Powered By Blogger

சனி, 12 ஜனவரி, 2013


கூலிப்படையாக மாறிவரும்  இளைஞர்கள்


கூலிப்படைகளின் எண்ணிக்கையும், செயல்பாடுகளும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், கூலிப்படைகளாக செயல்படுவோர் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது

ம் சிறைச்சாலைகள் கிரிமினல்களின் கூடாரங்களாக விளங்குகின்றன. கொலை வழக்கில் குற்றம்  சாட்டப்பட்ட ஒருவர், எட்டு மணி நேரத்திற்கு மட்டுமே சிறை அறையில் அடைக்கப்படுகிறார். ஆனால், 16 மணி நேரம் திறந்த வெளியில் (open yard)  சுதந்திரமாக உலவுகிறார். அங்கு எல்லா கிரிமினல்களும் சந்தித்துக்கொள்கிறார்கள். குழுக்களாக உருவாகிறார்கள். குற்றங்கள் தொடர்பான விஷயங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அடுத்து நிகழ்த்தவிருக்கும் குற்றத்திற்கான திட்டங்களை வகுக்கிறார்கள். இத்தகைய சுதந்திரம் நம் சிறைச்சாலைகளில் இருக்கிறது’ -  என்பது அதிர்ச்சிக்கு உரிய செய்தி. இதைச் சொன்னவர் தமிழக காவல்துறையின் தலைவர் என்பது பேரதிர்ச்சிக்குரியது.

தமிழகத்தில் கூலிப்படையினரின் அட்டகா சங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், கூலிப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் மையங்களாகவும், பயிற்சி அளிக்கும் பாசறைகளாகவும் ஆகிவிட்டன சிறைச்சாலைகள். குற்றவாளிகளைச் சீர்திருத்துவதும், அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து நல்வழி காட்டுவதும் சிறைச்சாலையின் முக்கிய நோக்கம். ஆனால், அதற்கு நேர்மாறாக இருக்கிறது நம்முடைய சிறைச்சாலைகளின் நிலைமை. குற்றச்செயல்களில் ஆரம்பகட்டத்தில் இருக்கும் ஒருவன், ஒரு முறை சிறைக்குள் சென்றால், பழுத்துப் போனவனாக வெளியே வருகிறான். அந்தளவுக்கு நம் சிறைச்சாலைகள் படுமோசமாக உள்ளன.

சாதாரண திருட்டு, அடிதடி, அறியாமையால் செய்த சிறு தவறுகள் தொடர்பான வழக்குகளில் (Petty cases),இளைஞர்கள் சிறைக்குச் செல்ல நேர்கிறது. ‘மகன் ஜெயிலுக்குப் போயிட்டான்’ என்கிற கோபத்தில் பல பெற்றோர் அவனைக் கைகழுவுகின்றனர்.

‘சிறைக்கு வந்துவிட்டோமே, பெற்றோர் நம்மை கைவிட்டுவிட்டனரே’ என்ற கவலையும் சோர்வும் உள்ளே வரும் இளைஞர்களுக்கு இருக்கும். அச்சமயத்தில் அவனைப் பழைய குற்றவாளிகள் தொடர்பு கொள்வார்கள். அவனிடம் ஆறுதலாகப் பேசுவார்கள். அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்கள். அதெல்லாம் அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும். பின்னர் அவனை ஜாமீனில் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்வார்கள். ‘அப்பாவோ, அம்மாவோ நம்மை வந்து எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஆனா, நம்மளை ‘அண்ணன்’ ஜாமீன்ல எடுத்துட்டாரேன்னு ரொம்ப சந்தோஷப்படுவான். ஜாமீனில் எடுத்த நபரை ஒரு கடவுள் ரேஞ்சுக்கு நினைக்க ஆரம்பிப்பான்" என்கிறார், இத்தகைய சம்பவங்களை தினந்தோறும் பார்த்து வருகிற, திருச்சி மத்திய சிறைச்சாலையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர்.

 டிப்ளமோ முடித்த 22 வயதுடைய ஓர் இளைஞன், செல்போன் டவர் அமைக்கும் வேலையில் இருந்தான். அங்கு பேட்டரியைத் திருடி விட்டான் என்கிற குற்றச்சாட்டில் சிறைக்கு வந்தான். இங்கு நல்லபடியாகவே இருந்தான். பிறகு விடுதலையானான். இரண்டு மாதங்களில் அவன் மீண்டும் சிறைக்கு வந்தான். கேட்டதற்கு, தன் மீது போலீசார் பொய் வழக்குப் போட்டுவிட்டதாகச் சொன்னான். இப்படியாக தொடர்ச்சியாக பொய் வழக்குப் போட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட அவனுக்கு பழைய கிரிமினல்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனுக்கு கஞ்சாவைக் கொடுத்துப் பழக்கினர். வெளியே போகும்போது செலவுக்கு நிறையப் பணம் கொடுத்தனர். இப்போது அவன் கூலிப்படையாக செயல்படுகிறான்" என்கிறார், மத்திய சிறை ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிறைக்காவலர் ஒருவர்.

வேறு எப்படியெல்லாம் கூலிப்படைக்கு ஆள் சேர்க்கிறார்கள் என்பதை விசாரிக்கும்போது, அதிர்ச்சிக்குரிய பல தகவல்கள் கிடைத்தன. அதில் ஒன்று...

இளம் வயதில் குற்றம் செய்து, சீர்திருத்தப்பள்ளிக்கு வரும் சிறுவர்களை விசாரணைக்காக சிறுவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வோம். அங்கு கூலிப்படைகளைச் சேர்ந்த சிலர் இருப்பார்கள். நாங்கள் அழைத்துச் செல்லும் சிறுவர்களை தொடர்ச்சியாக நோட்டமிடுவார்கள். பதினெட்டு வயது நிறைவடைந்தவர்களை பொதுவான சிறைகளுக்கு அனுப்பிவிடுவோம். அவர்களை அங்குள்ள பழைய குற்றவாளிகள் வசப்படுத்திக் கொள்வார்கள்" என்கிறார், கோவை மாவட்டத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்.

முதலில் ஆறுதலாகப் பேசி, மூளைச்சலவை செய்கிறார்கள். பிறகு, கஞ்சா போன்ற போதை வஸ்துகளைப் பழக்குகிறார்கள். இவ்வாறு படிப்படியாக தங்கள் வலைக்குள் கொண்டு வந்து, கூலிப்படைக்கு இளைஞர்களைத் தயார் செய்கிறார்கள்.

ஒவ்வொரு கூலிப்படைக்கும் யாரோ ஒரு அரசியல் புள்ளியின் மறைமுக அரவணைப்பு உண்டு. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் அரசியல்வாதிகளின் படுகொலைச் சம்பவங்களைக் கூர்ந்து நோக்கினால், அதில் கூலிப்படையினரின் தொடர்பும், அவர்களுக்குப் பின்னால் யாரோ ஓர் அரசியல் எதிராளிகளின் ஆதரவும் இருப்பது புலப்படும்.

எங்க பகுதியில கருவேல மரங்களை டெண்டர் எடுத்தா, பெரும் பணம் கெடைக்கும். உள்ளூரு அரசியல்வாதிங்கதான் டெண்டர் எடுப்பாங்க. டெண்டர் எடுக்கப் போறப்ப, எதிராளியை மிரட்டுறதுக்காக ஒரு கும்பல் வேணும். கிராமத்துல வேலையில்லாம இருக்கிற இளவட்டப் பசங்களை பத்துப் பதினைஞ்சு கார்கள்ல கூட்டிக்கிட்டுப் போவாங்க. எல்லாருக்கும் பிராந்தியும் பிரியாணியும் வாங்கிக் குடுப்பாங்க. இருநூறு ரூபாய் கூலியும் குடுப்பாங்க. டெண்டர் எடுக்கிற எடுத்துல பிரச்சினை வந்தா, அடிதடியில எறங்கணும். சில சமயத்துல கொலையில கூட முடியும். இந்த மாதிரி தொடர்ச்சியா போய்க்கிட்டிருந்த நிறையப் பசங்க, இப்ப கூலிப்படையில சேர்ந்துட்டாங்க" என்கிறார், சிவகங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெ.ராமச்சந்திரன்.

பெரும்பாலும் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான் ஃபீல்டுக்குப் போகிறார்கள். முப்பது வயதைக் கடந்தவர்கள் யாரும் ஃபீல்டுக்குப் போவதில்லை. டீல் பேசுவது, ஸ்கெட்ச் போடுவது, சம்பவத்துக்குப் பிறகு கொலையாளிகளைப் பாதுகாப்பது என்பது மாதிரியான வேலைகளை மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள். சிறைக்குள் ‘ஸ்கெட்ச்’ போட்டு வெளியில் ‘அசைன்மெண்ட்’டை முடிப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. உள்ளே இருந்துகொண்டு ஸ்கெட்ச் போடுவதன் மூலம் சிலர் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். இது ஒரு பெரிய பிஸினஸ்போல நடப்பதாகச் சொல்கிறார்கள்.

தொடர்ந்து ராமச்சந்திரன் கூறுகையில், கூலிப்படையில பெரும்பாலும் ஜாதியாத்தான் ஒண்ணு சேர்றாங்க. அது எந்த ஜாதியா இருந்தாலும் சரி. அந்தந்த ஜாதிக்காரப் போலீசாரோட ஆதரவு இவங்களுக்கு இருக்கிறதாவும் தெரியுது. இன்னொரு பக்கம், ஜெயில்ல ஏற்படுற தொடர்புகள வச்சு பல ஊரைச் சேர்ந்தவங்க ஒரு டீமாக சேர்றாங்க. இந்த மாதிரியான நெட்வொர்க்கை கூலிப்படை தாதாக்களே உருவாக்கித் தர்றதாகச் சொல்றாங்க" என்கிறார்.

தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் விடுதியில் தங்கிப்படிக்கும் கல்லூரி மாணவர்கள் கூலிப்படையாகப் போவதாகவும் நமக்குத் தகவல் கிடைத்தது. காரணம். மோசமான விடுதி உணவுக்கு மாற்றாக அவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது. கைச்செலவுக்குப் பணமும் கிடைக்கிறது" என்கிறார், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு காலத்தில் கூலிப்படையில் செயல்பட்ட ஒருவர்.

அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு செல்போனும் கூலிப்படையினருக்கு அத்யாவசியத் தேவையாகிவிட்டது. முன்பெல்லாம், அசைன்மெண்ட் முடிந்தவுடன் ஏற்கெனவே பயன்படுத்திய சிம்கார்டை மாற்றிவிட்டு, பழைய செல்போனையே பயன்படுத்துவார்கள். அதைவைத்துக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால், இப்போது புதிய முறையைக் கையாள்கிறார்கள். அசைன்மெண்ட்டுக்கு முன்பு பயன்படுத்திய செல்போன்கள் அனைத்தையும் அப்படியே ஓரங்கட்டிவிட்டு புது செல்போன்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த டெக்னிக்கை, சிவகங்கை அதிமுக மாணவரணி செயலாளர் கதிரேசன் கொலை வழக்கில், கூலிப்படையினர் கையாண்டதால், கொலையாளிகள் யாரென்பதைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசாரே திணறினர்" என்கிறார், சிவகங்கை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர்.

சமூக அமைதிக்கு உலை வைக்கும் இதுபோன்ற மோசமான நிலைக்கு வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூகக் காரணிகள் இருந்தாலும், சிறைச்சாலைகளை சரியாக நிர்வகித்தாலே இளைஞர்கள் திசைமாறிச் செல்வதையும் கூலிப்படை, ரவுடித்தனம் போன்ற சமூகவிரோதச் செயல்களையும் குறைக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.

300 கைதிகளைக் கண்காணிக்க ஒரு காவலர், ஒரு தலைமைக்காவலர் என இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். 300 பேரை இரண்டு பேரால் எப்படிச் சமாளிக்க முடியும்? கடந்த சில ஆண்டுகளில் என்னைப் போன்ற டிகிரி படித்த துடிப்பான, நேர்மையான இளைஞர்கள் சிறைப் பணியில் சேர்ந்துள்ளனர். ஆனால், நாங்கள் நேர்மையாகப் பணியாற்றுவதற்கு ஏற்கெனவே லஞ்சத்தில் ஊறிய அதிகாரிகள் தடையாக உள்ளனர்." என்கிறார், மேற்கு மாவட்ட மத்திய சிறைச்சாலை ஒன்றில் பணியாற்றும் தலைமைக்காவலர் ஒருவர்.

சிறு குற்ற வழக்குகளில் சிறைக்கு வரும் இளைஞர்கள், பழைய குற்றவாளிகளுடன் சேருவதால்தான் பெரிய குற்ற வாளிகளாக மாறுகின்றனர். அதைத் தடுக்க என்ன செய்யலாம்?

சிறு குற்றங்களில் தொடர் புடையவர்களை பெரிய குற்றவாளிகளுடன் சேர விடுவதால், கூலிப்படைகளை உருவாக்கும் ‘தொழிற்சாலை’யாக சிறைச்சாலை மாறுகிறது. போதைப்பொருள் கடத்தல் போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் தனியாக வைக்க வேண்டும், மற்ற குற்றவாளிகளுடன் சேரவிடக்கூடாது என்ற விதி உள்ளது. எனவே, சிறு குற்றங்களை செய்தவர்களை பெரிய கிரிமினல்களுடன் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளம் குற்றவாளிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிற குற்றவாளிகளுடன் சந்திக்கவிடக்கூடாது" என்கிறார், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜு தாகூர்.

இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு சமூகக் காரணிகள் ஒருபுறம் இருந்தாலும், இக்குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நீதித்துறைக்கும் சிறைத்துறைக்கும் மிகப் பெரிய பங்கு இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு துறைகளின் செயல்பாடுகளும் சரியாக இல்லை என்பது வருத்தத்துக்குரியது. சிறைகளின் சூழலை முற்றிலுமாக மாற்றியமைத்து, சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும். இன்னொருபுறம், குற்ற வழக்குகளின் விசாரணையை வெகு விரைவாக முடிக்க வேண்டும்" என்கிறார், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன்.

அக்கறையோடு ஆவன செய்யுமா அரசு?

ரவுடிகள் கணக்கு இருக்கு; கூலிப்படை கணக்கு இல்லை

சில மாதங்களுக்கு முன்பு, தமிழகத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தமிழக காவல்துறை தலைவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார். தமிழகத்தில் 16,502 ரவுடிகள் இருப்பதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். ரவுடிகள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும் நெல்லை இரண்டாம் இடத்திலும் மதுரை மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதே நேரத்தில், தமிழகத்தில் செயல்படும் கூலிப்படைகளின் எண்ணிக்கை குறித்த விவரம் காவல்துறையிடம் இல்லை என்று டிஜிபி கூறியுள்ளார்.

மின்னஞ்சல்
முக்கிய நிகழ்வுகள் - 2012
 

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ‘புதிய தலைமுறை கல்வி’ வழங்கும் பகுதி இது.

ஜனவரி

8.     சென்னை ஓபன் டென்னிஸ், ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ், டிப்சரேவிச் (செர்பியா) இணை பட்டம் வென்றது.

10.     தமிழகத்திற்கு ‘தானே’ புயல் நிவாரண நிதியாக ரூ. 500 கோடி ஒதுக்கப்படும் என பிரதமர் அறிவிப்பு.

11.     முதல் அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் தொடக்கம்.

13.      தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து திடீர் ராஜினாமா.

20.     ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி நட்ராஜ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமனம்.

23.     சென்னை பெருங்குடியில் உள்ள வங்கி ஒன்றில் பட்டப்பகலில் ரூ. 24 லட்சம் கொள்ளை.

26.    தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அக்ரி. கிருஷ்ண மூர்த்தி, வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டு, என்.ஆர்.சிவபதி, முக்கூர் என். சுப்பிரமணியன் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிப்ரவரி

1.     சட்டசபையில் கையை நீட்டி ஆவேசமாகப் பேசிய விஜயகாந்த் உள்பட 10 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

2.     கர்நாடக சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த லட்சுமணன் சவாதி, சி.சி.பட்டீல், கிருஷ்ணன் பாலேமர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

2.     மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ. ராசா இருந்த போது, அவர் வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஏலத்தின் மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டது.

9.      பாரிமுனை செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியை  உமா மகேஸ்வரி (வயது 39), 9-ஆம் வகுப்பு மாணவனால் கொலை செய்யப்பட்டார்.

13.      வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் ரூ. 24.50 லட்சம் கோடி என சி.பி.ஐ. இயக்குனர் அமர் பிரதாப் தெரிவித்தார்.

15      .கொல்லம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 இந்திய மீனவர்கள், இத்தாலிய மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

15.     சென்னை கீழ்கட்டளை அருகே உள்ள வங்கியில் பட்டப்பகலில் ரூ. 14 லட்சம் கொள்ளை போனது.

15.     எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட ஜாம்பாவன்களுக்கெல்லாம் அம்மாவாகவும் 1,500 படங்களில் நடித்த பெருமை கொண்டவருமான பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்.

23.     வேளச்சேரியில் பதுங்கியிருந்த வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

25.     சென்னையில் இரண்டு மணி நேரம், பிற மாவட்டங்களில் நான்கு மணி நேரம் என தமிழகத்தில் மின்வெட்டு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மார்ச்

3.     இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் விக்ரம் சிங் நியமனம்.

4.     பீகாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய மகளிர் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

5.    தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி மாலுமிகளை சிறையிலடைக்க திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

5.     ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் தேர்வு.

6.     உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி ஆட்சியைப் பிடித்தது. மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. உத்தரகாண்டில் சுயேச்சை ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. பஞ்சாபில் அகாலிதளம்-பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

8.     ஐ.நா. சபை மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இலங்கை போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

9.     ‘இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்’ ராகுல் திராவிட் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

10.   உ.பி. முதல்வராக முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் தேர்வு.

12. திண்டுக்கல்லில் உள்ள லாட்ஜில் பதுங்கியிருந்த தீவிரவாதி சுட்டுக் கொலை.

14. ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது. மம்தாவின் எதிர்ப்பால் கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டது.

16.     மத்திய பட்ஜெட் தாக்கல். 46 ஆயிரம் கோடிக்கு வரி விதிப்பு. வருமான வரி உச்ச வரம்பு  2 லட்சமாக உயர்த்தப்பட்டது.

18.     மம்தாவின் எதிர்ப்பால் மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா.

19.     கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.

20.     மத்திய ரயில்வே அமைச்சராக முகுல்ரா பதவியேற்பு.

21.     நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ. 10.60 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக தலைமை தணிக்கை கணக்கு அதிகாரி அறிக்கை.

21.     சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முத்துச்செல்வி (அதிமுக) வெற்றி.

22.     இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

29.    முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை.

30.    தமிழகத்தில் மின் கண்டனம் அதிரடியாக உயர்த்தப்பட்டது.

ஏப்ரல்

1.     புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர். இ.கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் பலி.

1.  மியான்மர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஆங் சாங் சூயி உள்பட அவரது ஐனநாயக கட்சியினர் 44 இடங்களில் வெற்றி பெற்றனர்.

4.      மத்திய அரசுக்குத் தெரியாமல் தில்லியில் ராணுவம் குவிக்கப்பட்டதாக பரபரப்புச் செய்தி வெளியானது.

19.     கண்டம் விட்டு கண்டம் பாயும்  ‘அக்னி - 5’ ஏவுகணை சோதனை வெற்றி.

21.    சத்தீஸ்கரில் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றனர்.

26.     மாநிலங்களவை எம்.பி.யாக சச்சின் தெண்டுல்கர் நியமனம்.

27.     மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டார்.

28. போலி ஆயுத பேர ஊழல் வழக்கில் முன்னாள் பா.ஜ. தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு தில்லி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

மே

5.     மதுரை ஆதீன மடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை.

13.     நாடாளுமன்றத்தின் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் உரையாற்றினர்.

14.     நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 12 இந்தியர்கள் பலி.

15.     ஸ்பெக்ட்ரம் ஊழலில் 15 மாதங்கள் சிறையிலிருந்த ஆ. ராசாவுக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

22.     நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக மத்திய அரசு மீது புதிய புகார் கூறப்பட்டது.

23.     பெட்ரோல் விலை அதிரடியாக உயர்வு. லிட்டருக்கு ரூ 7.50 உயர்த்தப்பட்டது.

24.     உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி.

27.     ஐபிஎல் சீஸன் 5 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

30.     விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் போட்டியில் போரிஸ் கெல்பாண்டை வீழ்த்தி 5வது முறையாக சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

ஜூன்

6.     புதிய தலைமை தேர்தல் கமிஷனராக வி.எஸ். சம்பத் நியமனம்.

11.     கர்நாடகத்தில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு அம்மாநில அரசு சீல் வைத்தது.

15.     காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி என சோனியா காந்தி அறிவிப்பு.

15.     புதுக்கோட்டை இடைத்தேர்தலில் கார்த்திக் தொண்டைமான் (அதிமுக) வெற்றி.

19.     நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை, பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

20.     ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்குவதற்கு ரூ 5 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. நீதிபதி பட்டாபி ராமாராவ் கைது.

21.     பாகிஸ்தான் பிரதமராக பர்வேஸ் அஷ்ரப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

25. மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி தில்லியில் கைது.

ஜூலை

1.     யூரோ கால்பந்து போட்டியில் மூன்றாவது முறையாக ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.

4.     நீச்சல் புயல் என அழைக்கப்பட்ட அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். (ஒலிம்பிக்கில் இவர் இதுவரை 22 பதக்கங்களை கைப்பற்றியுள்ளார்).

18.     தமிழக அமைச்சரவையில் இருந்த கே.ஏ.செங்கோட்டையின் பதவி பறிக்கப்பட்டு, தோப்பு வெங்கடாசலம் புதிய அமைச்சராக நியமனம்.

18.     இந்திப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா மரணம்.

22.     ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி அபார வெற்றி.

23.   நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ராணுவப்படையில் இருந்த கேப்டன் லட்சுமி செகல் மரணம்.

25 .  இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி (வயது 76) பதவியேற்றுக் கொண்டார்.

25.     தாம்பரம் முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த 2-ஆம் வகுப்பு மாணவி ஸ்ருதி,  தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியானார்.

27.     லண்டனில் ஒலிம்பிக் 2012 போட்டிகள் துவங்கியது.

30.     தில்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலி.

ஆகஸ்ட்

12.     தர்மபுரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 2 தேர்வு வினாத்தாளுடன் வந்தவர் கைது.

13.     ஆறரை லட்சம் பேர் எழுதிய குரூப் - 2 தேர்வு ரத்து.

17.    நிலக்கரி ஒதுக்கீடு உள்பட மூன்று திட்டங்களில் மத்திய அரசுக்கு ரூ. 3 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை கணக்கு அதிகாரி அறிக்கையால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு.

17.     அசாம் மாநிலக் கலவரம் தொடர்பாக வதந்திகள் பரவியதை அடுத்து தென்மாநிலங்களில் உள்ள அசாம் மாநிலத்தவர்கள் உடனடியாக தங்கள் மாநிலத்திற்கு திரும்பினர். இதனால், எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு கட்டுபாடு விதிக்கப்பட்டது.

18.     சீனாவைச் சேர்ந்த வென் ஜியா உலக அழகியாக தேர்வு செயப்பட்டார்.

18.     சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வி.வி.எஸ். லட்சுமண் அறிவித்தார்

25.     தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றதில் 6.75 லட்சம் ஆசிரியர்களில் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

26.     முதன் முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் (வயது 82) மரணம்.

26. 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸி. அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

செப்டம்பர்

4.    அரசுப்பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

8.     சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

9.     இந்தியாவின் 100-வது ராக்கெட்டான ‘பி.எஸ்.எல்.வி. - சி21’ வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.

9.     வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வர்க்கீஸ் குரியன் மரணம்.

10.     கூடங்குளம்  அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மீனவர் அந்தோணி ஜான் பலி.

13. டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது.

14.     ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து டெக்கான் அணி நீக்கம்.

13.     காந்தஹார் விமானக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாவத் என்ற மெஹ்ரஜீதீன், 13 ஆண்டுகளுக்குப்பின் ஸ்ரீநகரில் கைது.

14.     சில்லறை வணிகத்தில் 51% நேரடி அந்நிய முதலீடு, சிலிண்டருக்கு கட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு மத்திய அமைசரவை ஒப்புதல் அளித்தது.

17.     இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயராஜ் தீக்குளித்து இறந்தார்.

18.    டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணியிலிருந்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் விலகியது.

20.    தில்லியில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இலங்கை அதிபர் ராஜபக்சே சந்திப்பு.

24.     பிரபல மலையாள வில்லன் நடிகர் திலகன் மரணம்.

29. தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியிலிருந்து டி. ஜெயக்குமார் ராஜினாமா.

அக்டோபர்

2.     அன்னா ஹசாரே குழுவில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.

3.     தமிழக அமைச்சராக இருந்த சி.வி. சண்முகத்தின் பதவி பறிக்கப்பட்டது. புதிய அமைச்சராக ப. மோகன் நியமனம்.

7.     சர்வதேச 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

9.     பாகிஸ்தான் தீவிரவாதிகளால் பள்ளிச் சிறுமி மலாலா சுடப்பட்டாள்.

10.     தமிழக சட்டசபை சபாநாயகராக தனபால் பதவி ஏற்பு.

12.    இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டது.

15.    சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

19.    இளைய ஆதீனப் பதவியிலிருந்து நித்யானந்தா நீக்கம்.

26.    மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

27.    தமிழக சட்டமன்ற துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு.

27.    மத்திய அமைச்சரைவை மாற்றி அமைக்கப்பட்டது. புதுமுகங்கள் 22 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

31.   நீலம் புயலால் சென்னை கடற்கரையில் பிரதீபா காவேரி கப்பல் கரை தட்டியது. இதிலிருந்து தப்ப முயன்ற 6 பேர் பலி.

நவம்பர்

6.     ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ விருது சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது

9.     சுவிட்சர்லாந்து வங்கியில் கருப்புப்பணம் பதுக்கிய இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.

13. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

15.     அயர்லாந்தில் வசித்து வந்த டாக்டர் சவீதாவின் வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டது. அதை கருக்கலைப்பு செய்ய அந்நாட்டு சட்டம் இடம் கொடுக்காததால், மரணமடைந்தார்.

17.     சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம்.

21.     மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.

24.      மத்திய அரசால் வழங்கப்படும் மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பும் திட்டம் ஜனவரி 1-முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது.

25.     இந்தியாவில் நடைபெற்ற பார்முலா1 கார் பந்தயத்தில் ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார்.

24.     அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சிக்கு ‘ஆம் ஆத்மி’ என்று பெயரிட்டார்.

30.     தமிழக சட்டசபையின் வைர விழா நடைபெற்றது.

30.     முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மரணம்.

டிசம்பர்

4.       பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களை அனைத்து விதமான பணிகளிலும் வேலைக்கமர்த்துவதை தடை செய்யும் மசோதா தாக்கல் ஆனது.

4.       இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்தது.

5.       சில்லறை வர்த்தகம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது.

10.     உலக ஸ்குவாஷ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை தீபா பல்லிகல் பெற்றார்.

12.     பாரத ரத்னா விருது பெற்ற சிதார் இசை மேதை பண்டிட் ரவிசங்கர் அமெரிக்காவில் மரணம்.

13.     ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 920 கோடி முதலீட்டில் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

16.     தில்லியில், ஓடும் பேருந்தில் பிசியோதெரபி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். இதனையடுத்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

21.     உலகம் (டிசம்பர் 21,  2012) இன்றைய தினம் அழிந்து விடும் என்ற மாயன் காலண்டரின் கணிப்பு பொய்யானது.

23.     சச்சின் தெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சினிமா

    59-வது தேசிய விருது வழங்கும் விழாவில் தமிழில் ‘வாகை சூட வா’ சிறந்த படமாகவும், சிறந்த பொழுது போக்குப் படமாக ‘அழகர்சாமியின் குதிரை’யும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அப்புக்குட்டி சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார். தியாகராஜன் குமாரராஜா சிறந்த அறிமுக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.

ஒலிம்பிக்

 லண்டனில் (ஜூலை 27 - ஆகஸ்ட் 12) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வழக்கம்போல பதக்கப்பட்டியலில் அமெரிக்கா (104 பதக்கங்களுடன்) முதலிடத்தை பிடித்தது. 2 வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்களோடு பதக்கப்பட்டியலில் 55-வது இடத்தைப் பிடித்தது இந்தியா. இப்போட்டியில் 204 நாடுகள் கலந்து கொண்டன.

பிரபலங்கள் - 2012


பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி (வயது 76) ஜூலை 25 அன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன் மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். 40 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். வரலாறு, அரசியல் அறிவியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டங்களும், சட்டத்தில் பட்டமும் பெற்று பத்திரிகையாளராக வாழ்க்கையை துவக்கியவர் பிரணாப்.

அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற சமாஜ்வாதிக் கட்சி ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் முதல்வர் பொறுப்பை ஏற்காமல் தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார். அகிலேஷ் யாதவ் (வயது 39) ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

நரேந்திர மோடி

குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நான்காவது முறையாக அம்மாநில முதல்வர் பதவியில் அமர்ந்தார். நடுத்தர வர்க்கத்தில் பிறந்த இவர், இளம் வயதிலிருந்தே அரசியலில் தீவிரம் காட்டினார். இவர் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

அர்விந்த் கெஜ்ரிவால்

அன்னா ஹசாரே குழுவில் இருந்த இவர், அக்குழுவிலிருந்து பிரிந்து வந்து ‘ஆம் ஆத்மி’ என்ற பெயரில் புதுக்கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். இவர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி உள்ளிட்டோர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த தகவல்களையும் வெளியிட்டவர் இவர்.

ராகுல் திராவிட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மார்ச் 9-ஆம் தேதி அன்று ராகுல் திராவிட் (வயது 39) அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்பட்ட திராவிட் 1996-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமானார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். 12 ஒரு நாள் சதத்தையும், 36 டெஸ்ட் சதத்தையும் எடுத்துள்ளார் ராகுல் திராவிட்.

சச்சின் தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் சச்சின் தெண்டுல்கர் (வயது 39) சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டிசம்பர் 23 அன்று அறிவித்தார். இதுவரை மொத்தம் 463 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18,426 ரன்களைக் குவித்துள்ளார்.  இவற்றில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலில் இரட்டைச் சதம் அடித்த பெருமை இவரையே சேரும்.

சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவழி பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவில் பணியாற்றி வருகிறார். இவர் 7-வது முறையாக விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 44 மணி நேரத்தில், தொடர்ந்து 6 முறை நடைப்பயணம் செய்த விண்வெளி வீராங்கனை என்ற புதிய சாதனையை சுனிதா படைத்துள்ளார்.

சிறுமி மலாலா

பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கூடாது என்று தாலீபான் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை எதிர்த்து குரல் கொடுத்த மலாலா தீவிரவாதி ஒருவனால் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி சுடப்பட்டாள். உயிருக்குப் போராடிய மலாலாவை லண்டனுக்கு வரவழைத்து அந்நாட்டு அரசு சிகிச்சை அளித்து காப்பாற்றியது. துணிச்சல் மிக்க இச்சிறுமியை கௌரவிக்கும் விதத்தில் நவம்பர் 10-ம் தேதி ‘மலாலா தினம்’- ஆக கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

புத்தாண்டு பலன்கள்


இந்தப் புத்தாண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும். அண்மையில் வெளியான செய்திகளின் அடிப்படையில் ஓர் ஆரூடம்.

டீசல்
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பெட்ரோலிய நிறுவனங்களிடம் உள்ளது. ஆனால் டீசல், மண்ணெண்ணெய் விலை நிர்ணயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்ட, பெட்ரோலிய அமைச்சகம் வழிவகைகளை யோசிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி லிட்டருக்கு 9 ரூபாய் 28 காசு நஷ்டத்தில் விற்கப்படும் டீசல்,  வரும் ஆண்டில்  மாதம் ஒரு ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டு, பத்து மாதங்களில் பத்து ரூபாய் வரை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. டீசல் விலையுயர்ந்தால், சரக்கு லாரியின் கட்டணமும் உயரும் என்றும் அதைத் தொடர்ந்து காய்கறி உள்ளிட்ட அன்றாட உணவுப் பொருட்களுக்கான விலையும் உயரும் என்பதை தனியே சொல்ல வேண்டியதில்லை.

பரிகாரம்: காய்கறிகளுக்குப் பதில், ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடப் பழகுங்கள். டாஸ்மாக் நண்பர்களிடம் கேட்டால், ஊறுகாய் தொட்டுக்கொள்வது எப்படி எனச் சொல்லிக் கொடுப்பார்கள்.
 
மண்ணெண்ணெய்
டீசலைப் போன்றே மண்ணெண்ணெய் விலையும் அடுத்த  24 மாதங்களில் 10 ரூபாய் உயர்த்த, பெட்ரோலிய அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதுவும் ஏழைகள் பயன்படுத்தும் பொருள் என்பதால்தான் மாதத்துக்கு 42 பைசா வீதம் 24 மாதங்களில் பத்து ரூபாய் உயர்த்தப் படுகிறதாம். கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு, மண்ணெண்ணெய் விலை உயர்த்தப் படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. மண்ணெண்ணெய் விற்பனையில் ஏற்பட்டு வரும் நஷ்டத்தை சமாளிக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்கிறது பெட்ரோலிய அமைச்சகம்.

பரிகாரம்: அடுப்புப் பற்ற வைக்காமல், சமையல் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.

ரயில் கட்டணம்
ரயில்வே துறையின் நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், ரயில் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருக்கிறது ரயில்வே துறை. பயணிகள் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 5 காசு முதல் 10 காசு வரை உயர்த்தப் போகிறது. இதனால், 100 கி.மீ.க்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் உயரும். இந்தக் கட்டண உயர்வு மூலம் 4,000 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறது மத்திய அரசு. சரக்கு ரயிலுக்கும் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. ஆக, ரயிலில் வரும் சரக்குகளுக்கும் விலையுயர்த்தப்படும். அப்படியானால், அத்யாவசியப் பொருள்களின் விலையுயரும் என்பது நிச்சயம்.

பரிகாரம்: ஊருக்குப் போய் உறவினர்களைப் பார்க்க வேண்டுமானால், ஒரு வாரத்திற்கு முன்பே பாதயாத்திரை புறப்பட்டு விடுங்கள். உடம்பிற்கும் நல்லது.
 
கேபிள் டி.வி.
தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் மயத்துக்கான உரிமம் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு மாறாக, கேபிள் டி.வி. ஒளிபரப்புச் சேவையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக்கூடாது என்று டிராய் பரிந்துரை செய்திருக்கிறது. அதனால், அந்தத் துறையில் ஏகபோகம் தொடர வாய்ப்பிருக்கிறது. அரசு கேபிள் இல்லை என்றால், அவர்கள் வைத்ததுதான் விலை.

பரிகாரம்: அடுத்த வீட்டுக்காரர்களோடு வம்பளக்கப் பழகிக்கொள்ளுங்கள். அது டி.வி. சீரியல்களைவிட சுவாரஸ்யமாக இருக்கலாம்.
 
மின்சாரம்:
இந்த விலை உயர்வுகளையெல்லாம் சமாளிக்க உதவும் வகையில், உங்கள் மின் கட்டணம் உயராது. ஏனெனில், இன்னும் சிறிது காலம் மின்வெட்டு நீடிக்கலாம். மின்சாரமே இல்லையெனில், எலெக்ட்ரிக் பில் குறைவாகத்தானே இருக்கும்!

    பகுத்தறிவாதி விவேகானந்தரின் நினைவாக இந்தநாளை இளைஞர்களின் நாளாக கொண்டாடுகிறோம்.இந்நாளில் அவரைப்பற்றி தெரிந்துகொள்வோம்..

    மனிதர்கள் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்திய எழுச்சி மிக்க இளைஞன் விவேகானந்தர். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.


    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா  இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

பிறப்பும் பெற்றோரும்:

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம்.

கல்வி:

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில்   சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில்   தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார்.

இராமகிருஷ்ணரின் அறிமுகம்:

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.



துறவு வாழ்க்கை:


1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

சிறப்புகள்:

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்

        கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்
        உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா..

        செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

        வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்..

        உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

        சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

        எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

        நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!

        இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.

        இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

        வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

        சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.

        என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
    உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
    நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு
 


படைப்புகள்:

கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாசு ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.

மறைவு:

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

கருத்துக்கள் முக்கியமா? காலம் முக்கியமா?

‘எனக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம்’

- தில்லியில் தேசிய வளர்ச்சிக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சீற்றம் மிகுந்த இந்தச் சொற்கள்  மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். ஆனால், அவை நியாயமற்றவை அல்ல.

ஏனெனில்- அவர் பேச முற்பட்ட விஷயங்கள் யாவும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பானவை. அவற்றைக் காது கொடுத்துக் கேட்க மறுப்பது தமிழ் மக்களின் நலன்களைப் பற்றி  மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதன் அடையாளம்.

அவர் பேச முற்பட்டது என்ன?
  • Ž‘தமிழ்நாட்டில் மத்திய மின் உற்பத்தி நிலையங்களில்  (நெய்வேலி, கல்பாக்கம், வள்ளூர்)  ஆகியவற்றின் மொத்த உற்பத்தி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படலாம். ஓராண்டு காலத்திற்கான இடைக்கால ஏற்பாட்டு முறையாக மட்டுமே இது கேட்டுக் கொள்ளப்படுகிறது.இது நியாயமற்ற கோரிக்கையன்று. ஏனெனில், 1,000 மெகாவாட் உற்பத்தி செய்கிற மத்திய மின் உற்பத்தி நிலையம் ஆந்திரப்பிரதேசத்தில்   சிம்மாத்திரியில்   அமைந்துள்ளது. இதன் மொத்த மின் உற்பத்தியும் ஆந்திரப்பிரதேசத்திற்கே வழங்கப்பட்டு வந்துள்ளது’- இது அவர் வைத்த ஒரு கோரிக்கை.
  • Ž‘காவிரி நீர்த்தகராறு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் உரியவாறு வெளியிடப்படுவதையும், அதன்மூலம் அது செயல்படுத்தப்பட்டு தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதில், மத்திய அரசு முற்றிலும் செயலற்ற நிலையில் உள்ளது’ - அவரது குற்றச்சாட்டை உறுதி செய்வதுபோல், சென்ற ஆண்டு இறுதிக்குள் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்த மத்திய அரசு, இப்போது வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்கப் போவதாகச் சொல்லி தட்டிக் கழிக்கிறது. வழக்கறிஞர்களிடம் ஆலோசிக்காமலா உச்ச நீதிமன்றத்தில் உறுதி கொடுத்தார்கள்?
  • Ž‘தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கடல் சார்ந்த  எல்லைப் பகுதியிலிருந்து தாக்கப்படாமல் தடுப்பதில் தோல்வியடைந்ததன் மூலம்  நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது’ - இது அவர் வைத்த மற்றொரு புகார்.

இவையெல்லாமே மத்திய அரசோடு தொடர்புடைய விஷயங்கள். இவற்றைக்கூட காது கொடுத்துக் கேட்க மத்திய அரசுக்கு அவகாசம் இல்லை என்றால், அது தமிழர்கள் நல்வாழ்வின் மீது காட்டப்படும் அலட்சியம் என்பதைத் தவிர வேறென்ன?   

நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஆவணங்களை விவாதிக்க ஒவ்வொரு முதல்வருக்கும் பத்து நிமிடங்கள்தான் ஒதுக்கப்படும் என்பது வியப்பளிக்கிறது. அந்தப் பத்து நிமிடங்களில் ஒருவர் எந்தத் தலைப்பைக் குறித்து ஆழமாக அலசி ஆராய்ந்து கருத்து சொல்லிவிடமுடியும்? கூடுதலாக நேரமளித்தால், எல்லோரும் பேசி முடிக்க ஒருநாள் போதாது என்பது உண்மைதான். அப்படியான சூழலில் இரண்டு நாள் நிகழ்வாகக் கூட்டத்தை நடத்தக் கூடாதா? கருத்துக்கள் முக்கியமா? காலம் முக்கியமா?

அபிப்பிராயங்கள் அவசியம் இல்லை, எங்கள் ஆசாமிகள் எழுதிக் கொட்டியிருப்பதற்கெல்லாம் அனைவரும் ஆமாம் சாமி போட்டால் போதும் என எண்ணுகிறது அரசாங்கம். இது எஜமான மனோபாவம். மாநில அரசுகளைவிட மத்திய அரசு உயர்ந்தது என்ற பிரமையில் விளைந்த மமதை. மாநிலங்கள் இல்லை என்றால், இந்தியா என்பது இல்லை. இந்தியா என்பதே மாநிலங்களின் கூட்டமைப்புதான்.

மாநிலங்களின் நலன்களைப் புறக்கணித்து விட்டு, இந்தியா வளர்ந்துவிட முடியாது. மலர்கள் இல்லாமல் மாலைகள் இல்லை. நார் மட்டுமே ஆரம் ஆவதில்லை.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

தமிழகத்தில் பணியாற்றும், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, துறைக்குத் துறை, சம்பளம் வேறுபடுவதால், விரக்தியில் உள்ளனர்.

தமிழகத்தில், பொது வினியோகத்துறையில், வருவாய், கூட்டுறவு, நுகர் பொருள் வாணிப கிடங்கு என, மூன்று துறைகள் செயல்படுகின்றன. பொருட்களை ஒதுக்கீடு செய்வோர் வருவாய் துறையினர்; ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்களை, ரேஷன் கடைக்கு வழங்குவது, நு1கர் பொருள் வாணிப கழகம்; பொருட்களை கடைகளில் வினியோகம் செய்வது கூட்டுறவுத்துறை.

சம்பளம் வேறுபாடு:ரேஷன் கடைகளை, கூட்டுறவுத்துறை, நுகர் பொருள் வாணிப கழகம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்துகின்றன . இதில் பணியாற்றும் விற்பனையாளருக்கு, 
துறைக்குத் துறை, சம்பளம் வேறுபாடு உள்ளது. பெரும்பான்மையான கடைகளை கூட்டுறவுத் துறை தான் நடத்துகின்றன.
இதில், ரேஷன் விற்பனையாளருக்கு, மாத சம்பளம், 4 ஆயிரம் ரூபாய்; 30 ஆண்டுகள் பணியாற்றியோர், அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் நடத்தப்படும் கடைகளில், குறைந்த பட்ச சம்பளம், 8 ஆயிரம் ரூபாய் முதல் வழங்கப்படுகிறது.அதிகபட்சமாக, 25 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்.

பணிச்சுமை அதிகரிப்பு:மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் கடைகளில், கிடைக்கும் காலி சாக்குகளை விற்பனை செய்து, சம்பளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே பணியை செய்யும் ரேஷன் விற்பனையாளருக்கு,
சம்பளத்தில் மட்டும் துறைக்குத் துறை வித்தியாசம் உள்ளது.குறைந்த சம்பளத்தில், பணியாற்றும் பணியாளர்களுக்கு, பணிச்சுமை அதிகரித்துள்ளது. பொருட்கள் வினியோகம் தவிர்த்து, இலவச, வேட்டி சேலை வினியோகம், கேபிள் "டிவி' கணக்கெடுப்பு என, பணிச்சுமை கூடிக் கொண்டே செல்கிறது.

ஆனால், அதற்கேற்ற சம்பளம் வழங்கப் படுவதில்லை. இதனால், ரேஷன்கடைகளில், கூட்டுறவுத்துறையில் பணியாற்றுவோர் விரக்தியில் உள்ளனர்.ரேஷன் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "ரேஷன் விற்பனையாளர் அனைவரும், ஒரே பணியில் தான் உள்ளோ.
இருந்தும், பல ஆண்டுகள் பணியாற்றினாலும்,10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பள உயர்வு இல்லை. கூடுதல் பணியால் தவிக்கிறோம். அனைத்து விற்பனையாளர்களுக்கும் வேறுபாடு இல்லாமல், சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

சனி, 5 ஜனவரி, 2013


இவ்வாண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்புகிறது இந்தியா. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பானுக்குப் பிறகு இச்சாதனையை செய்யப்போகும் தனிநாடு நம்நாடுதான்!

சூரிய மண்டலத்தில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் கோள் செவ்வாய். நாளை மனிதன் இன்னொரு கோளில் குடியேறவேண்டுமானால், அது பெரும்பாலும் செவ்வாயாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள். நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் மிக மிகப் பெரியது. அதில் கோடிக்கணக்கான மாபெரும் நட்சத்திரங்கள் உள்ளன. அப்படிப்பட்ட நட்சத்திரங்களில் ஒன்று சூரியன். ஒருவிதத்தில் கொஞ்சம் சிறிய நட்சத்திரம் அது என்றுதான் சொல்லவேண்டும். அந்த நட்சத்திரத்தைச் சுற்றி எட்டு கோள்கள். அதில் ஒரு கோள் பூமி. இன்னொன்று, செவ்வாய். அந்த பூமியில் வசிக்கும் ஜந்துக்கள் நாம்.

பூமியில் மட்டும்தான் உயிர்கள் தோன்றுவதற்குச் சிறப்பான சூழ்நிலைகள் இருந்தன. சரியான வெப்பநிலை. நீர் என்ற வஸ்து ஏராளமாகக் கிடைக்கிறது. மேலே ஒரு ஆக்சிஜன் போர்வை. பூமியின் மேற்பரப்பில் கரி தொடங்கி, பல்வேறு தனிமங்கள். கரி, ஆக்சிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகிய நான்கு முக்கியமான தனிமங்களால்தான் உயிர்கள் சாத்தியமாகியுள்ளன.

பூமியைச் சுற்றிவரும் சந்திரன் என்ற துணைக்கோள் நமக்கு நன்கு தெரிந்த ஒன்று. இந்தியா, சந்திரயான்-1 என்ற விண்கலத்தை அனுப்பி அதை ஆராய்ந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சந்திரயான்-2 என்ற விண்கலத்தை அடுத்து அனுப்பப்போவதாக ஐ.எஸ்.ஆர்.ஓ. என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது. அதற்கிடையில் செவ்வாய்க் கிரகத்தை நோக்கி மங்கல்யான் என்ற விண்கலத்தை 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் 2012 ஆகஸ்ட் 15ம் தேதி தில்லி செங்கோட்டையிலிருந்து அறிவித்தார். அதற்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வான்வெளிக்குக் கலங்களை அனுப்பி, தூரத்தில் உள்ள கோள்களை ஆராய்வதில் மிகப் பெரும் தாதா அமெரிக்காதான். பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் அறிவியல் தொழில்நுட்பப் போரிலும் ஈடுபட்டன. விண்ணுக்குக் கலங்களை அனுப்புவதில் சோவியத் யூனியன் முதலில் வெற்றி கண்டாலும், அமெரிக்காவின் பணத்துடனும் ஆராய்ச்சித் திறனுடனும் அவர்களால் நாளடைவில் போட்டி போட முடியவில்லை.

அமெரிக்கா, சந்திரனுக்கு ஆட்களையே அனுப்பியது. பின்னர் அனைத்துக் கோள்களையும் ஆராய, தனித்தனி விண்கலன்களை அனுப்பியது. இன்று நாம் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றித் தெரிந்துகொண்டிருக்கும் பெரும்பாலான விஷயங்கள், அமெரிக்க விண்கலங்கள் அனுப்பிய தகவல்களே.

மங்கல்யான் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்நேரம், அமெரிக்காவின் கியூரியாசிடி என்ற உலாவி, செவ்வாயில் இறங்கி சுற்றிக் கொண்டிருக்கிறது. அற்புதமான படங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட தகவல்களைச் சேகரித்துக்கொண்டிருக்கிறது. சனிக் கோளை ஆராய்ந்துகொண்டிருக்கிறது காசினி. வியாழன் வழியாக புளூடோவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது நியூ ஹொரைசன்ஸ். ஆஸ்டிராட்ஸ் எனப்படும் விண்கற்களை ஆராய கிளம்பிச் சென்றுகொண்டிருக்கிறது ஜூனோ.

அமெரிக்கா செய்யாத எதனை இந்தியா செய்துவிடப் போகிறது?

இந்தியாவால் நிறைய செய்யமுடியும். முதலாவதாக, ஒரு கோள் என்பது மிகப் பெரிய பரப்பு கொண்ட ஒன்று. செவ்வாய் என்பது கிட்டத்தட்ட பூமியின் அளவை உடையது. இந்தப் பரந்த பூமியை ஒரே ஒரு காரில் ஏறிச் சென்று பார்த்துவிட முடியுமா? பல கோடி கார்களில் பயணம் செய்தாலும் பூமியின் சிறு பரப்பை மட்டுமே பார்த்திருப்போம். எனவே, செவ்வாயிலும் நிறைய செய்யலாம். அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காத பலவற்றை இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியும். அப்படிச் சந்திரனில் நம்முடைய சந்திரயான்-1 செய்ததை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அடுத்து, இப்போதைக்கு உலகில் மிகக் குறைந்த செலவில் இதுபோன்ற செயல்களைச் செய்வதில் இந்தியாதான் முன்னணியில் உள்ளது என்பதை அனைவரும் அறிவர். எடை குறைந்த செயற்கைக்கோள்களை வானுக்கு அனுப்புவதில் இந்தியாவின் வல்லமையை ஏற்று, தம் செயற்கைக்கோள்களையே இந்தியாவிடம் கொடுத்து வானுக்கு அனுப்புகின்றன.

மங்கல்யானை அனுப்புவதால் இந்தியாவுக்கு ஏகப்பட்ட ஆதாயங்கள். ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் விஞ்ஞானிகளுக்கு வான்வெளிப் பயணத்தில் மேலும் அனுபவம் அதிகரிக்கும். இந்திய தொழில்நுட்பத் திறன் - முக்கியமாக ஊர்திகள் செய்தல், அவற்றை நீண்ட தூரத்திலிருந்து இயக்குதல், அவற்றைச் சரியான சுற்றுப்பாதைக்குச் செலுத்துதல், எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம், சோலார் பேனல் தொழில்நுட்பம் எனப் பலவற்றிலும் ஆற்றல் பெருகும். இவை அனைத்தும் பின்னர் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருள்களை மேம்படுத்த உதவும்.

இந்திய பல்கலைக்கழகங்களிலும் மத்திய மாநில அரசுத்துறை ஆராய்ச்சிக் கூடங்களிலும் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களும் பேராசிரியர்களும் இதன்மூலம் பெருமளவு சாதனைகளைப் புரிவர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் செய்யும் மாணவர்நிலை திட்டங்களில்கூட வானியல் துறையின் ஆதிக்கம் இருக்கும்.

அனைத்தையும் தாண்டி இந்தியர்களுக்கு மற்றுமொரு விஷயத்தைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசிப் பெருமிதம் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இதற்குக் கொடுக்கும் விலையான 450 கோடி ரூபாய் மிக மிகக் குறைவு.

செவ்வாய்க்கு நாம் அனுப்பும் மங்கல்யான் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கப்போவதில்லை. வானிலிருந்து செவ்வாயை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கப்போகிறது. இதிலிருந்து ஓர் ஊர்தியை செவ்வாயில் தரையில் இறக்கக்கூடிய தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. சந்திரயான்-2 மூலமாக சந்திரனில் ஓர் ஊர்தியை இறக்கிப் பார்க்க இந்தியா முயற்சி செய்யும். அதற்கே இந்தியாவுக்கு ரஷ்யா அல்லது அமெரிக்காவின் உதவி தேவைப்படலாம்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இந்தியா, அமெரிக்காவைத் தாண்டி வான்வெளியில் சாதனைகளைச் செய்யப்போவதில்லை. இது ஒன்றும் அமெரிக்காவுடனான போட்டியில்லை. இது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஒரு சோதனை. இதுபோன்ற சிறு சிறு முயற்சிகளால்தான் நம் நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம் பிற்காலத்தில் பெரும் பாய்ச்சலைப் புரியப் போகிறது.

சந்திரனுக்கோ, கோள்களுக்கோ விண்கலங்களை அனுப்பும் திறன் உள்ள ஒரே நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையம், ஜப்பான், சீனா, இந்தியா ஆகியவை. ஐரோப்பிய விண்வெளி மையமும் ஜப்பானும் இதுபோன்ற சோதனைகளில் இனி அதிகம் ஈடுபடப்போவதில்லை என்று தோன்றுகிறது. சோவியத் யூனியன் உடைந்தபிறகு ரஷ்யாவும் தனியான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அமெரிக்காவின் பட்ஜெட்டும் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் சீனாவும் இந்தியாவும்தான் இந்தத் துறையில் அதிகம் ஈடுபடவேண்டியிருக்கும்.

இரு கரம் தட்டி நாம் வரவேற்கவேண்டிய திட்டம் மங்கல்யான்.

ண்மையில் நடந்து முடிந்த குஜராத், இமாசலப்பிரதேச சட்டமன்ற முடிவுகள் ஒன்றைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றன. 2014ல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் - ஏதேனும் அலை வீசினால் ஒழிய- காங்கிரஸ், பாஜக இரண்டும் தனித்து ஆட்சிக்கு வரமுடியாது. மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஒன்று, மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருவேளை காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையில் கூட்டணி அரசு அமைந்தால், அந்த அரசில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் வலுவானதாகவே இருக்கும்.

குஜராத்தில் எதிர்பார்த்தபடியே நரேந்திர மோடி (நமோ) வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், அது கொண்டாடிக் குதூகலிக்கும் அளவிற்குப் பெரிய வெற்றி இல்லை. ஏனெனில், இதைவிடப் பெரிய வெற்றிகளை பாஜக அங்கு கண்டிருக்கிறது. இன்று நமோவின் எதிரியாக சித்தரிக்கப்படும் கேசுபா படேல், 1995ல் 121 இடங்களில் பாஜகவிற்கு வெற்றி தேடித் தந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் மோடி தலைமையில், பாஜக, குஜராத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் அது முன்பு பெற்ற இடங்களை விடக் குறைவாகப் பெற்று வருகிறது (2002ல் 127, 2007ல் 117, 2012ல் 115). வாக்கு வீதமும் குறைந்து வருகிறது (2002ல் 49.85%, 2007ல் 49.12%, 2012ல் 47.9%). எனவே இந்த வெற்றி, குஜராத்தில் பாஜக வலுப்பெற்று வருகிறது என்பதைக் காட்டவில்லை.

குஜராத்திற்கு வெளியே பாஜகவின் பலம் என்ன என்பது கேள்விக்குறி. கர்நாடகத்தில் எடியூரப்பாவின் வெளியேற்றத்திற்குப்பின் அங்கு அது பலவீனமடைந்திருக்கிறது. 2013ல் சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிகழவிருக்கும் தேர்தல்களில் அது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்விகள் இருந்து வருகின்றன.

காங்கிரசும் வலுவான நிலையில் இல்லை. தொடர்ந்து இரு முறை ஆட்சியில் இருந்து வரும் நிலையில், அது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. ஆளுவோருக்கு எதிரான  மனநிலை (anti incumbency) அதன் வெற்றி வாய்ப்புகளைப் பாதிக்கும். அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி உரத்து எழும். ராகுல்காந்தி தனது ஆளுமையை இன்னும் நிரூபிக்கவில்லை. ஊழல் புகார்கள், விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம், பணவீக்கம், அயல்நாட்டில் உள்ள கறுப்புப்பணம், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தாராளமயக் கொள்கை காரணமாகப் பல்வேறு தரப்பினருக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் போன்ற பிரச்சினைகளுக்கு அது முகம் கொடுக்க வேண்டி வரும்.

இரண்டு பெரிய கட்சிகளும் பலவீனப்பட்டு நிற்கும் சூழ்நிலையில், மாநிலக் கட்சிகள் அடுத்த தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை பெறுகின்றன. நம் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிப்பது ஆறு மாநிலங்கள்தான். காரணம், மக்களவையில் உள்ள 552 இடங்களில், 291 இடங்கள் இந்த மாநிலங்களில் உள்ளன. இந்த மாநிலங்களில் எந்தெந்தக் கட்சிகள் கணிசமாக வெற்றி பெறுகின்றனவோ, அவைதான் ஆட்சியைத் தீர்மானிக்கும். அந்த மாநிலங்கள் இவைதான்... உத்தரப்பிரதேசம் (80), மகாராஷ்டிரம் (48), மேற்கு வங்கம் (42), ஆந்திரப்பிரதேசம் (42), பீகார் (40), தமிழ்நாடு (39).

இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்கள் (புதுச்சேரியையும் சேர்த்து 40) முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றை சிந்தாமல் சிதறாமல் எந்தக் கூட்டணி கைப்பற்றுகிறதோ அந்தக் கூட்டணி, அடுத்து வரும் மத்திய ஆட்சியில் புறக்கணிக்க முடியாத சக்தியாக விளங்கும்.

டந்த சில ஆண்டுகளாக உயிர்நாடியான பிரச்சினைகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து நியாயம் கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறு, காவிரி நதிநீர்ப் பங்கீடு போன்ற விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகே ஓரளவு நிவாரணம் கிடைத்தது. அவையும் பலன் தரவில்லை. மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த அல்ல, கட்டுப்படுத்தக்கூட மத்திய அரசால் முடியவில்லை. முடியவில்லை என்பதைவிட மத்திய ஆட்சியாளர்கள் முழு மனதுடன் அதற்கு முயலவில்லை என்பதுதான் நிஜம். தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளைவிட, இலங்கை அரசின் உறவிற்கே மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. தில்லி அரசு உபரியாகக் கொடுத்த மின்சாரத்தைத் தமிழகத்திற்குத் தருமாறு வைக்கப்பட்ட கோரிக்கையும், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்குத் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையும் கனத்த மௌனத்தை சந்திக்கின்றன. இவையாவும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய பிரச்சினைகள். இவற்றின் மீதே அலட்சியம் காட்டப்படுகிறது.

ஓர் அரசு கூட்டணி அரசாகச் செயல்படும்போது, பிரச்சினைகளை அரசியல் லாபங்களைக் கருத்தில் கொண்டே அணுகும் என்பது, அடுத்தடுத்து அமைந்த கூட்டணி அரசுகளின் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது. இந்த யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது தமிழகத்தின் நலன்களைக் காப்பாற்ற வேண்டுமானால், அதற்கு ஒரு வழிதான் உண்டு.

அது-

தமிழகம் மத்திய அரசைச் சார்ந்திருக்காமல், மத்திய அரசு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சார்ந்திருக்கும் நிலையை உருவாக்குவது.  அந்த நிலை ஏற்பட வேண்டுமானால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - திமுகவிடையே கூட்டணி ஏற்பட வேண்டும்.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் இருக்கும் வாக்கு வங்கி கணிசமானது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியாக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுமானால், இந்த இரண்டு கட்சிகளுமே லாபம் அடைய முடியும். அதிக எண்ணிக்கையில் அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் இடம் பெற முடியும். இந்தக் கட்சிகளின் ஆதரவில்லாமல் மற்ற கட்சிகள் இங்கு வெற்றி காண முடிந்ததில்லை என்பது வரலாறு.

தமிழகத்தின் வாழ்வாதாரமான பிரச்சினைகளில் இந்தக் கட்சிகளின் அணுகுமுறையில் வேறுபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால், நோக்கத்தில் வேறுபாடுகள் இல்லை. அண்மையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுப் பிரச்சினையில் இரண்டு கட்சிகளும் ஒரே நிலையை மேற்கொண்டன.

இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படுவது இன்னொரு விதத்திலும் பலனளிக்கும். தமிழகத்தில் தலைதூக்கத் துவங்கியிருக்கும் ஜாதிய அரசியலை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.

திர் எதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு கட்சிகள் எப்படி இணைந்து செயல்பட முடியும்? இப்படி ஒரு கேள்வி எழுவது இயற்கையானது. ஆனால், தமிழகத்தில் இதுபோன்ற கூட்டணிகள் புதிது அல்ல.

என்னைக் கொலை செய்ய சதி நடக்கிறது என கருணாநிதி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியதன் காரணமாகத்தான் வைகோ, திமுகவிலிருந்து வெளியேறி, மதிமுகவை ஆரம்பித்தார். ஆனால், அதே திமுகவுடன் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ கூட்டணி வைத்துக்கொண்டார். பொடா சட்டத்தின்கீழ் ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்டவர் பின்பு, அதிமுகவுடன் கூட்டணி கண்டார். மதவாதக் கட்சி என்று அண்மையில்கூட கருணாநிதி, பாரதிய ஜனதாக் கட்சியை விமர்சித்திருக்கிறார். ஆனால், 1999ல் அந்தக் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துக்கொண்டது. அதன் தலைமையிலான அரசிலும் பங்கேற்றது.

1967ல் காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில், அண்ணா ஒரு கூட்டணி அமைத்தார். அதில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், வலதுசாரி முதலாளித்துவக் கட்சி என வர்ணிக்கப்பட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் இடம் பெற்றன. எந்தக் காங்கிரசை வீழ்த்த 1967ல் திமுக கூட்டணி கண்டதோ, அதே காங்கிரசுடன் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணி வைத்துக் கொண்டது. எமர்ஜென்சியின்போது திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது. திமுகவினர் பலர், மாறன், ஸ்டாலின் உட்பட, மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  ஆனால், 1980ம் ஆண்டுத் தேர்தலில், ‘நேருவின் மகளே வா, நிலையான ஆட்சி தா’ என்ற முழக்கத்தோடு திமுக, இந்திராவோடு  கூட்டணி ஏற்படுத்திக் கொண்டது. கடந்த காலத்திலிருந்து இதுபோன்று நிறைய உதாரணங்களைத் தர முடியும். எதிர் எதிர் துருவங்கள் இணைவது அரசியலில் புதிதல்ல.

அவ்வளவு ஏன்? எம்,ஜி,ஆர் வாழ்ந்த காலத்தில் அதிமுக - திமுக இணைப்பு குறித்து கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதுகுறித்து கருணாநிதி, ‘நெஞ்சுக்கு நீதி’யில் (மூன்றாம் பாகம்) எழுதியிருக்கிறார்:

 1979 செப்டம்பர் 6ம் தேதி மாலையில் டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக்; தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு, முக்கியமான அரசியல் விஷயம் பேச வேண்டுமென்றும் சென்னைக்கு வந்து என்னைச் சந்திப்பதாகவும் கூறினார். நானும் அவர் என்னை சென்னைக்கு வந்து சந்திப்பதை ஒப்புக்கொண்டேன்.

12-9-79 அன்று, பிஜு பட்நாயக் சென்னையில் என் வீட்டில் என்னைச் சந்தித்து திமுக - அதிமுக இணைப்பு குறித்துப் பேசினார். நீண்ட நேரம் இருவரும் விவாதித்த பிறகு; இரு கட்சிகளும் இணைந்திட, சில நிபந்தனைகளைச் சொன்னேன்.

1. இரு கட்சிகளும் இணைந்து, திமுக என்ற பெயரில்தான் இயங்கவேண்டும்.

2. அக்கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.

3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும்.

4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காக திமுகவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை.

5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்துகொள்ளலாம்.

6. முக்கியமான விஷயம்: எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டுவந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிரம் ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.

இவற்றைக் கேட்டவுடன்; பிஜு பட்நாயக் அவர்கள் மிகவும் மகிழ்ந்து உற்சாகத்துடன்,‘இந்த நிபந்தனைகளை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொள்ள எந்தக் கஷ்டமும் இருக்காது. நான் இப்போதே எம்.ஜி.ஆர். இல்லம் செல்கிறேன். இன்றைக்கே உங்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறேன்’ என்றார்.

மறுநாள் 13-9-1979 அன்று 11 மணியளவில் பிஜு பட்நாயக் முன்னிலையில் நானும் எம்.ஜி.ஆரும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் சந்தித்துப் பேசினோம். அப்போது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், அதிமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பிறகு நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் அந்த விடுதியின் வேறொரு அறையில் தனிமையில் பேசினோம். பிஜு பட்நாயக்கிடம் நான் தெரிவித்த கருத்துக்களும் நிபந்தனைகளும் உண்மைதானா என்று எம்.ஜி.ஆர். வியப்புடன் கேட்டார். இரு கட்சிகளும் இணைந்து, திமுக என்ற பெயரில் இயங்க வேண்டுமென்பதற்கு திமுக என்ற பெயரில்தான் ஏற்கெனவே பல இடங்களில் கட்டிடங்கள், சொத்துக்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், திமுக என்பதுதான் அண்ணா உருவாக்கிய கழகம், எனவே  அந்தப் பெயரே நிலைக்கலாம் என்பதையும் அவரிடம் விளக்கினேன்.

அண்ணாவின் படத்தைப் பதித்துள்ள கொடியே இணைந்துவிடப் போகும் கட்சியின் கொடியாக இருக்கட்டுமென்றும் கூறினேன். மற்றும் பிஜு பட்நாயக்கிடம் கூறிய மற்றவைகளையும் எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன். அவர் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின் செயற்குழு, பொதுக் குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் கூட்டி, இரு கட்சிகளின் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அறுதியிட்டுக் கூறினார்.

பின்னர் இருவரும் நாங்கள் தனித்துப் பேசிக் கொண்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்து, பிஜு பட்நாயக்கிடமும் அங்கிருந்த இரு கட்சிகளின் தலைவர்களிடமும் பேச்சின் முடிவு குறித்துத் தெரிவித்தோம். செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டு கை குலுக்கினர். புகைப்படமெடுத்தனர். நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோதும் நான், எம்.ஜி.ஆர். இருவருமே இரு கட்சிகளின் செயற்குழு, பொதுக்குழுக்களில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படுமென்று கூறினோம்" என்று எழுதுகிறார் கருணாநிதி.

ஆனால், அதற்குப்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. மறுநாளே வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆரை மேடையில் வைத்துக் கொண்டே அவரது அமைச்சர்கள் திமுகவைத் தாக்கிப் பேசினர் என்று கருணாநிதி சொல்கிறார். அதன்பின் இரு கழகங்களும் எதிர் எதிர் திசையில் பயணிக்கின்றன.

ஆனால், இப்போதும்கூட இந்திய அரசியலில் ஏற்பட்டு வரும் சூழ்நிலைகளை தமிழக நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு, இரு கட்சிகளும் (இணையக்கூடத் தேவை இல்லை) ஒரே அணியாக நின்று, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளலாம்.

அதற்கு இரண்டு தலைவர்களின் ஈகோ இடம் கொடுக்குமா அல்லது அந்தத் தலைவர்களின் ஈகோவிற்கு தமிழக நலன்கள் பலியாகுமா?