Powered By Blogger

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

அம்பலமாகும் அரண்மனை ரகசியங்கள் விக்கிலீக்ஸ் வீசும் வெடிகுண்டுகள்!

அமெரிக்கா வெளிவிவகாரத்துறைக்கு உலகெங்கும் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவரவர் பணியாற்றும் நாட்டிலிருக்கும் அரசியல், சமூக நிலவரங்களை அவ்வப்போது குறிப்புகளாக அனுப்புவார்கள். அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் இந்த United States diplomatic cables விக்கிலீக்ஸ், ‘எப்படியோ’ கைப்பற்றி பகிரங்கப்படுத்தி வருகிறது.

2006-ஆம் ஆண்டு இணையதள செய்தி ஊடகமாக துவக்கப்பட்ட விக்கிலீக்ஸ், அரசுகளின் பாதுகாக்கப்பட்ட ரகசிய ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவருவதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் பல்வேறு நாடுகளைப் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை பகிரங்கப்படுத்தியது. சமீபகாலமாக இந்தியா குறித்த தகவல்களை கசியவிட்டுக் கொண்டிருக்கிறது விக்கிலீக்ஸ். கசிவுகளிலிருந்து, உள்ளது உள்ளபடி...


புலிகளுக்குப் பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட ராஜீவ்
நாள்:1988 ஏப்ரல் 5, 10:45 (செவ்வாய்க்கிழமை)
Canonical ID: 88COLOMBO2367_a

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து  (விடுதலைப் புலிகளுக்கு அவர்கள் அதிகாரத்தின் கீழிருந்த பகுதிகளிலிருந்து கிடைத்து வந்த), வரி வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் விடுதலைப்புலிகளுக்கு மாதம்தோறும் பணம் கொடுப்பதற்கு பிரதமர் ராஜீவ்காந்தி ஒப்புக் கொண்டிருப்பதாக இந்தியத் தூதர் ஜே.என்.தீக்ஷித், மற்றும் சென்னையில் உள்ள விடுதலைப் புலிகள் செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி ஏப்ரல் 5-ஆம் தேதி முக்கிய இலங்கை நாளிதழ்கள் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் செய்தி, முதலில் லண்டனிலிருந்து வெளியாகும் லண்டன் அப்சர்வரில் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியாகியிருந்தது.

மாதந்தோறும் அளிக்கப்படவுள்ள இந்த உதவித் தொகை, 50 லட்சம் இந்திய ரூபாய்களாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை இறுதியில் புலிகளுக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டதாக தூதரக அதிகாரி உறுதி செய்தார். செப்டம்பர் இறுதியில் இடைக்கால நிர்வாகக் குழுவில் பங்கேற்பதாக அளித்த உறுதிமொழியிலிருந்து புலிகள் பின்வாங்குவதற்கு முன் ஒருமுறை பணம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தியா - இலங்கை இரு தரப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய பிரபாகரனுக்கு ராஜீவ் காந்தி, ஜூலை மாதம் அளித்த வாக்குறுதிகள் கொண்ட ஒரு பெரிய ரகசிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதி இந்தப் பணம் என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத சென்னையில் உள்ள ஒரு புலிகளின் செய்தித் தொடர்பாளர்.


ஜெயலலிதா: ஆண்களின் உலகில் வெற்றி கண்ட இரும்பு மனுஷி
நாள்: 2009-03-19, 03:44
Reference ID09CHENNAI81

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தமிழ்நாட்டு அரசியலில் தனித்து நிற்பவர் ஜெயலலிதா. ஓர் ஆண்தான் அவரை அரசியலுக்குக் கொண்டு வந்தார் என்றாலும் தன்னுடைய முயற்சி, புத்திசாலித்தனம், அரசியல் நுண்ணறிவு இவற்றால் அதிகாரத்தின் சிகரங்களை அடைந்தவர். அதீத ஆண்மை கொண்ட தலைவர்களை உடைய - அவர்களில் பலர், முதலமைச்சர் கருணாநிதி உட்பட இரண்டு மனைவிகள் வைத்திருப்பதைப் பகிரங்கமாக பறைசாற்றிக் கொள்பவர்கள்- திமுகவை சரிக்குச் சரியாக எதிர்கொண்டதாலும், தன் லட்சியங்களை அடைய வன்முறையைக்கூட அனுமதிக்கத் தயங்காததாலும்தான் அவரால் இதை சாதிக்க முடிந்தது. இது பெண்களைப் பற்றிய வழக்கமான பார்வையை மாற்றி, ஜெயலலிதாவை உறுதி வாய்ந்த மனுஷியாக மக்களை எண்ணச் செய்கிறது. அவரது அமைச்சரவையில் உள்ள ஒரே ஆண் என்று இந்திரா காந்தியைப் பற்றிச் சொல்லப்படும் பழைய ஜோக் போல, அதிமுகவில் இருக்கும் ஒரே ஆண் என இவரைப் பற்றி அவ்வப்போது மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்திரா காந்தியைப்போல. இவரும் பெண் தெய்வங்களை சக்தியாக வழிபடும் இந்திய மரபைப் பயன்படுத்திக்கொண்டு தன்னையே தெய்வமாக சித்தரித்துக் கொள்ளும் அளவிற்குச் சென்றவர்.

ஜாதி மற்றும் பெண் என்பவையும் அவர் அதிகாரத்தில் உயர உதவின. உயர் ஜாதி (பிராமணர்கள்), தாழ்த்தப்பட்டவர்கள் (தலித்கள்), பிற்படுத்த வகுப்பில் ஒரு சாரார் (தேவர்கள்) ஆகியோரை முதன்மையாகக் கொண்ட ஒரு கூட்டின் மூலம் கெட்டிக்காரத்தனமாக திமுகவின் ஆதரவுத் தளமான பிற்பட்ட வகுப்பினரை எதிர்கொண்டார். பெருமளவில் வந்து வாக்களித்த பெண்களின் வாக்குகளில் கணிசமானவற்றைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பெண்களைக் கவர்ந்தார். காலம் காலமாக ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த திமுகவினால், தான் நசுக்கப்படுவதைப் போன்று மறைமுகமாகச்  சித்தரித்தார். பெண்களுக்கு நேரடியாகப் பலனளிக்கும், மாணவிகளுக்கு இலவச சைக்கிள், சுய உதவிக்குழுக்களுக்கு ஆதரவு போன்ற திட்டங்களின் மூலம் நேரடியாகப் பெண்களின் வாக்குகளைக் கவர முயற்சித்தார். ஆறரைக் கோடி மக்கள் கொண்ட மாநிலத்தின் முதல்வராக பலமுறை ஆட்சி செய்தது இந்தியப் பெண்கள், அரசியலில் தடம் பதிக்க முடியும் என்பதற்கான ஒரு வரலாற்று சாட்சியம்.   


தனித் தமிழ்நாட்டிற்கு அமெரிக்க ஆதரவு  தருமா?
1975 ஜூலை 3, 12:08 (வியாழன்)
Canonical ID:1975NEWDE08889_b

நேற்று மாலை நான் தமிழ்நாட்டின் தொழிலாளர், வீட்டுவசதித்துறை அமைச்சர்  ராசாராமை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன். அமைச்சர் சைமனுடன் அவர் இருக்கும் படம் வெளியிடப்பட்டிருந்த நம் அயலகத்துறை செய்திமடலின் பிரதி ஒன்றை அவரிடம் கொடுத்தேன். இந்தியாவில் நடப்பதைப் பற்றி என் கருத்துக்கள் என்ன என்று அவர் கேட்டார் (அப்போது இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்தது-பு.த.). நாம் கடைசியாகச் சந்தித்தபின் எவ்வளவோ நடந்துவிட்டது என்ற ரீதியில் நான் பதில் சொல்ல ஆரம்பித்தேன். அவர் என்னை இடைமறித்து, ‘நானே உங்களிடம் பேச வேண்டும் என்றிருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள், சந்தோஷம். நான் உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்க வேண்டும். தமிழ்நாடு தனியான சுதந்திர நாடாக வேண்டும் என முடிவெடுத்தால், அமெரிக்கா உதவ முடியுமா?’ எனக் கேட்டார். நானும் நேரடியாகவே பதில் சொல்கிறேன்: ‘முடியாது. இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம். இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறோம். சீரியசாக இந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்கிறதா?’ எனக் கேட்டேன். ‘இல்லை. மேல் மட்டத்தில் அந்த மாதிரி சிந்தனை இல்லை. திமுக பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. ஆனால், கட்சியில் பல இளைஞர்கள் சில நாள்களாக இதைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள்  சோவியத் யூனியனும், மற்ற கம்யூனிஸ்ட் நாடுகளும் இங்கே ஜனநாயகத்தைக் கொல்லும் இந்திரா காந்தியின் முயற்சியை ஆதரிக்கிறார்கள். அந்த முயற்சி வெற்றியடைந்தால், இங்கே கம்யூனிசம் வளரும். தமிழ்நாடு பிரிந்துவிட வேண்டும், அதற்கு அமெரிக்கா உதவுமா என அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். அதனால் கேட்டேன்’ என்றார். அதற்குப் பிறகு அவர் அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை.

இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், எனக்கு முன்னர் அறிமுகமாகாத ஓர் உள்ளூர் கல்வியாளர், இரண்டு நாள்களுக்குமுன் பேசி நேரம் வாங்கிக் கொண்டு, என்னை சந்தித்தார். நாட்டில் இப்போதுள்ள நிலைமையால் கவலை கொண்ட அவர் நேற்று முதலமைச்சரை சந்தித்து, நிலைமை மேலும் மோசமாகும் என்றும், இந்தியாவின் மற்ற பகுதிகள் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கின்கீழ் வருமானால், தமிழ்நாடு தனியாகப் பிரிந்து போக முயற்சி செய்ய வேண்டும் என்று அவரிடம் தான் சொன்னதாகவும் கூறினார்.  அதற்கு முதலமைச்சர், என்ன நடக்கும் எனத் தனக்குத் தெரியாதென்றும், தான் நிலைமைகளைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும், வியட்நாம் அனுபவத்திற்குப் பிறகு ஆசியாவில் புதிதாகத் தலையிடாது என்று, தான் நினைப்பதாகவும் சொன்னதாகச் சொன்னார்.


விமானப்  பேரத்தில் ராஜீவ்காந்தி
நாள்: 1975 அக்டோபர் 21, 12:25 (செவ்வாக்கிழமை)
Canonical ID: 1975NEWDE14031_b

புதுதில்லி, இந்தியா
ரகசியம்

1.விக்ஜென்  விமானங்கள் தொடர்பாக ஸ்வீடன் நாட்டினரோடு இந்தியாவின் சார்பாக பேச்சுகள் நடத்தும் முக்கியமான நபர், திருமதி. காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி என ஸ்வீடன் தூதரக அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தார்கள். விமானத் தொழில் துறையோடு அவருக்கு உள்ள ஒரே தொடர்பு (எங்களுக்குத் தெரிந்தவரை)  அவர் இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட் என்பதுதான். அவர் ஓர் தொழில்முனைவர் என்பதை இப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறோம்.

2.டஸால்ட் நிறுவனம் தனது மிராஜ் விமானங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, விமானத் தளபதி மெஹராவின் மருமகனை நியமித்திருப்பதாக ஸ்வீடன் தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

திருமதி. காந்தி (ஸ்வீடீஷ் அதிகாரிகளின் தகவல்களின்படி) பிரிட்டீஷ் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு காரணமாக பிரிட்ஷ் தயாரிப்பான ஜாகுவார் விமானங்களை வாங்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறார். மிராஜ் அல்லது விக்ஜென் என்ற இரண்டில் ஒன்றிற்கு சாதகமாக முடிவு இருக்கும். உலக அரசியலில் ஸ்வீடன் நடுநிலை வகிப்பதால், அந்த நாட்டு விமானங்களின் விலை அதிகமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தக்கூடாது என ஸ்வீடன் அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்திய விமானப்படை அதிகாரிகளை பேரம் பேச அனுமதிக்காமல், திருமதி. காந்தியே நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஆதிக்கம் செலுத்துவது குறித்து ஸ்வீடன் அதிகாரிகள் எரிச்சலடைந்திருக்கிறார்கள்.

3.விமானம் ஒன்றுக்கு 40 அல்லது 50 லட்சம் டாலர்கள் என்ற விலையில் 50 விக்ஜென் விமானங்கள் வாங்க இந்தியா முடிவு செய்திருப்பதாக ஸ்வீடன் தூதரக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். சோவியத் ராணுவ விமானங்களை இனிமேல் வாங்கப் போவதில்லை என இந்தியா முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.


திமுக உடைந்து சிதறும்: தலைமைச் செயலர் போட்ட தப்புக் கணக்கு
1976 பிப்ரவரி 18, 9:20 (புதன்கிழமை)
Canonical ID:1976NEWDE02455_b

ரகசியம்

தூதரக அரசியல் பிரிவு அதிகாரியும் நானும் தலைமைச் செயலாளர் சபாநாயகத்தை அவரது இல்லத்தில் பிப்ரவரி 16 காலை, அவர் தலைமைச் செயலகத்திற்குப் புறப்படும்முன் சந்தித்தோம். லுங்கி கட்டிக் கொண்டு காஷுவலாக இருந்த அவர், எங்களை அன்போடு வரவேற்று காபி கொடுத்து உபசரித்து எங்களது பல கேள்விகளுக்கு பதில் சொன்னார்.  திமுக வன்முறைக்குத் திட்டமிடுகிறது, லஞ்சம் ஊழல் இவற்றை ஊக்குவிக்கிறது என்ற இந்திரா காந்தியின் குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டோம். மக்கள் இந்தக் குற்றச்சாட்டை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கருதுவதாகச் சொன்னார். தமிழ்நாட்டில் லஞ்சம் என்பது  தனித்துவமான  விஷயமில்லை என்றும் திமுக அரசின் சமூக நலத் திட்டங்கள் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களைத்தான் மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்றும் சொன்னார். திமுகவின் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகளுக்கு மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்றார். ஆனால், திமுக வேகமாக உடைந்து சிதறிக் கொண்டிருப்பதாகவும் அது தனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் சொன்னார். ஆனால், பிளவுபட்ட காங்கிரஸ் (அப்போது காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் (ஸ்தா.காங்), இந்திரா தலைமையில் ஒரு காங்கிரஸ் (இ.காங்) என இரண்டாகப் பிரிந்திருந்தது). ஒன்று சேர்ந்தாலும் அது வெற்றிக்கு உதவாது. காங் (0) தலைவர்களில் பலர் இணைப்பை விரும்பினாலும், தொண்டர்கள் அதை ஏற்கவில்லை என்று நினைப்பதாகவும் சொன்னார். குடியரசுத் தலைவர் ஆட்சி இரண்டு வருடம் நீடிக்கலாம் என்றார்.


எம்.ஜி.ஆரும் சி.ஐ.ஏ. யும்

ஸ்தாபன காங்கிரஸ் இதழான, ‘நவசக்தி’ ‘அதிமுகவுக்கும், சிஐஏவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியை அப்படியே மொழிமாற்றம் செய்து அமெரிக்காவுக்கு குறிப்புகளாக அனுப்பியிருக்கிறார்கள். சென்னை துணைத் தூதரக அதிகாரிகள்.

எம்.ஜி.ஆர்., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு தோழமை பேணியிருந்ததை அமெரிக்கா விரும்பவில்லை என்பது இதுதொடர்பான சில குறிப்புகளில் தெரிகிறது.


மதிமுகவுக்கு விடுதலைப்புலிகள் நிதியுதவி?
தமிழக அரசியல் தலைவர்கள் சிலருக்கு விடுதலைப்புலிகள் நிதியுதவி செய்திருக்கிறார்கள். குறிப்பாக, மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு, 1993-இல் திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக என்கிற கட்சியை உருவாக்குவதற்கு ஆரம்பக்காலத்திலும் புலிகள் நிதியுதவி செய்திருக்கிறார்கள் என்று புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தலைவர்களில் ஒருவரான சந்திரஹாசன் கருதுவதாக ஒரு தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கிறது எனினும் புலிகளுடனான தமிழக அரசியல் தலைவர்களின் பொருளாதார உறவு, இன்னமும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை.


பாக்.கோடு கைகுலுக்கத் தயாராக இருந்த இந்திரா
பாகிஸ்தான் பிரதமர் ஜூல்பிகர் அலிபுட்டோவுக்கு, 1974-இல் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ஒரு கடிதம் எழுதுகிறார். அப்போதுதான் இந்தியா பொக்ரானில் தன்னுடைய முதல் அணுசோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தது. பொருத்தமான நிபந்தனைகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் பேரில் அணு தொழில்நுட்பத்தை, இந்தியா, பாகிஸ்தானோடு பகிர்ந்துக்கொள்ளத் தயார் என்று அக்கடிதத்தில் இந்திரா நட்புக்கரம் நீட்டினார். ஆனால், புட்டோ ஏனோ இதை மறுத்துவிட்டார்.


சஞ்ச காந்தியை கொல்ல மூன்று முறை முயற்சி
1976 ஆகஸ்ட் 30 அல்லது 31-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபரால் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி சுடப்பட்டார். ஆனால், இந்தக் கொலைமுயற்சியில் இருந்து பெரிய காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார். இந்திய உளவுத்துறை வட்டாரம் சொல்வதின்படி இது அவர் மீதான மூன்றாவது கொலைத் தாக்குதல் என்று செப்டம்பர் 1976-இல் அனுப்பப்பட்ட குறிப்புகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்திரா, எமர்ஜென்ஸி கொண்டு வந்ததின் காரணமாக அடுத்து நடந்த 1977 தேர்தலில் தோல்வியுற்றார். பதவிக்கு வந்த ஜனதா அரசு, சஞ்சய் மீதான கொலைமுயற்சி விசாரணைகளைக் கண்டுகொள்ளவில்லை. 1980-இல் நடந்த விமான விபத்தில் சஞ்சய், 33 வயதில் மரணமடைந்தார்.


வீரப்பனுக்குப்பின்
வீரப்பன் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு நிலவும் நிலவரத்தை, வீரப்பனால் இதுவரை இருந்து வந்த தொல்லை, மக்களுக்கு நீங்கியது. ஆனால், தர்மபுரி மாவட்டத்துக்குள் சுலபமாக மாவோயிஸ்ட்கள் நுழைந்து விடுவார்களோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. திமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு இங்கே வசிக்கும் வன்னிய இளைஞர்களிடம் நல்ல செல்வாக்கு இருந்தாலும், ஆந்திராவில் வலுவாக காலூன்றிய மக்கள் போர்ப்படை போன்ற குழுக்கள் இங்கே வளர்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தபடி இப்பகுதியில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே இந்த அபாயம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று சென்னைத் துணை தூதரக அதிகாரிகள் அனுப்பிய குறிப்பு தெரிவிக்கிறது .


வாக்காளர்களுக்கு லஞ்சம்
தேர்தலில் வாக்கு பெற இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நடைமுறையாக்கி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் காலையில் வீடுகளில் போடப்படும் செய்தித்தாள்களுக்குள் கூட கரன்சி நோட்டை வைத்து விநியோகிக்கிறார்கள். இவ்வாறாக செலவழிக்கப்படும் பணத்தின் ஆதாரம் தேர்தல் நிதியாக கட்சிகளால் பெறப்படுகிறது. இதுவே அரசியல் ரீதியான ஊழல்களுக்கு அடிகோலுகிறது. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வாக்காளர்கள் அனைவருமே வாக்குக்கு பணம் வழங்கப்படுவதை தேர்தல்கால நடைமுறையென்று சகஜமாகப் பேசுகிறார்கள். அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதானக் கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் - மே 13, 2009 அன்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் முதன்மை அலுவலகர் ப்ரெட்ரிக் ஜே.கப்ளான் அனுப்பியிருந்த குறிப்பிலிருந்து.


ஜார்ஜ் பெர்ணாண்டஸ் - சி.ஐ.ஏ. தொடர்பு?
தொழிற்சங்கச் செயல்பாடுகளில் தீவிரமான தலைவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். சோஷலிஸ்ட்டாக அறியப்படும் இவர், பொதுவாக அமெரிக்க எதிர்மனோபாவம் கொண்டவர். கோகோ கோலா, ஐ.பி.எம். போன்ற அமெரிக்க நிறுவனங்களை, தொழிற்துறை அமைச்சராக இருந்தபோது இந்தியாவை விட்டு விரட்டியடித்தார்.

ஆனால், எமர்ஜென்ஸியின்போது இந்திராவை எதிர்த்துப் போராட அமெரிக்க உதவியை நாட விரும்பினார். இதற்காக அமெரிக்கத் தூதரை சந்திக்கவும், சி.ஐ.ஏ., மூலமாக பண உதவி பெற முயன்றார் என்றும் இங்கிருந்து குறிப்புகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.


இன்னும் நிறைய தகவல்களை சகட்டுமேனிக்கு வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது விக்கிலீக்ஸ். இவற்றை இப்போது பொதுமக்கள் அனைவருமே பார்க்கும் வகையில் திறந்துவிட்டிருக்கிறார்கள்.  http://wikileaks.org/plusd  என்கிற இணையப்பக்கத்துக்குச் சென்று, நீங்களும் இவற்றைத் தேடி வாசிக்கலாம்.
 

சனி, 20 ஏப்ரல், 2013

கிடைக்குமா நீதி?

நீதி

இந்த இரண்டெழுத்துச் சொல்லுக்குள் இருக்கிறது ஓர் நீண்ட வரலாறு.  தமிழ்ச் சமூகத்தில் நீதி கேட்பதும் நீதி வழங்குவதுமான பண்பு, நேற்று இன்று ஏற்பட்டதல்ல. தமிழின் ஆதி காவியமான சிலப்பதிகாரமே நீதி கேட்ட ஒரு பெண்ணின் கதைதான். அதில் கண்ணகி, ‘வாயில் கடை மணி நடு நா நடுங்க, ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்’ என மனுநீதிச் சோழனின் கதையை சுட்டிக் காட்டுகிறாள். அது சிலப்பதிகாரம் எழுதப்பட்ட கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே வாய் பேச வழியற்ற விலங்குக்கும் நீதி வழங்கும் முறை தமிழர்களிடம் இருந்திருக்கிறது என்பதற்கு சாட்சி. தமிழர்களின் இந்த நீதிமுறையைப் போற்றும் விதமாகத்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை நிற்கிறது.

ஆனால், இன்று நம் கையில் இருப்பது சில நூற்றாண்டுகளுக்குமுன் வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற நீதி இயந்திரம். ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, அவர்களே நீதிபதிகளின் நாற்காலிகளை அலங்கரித்தார்கள். அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக வழக்குகள் ஆங்கிலத்திலே நடத்தப்பட்டன. வாதங்களும் ஆங்கிலத்திலேயே எடுத்துரைக்கப்பட்டன. ஆனால், அதிலும்கூட, ரோமானிய நீதிமுறையை அடிப்படையாகக் கொண்ட நீதிமுறை என்பதால், லத்தீன் சொற்களுக்கும் மேற்கோள்களுக்கும் இடமளிக்கப்பட்டன.

ஆங்கிலேயர் அறுபதாண்டுகளுக்கு முன்னதாகவே விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள்.ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற நீதி இயந்திரம் நம்மிடையே இன்றும் இருக்கிறது. அதில் இன்னும் ஆங்கிலமே ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது.

நீதித்துறை மீது நம் மக்களுக்கு மரியாதை இருக்கிறதோ இல்லையோ, அச்சம் நிச்சயமாக இருக்கிறது. தட்டிக் கேட்க முடியாத அளவிற்கு அதிகாரங்களைத் தம்மிடம் கொண்டவர்கள், தங்களுக்குப் புரியாத மொழியில் பேசினால், அந்த அச்சம் அதிகமாகத்தானே இருக்கும்?

நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, அது வழங்கப்பட்டது என்பதும் தெரிய வேண்டும் என்ற நீதியின் அடிப்படை இலக்கணத்தை ஏற்றுக் கொண்டவர்கள், உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அதனால்தான் நெடுங்காலமாக கோரி வருகிறார்கள்.

உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியானால் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது, எத்தகைய வாதங்கள் வைக்கப்படுகின்றன, மனுவில் தங்கள் நிலை சரியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆங்கிலம் அறியாத தமிழ் மட்டுமே அறிந்த அடித்தட்டு மனிதர்களும் அறிந்து கொள்ள இயலும். அது நீதி வழங்கப்படுவதை மேலும் செம்மையாக்கும், சிறப்பாக்கும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளில் தமிழ் அறியாத அயல் மாநிலத்தவரும் இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பது யதார்த்தம். அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதற்காக, ஆங்கிலம் அறியாத சாதாரண மனிதர்களது உரிமையைப் பறித்துக் கொள்வது நியாயமா என நீதிமான்கள் எண்ணிப் பார்க்கட்டும். தமிழறியாத நீதிபதிகளுக்கு நீதிமன்றத்தில், நாடாளுமன்றத்தில் உள்ளதைப்போல, உடனுக்குடன் மொழிபெயர்ப்பு வசதிகளைச் செய்து தரலாம். அத்துடன், வாதங்களை ஆங்கிலத்தில் எழுத்து வடிவில் அளிக்குமாறும் வழக்கறிஞர்களுக்கு ஆணையிடலாம்.

இதுகுறித்த சட்டமன்றத் தீர்மானத்தை ஜனவரி மாதம், மத்திய அரசு நிராகரித்து விட்டது. மக்கள் நலன் கருதி, அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வாய் பேச வழியற்ற விலங்கிற்கும் நீதி அளித்த தமிழனுக்கு அவன் தாய்மொழியில் நீதி கிடைக்காதா?

கசக்கும் மருத்துவம்



கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவச் செலவு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. காரணம்? பரிசோதனை மையங்களும், மருந்து கம்பெனிகளும் டாக்டர்களுக்கு தரும் கமிஷன்தான் என்று கூறப்படுகிறது

ன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனித வளப் பிரிவில் உயர் பதவியில் இருக்கும் கிருஷ்ணன், கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 1) உச்ச நீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற பதைபதைப்புடன் செய்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் குழந்தையின் எதிர்காலம் அந்தத் தீர்ப்பில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மருந்து கம்பெனி நோவார்டிஸின்  தயாரிப்பு ஜில்வெக் (gilvec) அதே மூலக் கூறுகளைக்கொண்டு இந்திய நிறுவனம் ஒன்றும் ஒரு மருந்தைத் தயாரித்திருந்தது. ‘இந்த அரிய வகை ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கான மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தது நாங்கள்தான். தயாரிப்புக் காப்புரிமையை எங்களுக்குத்தான்  வழங்க வேண்டும்’ என்ற நோவார்டிஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பைத்தான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார் கிருஷ்ணன்.

நோவார்டிஸுக்கு எதிராகத் தீர்ப்பு வந்த செய்தியைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியோடு தன் ஐந்து வயது மகனை கட்டியணைத்தபடி, ‘புதியதலைமுறை’யிடம் பேசினார் கிருஷ்ணன். என் மகனுக்கு அரிய வகை ரத்தப் புற்றுநோய். நோவார்டிஸ் தயாரிப்பான ஜில்வெக்கின் (gilvec) மூலக்கூறுகளைக் கொண்ட இந்திய தயாரிப்பு மருந்தைப் பயன்படுத்துகிறோம். ஒருவேளை, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்திருந்தால், என் மகனை இழக்க வேண்டியிருக்கும்" என்கிறார், உணர்ச்சிபொங்க. ஏனெனில், இந்திய தயாரிப்பைப் பயன்படுத்தினால், ஆகும் செலவு மாதம் 8 ஆயிரம் ரூபாய்.  பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பைப் பயன்படுத்தினால், ஆகும் செலவு மாதம் 1.2 லட்சம் ரூபாய்.

தீர்ப்பு, பன்னாட்டு நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்திருந்தால், கிருஷ்ணனின் குழந்தையைப்போல் தற்போது இந்தியாவில் உள்ள 3 லட்சம் ரத்தப் புற்று நோயாளிகள் மற்றும் ஆண்டுதோறும் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படும் 20 ஆயிரம் பேரின் சிகிச்சை கேள்விக்குறியாகி இருக்கும்.
சவாலான நோய்களுக்கான மருந்து குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று. ஆனால், அவர்களை வருத்தும் வேறு பல விஷயங்கள் மருத்துவத் துறையில் இருந்து வருகின்றன. சுருக்கமாகச் சொன்னால், பொதுவாக மருந்துகள் கசக்கும். ஆனால், இப்போது மருத்துவமே கசக்கிறது. அது கசிக்கிப் பிழிகிறது நடுத்தர மக்களை.

டயக்னாஸ்டிக் சென்டரும் டாக்டரும்

நோயாளிகளை ஒவ்வொரு முறை பரிசோதனைக்கு அனுப்பும்போதும் பரிசோதனை நிலையங்களிலிருந்து (டயக்னாஸ்டிக் சென்டர்)  டாக்டர்களுக்கு கமிஷன் தரப்படுகிறது. முன்பு மறைமுகமான வழிகளில் பெறப்பட்டு வந்த இந்தத் தொகையை தற்போது பகிரங்கமாக காசோலையாகவே  டாக்டர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.  இந்த கமிஷன் தொகையைப் பெறுவதற்காகவே, தேவையே இல்லாத போதும் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., எக்கோ, CET, CAT, DEXA என்று அதிகக் கட்டணம் உள்ள ஸ்கேன்களை நோயாளிகளுக்கு எழுதித் தரும் டாக்டர்களும் உண்டு.

ஓசூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் உற்பத்திப் பிரிவில் சூப்பர்வைசராக இருக்கிறார் ரமேஷ். சிறுநீர் கழிக்கும் ஒவ்வொரு முறையும் என் மகன் வலியால் அலறுவான். எனக்கு சொந்த ஊர் நெல்லை என்பதால், அங்கேயே டாக்டரிடம் காட்டலாம் என்று அழைத்து வந்தேன். குழந்தைகளுக்கான சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவரிடம் பரிசோதித்தபோது, ஸ்கேன், டெஸ்ட் என்று 10 ஆயிரம் ரூபாய்க்கு எழுதிக் கொடுத்தார். ‘முதல்ல இதைச் செய்து ரிசல்ட் கொண்டு வாங்க. அதைப் பார்த்துட்டுத்தான் சொல்லணும்’ என்றார். பணத்திற்கு ஏற்பாடு செய்த வேளையில், நண்பர் ஒருவரின் ஆலோசனையில் தென்னிந்திய திருச்சபைக்கு  சொந்தமான மிஷினரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு பரிசோதித்துவிட்டு, ‘சிறுநீர்க் குழாயில் லேசாக தொற்று உள்ளது. நிறைய திரவ ஆகாரம் கொடுங்கள். 10 நாட்கள் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும்’ என்றார்கள். வெறும் 200 ரூபாயில் என் மகன் குணமாகிவிட்டான்" என்கிறார்.   

உண்மையில் ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க 2 ஆயிரம் ரூபாய்தான் ஆகும். ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள கட்டணம் 8 ஆயிரம் ரூபாய். ஒருவேளை உங்கள் டாக்டர், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கச் சொல்லும்போது, plain ஸ்கேன் எடுத்தால் போதும் என்று சொன்னால் 6 ஆயிரம் ரூபாயில் முடிந்துவிடும். இதில் பெரும்பாலும் 4 ஆயிரம் ரூபாய் டாக்டர் கமிஷன் என்று கூறப்படுகிறது. குடல், இரைப்பை, இதயம், எலும்பு, மூட்டு போன்ற சிறப்பு மருத்துவர்களுக்கு டயாக்னாஸ்டிக் மையங்களிலிருந்து கிடைக்கும் வருமானமே மாதம் 40 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் வரை என்கிறார்கள்.

கோவையைச் சேர்ந்த ரஞ்சனிக்கு இடது பக்கக் கருக்குழாயில் கட்டி இருப்பது எம்.ஆர்.ஐ.யில் தெரிந்தது. உடனடியாக ஆபரேஷன் செய்து, கட்டியை அகற்ற வேண்டிய நிலையில் புற்றுநோய்க் கட்டியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அவரின் மகப்பேறு மருத்துவர் அனுப்பினார்.  ஏற்கெனவே கோவையில் 4 நாட்களுக்குமுன் அனைத்துப் பரிசோதனைகளும் செய்திருந்த நிலையில், மீண்டும் செய்ய வேண்டும் என்றார்கள். ‘டெஸ்ட்டுக்கு எழுதித் தந்ததைக்கூடப் பெரிதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. புற்றுநோய் அறுவைச் சிகிச்சை டாக்டரின் பேச்சு, எனக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. ‘இடது பக்க ஓவரியை எடுத்துவிடுவேன். சந்தேகம் இருந்தால், வலது பக்க ஓவரியையும் எடுப்பேன். எந்தெந்த உறுப்பை அகற்ற வேண்டும் என்பதை ஆபரேஷன் டேபிளில்தான் முடிவு செய்ய முடியும். இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும்’ என்கிறார்.

திருமணம் ஆகாத 24 வயது பெண்ணின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல், கசாப்புக் கடைக்காரர் போலவே அந்த டாக்டர் பேசினார். திரும்பவும் என் உறவுக்கார மகப்பேறு மருத்துவரிடம் அழைத்து வந்து விட்டேன். அது சாதாரணக் கட்டிதான் என்று உறுதி செய்த அவர், கட்டி பெரிதாக இருந்ததால் இடது பக்க ஓவரியுடன் சேர்த்து அகற்றி விட்டார். இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறாள் என் மகள்" என்கிறார், ரஞ்சனியின் அப்பா வேலுச்சாமி.   

எல்லா டாக்டர்களும் இப்படி செய்வதில்லை. இன்னொரு பக்கத்தில் யாருமே இதுபோன்ற தவறை செய்வதில்லை என்றும் கூற  முடியவில்லை. எந்தப் பரிசோதனையை எடுத்துக் கொண்டாலும் நோயாளிகளிடம் நடைமுறையில் தற்போது வசூலிப்பதைவிட பாதிக் கட்டணம்தான் உண்மையாக இருக்கும். டாக்டர்கள் எனக்கு இவ்வளவு கமிஷன் வேண்டும் என்று நேரடியாக டிமாண்ட் செய்வதில்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்து, நவீன பரிசோதனைக் கருவிகளை வாங்கி வைத்திருக்கும் மையங்கள், தினமும் இத்தனை பேர் பரிசோதனைக்கு வந்தால்தான் வருமானம் பார்க்க முடியும் என்று டாக்டர்களுக்கு கமிஷன் தரும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டன. கணிசமான தொகை கிடைக்கிறது என்பதை டாக்டர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து 20 சதவிகிதம் டாக்டர்கள், ‘எனக்கு கமிஷன் எதுவும் வேண்டாம். பொருளாதார நிலையில் பின்தங்கிய நோயாளிகளைக் குறிப்பிட்டு அனுப்பும்போது, அவர்களிடம் வாங்கும் கட்டணத்தில் எனக்குத் தரும் கமிஷனை குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று இந்த வசதியை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என்கிறார், ஸ்டான்லி மருத்துவமனை குடல், இரைப்பைப் பிரிவு முன்னாள் இயக்குநர் டாக்டர். ஆர்.சுரேந்திரன்.

எல்லா ஸ்கேன் சென்டரிலும் பழைய ரிப்போர்ட் கேட்கிறார்கள். அதைத் தரும்போது, அதைப் பார்த்தே புதிய ரிப்போர்ட்டில் எழுதிக் கொடுத்து விடுகிறார்கள். முதல்முறை செய்தது போல ஒழுங்காகப் பரிசோதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன. ‘எனக்கு 2, 3 முறை இதுபோல அனுபவம் ஏற்பட்டிருக்கிறது’ என டாக்டரிடம் கூறியபோது, ‘பழைய ரிப்போர்ட் இல்லை என்று சொல்லுங்கள்’ என்று கூறினார்" என்கிறார், சென்னையின் பிரபல தொடர் ஸ்கேன் சென்டரில் பரிசோதிக்கக் காத்திருந்த அகிலா என்ற பெண்.

அதே சென்டரில் பணி செய்யும் ஊழியர் ஒருவர், என் நண்பர் லேப் வைத்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட ரத்தப் பரிசோதனைக்கு 200 ரூபாய்கூட ஆகாது. ஆனால், அவர் 400 ரூபாய் வாங்குகிறார். கேட்டால், லட்சக்கணக்கில் செலவு செய்து மெஷின் வாங்கியிருக்கிறேன். இந்த வசதி இல்லாத  சிறிய பரிசோதனைக்கூடத்திற்கு வரும் நோயாளிகளின் ரத்த மாதிரிகளை எனக்கு அனுப்புகிறார்கள். அப்படி அனுப்புபவர்களுக்கு கமிஷன் தர வேண்டும். இந்தக் குறிப்பிட்ட ரத்த பரிசோதனை மட்டும் மாதத்திற்கு 100 செய்தால்தான் கட்டுப்படியாகும். கூடுதலாக வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறார்.

ஆனால், பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் டாக்டர். தீபா ஹரிஹரன் சொல்வது வேறு. வெறுமனே நவீனக் கருவிகள் இருக்கின்றன என்பதற்காக பச்சிளங் குழந்தைகளை அங்கு அனுப்ப முடியாது. திறமையான, அனுபவமிக்க ரேடியாலஜிஸ்ட்டுகள் இருந்தால்தான் துல்லியமாக பரிசோதிக்க முடியும். பிறந்த குழந்தை ஒன்று, சிறுநீர் கழிக்கவே இல்லை. ஸ்கேன் செய்ய அனுப்பினேன். இரண்டு சிறுநீரகங்களும் நன்றாக இருப்பதாக ரிசல்ட் வந்தது. எனக்கு சந்தேகமாக இருந்தது. உடனே வேறு ஒரு அனுபவமிக்க பரிசோதகரிடம் அனுப்பியதில், பிறக்கும்போதே குழந்தை 2 சிறுநீரகங்களும் இல்லாமல் பிறந்துள்ளது தெரிந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறுநீரகங்கள் மறைய வாய்ப்பில்லையே!

கர்ப்ப காலத்தில் எடுக்கும் ஸ்கேனிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியுள்ளது. சிசுவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று சரியாகப் பார்க்கத் தெரிய வேண்டும். ஸ்கேன் செய்தபோது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ரிசல்ட் தந்து, குழந்தை பிறந்த பிறகு முழங்கைக்குக் கீழே போதிய வளர்ச்சி இல்லாமல் இருந்தது. கர்ப்பத்திலேயே கண்டுபிடித்திருந்தால், சரி செய்ய வாய்ப்பு உண்டு. அதுபோல நன்றாக இருந்த சிசு, குறையுடன் இருப்பதாக ரிசல்ட் வந்தது. அதை நம்பி, அபார்ஷன் செய்தவர்களும் உண்டு. பச்சிளங் குழந்தைகளைப் பொருத்தவரை ரேடியாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், பச்சிளங் குழந்தை சிறப்பு மருத்துவரிடையே நல்ல புரிதல் இருந்தால்தான் சரியான சிகிச்சையும் பரிசோதனையும் கிடைக்கும். அந்த வசதிகள் உள்ள இடத்தைத்தான் நாங்கள் சிபாரிசு செய்ய முடியும்" என்கிறார்.

கோவை, சென்னை, நெல்லை போன்ற இடங்களில் இருக்கும் முன்னணி டயக்னாஸ்டிக் சென்டர்களின் உரிமையாளர்கள், கோடிகளை முதலீடு செய்து, நவீனக் கருவிகளை வாங்கினாலும் அதிகபட்சம் 10 ஆண்டுகள்தான் அவற்றைப்பயன்படுத்த முடியும். தினமும் புதிதாக ஒரு தொழில்நட்பம் அறிமுகமாகி வரும் நிலையில், அடுத்த புதிய தொழில்நுட்பம் வருவதற்குமுன் இதில் போட்ட பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதிகபட்ச நோயாளிகளைப் பரிசோதிக்கத் தேவையானதை நடைமுறையில் செய்யத்தான் வேண்டும்" என்கிறார்கள்.

சில தனியார் மையங்கள், ‘நாங்கள் கமிஷன் எதுவும் தருவதில்லை’ என்று போர்டு வைத்திருக்கிறார்கள். அவர்கள் சோதனைகளின் முடிவுகளைத் தவறில்லாமலும், ‘திறமை, தொழில்நுட்பம் இரண்டையும் மட்டும் முழுமையாக நம்பித் தொழில் செய்வதால், இந்த போர்டு வைத்துள்ளோம். டாக்டர்கள் கமிஷன் பெறக் கூடாது’ என்ற விதி இந்திய மருத்துவ கவுன்சிலில் உள்ளது. ஆனால், நாங்கள் விதியை முறையாகப் பின்பற்றினாலும் கூட நோயாளிகளுக்கு கூடுதல் செலவுதான் ஏற்படுகிறது. ஏன்? முதலில் கமிஷன் தரும் மையங்களுக்கு அனுப்பி, அந்த முடிவுகளில்  சந்தேகம் ஏற்படும்போது அதைச் சரியாக அறிந்துகொள்ள மீண்டும் இங்கு அனுப்பும் டாக்டர்கள் உண்டு" என்று அதிர வைக்கிறார்,ஒரு தனியார்  பரிசோதனை மைய உரிமையாளர்.

கார்ப்பரேட் கட்டாயங்கள்

தனியார் பரிசோதனை மையங்கள் இப்படி என்றால், அனைத்து நவீன வசதிகளும் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நிலை வேறு மாதிரி.  உலகத் தரம் வாய்ந்த கருவிகளை வாங்கிக் குவித்துள்ளதால், ஒவ்வொரு கருவியிலும் ஒரு நாளைக்கு இவ்வளவு நோயாளிகளை பரிசோதித்தே ஆக வேண்டும். அப்படிச் செய்யாத டாக்டர்களிடம் விசாரணை, ஏன் இந்தக் கருவியை அதிகமாகப் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக டாக்டர்களே வருத்தப்படுகிறார்கள். 

இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வசதி இல்லாத டாக்டர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளை கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு அனுப்புவது இன்னொரு வகை பிசினஸ். ஒரு நோயாளியை சிபாரிசு செய்தால், குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் அந்த டாக்டருக்கு கிடைக்கும். சிறப்பு மருத்துவர்கள், தங்களுக்குள்ளேயே ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாக இதைச் செய்கிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகளைப் பொருத்தவரை ஒரு மாதத்தில் இத்தனை அறுவைச் சிகிச்சைகள் செய்தே  ஆக வேண்டும் என்ற டார்கெட்டும் உண்டு. தங்களிடம் வரும் நோயாளிகளை விட்டுவிடக் கூடாது என்பதையும் சில டாக்டர்கள் தெளிவாக கடைபிடிக்கிறார்கள். மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அவர். நடந்தால், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது என்று இருதய சிறப்பு டாக்டரிடம் சென்றுள்ளார். பல மாதங்கள் பரிசோதனை, மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டும் சரியாகவில்லை. ‘என்ன டாக்டர், எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லையே?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டதில், ‘நீங்கள் வேண்டுமானால் நுரையீரல் சிறப்பு டாக்டரிடம் ஒரு செக்கப் செய்யுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். அங்கு போன பிறகே தெரிந்தது, அவருக்கு இதயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று.

தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நன்றாகச் செயல்படும் நிலையில், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வரும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை தேவை இல்லாத நிலையிலும், ‘அதுதான் இன்சூரன்ஸ் இருக்கே, ஆபரேஷன் செய்துவிடலாம்’ என்று வற்புறுத்துவதாகச் சொல்கிறார்கள்.

இன்னும் சில பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள், சில பன்னாட்டு நிறுவனங்களோடு சேர்ந்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் நடத்துகிறார்கள்.
 
பார்மசியும் டாக்டரும்.....

நர்சிங் ஹோம்போல மருத்துவமனை வைத்திருக்கும் 75 சதவிகித டாக்டர்கள் சொந்தமாகவே மருந்துக் கடைகளும் வைத்திருக்கிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகள் தொடர் மருந்துக் கடைகளை நடத்துகின்றன. எந்த மருந்து கம்பெனி கூடுதலாக ஆதாயம் தருகிறதோ, அந்த மருந்தை மட்டுமே எழுதித் தருகிறார்கள். அந்த மருந்தும் அவர்களின் கடையில் மட்டும்தான் கிடைக்கும். இந்த ஆதாயம் என்பது கமிஷனாகவோ, பத்துக்கு 2 ஃப்ரீ என்று பொருளாகவோ இருக்கும். தொடர்ந்து ஆதரவு அளித்தால், இந்த ஆதாயம் தவிர  வெளிநாட்டு, உள்நாட்டு விடுமுறைச் சுற்றுலா, மாதம் ஒரு முறை ஸ்டார் ஹோட்டலில் டின்னர், தங்க நாணயங்கள் உட்பட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு என்று மருந்து கம்பெனிகள் டாக்டர்களுக்கு அள்ளித் தருகின்றன" என்கிறார், தமிழ்நாடு மருந்தாளுநர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர்.

ஒரே மூலக்கூறுகளைக் கொண்ட 2 மருந்துகளில் தங்களுக்கு லாபம் வருகிறது என்பதற்காக பிராண்ட் பெயரில் வெளிவரும் கூடுதல் விலை உள்ள மருந்தை எழுதித் தருவது எந்த விதத்திலும் சரியில்லை. பல இந்திய முன்னணி கம்பெனிகள் நல்ல தரமான, குறைந்த விலை மருந்துகளைத் தயாரிக்கின்றன. பிராண்ட் பெயருடன் வரும் கம்பெனி தயாரிப்புகள்தான் நல்ல மருந்து என்பதெல்லாம் வெறும் வாதம் மட்டுமே. என்ன செய்ய, எல்லாத் துறையைப் போலவே மருத்துவத்திலும் சில கறுப்பு ஆடுகள் இருக்கிறார்கள்" என்கிறார், அடையாறு புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் டாக்டர். ராஜ்குமார்.

மருந்து தயாரிப்பாளர்கள் தரப்பில் அரசின் தவறுதலான அணுகுமுறையே உயிர் காக்கும் மருந்துகளின் விலை ஏற்றத்திற்குக் காரணம் என்கிறார்கள். மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (IDMA) தமிழ்நாடு பிரிவு கௌரவச் செயலாளருமான ஜே.ஜெயசீலன் இது பற்றி விளக்கினார்:

குறிப்பிட்ட மருந்து கம்பெனி புதிதாக ஒரு மூலக்கூறைக் கண்டுபிடித்து அதனடிப்படையில் மருந்து தயாரிக்கிறது என்றால், ரிவர்ஸ் என்ஜினீயரிங் மூலம் அதில் என்ன மூலக்கூறு உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதே மூலக்கூறுகளைக் கொண்டு புதிதாக மருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வந்தது. பன்னாட்டு கம்பெனி தங்கள் பிராண்ட் பெயருடன் விற்பனை செய்யும் மருந்திற்கும் அதே மூலக்கூறுகளைக் கொண்ட ஜெனிரிக் மெடிசின் எனப்படும் பொதுவான இந்திய தயாரிப்பு மருந்திற்கும் விலையில் பெரிய வித்தியாசம் இருக்கும். ஆனால், 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்த புதிய மருந்தும் இந்தியாவில் தயாராகவில்லை. காரணம், பன்னாட்டு மருந்து கம்பெனிகளை தாராளமாக இந்தியாவிற்குள் நுழையவிட்ட அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை.

இந்திய தயாரிப்புகளைக்  குறிப்பிட்ட விலைக்குத்தான் விற்க வேண்டும் என்ற விலைக் கட்டுப்பாடு உள்ளது. அத்தியாவசிய மருந்துகள் என்ற வரிசையில்,  348 மருந்துகளை விலைக் கட்டுப்பாட்டிற்குள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், இதைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களுக்கு எந்த விலைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனாலேயே அந்த மருந்துகளைத் தயாரித்து வந்த இந்திய கம்பெனிகள் இதன் தயாரிப்பையே கைவிட்டுவிட்டன. இப்போது மருத்துவர்களாக இருப்பவர்கள், சில காலத்திற்குமுன் கல்லூரியில் படிக்கும்போது கற்றுக்கொண்ட மாத்திரைகள் இப்போது நடைமுறையில் இருக்காது. புதிதாக வந்த தயாரிப்புகளைப் பற்றி மெடிக்கல் ரெப் சொல்வதைத்தான் டாக்டர் எழுதுவார்.

இந்திய தயாரிப்புகள் இல்லாமல், பன்னாட்டு கம்பெனிகளிடையே போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், தங்கள் தயாரிப்பை டாக்டர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக சில நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். இதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? புதிய மருந்துக் கொள்கையில் ஒரு மாத்திரையின் அதிக விலை, குறைந்த விலை தயாரிப்பை எடுத்து இரண்டிற்கும் பொதுவான சராசரி விலையை இந்திய தயாரிப்பிற்கு நிர்ணயிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. இதற்கும் சில தன்னார்வ நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுதவிர உரிமம் வாங்குவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன" என்று கூறினார்.

வருமானத்தைவிட 10 மடங்கு அதிக மருத்துவ பரிசோதனைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம், அலைக்கழிப்பு. இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு?

பெருமளவில் மக்கள், அரசு மருத்துவமனைகளைச் சார்ந்து இருக்கும் நிலையில், தன்னாட்சி அதிகாரத்துடன் பொதுத்துறை மருத்துவமனைகளை அதிக அளவில் உருவாக்குவதே தீர்வாக இருக்க முடியும்" என்கிறார், திருநெல்வேலி ஹைகிரவுண்டு மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர். மனோகர். உலகமயமாக்கலுக்குப் பிறகு நவீன மருத்துவ சிகிச்சையின் தலைநகராக எப்போது இந்தியா ஆனதோ, அப்போதே இந்தப் பிரச்சினையும் ஆரம்பித்து விட்டது. சேவை என்பது போய், முழுக்க முழுக்க தொழிலாக மாறிவிட்ட நிலையில், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பல்வேறு தரப்பினரும் முதலீடு செய்துள்ளனர். பங்குதாரர்களுக்கு ஆண்டுதோறும் கணிசமான லாபத்தை இதிலிருந்து தர வேண்டிய நிலையில் மருத்துவக் கட்டணங்கள் அதிகரிப்பது இயல்பு. இன்னொருபுறம் பொருளாதார வசதியுடன் இருப்பவர்கள், குறைந்த காலத்தில் நல்ல தரமான மருத்துவ சிகிச்சையை எதிர்பார்க்கிறார்கள். எல்லா கார்ப்பரேட் மருத்துவமனைகளும் மருத்துவ சுற்றுலாவை நம்பியே பெரும்பாலும் செயல்படுகின்றன. அரசும் இதை ஊக்குவிக்கிறது.

பொது பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு மொத்தமே 3 சதவிகிதம்தான் ஒதுக்குகிறார்கள். இது அரசு மருத்துவர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களின் ஊதியத்திற்கே சரியாகிவிடும். இதற்குமேல் அரசுத் துறையை மேம்படுத்த முடிவதில்லை.

பெரும்பாலானவர்கள் அரசு மருத்துவமனையை நம்பி இருக்கும்போது, அதை மேம்படுத்தாமல் தனியாரை ஊக்குவித்தால் இதுபோன்ற நிலையை தவிர்க்கவே முடியாது. தனியார் மருத்துவமனைகள் முற்றிலும் கருவிகளையும் பரிசோதனைகளையும் நம்பியே இருக்கிறார்கள். தனியார் பரிசோதனைக் கூடத்தில் 1,400 ரூபாய் செலவில் டெங்கு பரிசோதனைக்கு உடனடியாக முடிவு தெரியும். அதுவே அரசு மருத்துவமனை என்றால், வெறும் 300 ரூபாய்தான். ஆனால், 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.  அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் (புதுதில்லி), ஜிப்மர் (புதுவை), நிம்ஸ் (ஹைதராபாத்), சித்திரைத் திருநாள் (திருவனந்தபுரம்) போல தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய பொது மருத்துவமனைகளை உருவாக்குவதே இதற்குத் தீர்வு. இதன் உயர்மட்ட நிர்வாகப் பொறுப்பில் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்தால்தான் சுகாதாரத்துறையைத் தேவைக்கு ஏற்ப திறமையாகக் கையாள முடியும். இதற்காக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல ஐ.எம்.எஸ். போட்டித் தேர்வையும் நடைமுறைப்படுத்த  வேண்டும்" என்கிறார் அவர்.      

மருத்துவத் துறையையும் வர்த்தகமாக்க ஊக்குவிக்கும்  அரசு ஒரு பக்கம், இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி லாபம் கொழிக்கும் தனியார் மருத்துவமனைகள் மறுபக்கம், இடையில் சாமானிய மக்கள் பாடு நாளுக்கு நாள் திண்டாட்டமாகி வருகிறது.

வியாழன், 4 ஏப்ரல், 2013

மாசடைந்த காற்றில் எந்தன் ஜீவன்?



சென்ற ஆண்டு மார்ச் மாதம் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வினய் பிறந்தபோது அவனின் எடை ஒரு கிலோவிற்கும் குறைவாக இருந்தது. நீளம் 40 செ.மீ. இத்தனைக்கும் வின குறைப்  பிரசவத்தில் பிறந்த குழந்தை இல்லை. சாதாரணமாக இந்தியக் குழந்தை பிறக்கும்போது 2.5 கிலோ முதல் 3 கிலோ எடையுடனும் 50 செ.மீ., முதல் 80 செ.மீ., நீளத்துடனும் இருக்க வேண்டும். பொதுவாக குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் இப்படி எடை குறைவாக இருக்கும். ஆனால், வினயைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. மற்றபடி அவன் ரொம்பவே  சாதாரணமாக இருந்தான். குறிப்பிட்ட இடைவெளியில் அவனை இங்கு கொண்டு வந்தார்கள். இப்போது நன்றாகவே வளருகிறான்" என்கிறார், இங்கு பணிபுரியும் மகப்பேறு மருத்துவர் ஒருவர்.

வாழ்க்கை முறை மாறுபாடு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தொடர் மன அழுத்தம் தொடர்பான உடல்நல, மனநலப் பிரச்சினைகள் எனப் பல காரணங்களால் குறைந்த எடையுள்ள குழந்தைகள்  பிறப்பது கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அப்போலோ மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் டாக்டர். சுமன்னா மனோகர், இதற்கு மிக முக்கியக்  காரணம், காற்று மாசு" என்று கூறி அதிர வைத்தார். தொடர்ந்து அவரே, கருவுற்ற பெண் தொடர்ந்து மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது அதில் உள்ள நச்சுக்களையே கருவும் சுவாசிக்கிறது. குப்பைகளை எரிப்பது, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை போன்றவற்றால் காற்று மாசு தவிர்க்க முடியாததாகி விட்டது" என்கிறார்.

சென்னை மாநகராட்சியின் பிறப்பு பதிவேட்டைப் பார்த்தால், கடந்த சில ஆண்டுகளாக குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறப்பது அதிகரித்து இருப்பது தெரிகிறது. 2008ம் ஆண்டில் பிறந்த ஒரு லட்சத்து 13 ஆயிரத்து  642 குழந்தைகளில் 11.7 சதவிகிதம் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்து இருக்கிறார்கள். 2012ல் குழந்தை பிறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 191 ஆக குறைந்துள்ளது. ஆனால், எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 15.6 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. இதில் 3 சதவிகிதக் குழந்தைகள் ஒரு கிலோவிற்கும் குறைவான எடையில் பிறந்துள்ளார்கள்.

சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா உட்பட 9 நாடுகளில் 39 லட்சம் குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தின் நியூகாஸ்டல் (‡Newcastle university) பல்கலைக்கழகம் இதை நடத்தியது. வாகனம் மற்றும் நிலக்கரியிலிருந்து வெளிப்படும் மாசுபட்ட காற்றை கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து சுவாசிக்கும்போது, எடை குறைந்த குழந்தைகள் பிறப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல், இதுபோல குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பின்னாளில் பல உடல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும் வெளி விஷயங்கள் பல இருக்கின்றன. அதில் முக்கியமானது காற்று மாசு. சுத்தமான, போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் போவது. குறிப்பாக, சிகரெட் புகை மோசமான பாதிப்பை கருவிலேயே ஏற்படுத்தும்" என்கிறார், சென்னை மருத்துவக் கல்லூரி மகப்பேறு துறைத் தலைவர், டாக்டர். மீனலோசனி. யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட சுற்றுச்சூழல் குறித்த ஆய்வறிக்கையில், காற்று மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட காற்று மாசின் அளவைவிட 5 மடங்கு அதிகமாக இந்தியாவில் காற்று மாசடைந்து இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

‘லேன்செட்’ (lancet) என்ற சர்வதேச மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்தியா உட்பட பல நாடுகளில் 4ல் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறப்பதாகக் கூறுகிறது. 2010ல் பிறந்த 35.19 லட்சம் குழந்தைகளில் 13 சதவிகிதம் குழந்தைகள் 37 வாரங்களுக்கு முன்பே குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளன. இதில் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், 3 லட்சம் குழந்தைகள் இறந்திருப்பதாக அந்தக் கட்டுரை கூறுகிறது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை காற்று மாசு மோசமாக இருந்தாலும் சுகாதார வசதிகள் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம் முழுவீச்சில் செயல்படுவதால் எடை குறைந்த குழந்தைகளைக் காப்பாற்றுவது சாத்தியமாகி உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன் 700 கிராமிற்கு குறைவான எடையில் குழந்தைகள் பிறந்தால், காப்பாற்றுவது சிரமம். ஆனால், இன்று அனுபவமிக்க திறமையான டாக்டர்கள், நவீன தொழில்நுட்பம் என்று இந்தப் பிரச்சினையை எளிதாக கையாள முடிகிறது. பெருநகரங்களில் மட்டுமல்லாது, கிராமப்புறங்களில் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் அனுபவம் மிக்க டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளனர். இன்குபேட்டர் உட்பட போதிய மருத்துவக் கருவிகளும் இருக்கின்றன. கடந்த ஆண்டு இங்கு பிறந்த 500 கிராம் எடையுள்ள குழந்தை, தற்போது முதலாண்டு பிறந்தநாளைக் கொண்டாடி ஆரோக்கியமாக வளருகிறான்" என்கிறார், சூர்யா மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைப் பிரிவு இயக்குநர் டாக்டர். தீபா ஹரிஹரன்.

வெறுமனே இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுவது மட்டும் விஷயம் இல்லை. அவர்களின் முக்கிய உடல் உறுப்புகள் போதுமான வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றன. இதனால், ஆறு வயது வரை கவனமாகப் பாதுகாக்க வேண்டியுள்ளது. காற்று மாசைக் குறைப்பது உடனடி சாத்தியம் இல்லைதான் என்றாலும், குறைந்தபட்சம்  இந்த நச்சு வாயுக்களை சுவாசிப்பதிலிருந்து  கர்ப்பிணிகளைப் பாதுகாப்பது தற்போதைய அவசர, அவசியத் தேவை" என்கிறார்கள் டாக்டர்கள்.

புதன், 3 ஏப்ரல், 2013

எழுச்சி!

எழுச்சி!
மாலன்

முதலில் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாக முணுமுணுப்புகள் முளைத்து காலக் காற்றில் உதிர்ந்தன. பின் ஒரு லட்சம் உயிர்கள் கொல்லப்பட்டன. அதிர்ச்சியில் உறைந்தது உலகம். அழுகுரல்களும் ஆவேசப் பொறிகளும் பீரிட்டெழுந்தன. அடுத்த சில நாள்களில் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பின. முடிந்தது எல்லாம் என நினைத்தார்கள். ஆனால், விதைத்து முளைக்கும் என்பது விதி. இயற்கை காலங்காலமாய் கண்ணெதிரே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் விதி.

முள்ளிவாய்க்காலில் புதைத்தது முளைத்தது மறுபடியும். எங்கே? எங்கு மாணவர்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை, சமூகப் பிரச்சினைகளில் அக்கறை இல்லை, இளைஞர்கள் எல்லாம் சுயநலவாதிகளாகி விட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டதோ அந்தத் தமிழ்நாட்டில். அதன் தலைநகரில்.

சென்னையில் மார்ச் 8ம் தேதி இரவு திலீபன், பிரிட்டோ, அந்தோணி ஜாஜி, பார்வைதாசன், பால் கென்னத், மணி, சண்முக பிரியன், லியோ ஸ்டாலின் ஆகிய 8 பேர் கோயம்பேட்டில் உள்ள செங்கொடி அரங்கம் என்ற தனியார் கட்டிடத்தில் உண்ணாவிரதம் தொடங்கினர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இவர்கள் அனைவருக்கும் வயது இருபதிற்குக்கீழ். இவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை.

ஆரம்பத்தில் அதிகம் கண்டு கொள்ளப்படாமல் இருந்த இவர்களது போராட்டத்தை ஊடகங்கள் ஒளிபரப்பிய பின் அரசியல்வாதிகள் அவர்களை நோக்கி வந்தார்கள். அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாணவர்களிடம் உரையாற்றலாம் என வந்த திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனைப் பேசவிடாமல் கோஷம் போட்டுத் திருப்பி அனுப்புகிறார்கள். காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவால் உண்ணாவிரதப் பந்தலை நெருங்கவே முடியவில்லை. சரமாரியாக கைக்குக் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவர் மீது வீசுகிறார்கள். திருமாவளவன் பேச்சு அடுத்த சில நிமிடங்களில் முகநூலில் கிண்டலடிக்கப்படுகிறது.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. தட்டிக் கேட்க வேண்டியவர்கள் தட்டிக் கழித்தார்கள். மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த யாருடைய சமாதானமோ, ஆதரவோ எங்களுக்குத் தேவையில்லை" என்கிறார், உண்ணாவிரதம் இருந்த மாணவர் பிரிட்டோ.

இதுநாள்வரை அரசியல் அமைப்புகளின் பேச்சைக் கேட்டு ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என நம்பி இருந்தோம். ஆனால், அந்த நம்பிக்கை பாழானதே தவிர வேறு எந்தவொரு பயனும் இல்லை. ஈழப் பிரச்சினையை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனரே தவிர ஈழ மக்களுக்கென்று அவர்கள் எதுவும் செய்யவில்லை.  அதனால், தான் முற்றிலும் எந்தவொரு அரசியல் இயக்கத்தையும் நம்பாமல் போராட்ட களத்தில் மாணவர்களாகிய நாங்களே இறங்கியுள்ளோம். இது முழுவதும் மாணவ சக்தியால் நடத்தப் படும் போராட்டம்" என்கிறார், புதுவை மாணவர்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் சுவாமிநாதன்.

அரசியல் கட்சிகள் எடுத்ததற்கு நேர் எதிரான நிலையை அந்த 8 லயோலா மாணவர்களும் எடுத்திருந்தார்கள். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வற்புறுத்த 7ம் தேதி நாடாளுமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகள் கோரின. அந்தக் கோரிக்கையை முன் வைத்து, தில்லியில் அதே 7ம் தேதி திமுக டெசோ கூட்டத்தை நடத்தியது. அதற்காக மார்ச் 12ம் தேதி கடையடைப்புக்கும் திமுக அழைப்பு விடுத்தது. ஆனால், 8ம் தேதி இரவு உண்ணாவிரதம் துவக்கிய லயோலா  மாணவர்கள்,  தமிழக அரசியல் கட்சிகளுக்கு நேர் எதிராக, ‘அமெரிக்கத் தீர்மானம் அயோக்கியத் தீர்மானம், அதை ஆதரிக்கக் கூடாது’ எனத் தங்கள்  கோரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள்.

அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாக, அவர்களது அரசியல் கோஷங்களுக்குப் பலியானவர்களாக மாணவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதை அவர்களின் இந்த நிலைப்பாடு உணர்த்தியது.

மாணவர்களின் போராட்டம் கவனம் பெறுவதைக் கவனித்த அரசு, அவர்களைக் கைது செய்தால் போராட்டம் ஓய்ந்துவிடும் என நினைத்திருக்க வேண்டும். இரவோடு இரவாக அவர்களைக் கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு முன்னெச்சரிக்கையாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்த இடத்தையும் சீல் வைத்தது.

ஆனால், இது நெருப்பை, ஓலைக் கூடைக்குள் ஒளித்து வைத்த ‘புத்திசாலித்தனமாக’ ஆனது. எட்டு பேரின் போராட்டம் ஓய்ந்தது. ஆனால், எட்டுத் திக்கும் போராட்டம் வெடித்தது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, எனத் தமிழகத்தின் பெரிய நகரங்களில் மட்டுமன்றி,  நாகை, திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், வேதாரண்யம், புதுக்கோட்டை, கரூர், நெல்லை, சிதம்பரம், விருத்தாச்சலம்  போன்ற சிறிய நகரங்களிலும் மாணவர்கள் போராட வீதியில் இறங்கினர். தமிழகத்தில் மட்டுமன்றி, புதுச்சேரிக்கும் போராட்டம் பரவியது. சட்டக் கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள், கலைக் கல்லூரி மாணவர்கள், ஏன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட என அனைத்துத் தரப்பும் களமிறங்கினர். சாதாரணமாக இது போன்ற போராட்டங்களில் பங்கேற்க முன்வராத சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள், ஞாயிறன்று கல்லூரி வளாகத்திற்குள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.

என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்த அரசு, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து விடுதிகளை மூடியது. வெள்ளிக்கிழமை (மார்ச் 15) இரவு 9 மணிக்குள் விடுதியிலிருந்து மாணவர்களை வெளியேறச் சொல்லி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் திகைத்தார்கள். திடீரென இரவில் வெளியே போ என்றால் என்ன செய்வார்கள்? ஆனால்,  மாணவர்கள் தனித் தனியாகப் பிரிந்து அவரவர் ஊர்களுக்குச் சென்றால், போராட்டம் பிசுபிசுத்துவிடும் என அது எண்ணியது.

ஆனால், தணல்போல் சிவந்த இரும்பில் தண்ணீரைக் கொட்டியது போலானது. உதிரி உதிரியாகப் போராடிக் கொண்டிருந்த மாணவர்கள், ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள், நள்ளிரவில் மெரினா கடற்கரைக்குச் சென்று, காந்தி சிலை அருகே  உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். எங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பப் போவதில்லை. மாணவர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம். போராட்டம் நடக்கும் இடத்திலேயே தங்குவோம்" என கோவை மாணவிகள் தெரிவித்துள்ளனர். அவர்களது சக மாணவர்கள், மாணவிகளுக்கான உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்துதர முயற்சி எடுத்து வருகின்றனர். இன்னொரு புறம் மாவட்ட அளவில் உள்ள அரசு அதிகாரிகளும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவர்களிடத்தில் பேசி, அவர்களது உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்து வருகின்றனர். மற்றொரு புறம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களது பெயர்,  ஊர் முகவரி ஆகியவற்றை மத்திய உளவுத்துறை திரட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. நாளை அரசு வேலையில் சேர இது இடையூறாக இருக்கும் எனச் சொல்லி, மாணவர்களைப் போராட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்ய இந்த முயற்சி.

ஆட்சியிலிருப்பவர்கள் இப்படியெல்லாம் குறுக்குவழிகளைப் பின்பற்றினால் விஷயம் விபரீதமாகிவிடும். மாணவர்களின் இந்தப் போராட்டத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் இரண்டு. 1. மாணவர்கள் எந்த அரசியல் கட்சியையும் அணுகி ஆதரவு கேட்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்களை நோக்கி வருகிற அரசியல் கட்சிகளிடமிருந்து கூட அவர்கள் விலகி நிற்கிறார்கள். 2. அவர்கள் இந்த நிமிடம் வரை (மார்ச் 18 மாலை வரை) வன்முறையில் இறங்கவில்லை. தீக்குளிப்பது போன்ற உணர்ச்சி மேலீட்டால் மேற்கொள்ளும் அசட்டுத்தனங்களில் இறங்க வில்லை. அவர்களது வயதுக்கு மீறிய பொறுமையோடும் முதிர்ச்சியோடும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

ஆனால், இந்த முதிர்ச்சி அவர்களது கோரிக்கைகளில் இல்லை. பல கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறக் கூடியவை அல்ல.  உதாரணமாக, பொது வாக்கெடுப்பு போன்றவை, சர்வதேச அளவில் நீண்ட கால லாபி, பரப்புரை, ஒருங்கிணைப்பு ஆகியவை மூலமே சாதிக்க முடிந்தவை. வேறு சில அரசமைப்புச் சட்டத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை.

எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெற நான்கு அம்சங்கள் முக்கியமானவை.

1. இலக்கு குறித்த தெளிவு.
2. உத்திகள்
3. செயல் திட்டம்
4. ஒருங்கிணைப்பு

தன்னெழுச்சியாக கிளர்ந்துள்ள இந்த மாணவர் போராட்டத்தில் இவை இல்லை. இதன் காரணமாக சிறிது காலத்திற்குப் பிறகு இந்தப் போராட்டம் நீர்த்துப் போகலாம் அல்லது தங்களுக்கு ஆதாயம் இல்லை என்பதால், அரசியல் கட்சிகள் இதை அலட்சியப்படுத்தி மறைமுகமாக பலவீனப்படுத்தலாம். அரசுகள், மிரட்டல்கள் ஒடுக்கல்கள் மூலமாக இதை முடக்கலாம். ஆனால், இந்த எழுச்சி வீண் போகாது. ஏனெனில் -

விதைத்தது முளைக்கும். அது இயற்கையின் விதி.

அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்?

ரவிக்குமார்  (பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
இதுவொரு தன்னெழுச்சிப் போராட்டம். இந்தப் போராட்டம் நீடிக்கலாம் அல்லது ஓரிரு நாளில் முடிந்துவிடலாம். ஆனால், இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தக் கோப அலை மத்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக காங்கிரசுக்கு எதிராகத் திரும்பும். பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட படம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழப்பிரச்சினையில் அரசியல் கட்சிகள் எதுவும் சரியாக செயல்படவில்லை. அரசியல் கட்சிகள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இது அரசியல் கட்சிகளின் தோல்வி. இளைய சமுதாயத்தின் நம்பிக்கையைப் பெற முடியாமல் போனதற்கான காரணம் குறித்து ஒவ்வொரு அரசியல் கட்சியும் சிந்திக்கவேண்டும்."


ஜி.ராமகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், சிபிஎம்)
இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.இப்படிப்பட்ட சூழலில் மனித உரிமைமீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுயேச்சையான, நம்பகத் தகுந்த விசாரணை நடத்தப் படவேண்டும்  அதற்கு  ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் ஒன்று திரண்டிருப்பது வரவேற்கத்தக்கது."


இள.புகழேந்தி (மாணவரணி செயலாளர், திமுக)
நியாயமான கோரிக்கை களுக்காக தமிழக மாணவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்று திரண்டுள்ளனர். அதை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். உண்மையான உணர்வுகளோடு போராட்டக் களத்தில் உள்ள இந்த மாணவர்கள், வரலளாற்றில் முக்கிய இடத்தை வகிப்பார்கள்."


சமரசம் (அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.)
இந்தக் கொந்தளிப்புக்கு சேனல் 4 தான் காரணமே ஒழிய, அரசியல் கட்சிகள் அல்ல. போராடும் மாணவர்களிடம் தேசியமும் இல்லை, திராவிடமும் இல்லை. அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு போராடுகிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டம், ஈழத்துக்கான மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது."


சி.மகேந்திரன் (மாநில துணைச்செயலாளர், சிபிஐ)
தற்போது நடைபெறும் போராட்டம் இளைய தலைமுறையின் அரசியல் எழுச்சியைக் காட்டுகிற, சக்தி வாய்ந்த போராட்டம். பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதைப்போல அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மாணவர்கள் அம்பலப்படுத்துகின்றனர். இந்திய அரசின் இரட்டை நிலையை அம்பலப்படுத்தி, அத்தீர்மானத்தில் உடனடியாக மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று நிர்ப்பந்தம் தருகின்றனர். முக்கியமாக, இப்போராட்டத்தின் மூலமாக, ஈழ விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகளவில் அழுத்தம் கிடைத்துள்ளது."


மல்லை சத்யா (துணைப்பொதுச்செயலாளர், மதிமுக)
ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டிய அளவுக்கு 1965ல் தமிழக மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் படுதீவிரமாக இருந்தது. அந்த அளவுக்கு சக்திமிக்க போராட்டம் தற்போது எழுந்துள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவர்கள் திரண்டுள்ளனர். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் மீதும் அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று  சொல்ல முடியாது. ஒருகாலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த திமுக, இன்றைக்கு நிலை மாறிவிட்டதால், அந்தக் கட்சியைத்தான் மாணவர்கள் எதிர்க்கின்றனர்."


பி.எஸ். ஞானதேசிகன், (மாநிலத் தலைவர், காங்கிரஸ் கட்சி)
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு இந்தியா உதவி செய்கிறது. 13வது சட்டத்திருத்தம் வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மாணவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், அது இந்தியாவின் கையில் இல்லை. இன்னொரு நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா.வால்தான் முடியும். ஆனால், அந்தளவு இந்தியாவிற்கு ஐ.நா.வில் பலம் கிடையாது. போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்."


இல.கணேசன், (மாநிலத் தலைவர், பாஜக)
தமிழகத்தில் மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடுவது பாராட்டுக்குரியது. ஆனால், அது ஓர் அடையாளமாக இருந்தால் போதுமானது. மாணவர்களின் இந்த உணர்வை எதிரொலிக்க மறுக்கிற அரசியல் கட்சி எது இருக்கிறது? மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டுதான் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்."
பேட்டிகள்: ஆ. பழனியப்பன்


ண்ணாவிரதமிருந்த லயோலா மாணவர்களில் ஒருவரான திலீபன் 1,330 அருங்குறட்களையும் முற்றோதல் செய்தமைக்காக தமிழக அரசின் குறள் பரிசு ரூபாய் 10,000 பெற்றவர். முதல் சீரைச் சொன்னால் குறளைச் சொல்லுதல்,  குறளைச் சொன்னால் குறளின் எண்ணைச் சொல்லுதல், குறளின் எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் போன்று பல்வேறு வகைகளில் திருக்குறளை நினைவு கூரும் ஆற்றல் கொண்டவர். கி.பி.1 முதல் கி.பி.1,00,000 ஆண்டு வரையிலான தேதியைச் சொன்னால், கிழமையைச் சொல்லும் திறமை கொண்டவர். பதினாறு கவனக நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.  
தகவல்: வசந்தகுமார், கிராபிக் டிசைனர் /முகநூல்