த்து இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்துவிட்டால், அரிசி 3 ரூபாய்க்கும், கோதுமை 2 ரூபாய்க்கும், சிறு தானியங்கள் 1 ரூபாய்க்கும்  வழங்க வேண்டியிருக்கும். அதை மீறி இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசு விரும்பினால், அதற்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டியிருக்கும். தமிழகத்திற்கான மத்திய  அரசின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழும். இதனால், தமிழக அரசின் தனித்துவமான உணவுப் பாதுகாப்புத் திட்டம் பாதிக்கப்படும். அந்த வகையில் இச்சட்டத்தை ஏற்க முடியாது" என்கிறார், வழக்கறிஞர் வி.சுரேஷ். இவர் தமிழக அரசுக்கான உணவு ஆலோசகராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்.

ஆனால், உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்துக்கு எதிரான விமர்சனங்களை முற்றிலும் மறுக்கிறார், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி.

இது, உலகமே கண்டிராத மிகப்பெரிய நலத்திட்டம். இதன் மூலமாக, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கப்படவிருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக அத்திட்டத்தை சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். அத்திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கூறியுள்ள குற்றச் சாட்டுகள் அனைத்தும் நியாயமற்றவை. இந்தியாவிலேயே  மத்திய தொகுப்பிலிருந்து அதிகளவில் அரிசியை வாங்குவது தமிழகம்தான். தமிழகத்தில் மாநில ஆளுநர் தொடங்கி, யார் வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் என்ன நடக்கிறது? நடுத்தர மக்களும், உயர் நடுத்தர மக்களும் தங்களுக்கு உரிய அரிசியை ரேஷன் கடைகளில் வாங்குவதில்லை. அந்த அரிசி  சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. எனவே, தேவையற்றவர்களுக்கு அரிசியை ரத்து செய்ய வேண்டும். உண்மையில் யாருக்குத் தேவையோ அவர்களுக்கு மட்டும் அரிசி வழங்கப்பட வேண்டும்" என்கிறார் கே.எஸ்.அழகிரி.

இந்த வாதத்தில் நியாயம் இல்லை. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை நடுத்தர வர்க்க மக்கள் வாங்கிக் கொள்வது என்பது அவர்களுக்கு உள்ள உரிமை. அதைப் பயன்படுத்துவது என்பது அவர்களது விருப்பம்  சார்ந்தது. அதைப் பயன்படுத்தவில்லை என்று சொல்லி அந்த உரிமையைப் பறித்துக் கொள்ளலாமா? வாக்களிப்பது குடிமகனின் உரிமை. தேர்தல்களில் 40 சதவிகிதம் பேர் வாக்களிப்பதில்லை என்கிற காரணத்தைச் சொல்லி நாளை அந்த உரிமையைப் பறித்துக் கொள்வார்களா?

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதை முதல்வரோ, மற்ற கட்சியினரோ எதிர்க்கவில்லை. இந்தச் சட்டத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. திருத்தங்கள்தான் கோருகிறார்கள். முதல்வர் 5 திருத்தங்களை முன் வைக்கிறார். மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது, எந்தெந்தப் பிரிவுகளில் திருத்தம் வேண்டும் எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். கருணாநிதி இதை இன்னும் தெளிவாக விளக்குகிறார். இந்த மசோதாவால் தமிழகத்திற்குப் பாதகம்தான். சாதகம் இல்லை என்று ஜெயலலிதா உறுதியாக இருந்தால், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தமிழகம் ஏற்காது என்று அறிவித்ததைப்போல், இதையும் ஏற்காது என்று அறிவித்து விடலாம். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதாவும் மசோதாவில் திருத்தங்கள் தேவை என்றே கூறியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் திருத்தங்களையே கோருகின்றன. சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று யாரும் குரல் எழுப்பவில்லை" என்கிறார் கருணாநிதி.  

அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் என்பதை உறுதி செய்யும் வகையில்  இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், மத்திய அரசுக்கு அதில் உடன்பாடு இல்லை" என்கிறார் அழகிரி.

வறுமைக்கோட்டுக்கு மேல், வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்று பிரித்துத்தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்று கொண்டு வரும் அளவுக்கு நாம் இன்னும் வளரவில்லை. எல்லோரும் சமச்சீராக வளரும்போதுதான் அதைச் செய்ய முடியும். தற்போதைய சூழலில், அப்படிச் செய்ய முடியாது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு கண்டிப்பாக அரிசி தேவை. எனவே, அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் தோல்வியடைந்து விட்டது. எனவே, அதை உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது" என்கிறார் அழகிரி.

அப்படியென்றால், முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதைப் போல தமிழகத்தில் பெரிய அளவில் அரிசிப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. என்னதான் வெளிச்சந்தையில் வாங்கி, பற்றாக்குறையைச் சமாளிக்க முயற்சித்தாலும் வறட்சி போன்ற சூழலில்  அரிசித் தட்டுப்பாடு ஏற்படலாம். எதிர்காலத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, உணவு தானியங்களின் விலை அதிகரித்து, அதனால் ஏற்படும் கூடுதல் நிதிச்சுமையை தாங்க முடியாமல் பொதுவிநியோகத் திட்டத்தை வெட்டிச்சுருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம். அது தமிழகத்தில் பெரிய அளவுக்கு கொந்தளிப்பை உருவாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.


தேவைப்படும் திருத்தங்கள்

உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டிய முக்கியத் திருத்தங்கள் என உணவு உரிமைக்கான பிரச்சார இயக்கம் முன்வைத்துள்ள சில கோரிக்கைகள்:

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொதுவிநியோகத் திட்டத்தில் 33 சதவிகித மக்கள் உணவு பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுகிறார்கள். இதனால் நாட்டில் ஏராளமான ஏழை மக்கள் விடுபட்டுப் போகிறார்கள். எனவே, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ மட்டும் உணவுப்பொருள் வழங்கப்படும் என்றால், நாளொன்றுக்கு 166 கிராம் கிடைக்கும். அது போதாது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 7 கிலோவும் பெரியவர்கள் 14 கிலோவும் உணவு உட்கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. எனவே, நபர் ஒருவருக்கு 10 கிலோ உணவுப்பொருள் வழங்க வேண்டும்.

அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை மட்டுமே வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற ஊட்டச்சத்துகளை வழங்கும் உணவுப்பொருட்களையும் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 2.5 கிலோ பருப்பு, 900 கிராம் சமையல் எண்ணெய் வழங்கப்பட வேண்டும்.

தகுதியுள்ள குடும்பத்தினருக்கு அரிசி 3 ரூபாயிலும், கோதுமை 2 ரூபாயிலும் சிறுதானியங்கள் 1 ரூபாயிலும் என மூன்று ஆண்டுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. ஆனால், இந்த விலைகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்காவது உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உணவுக் கையிருப்பு இல்லாதபோது, உணவு தானியங்களுக்குப் பதிலாக பயனாளிகளுக்கு நேரடியாகப் பணத்தைக் கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.  இச்சட்டத்தின் மூலமாக, பொதுவிநியோகத் திட்டத்தின் ஒரு பகுதியாக,  ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற நிலை கொண்டுவரப்படுகிறது. அது கூடாது. பணத்தை நேரடியாகக் கொடுப்பது, ஆதார் அட்டையுடன் இணைப்பது என்கிற அம்சங்கள் அவசரச் சட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.



ஜெயலலிதாவை ஆதரிக்கும் கருணாநிதி

முதல்வரின் கோரிக்கைகள் நியாயமானவை: எந்த மாநிலத்திலும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உணவுப் பொருள் வழங்கு முறையினைச் சீர்குலைப்பதாக உணவு மசோதா இருக்கக் கூடாது. மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

இந்திய மக்கள் தொகையில் 67.5 சதவிகித மக்கள் மட்டும் பயன்படும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 90 சதவிகித மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா தெரிவித்துள்ள குறைபாடுகளும் கோரிக்கைகளும் அலட்சியப்படுத்தக் கூடியவை இல்லை. உணவு மசோதாவினால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஒட்டுமொத்தமாக தமிழக அரசுதான் சீர்தூக்கிப் பார்த்து கருத்துகளைத் தெரிவிக்க முடியும்".

- கருணாநிதி தனது அறிக்கையில் - தினமணி  10 ஆகஸ்ட் 2013

 

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தமிழகத்தில் ஜாதிய, மதவாத அரசியல் தலைதூக்குகிறதா?


தமிழகம் முழுக்க உள்ளூர ஒரு படபடப்பு ஊடுருவியிருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நீறுபூத்த நெருப்பாக இருக்கிற ஜாதி, மத அரசியலை ஊதிப் பெருநெருப்பாக்கி, நாட்டின் ஒட்டுமொத்த அமைதியை கூறுபோட்டு விடுவார்களோ என மக்களின் மனசு மௌனமாகப் பதறிக் கொண்டிருக்கிறது.

தர்மபுரியில் இளவரசன்- திவ்யா காதல் திருமணத்தையொட்டி மூர்க்கமாக மூண்ட ஜாதிய வன்முறை சற்று தணிந்தது போலத் தோன்றும் சூழலில், பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதன் விளைவு... மத ரீதியான பதற்றம் தமிழகத்தைப் பற்றியுள்ளது. ஜாதியமும் மதவாதமும் தமிழக அரசியல் களத்திற்குள் ஊடுருகிறதோ என்று அச்சப்படும் அளவுக்கு அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன.  

சென்ற ஜூலை 1--ஆம் தேதி இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் கொலை செய்யப்பட்டார். அவரது ரத்தம் உலர்வதற்குள்ளாகவே, ஜூலை 19-ஆம் தேதி  பாஜக மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர சம்பவங்களைக் கண்டித்து பாஜக சார்பில் ஜூலை 22-ஆம் தேதி மாநில அளவிலான பந்த் நடைபெற்றது. அன்றைய தினம் ராமநாதபுரத்திலும் கோவையிலும் இரண்டு மசூதிகள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றன.  இப்படி இந்தக் கொலைச் சம்பவங்கள் அரசியலாக்கப்பட்டதன் காரணமாக பரபரப்பு அதிகரித்துள்ளது.

கொலையானவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு கொதித்துப் போயிருக்கின்றன பாஜக மற்றும் இந்து அமைப்புகள். 1980-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழகத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் 130-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்’ என்றும், தீவிரவாத அமைப்புகளுக்கு அதில் தொடர்பு இருக்கலாம்’ என்றும் பாஜக குற்றம் சாட்டியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக, பாஜகவின் குற்றச்சாட்டுக்கு இஸ்லாமிய அமைப்புகள் மறுப்பு தெரிவித்தன. ஒரு கொலை நடந்தால் முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு காவல்துறையுடையது. ஆனால், கொலை நடந்தவுடனே அதற்கு மத ரீதியாக உள்நோக்கம் கற்பிப்பதை ஏற்க முடியாது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அக்கொலைகளுக்கு பாஜக மதச்சாயம் பூசுகிறது" என்று தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு விமர்சித்தது.

ஆனாலும்,இந்தக் கொலைகளுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளே காரணம் என்ற தங்களின் நிலைப்பாட்டில் இந்து அமைப்புகள் உறுதியாக உள்ளன.

காரணம், அந்தப் பட்டியலில் உள்ள அனைவரும் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி ஆகிய அமைப்புகளைச் சார்ந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வந்தவர்கள். அதனால் பாஜகவும் இந்து அமைப்புகளும் பலம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்"  என்கிறார், பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன்.

இதே குற்றச்சாட்டை தீவிரமாக முன்வைக்கிறார், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்.

தேசவிரோதிகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிரானவர்கள் என்பதாலேயே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அமைப்புகளே அதற்குக் காரணம். ஒரு காலத்தில் ஃபாத்வா அறிவித்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். தற்போது குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர். தமிழ்நாட்டில் ஜிகாத் செயல்பாடுகள்  அதிகரித்துவிட்டன. அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று கொந்தளிக்கிறார் அர்ஜுன் சம்பத்.

ஆனால் இங்கு ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். அண்மைக் காலத்தில் ஆளும் அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மாணவரணி செயலாளர் கதிரேசன், கீழ்வேளூர் ஒன்றிய மாணவரணி நிர்வாகி சரவணக்குமார், கூடலூர் ஒன்றிய கவுன்சிலர் தங்கவேல், மேட்டூர் முன்னாள் நகரச்செயலாளர் பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் பலர் கொலை செய்யப்பட்டனர். திமுகவின் பொட்டு சுரேஷ், ராமஜெயம், மார்க்சிஸ்ட் கட்சியின் நாவலன், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டுள்ளது நாடறிந்த உண்மை. ஆனால், சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கொலைகளுக்கு மட்டும் ஒரே ஒரு காரணம் கற்பிக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு. இந்து அமைப்பினரின் கொலைகளுக்கு ரியல் எஸ்டேட், கந்துவட்டி, பெண் சமாச்சாரம் போன்றவையே காரணங்களென செய்திகள் வெளியாகியுள்ளன" என்று அடித்துச்  சொல்கிறார், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா.

இந்தப் படுகொலைகள் குறித்து அரசும் முனைப்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, வெள்ளையப்பன் மற்றும் ஆடிட்டர் ரமேஷ் கொலைகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து துப்புக்கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

தங்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள் என்றும், இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டிவந்த நிலையில், தமிழகக் காவல்துறை தலைவர் ராமானுஜம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் நிலத்தகராறு காரணமாக நாகப்பட்டினத்தில் பாஜக பொதுச்செயலாளர் புகழேந்தியும், பணப்பிரச்சினை காரணமாக வேலூரில் பாஜக மாநில மருத்துவரணி செயலாளர் அரவிந்த் ரெட்டியும், நிலத்தகராறு காரணமாக பாஜகவின் பரமக்குடி நகரச் செயலாளர் தேங்காய்க் கடை முருகனும் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலைகள் குறித்து சிறப்பு புலானய்வுக்குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இக்கொலைகளில் சில தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தவை. சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவே ஏராளமானோரை குறிவைத்துத் தாக்குவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுவது தவறானது, உண்மைக்கு புறம்பானது" என்றும் கூறியுள்ளார் டிஜிபி.

ஆனால், காவல்துறையின் அறிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்று பாஜகவின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் இப்பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, தேசிய அளவிலான  பிரச்சினையாக மாற்றுவதற்கு பாஜக தயாராகி வருகிறது.

ஆனால் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனின் கருத்தையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களின் கொலைகள் மிகவும் கவலைதரக் கூடியவை. அதேசமயத்தில், புலன் விசாரணை இப்போதுதான் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. காவல்துறை இன்னும் ஒரு தெளிந்த முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், அதை இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதைப் போன்ற சித்திரத்தைத் தீட்டுவதின் மூலமாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதலைத் திருப்புவது எந்த வகையிலும் சமூக நல்லிணக்கத்திற்கு சரியான சூழலை உருவாக்காது. பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும், சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களும் எல்லா மதங்களிலும், எல்லா ஜாதிகளிலும் உள்ளனர். எனவே ஒரு குறிப்பிட்ட மதத்தையோ குறிப்பிட்ட ஜாதியையோ குற்றம் சாட்டுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை ஒரு நாளும் கொண்டு வந்து சேர்க்க முடியாது. இதை பொறுப்புமிக்க அரசியல் கட்சித் தலைவர்களும் சமயத் தலைவர்களும் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்கிறார் தமிழருவி மணியன்.

இதற்கேற்ப, இவ்விவகாரத்தில் காவல்துறையின் சில நடவடிக்கை மற்றும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிடும் விதம் குறித்து இஸ்லாமிய அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

2011-ஆம் ஆண்டு அத்வானி வருகையின்போது திருமங்கலம் அருகே குண்டுவைக்கப்பட்ட வழக்கில் தேடப்படும் நபர்களின் புகைப்படங்களை காவல்துறை தற்போது திடீரென வெளியிட்டுள்ளது. ஆடிட்டர் ரமேஷ் கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், அவர்களின் புகைப்படங்களை இப்போது ஏன் வெளியிட வேண்டும்? இது தேவையற்ற சந்தேகங்களை எழுப்புகிறது. இதை வைத்து சில ஊடகங்கள் செய்திகளை, ‘சென்சேஷனலைஸ்’ செய்கின்றன. இவர்கள்தான் ஆடிட்டர் ரமேஷை கொலை செய்தனர்’ என்கிற ரீதியில் சில ஊடகங்கள் செய்திகளைத் திரித்து வெளியிடுகின்றன. முஸ்லிம் தீவிரவாதிகள் காரணம் என்று சில வாரப் பத்திரிகைகள் கட்டுக்கதைகளை எழுதுகின்றன. இது மிகவும் கவலைக்குரியது" என்கிறார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில்.

எரிகிற நெருப்பை அணைப்பதற்குப் பதிலாக, எண்ணெய் வார்க்கிற முயற்சிகளும் நடப்பதாக அச்சம் தெரிவிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களின் கொலைகள் கவலைக்குரியவை, கண்டனத்துக்குரியவை. அதேநேரத்தில், இந்து அமைப்பு தலைவர்களின் கொலைகளை மட்டும் தனியாகப் பிரித்து, அதற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று சொல்வதன் மூலமாக, சமூகத்தைப் பிளவுபடுத்தி மத ரீதியான பதற்ற அரசியலை உருவாக்குவது நல்லதல்ல. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள ஜாதிய சக்திகள் முனைகின்றன. அத்தகைய போக்கை அனுமதித்தால் அது தமிழக அரசியலை இன்னொரு ஆபத்தான பரிணாமத்திற்குக் கொண்டு சென்றுவிடும். அதற்கு பாஜக இடமளிக்கக்கூடாது" என்கிறார் ரவிக்குமார்.

தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரம், திவ்யா - இளவரசன் காதல் விவகாரம், இளவரசனின் துயர மரணம் என எந்தச் சம்பவமாக இருந்தாலும், தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் இடையிலான சில தவறான கற்பிதங்களே அனைத்திற்கும் காரணம். தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் இரண்டு சமூகங்களும் இணக்கமாக இருந்தால்தான், அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்கள் கெடாமல் வளமான பாதையை நோக்கி அவர்கள் நடைபோட முடியும். எனவே, இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிறார்போல், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நிலையோடு, ஒருவருக்கு ஒருவர் உயர்வு, தாழ்வு என்ற தவறான பள்ளத்தில் விழுந்துவிடாமல் இணக்கமாக தோளோடு தோள் உரச நடக்க வேண்டும்" என்கிறார் தமிழருவி மணியன்.

ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அரசியலாக்கி அதன் மூலம் குளிர் காய்வதற்கு முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். ஜாதிய அரசியலும் மதவாத அரசியலும் தலையெடுப்பது அமைதிப்பூங்காவான தமிழகத்திற்கு நல்லதல்ல.


அதிகரிக்கும் கொலைகள்

தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசிய குற்றப்புலனாய்வு ஆவண மைய அறிக்கையின்படி 2011-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2012-ஆம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 3.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் 2.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகத்தைக் காட்டிலும் காவல் துறையினர்-பொதுமக்கள் விகிதாச்சாரம் தமிழ்நாட்டில் அதிகம். எனவே, இதற்கான காரணங்களை ஆய்வு செய்து கொலைச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

புதன், 26 ஜூன், 2013

200 பயனுள்ள இணையதள முகவரிகள்.எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள்


சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf



E-டிக்கெட் முன் பதிவு

7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

http://www.redbus.in/
 விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/

http://www.makemytrip.com/

http://www.ezeego1.co.in/

E-Payments (Online)

9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

10) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

http://www.itzcash.com/

11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/

https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி

13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/

http://shopping.indiatimes.com/

http://shopping.rediff.com/shopping/index.html

14) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/

http://www.hdfcsec.com/

http://www.religareonline.com/

http://www.kotaksecurities.com/

http://www.sharekhan.com/


கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.php

http://www.iob.in/vidya_jyothi.aspx

http://www.bankofindia.com/eduloans1.aspx

http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp

http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp

http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

16) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/

http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.Pallikalvi.in/

http://www.results.southindia.com/

http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/

http://www.lampsglow.com/

http://www.classontheweb.com/

http://www.edurite.com/

http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/

http://www.upsc.gov.in/

http://upscportal.com/civilservices/

http://www.iba.org.in/

http://www.rrcb.gov.in/

http://trb.tn.nic.in/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/

http://www.omcmanpower.com/

http://www.naukri.com/

http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/

http://bsf.nic.in/en/career.html

http://indianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/

http://www.gmail.com/

http://www.yahoochat.com/

http://www.meebo.com/


கணினி பயிற்சிகள் (Online)

1) அடிப்படை கணினி பயிற்சி

http://99likes.blogspot.com/

http://www.homeandlearn.co.uk/

http://www.intelligentedu.com/

http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html

2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html

http://99likes.blogspot.com/

3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/

http://www.miniclip.com/

http://www.pogo.com/

http://www.freeonlinegames.com/

http://www.roundgames.com/

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/

http://www.wikipedia.com/

http://www.hotmail.com/

http://www.yahoo.com/

http://www.ebuddy.com/

http://www.skype.com/

பொது சேவைகள் (Online)

1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/

http://www.rtiindia.org/forum/content/

http://rti.india.gov.in/

http://www.rti.org/

2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/

http://www.india-tourism.com/

http://www.theashokgroup.com/

http://www.smartindiaonline.com/

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/

http://kalyanamalai.net/

http://www.bharatmatrimony.com/

http://www.shaadi.com/

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/

http://freehoroscopesonline.in/horoscope.php

6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/

7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/

http://www.dinamani.com/

http://www.dailythanthi.com/

http://www.tamilnewspaper.net/

http://www.vikatan.com/

http://www.puthiyathalaimurai.com/

http://www.nakkheeran.in/

10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/

http://www.bbc.co.uk/

11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய

1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்

www.software99likes.blogspot.com

http://www.filehippo.com/

வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/

http://www.rates.goldenchennai.com/

http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/

http://www.xe.com/

அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html

J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf

http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf

6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf

7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc

http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf

விவசாய சந்தை சேவைகள் (Online)

1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/

2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/

3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx

4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/

5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/

6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php

7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/

9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/

தொழில் நுட்பங்கள்

1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed

3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html

4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html

5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html

வேளாண் செய்திகள்

1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html

3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html

4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html

5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html

திட்டம் மற்றும் சேவைகள்

1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html

2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html

3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html

4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm

5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html

6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html

7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/

9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html

10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html

11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html

12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html

ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்

1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html

3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html

4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html

5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html

6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html

7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/

9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html

http://www.tnsamb.gov.in/fertilizers.html

10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php

போக்குவரத்து துறை

1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf

2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do

3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html

4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do

5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do

6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do