Powered By Blogger

வெள்ளி, 17 மே, 2013

வீடு கட்ட  பிளான் இலவசம்

சும்மாவா சொன்னார்கள், ‘வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்’ என்று. சொந்தமாக வீடு கட்டி, குடிபுகுவது என்பது, 21-ஆம் நூற்றாண்டில் பலருக்கும் அது வாழ்நாள் கனவாகிப்போனது. புதிதாக வீடு கட்டுபவர்கள், தங்களுடைய வீடு இப்படித்தான் அமைய வேண்டும் என்ற ஆசைகளுடன், கனவுகளுடன் இருப்பார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப் போகும் வீட்டுக்கு மிக முக்கியமானது, வடிவமைப்புத் திட்டம். நாம் கட்டப் போகும் கனவு இல்லத்திற்கு கட்டிடப் பொறியாளாரிடம் திட்ட வடிவம் போட்டு வாங்குவதற்கு மாற்றாக, நாமே கூட திட்ட வடிவம் போட்டுப் பார்க்கலாம். இதோ, ‘ஸ்மால் ப்ளூ பிரிண்டர்’ என்ற இணையதளம் இந்த அற்புதமான வசதியை இலவசமாக வழங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் டோல் என்பவர் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தத் தளத்திற்கு சென்றவுடன் முகப்புப் பக்கத்தில் Design, Isometric View, 3D Walk through மற்றும் Print போன்ற இணைப்புகள் இருக்கும். முதலில், Design திறக்கும். இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  ப்ளூ பிரிண்ட் பிளான் பற்றி சரியாகத் தெரியாது என்றால், Sample Planஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து வலப்பக்கம் இருக்கும், Add Wall  இணைப்பைச் சொடுக்கி, எங்கெங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம். அறைச் சுவர், வெளிச் சுவர், போர்டிகோ ஆகியவற்றை இந்த டூல் மூலம் அமைத்து விடலாம். அதேபோல் Add Door, Add Window  இணைப்புகளைச் சொடுக்கி, எங்கு கதவு வேண்டும், எங்கு ஜன்னல் வைக்க வேண்டும் என அனைத்தையுமே எளிதாக வைத்துக் கொள்ளலாம். Transform என்ற இணைப்பைப் பயன்படுத்தி இதுவரையில் வடிவமைத்ததை மாற்றியமைக்கலாம் அல்லது நகர்த்திக்கொள்ளலாம். இறுதியாக,Isometric View  மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுங்கள். இப்போது திட்ட வடிவம் நிறைவடைந்திருக்கும். கடைசியாக திட்ட வடிவத்தை ஓர் பார்வை பார்த்துவிட்டு, பிளான் திருப்தி என்றால், பிரிண்ட் கொடுங்கள்.

இதே இணையதளம், தோட்டம் மற்றும் தரைத்தள வடிவமைப்புக்கும் பிளான் போட்டுத்தருகிறது. இந்தத் தளத்தைப் பயன்படுத்த உறுப்பினர் கணக்கு தொடங்க வேண்டியதில்லை. தனியே எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்யவும் அவசியமில்லை. ப்ளூ பிரிண்ட் பிளான் பற்றி நன்கு தெரிந்தவர்கள், இத்தளத்தில் பிளான் தயாரித்து, அப்ரூவல்கூட வாங்கிவிடலாம்.

அதேபோல், புது வீட்டில் என்னென்ன பொருட்களெல்லாம் அத்தியாவசியத் தேவை, எந்தெந்தப் பொருட்கள் இருந்தால் வீடு அழகாக இருக்கும், எந்தெந்த நிறுவனங்கள் அந்தப் பொருட்களைத் தயாரிக்கின்றன என்பது போன்ற இல்லப் பராமரிப்புக்குத் தேவையான தகவல்களை www.householdproducts.nlm. nih.gov என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதேபோல், வீடு மற்றும் அலுவலகங்களை அலங்காரம் செய்ய, வடிவமைப்பை மாற்றம் செய்ய, நிறைய இணையதளங்கள், மென்பொருட்கள் இலவசமாகவே திட்டம் அமைத்துக்கொடுக்கின்றன.

நீங்களே பிளானை உருவாக்க இணையதள முகவரி: www.smallblueprinter.com/sbp.html
நியாயம் கிடைக்குமா?

இந்தியாவில் பொதுவிநியோகத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திவரும் மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு உண்டு.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. அவை அனைத்தும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, மொத்தக் கூட்டுறவு பண்டக சாலை, பிரதம பண்டக சாலை உள்ளிட்ட சங்கங்களால் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தில்  சுமார் 32 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக ரேஷன் கடை ஊழியர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார்கள். உண்மை என்ன?

அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பத்து குடும்பங்கள் உள்ளதென்றால், அவர்கள் யாரும் ரேஷன் அரிசி வாங்குவதில்லை. அவர்களின் குடும்ப அட்டைகளை வாங்கி, அங்கு வீட்டு வேலை செய்பவர்கள் அரிசி வாங்குகிறார்கள். ஒரு அட்டைக்கு இருபது கிலோ அரிசி என்றால், 5 அட்டைகளுக்கு 100 கிலோ அரிசி. அதை இரண்டு மூடைகளில் கட்டி ஆட்டோ அல்லது இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்கிறார்கள். அவர்களை மடக்கிப்பிடிக்கும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு  அதிகாரிகள், உடனே அரிசி கடத்தல் என்று கூறி, ரேஷன் கடை ஊழியர்களை கைது செய்கிறார்கள். இதனால் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்கிறார், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆ.கிருஷ்ணமூர்த்தி.

ரேஷன் கடைகளில், எடை குறைவு என்ற குற்றச்சாட்டு எல்லா இடங்களிலும் உள்ளது. இது நியாயம்தானா?

முன்பெல்லாம் கிடங்குகளில் அரிசியை மொத்தமாகக் கொட்டி, 50 கிலோ  மூட்டைகளாக எடைபோட்டு கடைகளுக்கு அனுப்புவார்கள். அதற்கு சீரமைக்கப்பட்ட (Standardised) மூட்டைகள் என்று பெயர். இப்போது சீரமைக்கப்பட்ட மூட்டைகள் எல்லாம் கிடையாது. 42 கிலோ, 39 கிலோ, 48 கிலோ என்றுதான் மூட்டைகள் வருகின்றன. அதனால், நிறைய இழப்பு வருகிறது. அதை ரேஷன் கடைக்காரர்தான் ஈடுகட்ட வேண்டியிருக்கிறது. ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி என்றால், 20 கிலோ பைகளாகப் போட்டுக்கொடுத்துவிட்டால் பிரச்சினையே இருக்காது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் புளி, மிளகாய், பருப்பு போன்ற பொருட்களில் ஈரப்பதம் குறையும். அதனால், எடை குறைகிறது. தராசில் நிறுக்கும்போது அரிசி சிதறுகிறது. மண்ணெண்ணெய் சிந்துகிறது. அதையெல்லாம் எப்படி ஈடுகட்டுவது?" என்று கேட்கிறார், கிருஷ்ணமூர்த்தி.

முந்தைய திமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையின்போது பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ஒரு பையில் போட்டு இலவசமாக வழங்கப் பட்டன. எஞ்சிய பைகள் அப்படியே கிடந்துபோயின. அந்த பாசிப்பருப்பு, முந்திரி எல்லாம் உளுத்துவிட்டன. இப்போது, அதற்கான பணத்தைக் கட்டுங்கள் என்று ஊழியர்களுக்கு உத்தரவு வந்துள்ளதாம். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்!

ஆயிரம் குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு ரேஷன் கடை என்றால், ஆயிரம் அட்டைகளுக்குமான பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், 750 அட்டைகளுக்கான ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முழுமையான விற்பனை கூடாது என்ற அதிகாரிகளின் மறைமுக உத்தரவு இருக்கிறது. எனவே, 25 சதவிகிதப் பொருட்கள் விற்காமல் இருக்கும். அதனால், 60 சதவிகிதம், 70 சதவிகிதம் என்ற அளவில் அடுத்த மாதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரிசியில் பிரச்சினை இல்லை. துவரம்பருப்பு, மண்ணெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்படுகிறது. எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் கூறிவிடுகின்றனர். மக்களின் கோபத்துக்கு ஆளாவது நாங்கள்தான்" என்று புலம்புகிறார் விழுப்புரத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர் ஒருவர்.

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டது. 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்த அட்டைதாரர்களுக்கு 4 லிட்டராக குறைக்கப்பட்டுவிட்டது. அதனால், மக்கள் மல்லுக்கட்டுவது என்னவோ, ரேஷன் கடைக்காரர்களிடம்தான்.

மண்ணெண்ணெய் வேண்டுமென்று கேட்டால், கூடவே சோப்பு வாங்கினால்தான், மண்ணெண்ணெய் தருவோம் என்று எரிச்சலூட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் ரேஷன் கடைக்காரர்கள் மீது உள்ளது.

இப்போது சோப்பு, சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயம், பொட்டுக்கடலை, டீத்தூள், வேர்க்கடலை போன்ற பொருட்களை விற்கும் வேலையும் எங்களுக்கு தரப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த சோப்பில் நுரையே வராது. பெருங்காயம் கரையவே கரையாது. எப்படியாவது விற்க வேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு. அதை விற்கவில்லை என்றால், அதற்கான பணத்தை நாங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் தலையில் கட்டியதை, நாங்கள் மக்கள் தலையில் கட்டுகிறோம். எங்கள் கையில் என்ன இருக்கிறது?" என்று பரிதாபமாகக் கேட்கிறார், மயிலாப்பூரில் ரேஷன் கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.

மின்வெட்டு நிறைந்த தமிழகத்தில், எல்லா ரேஷன் கடைகளுக்கும் மின் தராசு வழங்கப்பட்டிருக்கிறது. மின்சாரமே இல்லாத நிலையில் மின் தராசை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? பொருள் வழங்கவில்லை என்றால், மக்கள் கொந்தளிக்கிறார்கள். எல்லா ரேஷன் கடைகளிலும் மேலதிகாரிகள் செல்போன் எண்கள் எழுதி வைக்கப்பட்டு இருப்பதால், மேலதிகாரிகளுக்கு உடனடியாக புகார்கள் பறக்கின்றன. ரேஷன் கடை ஊழியருக்கு ஆப்படிக்கப்படுகிறது.

திருப்பூர் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கடையில் வேலை செய்கிறேன். தினமும் மாலையில் கடையைப் பூட்டிவிட்டு, சாவியை திருப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்கிறேன். காலையில் மீண்டும் அலுவலகத்துக்குச் சென்று சாவியை வாங்கிக்கொண்டு 15 கி.மீ. பயணம் செய்து கடைக்குச் செல்கிறேன். செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால், சற்று தாமதமாகி விட்டாலும் உடனே அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் போய்விடுகிறது. காலை ஒருகடை மாலை ஒரு கடை என 2 கடைகளை கவனிக்கிறேன். நாங்களும் மனிதர்கள்தானே?" என்கிறார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர்.

ரேஷன் கடைகளில் பழைய கோணிப்பைகள் அவ்வப்போது ஏலம் விடப்படுகின்றன. ஒரு கோணிப்பையின் விலை ரூ11.20. எலி கடித்த, குத்தூசி போட்டதால் கிழிந்த கோணிப்பைகளுக்கு 7-8 ரூபாய்தான். அதனால் ஏற்படும் பற்றாக்குறையை எங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டு  ஈடுகட்ட வேண்டியிருக்கிறது. இன்ஸ்பெக்ஷன், ரெய்டு, வெரிஃபிகேஷன் என்ற பெயர்களில் வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், உணவுப்பிரிவு அதிகாரிகள் என பெரும் படையினர் நடத்திவரும் சோதனைகளுக்கு அளவே இல்லை என்று புலம்புகின்றனர், ரேஷன் கடை ஊழியர்கள்.

ஆயிரம் குடும்ப அட்டைகள் கொண்ட ஒவ்வொரு கடைக்கும் விற்பனையாளர், எடையாளர் என இரண்டு ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால், பல கடைகளில் விற்பனையாளர் ஒருவர் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. விற்பனையாளர்களாக உள்ள பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் மண்ணெண்ணெய் பீப்பாயைத் தூக்கி நகர்த்த முடியுமா? அரிசி மூட்டையைத் தூக்க முடியுமா? எனவே, இவர்களே ஓர் உதவியாளரை தினக்கூலி அடிப்படையில் நியமித்துக் கொள்கின்றனர். அவருக்கான ஊதியத்தை இவர்களே வழங்குகின்றனர். அதிகாரிகள் மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினரையும் இவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், அவர் மீது மொட்டை பெட்டிஷன்கள் பறக்கும்.

தூசிகளுக்குள்ளே புழங்குவதால், ரேஷன் கடை ஊழியர்களில் பலருக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள் வருகின்றன. அவர்களுக்கு அரசிடம் இருந்து எவ்வித மருத்துவ உதவியும் கிடையாது. அரசு ஊழியர்களுக்கு இணையாக மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று திமுக ஆட்சியின்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதை நடைமுறைப்படுத்த இதுவரை எந்த முயற்சியும் இல்லை. பணி  நிரந்தரமும் ஓய்வுதியமும்கூட இல்லாமல்தான் அவர்கள் பணியாற்றுகின்றனர். பெண் ஊழியர்கள் பணியாற்றும் பல ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதிகள்கூட கிடையாது.

ஆனாலும், இந்த வேலைக்கும்கூட கடும் போட்டி உள்ளது. சமீபத்தில் சுமார் நான்காயிரம் பேர் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டனர்.

டிகிரி படிச்சிட்டு விவசாயம் செய்தேன். தொடர்ச்சியாக நஷ்டம். இரண்டாண்டுகள் வேலையில்லாமல் இருந்தேன். சும்மா இருப்பதற்கு இந்த வேலையாவது பார்க்கலாமே என்று முடிவு செய்தேன்" என்கிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த மதிவாணன்.

இலவச கிரைண்டர் -மிக்ஸி, இலவச வேட்டி சேலை, இலவச அரிசி, வெள்ள நிவாரணம் என அரசின் நலத்திட்டங்களை நிறைவேற்றுபவர்கள் நாங்கள்தான். இந்தியாவிலேயே பொதுவிநியோக திட்டம் சிறப்பாக செயல்படுவதில் எங்கள் பங்கு முக்கியமானது. அப்படிப்பட்ட எங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றினால் என்ன? நியாய விலைக் கடை ஊழியர்களான எங்களுக்கு, அரசு நியாயம் வழங்குமா?" என்று கேட்கிறார், திருமங்கலத்தைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் ஒருவர்.
வருகிறது பிளாஸ்டிக் சாலைகள். ஆனால் . . .

ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று, வாரத்துக்கு ஐந்து கிராம் அளவிலான பிளாஸ்டிக்கை குப்பையில் கொட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியெனில், இந்தியா முழுக்க ஒரு வாரத்துக்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பையின் அளவு, சுமார் 52,000 டன் அளவில் இருக்கும். மாதத்துக்கு, வருடத்துக்கு எவ்வளவு டன் குப்பை கொட்டுகிறோம் என்று கால்குலேட்டர் கொண்டு நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் இந்தப் பிளாஸ்டிக் கழிவை என்னதான் செய்வது? ஏற்கெனவே உபயோகித்த பிளாஸ்டிக்கை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துவது என்பது ஒரு திட்டம். மூன்று, நான்கு முறைகளுக்குமேல் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியாது. தின் பிளாஸ்டிக் எனப்படும் இம்மாதிரியான பிளாஸ்டிக்கை கொண்டு, தார்ச்சாலைகளை அமைக்கும் திட்டம் சில காலத்துக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரு - மைசூர் இடையேயான சாலையில் இம்முறை பயன்படுத்தப்பட்டு, பெரும் வெற்றி அடைந்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை 2011-12-இல் தொடங்கி, நம் ஊரகப் பகுதிகளில் இதுவரை 1,002 கி.மீ. நீளமுள்ள சாலைப்பணிகள் இம்முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாண்டும் 1,000 கி.மீ. நீளத்துக்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படப் போவதாக முதல்வர், சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். நகரப் பகுதிகளிலும்கூட இப்போது பிளாஸ்டிக் சாலைகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன.

இதன் மூலமாக உபயோகமற்ற பிளாஸ்டிக் கழிவுகள், முறையாக மறு பயன்பாட்டிற்கு வருகின்றன. அதே நேரம் இதைக்கொண்டு அமைக்கும் சாலைகளும் தரம் வாய்ந்ததாக, நீண்ட காலத்துக்கு உழைக்கக் கூடியதாக இருக்கும். சிக்கனம் மற்றும் தரம் என்று ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கலாம்.

பிளாஸ்டிக் சாலைகளின் சிறப்பம்சங்கள் :
* தற்போதைய சாதாரணச் சாலைகளைவிட இரண்டிலிருந்து மூன்று மடங்குவரை அதிகம் உழைக்கும்.
* பள்ளங்களோ, விரிசலோ ஏற்படாது.
* மழையில் ஈரத்தை உறிஞ்சாது.
* பராமரிப்புச் செலவைக் குறைக்கும்.
*இதில் பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக்கை எவ்வகையிலும் உபயோகப்படுத்த முடியாது என்பதால், எரித்து சாம்பலாக்கியோ அல்லது நிலத்தில் புதைத்தோதான் அகற்ற வேண்டியிருக்கும்.

1.5 டன் பிளாஸ்டிக்கை கொண்டு, சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கலாம். இந்தியா, வருடத்துக்கு சுமார் 35,000 கோடி ரூபாயை புதியதாக சாலைகள் அமைக்கவும், பழுது நீக்கவும் செலவிடுகிறது. மொத்தமாக சாலை பராமரிப்புச் செலவு மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாயை விழுங்குகிறது. பிளாஸ்டிக் சாலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகம் உழைக்கும் என்பதால், மொத்தச் சாலைகளுமே இவ்வாறு அமைக்கப்படுமாயின்,  வருடத்துக்கு நமக்கு மிச்சமாகும் தொகை, குறைந்தபட்சம் 33,000 கோடி ரூபாய்.

இந்த விஷயத்தில் தமிழகம் விழித்துக் கொண்டு விட்டது மகிழ்ச்சிதான். எல்லாவற்றையும் விட பிளாஸ்டிக்கை குப்பையில் போடும்போது, நமக்கு ஏற்படும் சிறு குற்றவுணர்ச்சி அறவே இருக்காது என்பதுதான் ஹைலைட். இந்த உணர்வினை எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்கவே முடியாது.

ஆனால், இதையே காரணம் காட்டி,  சாக்கென்று பிளாஸ்டிகை அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிடுவோமோ?
உங்கள் முகத்தோடு ஓர் அஞ்சல்தலை!
\
காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்கள், பிரபலங்கள் போன்றவர்களது படங்களைத்தானே அஞ்சல்தலையில் பார்த்திருப்பீர்கள். இனி நீங்கள், உங்கள் முகத்தையும் பார்க்கலாம். அதிகம் செலவாகாது. வெறும் முந்நூறு ரூபாய்தான்!

அயல்நாடுகள் சிலவற்றில் நாம் விருப்பப்பட்ட மனிதர்களின் முகத்தை பணம் கட்டி (ப்ரீமியம்), அஞ்சல் தலையில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

இங்கே உள்ள உள்ளூர் அரசியல் தலைவர்கள் சிலருக்கு பிரான்ஸ் அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது என்றெல்லாம் வரும் செய்திகளின் பின்னணி ரகசியம் இதுதான்.

ஆனால், நம் நாட்டில் இதுவரை ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிடுவது என்பது குறித்து, அரசுதான் முடிவெடுக்க முடியும். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாதாரண மக்களின் முகங்களும் அஞ்சல்தலையில் வெளியிடப்படும் திட்டம் ஒன்றினை இந்தியத் தபால்துறை, தில்லியில் தொடக்கி வைத்தது.

இத்திட்டத்துக்கு, ‘எனது அஞ்சல்தலை’ என்று பெயரும் சூட்டப் பட்டது. பிரமாதமான வரவேற்பு. தொடர்ச்சியாக உ.பி., மும்பை மாதிரி வடஇந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் அஞ்சல்தலையில் இடம்பெற்று விட்டார்கள். இதோ இப்போது அஞ்சல்தலையில் தமிழ் முகங்களும் சிரிக்க, நம் ஊருக்கும் வந்துவிட்டது ‘எனது அஞ்சல்தலை’ திட்டம்.

உயிருடன் இருக்கும் யாரும் இந்தத் திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம். ரூ.300/- கட்டணம் செலுத்தினால், 12 அஞ்சல்தலைகள் வழங்கப்படும்.

இந்த அஞ்சல் தலைகளை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பும் கடிதங்களில் ஒட்டி, அவர்களை  அசத்தலாம்.

விண்ணப்பிப்பவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கும் ஏதேனும் ஓர் அடையாள அட்டையின் நகலை (டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவை) சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் இருக்கும் சிறப்பு அஞ்சல்தலை சேகரிப்பு மையங்களில் மட்டுமே, ‘எனது அஞ்சல் தலை’ திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி இருக்கிறது.

சென்னையில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒருவாரத்திலும், மற்ற மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு இரண்டு வாரங்களிலும் அஞ்சல்தலைகள் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.

பொதுமக்களின் வரவேற்பைப் பொருத்து, விரைவில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்" என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீமெர்வின் அலெக்ஸாண்டர் உறுதியினை அளித்திருக்கிறார்.

மறைந்த நமது தாத்தா, பாட்டிகளின் முகத்தை அஞ்சல் தலையில் இடம் பெறச் செய்யவைக்க இத்திட்டத்தில் இப்போதைக்கு இடமில்லை.

ஆனால், உயிரோடிருக்கும் நம் அம்மா, அப்பா ஆகியோர் (அடையாள அட்டை இருப்பின்) விண்ணப்பிக்கலாம்.

044-28543199 என்கிற தொலைபேசி எண்ணில் பேசினால், ‘எனதுஅஞ்சல் தலை’ திட்டம் குறித்த சந்தேகங்களுக்கும் இந்தியத் தபால்துறை விளக்கமளிக்கிறது.
உயிர் காக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை இனி ஏழைகளுக்கும் இலவசமாகக் கிடைக்கும்

ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்தி, தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொது ரத்த வங்கியான ஜீவன் ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு 9 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.

ஸ்டெம் செல் சிகிச்சை என்றால் என்ன?

தொப்புள் கொடியை வெட்டியவுடன் அதிலிருந்து வரும் ரத்தம், பிரத்யேகமான தனித்தன்மையான செல்களால் ஆனது. இதுதவிர தொப்புள் கொடியில் உள்ள திசுக்களிலும் சக்தி வாய்ந்த மெசன்கைமல் (mesenchymal) எனப்படும் செல்கள் உள்ளன. இவையே ஸ்டெம் செல்கள் எனப்படும் மூல செல்கள். இந்த மூல செல்களில் இருந்துதான், நம் உடல் உருவாகியுள்ளது. உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் உருவாக அடிப்படையானது இந்த மூல செல்கள். தொப்புள் கொடி ரத்த திசுக்களில் உள்ள சக்தி வாய்ந்த செல்களைப் பாதுகாத்து வைத்தால், பின்னாளில், உறுப்புகள் நோய்வாய்ப்படும்போது  இவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

இந்தியா முழுவதும் 3 லட்சம் ரத்தப் புற்று நோயாளிகள் உள்ளார்கள் (ஆண்டுதோறும் புதிதாக 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்). ரத்த சிவப்பணுக்கள் பாதிப்பால் ஏற்படுவது தலஸ்சீமியா. இந்த 2 பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு ஸ்டெம் செல் சிகிச்சை மட்டுமே.

ஆனால், தற்போது ஸ்டெம் செல்லை இறக்குமதி செய்து, சிகிச்சை செய்துகொள்ள 25 லட்ச ரூபாய் ஆகிறது. இதனால், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், சிகிச்சை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால், இந்த ஏழைகளுக்கு உதவ தமிழக அரசு ஒரு முற்போக்கான நடவடிக்கையை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஸ்டெம் செல்களைப் பாதுகாத்து வரும் ரத்த வங்கியான ஜீவன் வங்கிக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.

ஒரு தொப்புள் கொடியைப் பெற்று, அதிலிருந்து ஸ்டெம் செல்லைப் பிரித்தெடுத்து 24 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். இப்போதைக்கு எங்களிடம் 750 ஸ்டெம் செல்கள்தான் பாதுகாக்க பொருளாதார வசதி உள்ளது. தமிழக அரசின் இந்த நிதி உதவியினால் 2014 ஜூன் மாதத்திற்குள் 7,500 ஸ்டெம் செல்கள் சேமிக்க திட்டமிட்டு உள்ளோம். சேமிக்கப்படும் ஸ்டெம் செல்லில் 75 சதவிகிதத்தை அரசு பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு, ஜீவன் ரத்த வங்கி அளிக்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் மற்றும் தலஸ்சீமியா நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்கள் இலவசமாக வழங்கப்படும். மீதி  25 சதவிகிதம் நோயாளியின் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப 5 முதல் 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு,  50 ஆயிரம் ரூபாய் என்கிற கட்டண அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம், ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும்" என்கிறார் இதுகுறித்து, ‘புதிய தலைமுறை’யிடம் பேசிய ஜீவன் ரத்த வங்கியின் தலைவர் டாக்டர் பி.சீனிவாசன்.

ஸ்டெம் செல் கிசிச்சை இலவசமாக மக்களுக்குக் கிடைக்க, ஒரு மாநில அரசு நிதியுதவி செய்வது இந்தியாவில் இதுதான் முதல்முறை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள அரசுகள், இதுபோல நிதியுதவி செய்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் தமிழ்நாடுதான் முதல்.

ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான  குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் வேஸ்ட் என்று தூக்கிப் போடும் தொப்புள் கொடியை எங்களிடம் கொடுத்தால், இன்னொரு உயிரைக் காப்பாற்ற அதிலுள்ள ஸ்டெம் செல்கள் பயன்படலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கர்ப்பம் தரித்த 28-ஆவது வாரத்தில் எங்களை தொடர்புகொண்டு பதிவு செய்தால் போதும். மற்ற நடைமுறைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்கிறார், டாக்டர். சீனிவாசன்.

விவரங்களுக்கு : 044 - 28351200, 044 - 28150300 அல்லது www.bethecurte.in / srinivasanjeevan.org.
முட்டுக்கட்டை அகன்றது; தடை நீங்குமா?

இரண்டு வல்லுநர் குழுக்கள்; இரண்டு நீதிமன்றங்கள்; ஒரு முன்னாள் குடியரசுத் தலைவர்; இவர்கள் அனைவரும் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்து விட்டார்கள்: கூடங்குளம் அணுமின் உலை பாதுகாப்பானது, அங்கே மின் உற்பத்தியைத் துவக்கலாம் என.

இவர்கள் அனைவரும் துறை சார்ந்த வல்லுநர்கள். நல்லது கெட்டதைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்கு வரும் நிதானம் கொண்டவர்கள். ஆய்வு மனோபாவம் கொண்டவர்கள். அவர்களுக்கு இடிந்தகரை மக்கள் மீது தனிப்பட்ட விரோதம் கிடையாது. பரபரப்பு மூலம் விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும், அரசியல் லாபம் பெற வேண்டும் என்ற விருப்பம் ஏதும் அவர்களுக்குக் கிடையாது. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே தங்கள் துறையில் புகழோடு இருப்பவர்கள். சிலர் உலகின் கவனத்தைப் பெற்றவர்கள். நடுநிலையோடு சிந்திப்பவர்கள். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டவர்கள். இவர்களது சொற்களுக்குச் செவி மடுப்பதுதான் நல்லது.

தனது தலையங்கங்களில் தெரிவித்து வந்த கருத்துகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பிரதிபலித்திருப்பதைக் கண்டு, ‘புதிய தலைமுறை’ மகிழ்ச்சி கொள்கிறது. உணவு, உடை வீடு, காற்று, நீர் போல மின்சாரமும் ஓர் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது என்று,  ‘புதிய தலைமுறை’ 20 அக்டோபர் 2011 தேதியிட்ட தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. இதே போன்ற ஒரு கருத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் இடம் பெற்றுள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு உற்பத்தியில் இறங்குவதுதான் நடைமுறைக்கு ஏற்றது என்று அந்தத் தலையங்கத்தில் எழுதியிருந்தோம்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய நிபுணர்கள் குழு வழங்கியுள்ள 17 அம்சப் பரிந்துரைகளில், 11 நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் இயற்கைச் சீற்றம், பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில், கூடங்குளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன என்பதையும் ஏற்று,  கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீர், காற்று ஆகியவற்றில் மாசு ஏற்படும் என்ற அச்சத்தை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதில் தவறேதும் நடக்கவில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தை எதிரொலித்துள்ளது.

தமிழ்நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வேண்டுமானால், மின்சாரம் தேவை என்பது ஒரு தவிர்க்க முடியாத யதார்த்தம். புனல் மின்சாரம் தயாரிக்க, நம் நதிகளில் போதுமான அளவு நீர் கிடைப்பதில்லை. அனல் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தும் கரி, பெட்ரோல் போன்றவை வளி மண்டலத்தில் கரிப்படிவுகளை ஏற்படுத்தி, புவி வெப்பமயமாதலை விரைவுபடுத்தும். கதிரொளி கொண்டு மின்சாரம் தயாரிக்க, ஏராளமான இடமும் முதலீடும் தேவை. காற்று, ஆண்டின் எல்லா நாட்களிலும் கை கொடுக்காது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அணு மின்சாரம் என்பதை நிராகரிக்க இயலாது.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, நடைமுறை யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட ஓர் தீர்ப்பு. இப்போது மின் உற்பத்திக்கான முட்டுக்கட்டை நீங்கிவிட்டதையடுத்து, விரைவில் மின் உற்பத்தி துவங்க வேண்டும். அதில் கணிசமான அளவைத் தமிழகம் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்படிப் பெற்றால், மின்தடை நீங்காவிட்டாலும் தளர வாய்ப்புண்டு.

வெளிச்சம் பிறக்கட்டும். 
ஜாதி அமைப்புகளைத்  தடை செய்தால் என்ன?

சைப்படாமல் நடந்து கொண்டிருக்கிறது ஒரு வேலை.

விழுப்புரம், தென்னாற்காடு மாவட்டங்களில் உள்ள சில ஊர்களில் மாதத்திற்கு ஒரு முறை சில ஜாதிச் சங்கங்கள், திருமண மண்டபங்களில் இளைஞர்களுக்கு மட்டும் என கூட்டம் நடத்துகின்றன. அந்தக் கூட்டங்களில் படித்த இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தங்கள் ஜாதி அமைப்புகளின் பலத்தைப் பற்றியும், சங்கத்தினை வலிமைப்படுத்த செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும் ‘மூளைச் சலவை’ நடக்கிறது.

எங்க கட்சியில் ஒவ்வொரு மாதமும் இளைஞர்களுக்கு மட்டும் கூட்டம் நடத்துவாங்க. அதுல ஒவ்வொரு இளைஞனும் மத்த கட்சியில் இருக்கும், எங்க ஜாதிப் பசங்களை, எங்களுடைய கட்சியில் சேர்க்கணும்னு  சொல்வாங்க. கல்லூரியில் எங்களுடைய பலம்தான் ஓங்கி இருக்கணும். எங்களில் ஒவ்வொரு இளைஞரும் கிராமத்தில் குறைந்தது நூறு ஓட்டுகளை பெற்றுத் தரவேண்டும் என்பார்கள். அப்படி கட்சிக்கு உழைக்கும் இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியப் பதவியும், தேர்தலில் நிற்கும் வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எங்களுக்கு நடக்கின்ற கூட்டத்தில் கூறுவார்கள்" என்கிறார், பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையோடு நம்மிடம் பேசிய கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஏ. படிக்கும் மாணவர் ஒருவர்.

இந்தக் கூட்டங்களில் தங்கள் ஜாதிப் பெருமையைப் பேசுவதோடு மற்ற ஜாதிக்களைப் பற்றி, குறிப்பாக தங்களது எதிரிகள் என அவர்கள் கருதும் ஜாதியினர் மீது விரோதம் ஏற்படும் வண்ணம் கருத்துகள் விதைக்கப்படுகின்றன.

நாங்க, ‘அவங்க’ இருக்கிற பகுதியில் போய் விளையாடக் கூடாது... அப்படி மீறி அவங்ககூட விளையாடப் போனா, ஊர்ல பெரியவங்க பார்த்துட்டா கண்டிப்பாங்க. சில சமயம் கடுமையா அடிகூட விழும். ஊர்ல நாங்க எப்பவும் தனி டீமாதான் இருப்போம், ‘அவங்க’ கூட சேரமாட்டோம்" என்கிறார், பத்தாம் வகுப்பு படிக்கும் மணிவண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) .

தென் மாவட்டங்களில் ஜாதி தொடர்பான விஷயங்களில் நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறோம். இங்கு, பள்ளிக்கூடங்கள் கூட ஜாதி உணர்வோடுதான் இயங்குகின்றன. ஊர் என்றும், சேரி என்றும் கிராமங்கள் இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றன. இங்குள்ள  சிறுவர்களும் அங்குள்ள சிறுவர்களும் தனித்தனியாக வளர்கிறார்கள். ஒன்றாகப் படிக்க முடியவில்லை. ஒன்று  சேர்ந்து விளையாட முடியவில்லை.  பல அரசுப் பள்ளிகளில் கூட தலித் மாணவர்களும், தலித் அல்லாத மாணவர்களும் தனித்தனியாக அமர வைக்கப்படுகிறார்கள்" என்கிறார், எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர்.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு தலைமுறை ஜாதிய உணர்வோடும், மற்ற ஜாதிகள் மீதான விரோத மனப்பான்மையோடும் உருவாகி வருகின்றன. இந்த விரோதமும் வெறுப்பும் அவ்வப்போது வெடிப்பாக வெளிப்படுவதுதான் ஆங்காங்கே தலைதூக்கும் ஜாதி மோதல்கள். இதற்குக் காரணம் ஜாதி சங்கங்கள்.

உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் இவற்றின் இலக்கு தேர்தல். தேர்தலில் கூட்டணிப் பேரங்கள் நடத்தவும், இடங்களைக் கைப்பற்றவும், முடிந்தால் யாரோடாவது ஒட்டிக்கொண்டு ஆட்சியில் அமரவும், அப்படி அமர வாய்ப்புக் கிடைத்தால் அதில் தங்கள் குடும்பத்தினரைக் கொண்டு உட்கார்த்தவும் ஜாதியைப் பயன்டுத்துகின்றன இந்த அமைப்புகள். தேர்தல் நெருங்க நெருங்க இவை இத்தனை நாள் உள்ளுக்குள் மறைத்து வைத்திருந்த ஆசைகளை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கின்றன.  

ஜாதி அடிப்படையில் செயல்படும் அமைப்புகள் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை ஏன் நடத்துகின்றன? தங்களின் பலத்தைக் காண்பிப்பதற்காக, தேர்தலில் கூடுதல் சீட்டுகள் கேட்டு பெரிய கட்சிகளிடம் பேரம் பேசுவதற்கு, பெரிய கட்சிகளை மிரட்டுவதற்காக இவற்றை நடத்துகிறார்கள். எனவே, அதற்கெல்லாம் அனுமதி வழங்கக்கூடாது" என்கிறார், ஜாதிக் கலவரங்கள் குறித்து ஆய்வு செது பிஎச்.டி. பட்டம் பெற்ற போலீஸ் டி.ஐ.ஜி., ஜான் நிக்கல்சன்.

இவர்களது பதவி ஆசைகளுக்காக இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுவதுதான் கொடுமை. இளைஞர்கள் குறைந்தது இரண்டு விதங்களில் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். ஒன்று: வெறுப்பு அரசியலின் விளைவுகள். வெறுப்பு அரசியலைப் பின்பற்றியவர்கள், இறுதியில் அதற்கே பலியானதை வரலாற்றில் நெடுகப் பார்க்கிறோம். யூதர்கள் மீது நாசிகள் வளர்த்த வெறுப்பு, உலகப் போரில் வந்து முடிந்தது. அதன் இறுதியில் கணக்குப் பார்த்தால், பல்லாயிரக்கணக்கான ஜெர்மானியர்கள் இறந்து போனார்கள். அவர்களது குடும்பங்கள் யார் எங்கிருக்கிறார்கள் என அறிந்துகொள்ள இயலாத வண்ணம் சிதறிப் போயின. அறிவியலிலும் கலையிலும் மிகத் திறமை வாய்ந்தவர்களாகத் திகழ்ந்த அந்த மக்கள், பரிதாபமான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் தேசத்தை, வல்லரசுகள் துண்டாடிப் பங்கு போட்டுக் கொண்டன.

ஜெர்மனியின் கதை மட்டுமல்ல, வெறுப்பு அரசியல் தலையெடுத்த எல்லா இடங்களிலும்- ஆப்ரிக்காவில், மத்திய கிழக்கில், இலங்கையில், பாகிஸ்தானில்- எல்லா இடங்களிலும் இதுதான் நடந்தது.

ஆனால், அங்கெல்லாம் தலைதூக்கி நின்ற வெறுப்பு அரசியல் என்பது இரு இனத்திற்கிடையே, அல்லது மதத்திற்கிடையே மோதலாகப் பரிணமித்தது.  இங்கு வெறுப்பு அரசியல் தலைதூக்குமானால், அது தமிழர்களே தமிழர்களைத் தாக்கும் கொடுமையாக முடியும். இந்த அவலம் தமிழ்ச் சமூகத்திற்கு, தமிழ் இளைஞர்களுக்கு நிகழ்ந்து விடக் கூடாது.

இன்னொரு பாதிப்பு: தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளப்படுதல். இளைஞர்கள் அவர்களது தோல்விகளுக்கு, அவர்களுக்கான வாய்ப்புகள் வேறு யாராலோ பறிக்கப்பட்டதுதான் காரணம் என நம்ப வைக்கப்படுவதால், அவர்கள் தங்களைத் தாங்களே சுய ஆய்வு செய்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள். தங்களுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதே அவர்களுக்குக் கடைசிவரை தெரியாமல் போய்விடும். இதனால், வெற்றி பெற்றவர்கள் மீது எப்போதும் சந்தேகமும் தங்கள் மீது ஓர் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு, முன்னேற்றம் இல்லாமலே முடங்கிப் போகிறார்கள்.   

சமூக யதார்த்தங்கள் ஜாதி அமைப்புகளால் மறைக்கப்படுகின்றன அல்லது திரிக்கப்படுகின்றன. அண்மைக்காலமாக, குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில் விவசாயம் பெரும் வீழ்ச்சி கண்டது. இந்த வீழ்ச்சியை அரசுகள் - குறிப்பாக மத்திய அரசு - பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகள் விரைவுபடுத்தின. இதன் விளைவாக பாரம்பரியமாக விவசாயத்தையும், சிறு வணிகத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளானார்கள். ஆனால், ஜாதிச் சங்கங்களால் உருவான கட்சியினர் இந்தக் கொள்கை முடிவுகளை எடுத்த அரசில் அங்கம் வகித்தார்கள்.  இந்த யதார்த்தங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக காதல் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள் இவற்றை எதிர்ப்பதில் முனைப்புக் காட்டுகின்றன. அப்படிச் செய்வதன் மூலம் தாங்கள் விரும்பும் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான உரிமையை மறுக்கிறார்கள். அதாவது ஜாதியைத் தூக்கிப் பிடிக்கிற முனைப்பில் பெண் உரிமை என்பது கைவிடப்படுகிறது.

ஒரு தலைமுறையினரிடம் வன்மத்தை விதைப்பது, சமூக நல்லிணக்கத்தைச் சிதைப்பது, தமிழர்களை தமிழர்களுக்கு எதிராக நிறுத்துவது, வாக்கு வங்கி அரசியலை வலுப்படுத்துவது, பெண் உரிமையை மறுப்பது, பழங்காலத்துச் செதிகளை மிகைப்படுத்தி ஆண்ட பரம்பரை என்ற போதையில் இன்றைய சமூக யதார்த்தங்களை மரத்துப் போகச் செய்வது இவையெல்லாம் ஜாதிச் சங்கங்கள் சமூகத்திற்கு அளித்திருக்கும் ‘பரிசுகள்’. இதுபோன்ற பல தீமைகளுக்கு ஆதாரமாக இருக்கும் ஜாதி அமைப்புகளைத் தடை செய்தால் என்ன?

தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்றால், ஜாதிய அமைப்புகளை தடை செய்யவேண்டும். ஜாதிய அமைப்பை உருவாக்கி, அதைப் பலப்படுத்தி அதன் பிறகுதான் ஜாதிக்கட்சியைத் தொடங்குகிறார்கள். எனவே, ஆரம்பத்திலேயே ஜாதிய அமைப்புகளை தடை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்" என்கிறார் போலீஸ் டி.ஐ.ஜி., ஜான் நிக்கல்சன்.

ஆனால், இருக்கிற அதிகாரங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக கட்சிகளையும் அமைப்புகளையும் மேல் ஜாதியினர் வைத்திருக்கின்றனர். கீழ் ஜாதியினர் என்று சொல்லப்படுபவர்கள், புதிய அதிகாரங்களைத் தேடுவதற்காக அமைப்புகளையும் கட்சிகளையும் வைத்திருக்கிறார்கள். எனவே, மேல் ஜாதியினரின் அமைப்புகளையும் கட்சிகளையும் தடை செய்வதில் தவறில்லை. புதிய அதிகாரங்களைத் தேடுகிற ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சிகளைத் தடை செய்யக்கூடாது" என்கிறார், பண்பாட்டு ஆய்வாளரான பேராசிரியர்  தொ.பரமசிவம்.

ஏறத்தாழ இதேபோன்ற கருத்துகளை பேராசிரியர் கல்விமணியும் எதிரொலிக்கிறார்.  ஜாதிக்கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு கருத்து உடன்பாடு இல்லை. நாங்கள் இருளர் சங்கம் வைத்திருக்கிறோம். நாளைக்கே இது அரசியல் கட்சியாக மாறலாம். இருளர் மக்களின்   பிரச்சினைகளை யாருமே பேசுவதில்லை. அதனால், அந்த மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக அந்த அமைப்பு தேவைப்படுகிறது" என்பது அவரது வாதம்.

தேர்தலின்போது பின்பற்ற வேண்டிய மாதிரி நன்னடத்தை விதிகளை வகுத்துள்ள தேர்தல் ஆணையம் அந்த விதிகளில் முதல் விதியாக ஜாதி, மொழி, மத ரீதியாக ஏற்கெனவே இருந்துவரும் வேறுபாடுகளை அதிகப்படுத்தும் விதமான எந்தச் செயலையும்  அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ மேற்கொள்ளக் கூடாது எனக் கூறுகிறது. ஆனால், அப்படி நடந்துகொள்ளும் கட்சிகள் தடை செய்யப்படும் என்பதற்கான குறிப்போ, தடை செய்யப்பட்ட வரலாறோ இல்லை. இது ஜாதி அமைப்புகளைத் தடை செய்வது நடைமுறையில் முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஜாதிக்கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஜாதிக்கட்சிகளை தடை செய்வது நல்ல விஷயம்தான். ஆனால், தேர்தல் ஆணையம் உறுதியோடு இருந்தால் அதைச் செய்ய முடியும். இதில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுகிற கட்சிகளை ஜாதிக்கட்சி என்ற பெயரில் தடை செய்தால், அந்த மக்கள் பெரிய கட்சிகளில் சேர்ந்து விடுவர். அங்கு அவர்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் கிடைக்காது" என்கிறார், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகப் புறக்கணிப்பு மற்றும் சேர்த்தல் கோட்பாட்டுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் பெ.ராமஜெயம்.

அப்படியானால் என்னதான் தீர்வு?

ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை உத்தரவாதம் செய்யப்படும்போது, இடைத்தட்டு ஜாதியினரின் ஆதிக்கம் குறையும். எனவே, மேற்குவங்கத்தைப்போல தமிழ்நாட்டிலும் சரியான நிலப்பங்கீட்டு முறை கொண்டுவர வேண்டும். தலித் மக்களுக்கான பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும். வன்னியர்களுக்கான மண்ணவேடு கிராமங்களையும் மீட்டுக் கொடுக்க வேண்டும்"  என்கிறார், பேராசிரியர் தொ.பரமசிவம்.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், காதல் திருமணம் ஆகிய இரண்டும்தான் இன்றைய பிரச்சினை. வன்கொடுமை  சட்டம் கட்டாயம் தேவை. அது இன்னும் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். காதல் திருமணம் என்பது இன்றைய காலத்தில் தவிர்க்க முடியாதது. தடுக்க முடியாதது. இதற்கு ஆதரவான கருத்துகளை முன்வைப்பதன் மூலமாகவும், விவாதங்கள் நடத்துவதன் மூலமாகவும் ஆதிக்க ஜாதியினரின் பிற்போக்குக் கருத்துகளைத் தனிமைப்படுத்த வேண்டும்" என்கிறார், பேராசிரியர் கல்வி மணி.

ஆனால், வன்கொடுமை தடுப்புச்  சட்டம் பாதிக்கப்படுபவர்களுக்குப் போதிய பாதுகாப்பைத் தந்திருக்கிறதா?

இச்சட்டத்தின்கீழ் பதியப்படும் புகார்களின் விகிதத்துடன் ஒப்பிடும்போது, தண்டனை விகிதம் குறைவாகத்தான் இருக்கிறது. ஏனெனில், இந்த வழக்குகள் 3 ஆண்டுகள் அல்லது  5 ஆண்டுகள், சில சமயம் 10 ஆண்டுகள் கழித்துகூட,  நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து,  சாட்சிகளுக்கு அச்சம்பவம் குறித்து எந்தளவுக்கு நினைவு இருக்கும்? மேலும் மிரட்டல், பணபேரம் போன்ற நடவடிக்கைகள் மூலம் சாட்சிகள் பின்வாங்க வைப்பதும் நடக்கிறது. 3 மாதங்களில் அல்லது 6 மாதங்களில்  விசாரணைக்கு வந்தால், நிச்சயம் நியாயம் கிடைக்கும். நான்கூட, இரட்டைக் கொலை வழக்கு ஒன்றில் 47 நாட்களில் இரட்டை ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். எனவே, முடியாத காரியம் எதுவுமே இல்லை" என்கிறார், ஜான் நிக்கல்சன்.

ஜாதி போன்று பல நூறாண்டுகளாக சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் விஷயங்களை சட்டம், விதிகள் போன்றவற்றால் மட்டும்  மாற்றிவிட முடியாது. ஜாதிகள் இருக்கின்றன என்பதைவிடக் கொடுமையான விஷயம், அவை அமைப்பு ரீதியாகக் கட்டமைக்கப்பட்டு, அந்த அமைப்புகள் அரசியல் லாபங்களுக்குப் பயன் படுத்தப்படுகின்றன என்பதுதான். எனவே, அதைக் குறித்த விழிப்புணர்வு, குறைந்தபட்சம் எச்சரிக்கை உணர்வாவது இளைய தலைமுறைக்குத் தேவை.

வெள்ளி, 10 மே, 2013

‘ஐகிட்’ வாண்டு?

உங்கள் வீட்டிலும் இருக்கிறதா ஒரு, ‘ஐகிட்’ வாண்டு?
அப்படின்னா, நீங்கதான் அவசியம் இதைப் படிக்கணும்!
கீதா, யுவகிருஷ்ணா


நாலரை வயது நிலா, யூ.கே.ஜி. தேறி ஒன்றாம் வகுப்புக்குச் செல்கிறாள். அப்பாவின், ‘ஐபேட்’தான் அவளுடைய விளையாட்டுக் களம். ‘ஐபோன் அப்ளிகேஷன்’களாக கிடைக்கும் நூற்றுக்கணக்கான ‘கேம்’களை விளையாடி அலுத்துவிட்டாள். இந்தக் கோடை விடுமுறையைக் கழிக்க, ‘ஃபன்புக்’ வாங்கித்தரும்படி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். புதுசு புதுசாக வரும், ‘டச் ஸ்க்ரீன் கேட்ஜட்’களைப் பற்றி எப்படித் தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தைக்குத் தெரியவருகிறது என்று ஆச்சரியப்படுகிறார் அப்பா.

சாப்பிடும், தூங்கும் நேரத்தைத் தவிர்த்து மீதி நேரங்களில் டச் ஸ்க்ரீன் கருவியை நோண்டியபடியே இருக்கும் குழந்தைகளை செல்லமாக, ‘ஐகிட்ஸ்’ என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அயல்நாடுகளில். விஞ்ஞானிகள் இவர்களுக்கு, ‘டிஜிட்டல் நேட்டிவ்ஸ்’ என்று புதுப்பெயர் சூட்டுகிறார்கள்.

குழந்தைகளுக்கு ஏன் டச் ஸ்க்ரீனை ரொம்பப் பிடிக்கிறது?

கம்ப்யூட்டரிலோ, டி.வி.யிலோ விளையாட வேண்டும் என்றால் கீபோர்டையோ, மவுஸையோ, ஜாஸ்டிக்கையோ எப்படிப் பிடிக்க வேண்டும்,  பயன்படுத்த வேண்டும் என்று தனியாகக் கற்றுக்கொள்ள வேண்டும். டச் ஸ்க்ரீன் கருவிகளுக்கு விரல்களே போதுமானவை. எழுத்துக்களாக போர் அடிக்காமல், கலர் கலர் காட்சிகளாக விரிவதுதான் டச் ஸ்க்ரீன் அப்ளிகேஷன்களின் அடிப்படைக் கவர்ச்சி. கற்பது தொடர்பான அப்ளிகேஷன்கள் கல்வி கற்பிக்கிறோம் என்கிற டீச்சர்த்தனமான அடாவடியாக இல்லாமல், விளையாட்டு போலவே நட்புப்  பாராட்டி, விஷூவலாக சொல்லிக் கொடுக்கிறது. தவறு செய்யும்போது திட்டாமல், மண்டையில் குட்டாமல், சரியாக எப்படிச் செய்வது என்று கற்றுக் கொடுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக டி.வி., கம்ப்யூட்டர் மாதிரியாக இல்லாமல் இக்கருவிகளை, தானே கட்டுப்படுத்த முடிகிறது என்கிற அதிகாரம் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.

அண்மையில் வெளியாகியுள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் தொடுதிரைக் கருவிகள் (ஸ்மார்ட் போன், டேப்லெட்) போன்றவை, குழந்தைகள் பல விஷயங்களை எளிதாகக் கற்றுக் கொள்வதற்கு உதவும் என்று தெரிவிக்கிறது.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், புதிய தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். எனவே டேப்லெட், ஸ்மார்ட் போன் போன்றவற்றைக் கொடுத்தால் அந்தத் தொழில்நட்பத்தை பெரியவர்களைவிட விரைவாக கற்றுக் கொள்வார்கள். குறிப்பாக டச் ஸ்கிரீன் கம்ப்யூட்டரில் இருக்கும் விளையாட்டுக்கள், காணொளிகள் போன்றவற்றை குழந்தை தொடத் தொட புதிய தகவல்கள், படங்கள், ஒலிகள் அல்லது காணொளிகள் வந்த வண்ணம் இருந்தால், அது குழந்தையின் கற்கும் திறனை ஊக்குவிக்கிறது. இந்தத் தொடுதிரையுடன் அதிகமாகப் புழங்கும் குழந்தைகள், அதில் சொல்லப்படும் விஷயங்களை எளிதாக உள்வாங்கிக் கொள்கின்றன" என்கிறார், இந்தப் புதிய ஆய்வை நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஹெதர் கிரிகோரியன்.
ஆனால், தொடுதிரைக் கருவிகள் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்கிறார்கள் உளவியலாளர்கள். சிறுவயது அனுபவங்கள்தான் குழந்தைகளின் வாழ்க்கைக்கான அஸ்திவாரம். தொடுதிரை கருவிகளைக் கொண்டு அறைக்குள் அடைந்துவிடும் குழந்தைகளுக்கு வெளியுலகைப் பற்றி என்ன பெரிய அனுபவம் கிடைத்துவிடும் என்பது இவர்களது முதன்மையான கேள்வி.

உளவியலாளர்கள் மட்டுமல்ல, குழந்தைகள் நல மருத்துவர்களும் கவலை தெரிவிக்கிறார்கள். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர். ஜெயந்தினி, ‘தற்போதுள்ள தொழில்நுட்பங்களை அவசியம் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். ஆனால், 5 வயதிற்குமுன் இதுபோன்ற விஷயங்களில் குழந்தைகளைப் பழக்குவதில் மருத்துவ ரீதியில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. மூளையில் உள்ள நியூரான்களின்மேல் மெல்லிய உறை (axon) இருக்கும்.

5 வயதாகும்போதுதான் இவை முழுமையாக வளர்ச்சி அடையும். அதிக நேரம் கணினி, டி.வி. என்று மின் சாதனப் பொருட்களுடன் குழந்தை செலவிடும்போது, இந்த மெல்லிய உறையின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

சில குழந்தைகளுக்குப் பேசுவதில், புதிய விஷயங்களைக் கற்பதில் தாமதம் ஏற்படும். அப்படிப்பட்ட குழந்தை அதிக நேரம் டேப்ளட்டுகள், டச் ஸ்கிரீன்களுடன் இருந்தால் பேசுவது, கற்றுக் கொள்வது மேலும் தாமதமாவதற்கான வாய்ப்புகள் அதிகம். கம்ப்யூட்டருடனேயே அதிக நேரம் செலவிடும் குழந்தை, physical activities என்று சொல்லப்படும் உடல் ரீதியான செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாமல் வளரும். இதனால், ஆரோக்கியம் பாதிக்கப்படும். Socialization எனப்படும் மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவது, விளையாடுவது போன்ற விஷயங்களை இயல்பாக கற்றுக்கொள்ளாமல் தனிமையாக இருக்கும்.  மணிக்கணக்கில் காணொளியாகவே பார்த்து கற்கப் பழகும் குழந்தை, காலப்போக்கில் எதையும் காட்சிகளாக காட்டினால்தான் புரிந்து கொள்ளும்" என்கிறார்.

நம் கண்கள், தலையைத் திருப்பாமலேயே சாதாரணமாக வலப்பக்கம் 60 டிகிரி, இடப்பக்கம் 60 டிகிரி பார்க்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. ஆனால், இளம் வயதில் நேர் பார்வையாக டி.வி., கணினி போன்றவற்றைப் பார்க்க கண்களைப் பழக்கப்படுத்தாவிட்டால், வளர்ந்த பிறகு விழிகளை நகர்த்துவது கூடப் பெரிய வேலையாகத் தோன்றும் என்கிறார்கள் சிலர்.

குழந்தைகளுக்கு தொடுதிரைக் கருவிகள் நல்லதா, கெட்டதா? தெரியலையேங்க!
 


தொடுதிரை எப்படி வேலை செய்கிறது?

‘தொட்டால் பூ மலரும்’. இது எம்.ஜி.ஆர். காலப் பாட்டு. ஆனால் செல்போன், ஏ.டி.எம். இயந்திரம், டேப்லெட் எனப்படும் பலவகைக் கணினி இப்படிப் பலவற்றைத் தொட்டால் உயிர் பெறும் என்பது இன்றைய அறிவியல் அற்புதம்.

எப்படி இது சாத்தியமாகிறது?

உங்கள் செல்போனின் முகம் போலிருக்கும் கண்ணாடித் திரையை இரண்டு அடுக்குகள் மூடி இருக்கின்றன. ஒன்று, தொடுவதை இயந்திரத்திற்கு உணர்த்தும் கடத்தி (conductive layer). மற்றொன்று, தடை/மாற்றம் ஏற்படுத்தும் உலோக அடுக்கு (Resistive metallic layer). இந்த இரு அடுக்குகளிடையே ஒரு சிறிய மிகச் சிறிய இடைவெளி. இந்த வெளியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் விரலால் அழுத்தியதும், இரண்டு அடுக்குகளும் அழுத்தப்பட்ட புள்ளியில் சந்திக்கின்றன. அதனால், மின்னோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தையும், அது எங்கு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் கைபேசிக்குள் இருக்கும் கணினி கவனிக்கிறது. உடனே ஒரு டிரைவர் மூலம் அது கணியின் இயங்குதளத்திற்கு அது புரிந்துகொள்ளும் வகையில் தகவல் அனுப்புகிறது. நீங்கள் மேசைக்கணினியைப் பயன்படுத்தும்போது, மௌசை நகர்த்தும்போது அது ‘புரிந்து’ கொள்கிறதல்லவா? அதே போல்தான் இது.

இது ஒரு முறை. இன்னொரு வகைக் கருவிகளும் இருக்கின்றன. அவை capacitive என்ற முறையில் இயங்குகின்றன. இதன் அடிப்படை, எளிமையான ஓர் உண்மை. மனிதன் என்பவன், ஓர் உயிர் என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்தப் பொறியாளர்கள் அவனை ஒரு ஒயர் என்றும் பார்க்கிறார்கள். அதாவது அவனாலும் மின்சாரத்தைக் கடத்த முடியும்.

செல்போனின் கண்ணாடித் திரைக்குமேல் மின்சாரத்தை சேமித்து வைத்திருக்கும் ஓர் அடுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் திரையைத் தொடும்போது, அந்த சேமித்து வைக்கப்பட்ட மின்சாரத்தில் கொஞ்சூண்டு உங்கள் விரல் வழியே கடத்தப்படுகிறது. அதனால், திரைமேல் உள்ள அடுக்கில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு குறைகிறது. ஐய்யய்யோ, கையிருப்பு குறைஞ்சு போச்சே என்கிற தகவல், கருவியின் மூளைகளில் ஒளிந்துள்ள சர்க்யூட்களால் டிரைவர்களுக்கு, அதற்குப்பின் மேலே உள்ளது போல்தான். கணினி டிரைவர்கள் இயங்குதளத்தை இயக்க வேலை நடக்கிறது.

இந்தத் தொழில்நுட்பம் 1965-லேயே இ.ஏ.ஜான்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அது பிரபலமாகியிருப்பது அண்மைக்காலத்தில்தான்.

இன்னொரு சின்ன விஷயம், ஜான்சனுக்கு முன்பே இயற்கை இதைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது. சான்று: தொட்டாற்சிணுங்கி என்று ஒரு செடி இருக்கிறதே, பார்த்திருக்கிறீர்களா?

சொல்லக் கொதிக்குது நெஞ்சம்

சொல்லக் கொதிக்குது நெஞ்சம்
ஜவ்வாதுமலையிலிருந்து பூ.சர்பனா

சில்லறைக் காசுகளை அள்ளிவீசியதுபோல சிரித்தபடி சந்தையை நோக்கி வந்துகொண்டிருந்தது அந்த சின்னஞ்சிறு இளம்பெண்களின் கூட்டம். அளவுக்கு அதிகமாகப் பவுடர் பூசப்பட்ட முகம்... காதில், கழுத்தில் ஜொலிஜொலிக்கும் கம்மல்... நெக்லஸ் இன்ன பிற அழகிய நகைகள்... தலை நிறைய பூ... கிட்டத்தட்ட ஒரு மணப்பெண்ணைப் போன்ற அலங்காரம். ஆனால், மணம் முடிப்பதற்கான வயது இல்லை.  எல்லோருக்குமே கிட்டத்தட்ட 12 வயசிலிருந்து 15 வயசுக்குள்தான் இருக்கும்.

அதுவரை எங்குதான் காத்துக்கொண்டிருந்தார்களோ, 16 வயதிலிருந்து 20 வயதிற்குள் இருக்கும் சிறுவர்கள்/இளைஞர்கள் பதுங்குகுழிக்குள்ளிருந்து படை எடுத்து வருவதுபோல அந்த சின்னஞ்சிறு சிறுமிகளை நோக்கி பீடுநடை போட்டு வந்துகொண்டிருந்தார்கள். அந்தச் சின்னஞ்சிறு சிறுமிகளின் கண்களிலும் ஒருவித தேடல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

பதினேழு வயதுகூட நிரம்பியிருக்குமா தெரியவில்லை அந்தச் சிறுவனுக்கு. பதினான்கு வயது இருக்கலாம் அந்தச் சிறுமிக்கும். அவன், இவளைப் பார்த்து கண்ணசைக்கிறான். அவளும் அவனைப் பார்த்து கண்ணசைக்கிறாள். இரண்டு கண்களும் என்ன பேசுகின்றன என்று நமக்கு நன்றாகவே புரிகிறது. அவனுக்கு இவளைப் பிடித்துவிட்டது. அவன் இவளிடம் சம்மதம் கேட்கிறான். இவளும் கிரீன் சிக்னல் கொடுக்கிறாள். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்தச் சிறுவன் இவளை நோக்கி வர... அந்தச் சிறுமியும் அவனை நோக்கிப் பெருமகிழ்ச்சியோடு செல்கிறாள். அந்தச் சிறுமியோடு வந்த மற்ற சிறுமிகள் ஒருவிதப் பொறாமையுடன் கண் சிமிட்டி வழியனுப்புகிறார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே அவன் கரம்பற்றி அவனுடன் செல்கிறாள்.

இரண்டு  பேரும் 6 மாதமோ ஒரு வருடமோ திருமணம் செய்துகொள்ளாமல்  கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்வார்கள்.  அதன்பின் இந்தச் சின்னஞ்சிறுசுகள் விரும்பினால், திருமணம் செய்துகொள்வார்கள். பிடிக்கவில்லை என்றால், பிரிந்து விடுவார்கள். இவர்களுக்குப் பிடித்திருந்தால், திருமணம் செய்து வைக்கவும் பிடிக்கவில்லை என்றால், பிரித்து வைக்கவும் ஒரு  தலைவர்  இருக்கிறார். அவருக்கு வயது பதினைந்து.

இது ஏதோ அப்பா-அம்மா விளையாட்டு இல்லை. உண்மையாவே நடந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம்.அதுவும் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் விஷயம். ‘புதிய தலைமுறை’ ஜவ்வாது மலைக்கு இந்த ஏப்ரல் மாதம் நான்கு முறை நேரில் சென்று கண்கூடாகக் கண்ட விஷயம்.

ஜவ்வாது மலையில் நடக்கும் கிராமச் சந்தைகளில் இளம் சிறுமிகள்  கல்யாணம் செய்துகொள்ளப்படாமலேயே ஆண்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்றும், குழந்தைத் திருமணங்கள் நிறைய நடக்கின்றன என்றும், 30 வயதிற்குள்ளாகவே விதவையான இளம் பெண்கள் வீட்டுக்கொருவர் இருக்கிறார்கள் என்றும் கிடைத்த தகவல்கள் உண்மைதானா எனப் புலனாய்வு செய்யக் களம் இறங்கியது ‘புதிய தலைமுறை’.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஜவ்வாதுமலை. ஜவ்வாதுமலையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நம்மியம்பட்டு சந்தை. புதன்கிழமை மதியம் 1 மணி.

அங்கே நாம் பார்த்ததுதான் நீங்கள் முதல் மூன்று பத்திகளில் படித்த காட்சி. மனம் பதைக்க விஷயங்களைத் துருவத் தொடங்கினோம். யாரிடம் பேசத் தொடங்கினாலும், நாம் அயலூர்க்காரர்கள் என்றதும் குறுக்கெழுத்துப் போட்டியைப் பார்ப்பதுபோல் நம்மை மேலிருந்து கீழாகவும், வலமிருந்து இடமாகவும் பார்த்து விட்டு ஒரு டெரர் லுக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்கள்.

சந்தைக்கு வந்த ஓர் இளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தோம். 23 வயதுகூட நிரம்பாத அந்தப் பெண்ணின். பெயர் மஞ்சுளா. ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன், மூன்று வயதே ஆன பெண் குழந்தை இவர்களுடன் சந்தைக்கு வந்திருந்தார்.  

எனக்கு பதிமூணு வயசிருக்கும். அப்போதான் இந்த நம்மியம்பட்டு சந்தைக்கு வந்தேன். வூட்டுல இருக்கிற பொண்ணு  வயசுக்கு வந்துட்டா அப்பா, அம்மா சந்தைக்கு அனுப்பி வுட்டுடுவாங்க. சந்தையில எங்களுக்கு யாரைப் புடிச்சிருக்கோ, அவங்கக்கூடப் போய் வாழுவோம். கொஞ்ச நாளு குடும்பம் நடத்துன பெறகு ரெண்டு பேருக்கும் பிடிச்சியிருந்தா, 6 மாசம் இல்லன்னா ஒரு வருஷம் கழிச்சி கட்டிக்குவோம். அப்படிப்  பிடிக்கலன்னா, கொழந்தை இருந்தாலும், வேணாம்னு சொல்லி கட்டின ஆம்பளைங்க அம்மா வூட்டுக்கே கூட்டிட்டு வந்து வுட்ருவாங்க. பாதிக்கப்பட்ட பொண்ணுங்க ஊரு நாட்டார்கிட்ட பஞ்சாயத்துக்குப் போனா மட்டுந்தான், கூட வாழ்ந்தவன் கிட்டேயிருந்து ஆயிரக்கணக்குல கொஞ்சம் பணம் கெடைக்கும். பையனைப் புடிக்கலன்னா பொண்ணுங்களும் பிரிஞ்சி வந்து, வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாம்தான்.அதுக்கும் யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க.ஆனா, இங்க வாழ்ந்து பார்த்துட்டு  பொண்ணு வேணாம்னு சொன்ன பசங்கதான் அதிகம்.

எங்கம்மாவும் நான் வயசுக்கு வந்தவுடனே இப்படித்தான் என்னையும் சந்தைக்கு அனுப்புச்சு. இங்கதான் வூட்டுக்காரர் சுப்பிரமணியத்தைப் பார்த்தேன். எனக்கும் அவருக்கும் புடிச்சுட்டதால அம்மாகிட்ட சொல்லிட்டு, அவரு வூட்டுல போயி குடும்பம் நடத்த ஆரம்பிச்சேன்.ஒரு வருசங் கழிச்சு, கர்ப்பமா ஆன பின்னாடிதான் நாட்டாரு முன்னால தாலி கட்டினாரு. அடுத்தடுத்து ரெண்டு  கொழந்தைங்களும் பொறந்துடுச்சு. எங்க வாழ்க்கை நல்லாத்தான் போக்கிட்டிருந்துச்சு. சில வருசத்துக்கு  முன்னாடி என் ஊட்டுக்காரரு என்ன நெனைச்சாரோ தெரியல... ‘உன்னைய  எனக்குப் புடிக்கல. ஒங்கம்மா வூட்டுக்கே போ’ன்னு  சொல்லி இடுப்புலயும், கையிலயும் இருந்த ரெண்டு கொழந்தைங்களோட என்னை அனுப்பி வச்சிட்டு, இப்போ வேற பொண்ணுகூட வாழ்ந்துட்டு இருக்காரு.

ஊரு நாட்டார்கிட்டப் போய் புகார் செஞ்சாலும் பையனுக்குப் புடிக்கலன்னா பிரிஞ்சிடச் சொல்லுவாங்க.அவங்க தீர்ப்பை மீறி போலீசுக்குப் போனா, ஊரைவுட்டே ஒதுக்கி வச்சிடுவாங்க. நான் படிக்காதவ. எந்த வெவரமும்  தெரியாது. அம்மா வூட்டுல இருந்துக்கிட்டு இந்த ரெண்டு கொழந்தைங்களையும் வெச்சுக்கிட்டு தினம் தினம் செத்துக்கிட்டிருக்கேன்கா. என்னை மாதிரியே  நிறையப் பொண்ணுங்க ரொம்பக் கஷ்டப்பட்டுக்கிட்டு வெளியில தெரியாம கிடக்கறாங்க.  எங்களுக்கு சொல்லிக்கற மாதிரி எந்த வருமானமும்  கெடையாது. நான் படிக்காததுனாலதான் இந்த நெலமைக்கு தள்ளப்பட்டிருக்கேன்னு மட்டும் புரியுது. எம்புள்ளையாவது படிச்சு, நல்லபடியா வரணும்னு வைராக்கியத்தோடு இப்போ பள்ளிக்கொடத்துல ஒண்ணாவது சேர்த்துவிட்டிருக்கேன். எனக்கு அம்மா மட்டுந்தான். அப்பா சின்ன வயசுலேயே சாராயம் குடிச்சே எறந்து போயிட்டாரு. இன்னும் எத்தனை நாளைக்கு உசுரோட இருந்து எம் புள்ளைங்களை காப்பாத்துவேன்னு தெரியல" என்று பெரியவேர்ப்பட்டு என்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் மஞ்சுளா கண்ணீர் வடித்தார்.

படிக்கவேண்டிய வயதில் திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளையும் பெற்றுவிட்ட மஞ்சுளாவைப் போன்று இங்கு இன்னும் எத்தனை எத்தனை மஞ்சுளாக்கள்!  கொஞ்ச நேரத்துக்குமுன் நம் கண் முன்னாலே போன அந்தச் சிறுமியின் நிலைமையும் இப்படித்தான் ஆகிவிடுமோ என்று நினைத்தபோது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி மனதில் ஏற்பட்டது.

இவர்களுக்கெல்லாம் திருமணம் செய்துவைக்கும் நம்மியம்பட்டு  ஊர் நாட்டாரைச்  சந்திக்க அவரது வீட்டுக்குப் போனோம். நாட்டார்  வீட்டில் கண்ட காட்சி,  சந்தையைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதிர்ச்சிக்குக் காரணம், அந்த நாட்டாமைக்கு வயது 14! நம்மை நோக்கி கம்பீரமாக வந்தார். அறிமுகமில்லாத நபர் என்று நம்மைப் பார்த்ததும் அவரது முகத்தில் கொஞ்சம் கூச்சம் இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் கம்பீரமாக நம்மிடம் பேசினார்.

நாலாவது வரைக்கும் படிச்சிருக்கேங்க. இப்போ எனக்கு 14 வயசாவுது.எங்க தாத்தாவுக்குப் பெறகு நான்தான் நாட்டாரா வரணும்னு 9 வயசுலேயே படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு, அடுத்த நாட்டாரா பட்டம் கட்டிட்டாங்க. எங்க தாத்தாவைப் போலவே 18 கிராமத்துக்கும் கடந்த 4 வருசமா நான்தான் நாட்டாரா இருந்துக்கிட்டு வர்றேன். இங்க ஊராட்சி மன்றத்தலைவருங்களவிட நாட்டாருங்களுக்குத்தான் செல்வாக்கு அதிகமுங்க. என் கட்டுப்பாட்டுல இருக்கற  ஊருல யாரு கல்யாணம் பண்ணினாலும் கால்ல வுழுந்து ஆசீர்வாதம் வாங்கி, என் கையால தாலி எடுத்துக் கொடுத்தா மட்டுமே   மாப்புள்ளை,  பொண்ணு  கழுத்துல தாலி கட்டுவாங்க. கல்யாணம் பண்ணிக்காம ஒண்ணா சேர்ந்து வாழும்போது, பையனுக்கும் பொண்ணுக்கும் புடிக்கலன்னா நான்தான் பஞ்சாயத்துப் பண்ணி பிரிச்சு வுடுவேன்" என்று 14 வயதே ஆன நம்மியம்பட்டு நாட்டார் செத்தியராஜ் நம்மிடம் பெருமையாகக் கூறிக்கொண்டிருக்க, அவரது அப்பா முத்துசாமி பேச்சைத் தொடர்ந்தார்... இந்த ஊரைப்  பொருத்தவரைக்கும் எம்புள்ளை பேச்சைத்தான்   எல்லாருமே கேப்பாங்க. அப்படி யாரு மீறினாலும் அவ்ளோதான். ஒதுக்கி வச்சிடுவோம்"  என்று தன்னுடைய நாட்டார் பெருமையை நிலை நாட்டினார். அவரிடம்  சந்தையில் கண்ட காட்சிகளைப் பற்றிக் கேட்டபோது,  இங்க பொண்ணு வயசுக்கு வந்த கொஞ்ச நாளுலேயே சந்தைக்குப் போயி மாப்புள்ளையைப் புடிச்சிக்குவா. கூடி வாழ்ந்து பார்த்துட்டு, கல்யாணம்  பண்ணிக்கறவங்களும் இருக்காங்க. புடிக்காம பிரிஞ்சு போறவங்களும்  இருக்காங்க. அப்படிப் பிரியறவங்கள்ல அதிகமா பொண்ணுங்களுக்குத்தான் பாதிப்பு. சில பொண்ணுங்க வேற கல்யாணம் செஞ்சுக்குவாங்க. இன்னும் சிலபேரு கொழந்தையை வெச்சுக்கிட்டு அம்மா வூட்டோடவே இருப்பாங்க. வாழாம பிரிஞ்சி போற எல்லாப் பிரச்சினைகளுமே பஞ்சாயத்துக்கு வராது.வாழ்ந்த பையன்கிட்ட இருந்து நஷ்டஈடு வாங்கணும்னு துணிச்சலா  எப்பவாவதுதான்  சில பொண்ணுங்க  வரும்ங்க. பையன்கிட்ட இருந்து 5,000 ரூபாய்  வரைக்கும்  நஷ்டஈடா  வாங்கிக் கொடுக்கறோம். சேர்ந்து  வாழப் புடிக்கலன்னா, அவங்களை கட்டாயப் படுத்தமாட்டோம்" என்கிறார்.

நம்மியம்பட்டில் புதன்கிழமை சந்தை என்றால், ஜமுனாமரத்தூரில்  வாரந்தோறும் திங்கட்கிழமை அதைவிட பெரிய சந்தை கூடுகிறது. ஜமுனாமரத்தூர் சந்தைக்குப்  பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தோம்.   பட்டறைக்காடு என்ற நிறுத்தத்தில் தங்களை மணப்பெண்போல ஜோடித்துக்கொண்டு நாலைந்து சிறுமிகள் ஏறினார்கள். அவர்களில்  சௌந்தரி என்ற சிறுமிக்கு  வயது 14 இருக்கலாம். அவளுடன் வந்த இன்னொரு சிறுமிக்கு 15 இருக்கும். இதைவிடக் கொடுமை, வயதுக்கு வந்து 2 மாதங்கள்கூட ஆகாத 12 வயதே ஆன அகிலா என்ற சிறுமியும் தாவணி கட்டிக்கொண்டு இவர்களுடன் சந்தைக்குச் செல்கிறாள் என்பதுதான்.  

ஜமுனாமரத்தூரில் பஸ்ஸை விட்டு இறங்கியவுடன், நம்முடன் பேசிக்கொண்டு வந்த சிறுமிகள், பையில் எடுத்து வந்த சிறுகண்ணாடியில் ஓரமாக நின்று தங்களை எப்படி இருக்கிறோம் என்று ஒருமுறை பார்த்துக்கொள்கிறார்கள். ‘என்ன வாங்கப் போறீங்க?’ என்று  கேட்டபடியே சந்தையில் நடந்தபோது, 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனைப் பார்த்தவுடன் நம்முடன் பேசிக் கொண்டிருந்த சௌந்தரி முகத்தில் ஒருவிதச் சிரிப்பும் பரபரப்பும்  தொற்றிக்கொண்டது. ‘யார் அது?’  என்று சௌந்தரியிடம் கேட்டபோது, முகத்தில் வெட்கம் பரவ தயங்கிப் பேச ஆரம்பிக்கிறாள்.  நான் அவருகூட அடுத்த மாசத்துல இருந்து வாழப்போறன்க்கா. இந்த ஜமுனாமரத்தூர் சந்தையிலதான் ரெண்டு பேரும் பார்த்தோம். இங்க பொண்ணு வயசுக்கு வந்துட்டா போதும், அதுதான் கல்யாணம் பண்றதுக்குத் தகுதி. நான் போன வருசம்  வயசுக்கு வந்தேன். பிடிச்சுருந்தா வாழுவோம். இல்லன்னா பிரிஞ்சு, பிடிச்சவங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாம். எத்தனை முறை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். எந்தத் தடையும் இல்ல" என்றவளை, வாழ்த்த மனமில்லாமல் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

என்னக்கா அப்படிப் பார்க்கறீங்க?" என்றாள். நீ பள்ளிக்கூடம் போயிருந்தா பத்தாவது படிச்சிக்கிட்டிருப்பல்ல?" என்று நாம் கேட்டதுதான் தாமதம்... அவள் முகத்தில் சோகம் அப்பிக்கொண்டது. தலைகுனிந்துகொண்டாள்.

சிலநேர அமைதிக்குப்பிறகு பேசத் தொடங்கினாள் சௌந்தரி, இங்க பள்ளிக்குடமே கெடையாதுக்கா. எங்க ஊருக்குப் போக ரோடு வசதி இல்ல. மலை மேல ஏறி, காட்டுவழியாத்தான் வூட்டுக்குப் போவோம். படிக்கப் போகணும்னா 8 மைலுக்கு  அப்பாலிருக்கற பட்டறைக்கட்டுக்குத் தான்க்கா நடந்து போவணும். அதுமட்டுமில்ல, நாங்களும் ஏதாவது காட்டு வேலைக்குப் போறதாலதான் சாப்பிடவே முடியுது. எங்களுக்கு மட்டும் படிக்கணும்னு ஆசையில்லையாக்கா?" என்று கூறியபோது அவள் குரல் கம்மியது.

படித்தவர்களும் இந்த வழக்கத்திலிருந்து விலகி விடவில்லை. ஆனால், அவர்கள் நோக்கம் வேறு. மேலமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த  இளைஞர் சுரேஷ். படிப்பறிவே இல்லாமல் இருக்கும் இந்தக் கிராமத்தில் ப்ளஸ் டூ படித்தவர். ஆனாலும், இளம் வயதில் திருமணம் செய்துகொண்டவர். எனக்கு இப்போ 18 வயசாவுது. நான் போன வருசம் 12-ஆவது படிக்கும்போதே  வேற ஒரு ஸ்கூலில் 11-ஆவது  படிச்சிக்கிட்டிருந்த வித்யலட்சுமியை இந்தச் சந்தையிலதான் பார்த்து, வீட்டுக்கு கூட்டிட்டுப் போனேன். எங்க ரெண்டு வீட்லயும் எந்த எதிர்ப்பும் காட்டல. 3 மாசம் என்கூட வாழ்ந்த பிறகு, வித்யாவுக்கு தாலி கட்டினேன். இப்போ அவளுக்கு 17 வயசாவுது.தாலி கட்டிக்கிட்டேதான் போய், 12-ஆவது வகுப்பு பரீட்சை எழுதிட்டு வந்தா. எங்க வீட்ல அவளை  11-ஆவது வகுப்போடவே படிப்பை நிறுத்தச் சொன்னாங்க. ஆனா, நிறையப்பேரு 12-ஆவது முடிச்சா பணம் வரும்னு சொன்னாங்க. அதுனாலதான் எம்பொண்டாட்டியை 12-ஆவது வரைக்கும் படிக்க வெச்சேன்" என்கிறார் சுரேஷ்.

பாதிரி கிராமத்தில் 5-ஆவது வரை அரசு துவக்கப்பள்ளி உள்ளது. அதன் தலைமையாசிரியர் கோவிந்தராசு கடந்த 10 வருடங்களாக ஜவ்வாதுமலையில் உள்ள பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 230 கிராமங்களுக்கு மேல் உள்ள ஜவ்வாதுமலையில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை வசிக்கறாங்க. இங்கு வாழ்பவர்களில் 95 சதவிகிதம் பேர் பழங்குடியின மக்கள்தான். தனியாரின் 3 நர்சரிப் பள்ளிகளும், அரசின் 68 துவக்கப்பள்ளிகளும், 24 நடுநிலைப்பள்ளிகளும், 3 உயர்நிலைப்பள்ளிகளும், தனியார் மற்றும் அரசால் நடத்தப்படும் 3 மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கிவருகின்றன. டவுன் பகுதியிலுள்ள கொஞ்சம் சிறுவர் சிறுமிகள் படிக்க, ஆர்வமுடன் வருகிறார்கள். மற்றபடி கிராமங்களில்இருக்கும் பிள்ளைகளில் கால்வாசிப் பேர்தான் படிக்கிறார்கள். கொஞ்சம் போக்குவரத்து வசதியுள்ள இடங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளை துவக்க வேண்டும். மலைவாழ் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதற்காகவே அரசு ஆயிரக் கணக்கில் உதவித்தொகைகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது. இம்மக்களுக்காக பல நல்ல திட்டங்களும் உள்ளன. ஆனால், யார் கேட்கிறார்கள்?

சந்தையில் பார்த்து பெண் பிள்ளைகளை பசங்க அழைத்துச் செல்லும் வழக்கம் காலங்காலமாக நம்மியம்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் சந்தையில் நடைபெற்று வருகிறது. இது மலைவாழ் மக்களின் கலாசாரமாகவே மாறிவிட்டது. அப்படியே இவர்கள் பெண் குழந்தைகளை அழைத்துச் சென்றாலும் தாலி கட்டாமலேயே வாழ்ந்துவிட்டு, சிறுமி கருத்தரித்தால் மட்டுமே திருமணப் பேச்சை எடுக்கிறார்கள். இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் சிறுவர்களும் குடும்பச்சுமை தாங்காமல் சாராயத்திற்கு அடிமையாகி சீக்கிரமே இறந்து போகிறார்கள். பள்ளிப் படிப்பை படிக்க வேண்டிய வயதில் திருமணமாகி, இளம் வயதில் சிறுமிகள் விதவையாகும் அவலம் இங்கு மட்டுமே நடக்கிறது. இதில் மலைவாழ் மக்கள் வருடத்தில் 6 மாதம் காடுகளில் மானாவாரியாகப் போடும் நெல், வரகு, சாமை, திணை போன்றவற்றையும் இயற்கையிலேயே விளையும் பலாப்பழம், மாம்பழம், புளி ஆகியவற்றையும் விற்றுத்தான் ஓரளவு வருமானம் தேடிக்கொள்கிறார்கள். வறுமையும் இவர்களை இறுக்கிப் பிரித்துக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சேவை செய்யவும் பல தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், பல தொண்டு நிறுவனங்கள் பணத்தைச் சுருட்டிக்கொள்கின்றன. மலைவாழ் மக்களுக்கு சேவையாற்றுவதில்லை. இதில் நேரடியாகவே அரசு தலையிட்டு, அக்கறையுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்று அக்கறையுடன் பேசுகிறார், பாதிரி கிராமத்திலுள்ள அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராசு.

ஜவ்வாதுமலையில் இருந்து வரும் அவல நிலைமை குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜ பிங்ளேயுடன் பேசியது ‘புதிய தலைமுறை’  ஜவ்வாதுமலையில் நடக்கும் குழந்தைத் திருமணம், அங்குள்ள சந்தைகளில் சிறுமிகளை மனைவியாக அழைத்துச் செல்வது  பற்றி இதுவரை என் கவனத்திற்கு யாரும் கொண்டுவரவில்லை. அதிர்ச்சியான தகவலாக உள்ளது. பெற்றோர்களின் சம்மதம் இருப்பதனாலேயே சிறுமிகளுக்கு நடக்கும் இந்த இழிநிலையை யாரும் வெளியில் சொல்வதில்லை என்று நினைக்கிறேன்" என்று சொன்ன மாவட்ட ஆட்சியர், இந்தத் தகவலை என் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி.கட்டாயம் இதுபற்றி விசாரணை  நடத்துகிறேன். இது உண்மையாக  இருக்குமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும், விழிப்புணர்வைக் கொடுத்து இளம் பெண்களைக் காப்பாற்றவும் செய்கிறோம்" என்று உறுதி அளித்தார். சமீபத்தில்கூட செய்யாறில் நடந்த குழந்தைத் திருமணத்தை மண்டபத்திற்கே சென்று, தடுத்து நிறுத்தி எப்ஐஆர் பதிவு செய்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

இந்த அவலத்தை மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கும் எடுத்துச்செல்ல முயன்றோம். ஜவ்வாதுமலை திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம்  தொகுதியிலும், கலசப்பாக்கம் தொகுதியிலும்  அமைந்துள்ளது. பல வருடங்களாக தொடர்ந்து கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக  இருந்துவரும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை 3 முறை போனில் தொடர்புகொண்டு   இந்தப் பிரச்சினை பற்றி பேசியபோது, ‘பிசியாக இருக்கிறேன்’ என்று தொடர்பை  துண்டித்துவிட்டார். செங்கம் தொகுதி தேமுதிக  எம்எல்ஏ  சுரேஷ்குமாரை தொடர்புகொண்டதற்கு, அவரது செல் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

பெண்களாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால், ஒரு ‘யூஸ் அண்ட் த்ரோ’ கலாசாரத்தில் அந்தச் சிறுமிகளின் எதிர்காலம் ஒவ்வொரு நாளும் பலியாகிக்கொண்டே இருக்கிறது.

இன்னும் மௌனமாகவே இருக்கப் போகிறோமா?


வீட்டுக்கொரு விதவை
இளம் வயது (குழந்தை வயசுன்னுதான் சொல்லணும்!) திருமணங்கள் நடக்கும் இதே மலைவாழ் கிராமங்களில்தான் 80 சதவிகிதத்துக்கு மேற்பட்ட இளம் விதவைகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.குறிப்பாக, குட்டக்கரை என்ற பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களில் வீட்டுக்கு வீடு இளம் விதவைகளும், 30 வயதிற்குள்ளாகவே கணவனை இழந்த முதிர்ந்த விதவைகளும் அதிகமாக இருக்கிறார்கள். சரியான வாகனப் போக்குவரத்து இல்லாத குட்டக்கரையிலிருந்து காட்டிற்குள் 8 கிலோமீட்டர் தூரமுள்ள பாதிரி என்ற கிராமத்தைச் சென்றடைய மதியம் 12.30 மணி ஆகிவிட்டது. அங்கே ஆண்களைப் பார்ப்பதற்கே அரிதாக இருந்தது. எங்கெங்கும் பெண்களாக மட்டுமே தென்பட்டார்கள். எதிர்பட்ட வசந்தாவிடம் பேசினோம்: எங்க ஊர்ல 60 வூடுங்க கிட்ட இருக்கு. அதுல வூட்டுக்கு ஒரு விதவைங்க இருக்கோம்.  அப்போ எனக்கு பதிமூணு வயசு இருக்கும்ங்க. சந்தைக்குப் போயிருந்தேன். அங்கதான் அவரைப் பார்த்தேன் அவருக்கு 16 வயசு. அவர்கூட போயி வாழ்ந்தேன். ஒரு வருசங்கழிச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு. ஆனா, எனக்கு கொழந்தை மட்டும் வயித்துல தங்கல. எட்டு மாசக் கொழந்தை, வயித்திலேயே செத்துப்போயிதான் பொறந்தது. எத்தனை முறை கர்ப்பம் ஆனாலும் என் கொழந்த, வயித்தில தங்காது. இந்த சோகம் ஒருபக்கம் என்னைக் கொன்னுக்கிட்டிருக்க" என்ற வசந்தாவால் அதற்குமேல் பேச முடியவில்லை. கண்களில் பீறிட்டு வரும் அழுகையை துடைத்துக் கொண்டு பேசினார்: என்ன காரணம்னே தெரியல. இருந்த என் புருசனும் படுத்த படுக்கையா இருந்து, 8 மாசத்துக்கு முன்னாடி செத்துப்போயிட்டாரு. எல்லாம் என் தலவிதி" என்றபடி அழுதார் வசந்தா.

குட்டக்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான தும்பக்காடுக்குச் சென்றபோது வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மலைகளில் தனித்தனியாக கட்டப்பட்டிருந்தது. அங்கும் இதேபோல்தான் வீட்டுக்கு ஒரு விதவை இருக்கிறார்கள்.

சின்ன வயசுலேயே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.ஒரு குழந்தைக்கூட தங்கல. இங்கல்லாம் இப்படித்தான் எல்லோரும் புருஷன எழந்து, சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு கெடக்குறோம். வீட்டு வீடு வாசப்படி இருக்கோ இல்லையோ, விதவைங்க இருப்பாங்க. எல்லாம் இந்தப் பாழப்போன சாராயம்தான். சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணி, குடும்பச் சுமைய தாங்க முடியாத ஆம்பளங்க, குடிச்சுச் குடிச்சு கொடலு வெந்து செத்துக்கிட்டிருக்காங்க" என்று குமுறி வெடிக்கிறார், இளம் வயதிலேயே தன் கணவனை இழந்த ராணி.


குழந்தைத் திருமணம் கூடாது, ஏன்?
எனக்கு இப்போ  14 வயசிருக்கும். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வயசுக்கு வந்தப்பவே, என் ஊட்டுக்காரரு வூட்டுக்கு வாழ வந்துட்டேன்.கொஞ்ச நாளுலேயே ஒரு கொழந்தைக்கும் தாயானேன். என்னவோ தெரியல, பத்து மாசத்துல,கொழந்தை பொறக்கும்போதே செத்துப் பொறந்துச்சி.டாக்டருங்ககிட்ட ஏன்னு கேட்டதுக்கு, கொழந்தை வளர்ச்சியடைலன்னு சொல்லிட்டாங்க.அதுலயிருந்து இன்னும் எனக்கு கொழந்தைத் தங்கல" என்று கூறினாள் ரேவதி என்ற சிறுமி.

என் பெயர் அம்சா. எங்க ஊரு பழையப்புத்தூர். என் கணவர் பேரு சிவக்குமாருங்க" என்று சொன்ன அந்தச் சிறுமிக்கும் 15 வயதுதான். பார்ப்பதற்கே குழந்தைபோல் இருந்தாள். ஆனால், அவளது கையில் ஒரு குழந்தை, அவளது கையைப் பிடித்துக்கொண்டு இன்னொரு குழந்தை. சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டதால, உடம்புரீதியா ரொம்பவே கஷ்டங்கள அனுபவிச்சேன். அதுவும் கொழந்தை பெத்துக்கும்போது உசுருப் போயித்தான் உசுரு வந்துச்சு" என்றாள்.

இந்தியாவில் 21 சதவிகிதக் குழந்தைகள்  போதிய வளர்ச்சியில்லாமல், குறைப் பிரசவமாகப் பிறப்பது குழந்தைத் திருமணங்களால்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கர்ப்பப்பை வளர்ச்சியடையாமலேயே சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதால், கர்ப்பப்பை புற்றுநோய்  உண்டாகும் அபாயம் உள்ளது.

18 வயது ஆவதற்கு முன்பு, சிறுமிகளின் இடுப்பு எலும்புகள் வளர்ச்சியில்லாமல் சின்னதாக இருக்கும். இந்நிலையில், குழந்தையாக இருக்கும் அவளே தாய்மையடைந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, நார்மல் வயதில் திருமணம் செய்து, குழந்தை பெற்றெடுக்கும் பெண்களைவிட கூடுதல் வலியை அனுபவிப்பாள். மேலும் குடும்பப் பிரச்சினைகளையும் கணவனால் உடல்ரீதியான பிரச்சினைகளையும் சந்திப்பதால், சிறுமிகளுக்கு மன அழுத்தம் அதிகமாகும்" என்கிறார், மகப்பேறு மருத்துவர் டாக்டர். மாலாராஜ்,