Powered By Blogger

சனி, 12 ஜனவரி, 2013


மின்னஞ்சல்
முக்கிய நிகழ்வுகள் - 2012
 

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ‘புதிய தலைமுறை கல்வி’ வழங்கும் பகுதி இது.

ஜனவரி

8.     சென்னை ஓபன் டென்னிஸ், ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ், டிப்சரேவிச் (செர்பியா) இணை பட்டம் வென்றது.

10.     தமிழகத்திற்கு ‘தானே’ புயல் நிவாரண நிதியாக ரூ. 500 கோடி ஒதுக்கப்படும் என பிரதமர் அறிவிப்பு.

11.     முதல் அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் தொடக்கம்.

13.      தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து திடீர் ராஜினாமா.

20.     ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி நட்ராஜ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமனம்.

23.     சென்னை பெருங்குடியில் உள்ள வங்கி ஒன்றில் பட்டப்பகலில் ரூ. 24 லட்சம் கொள்ளை.

26.    தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அக்ரி. கிருஷ்ண மூர்த்தி, வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டு, என்.ஆர்.சிவபதி, முக்கூர் என். சுப்பிரமணியன் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிப்ரவரி

1.     சட்டசபையில் கையை நீட்டி ஆவேசமாகப் பேசிய விஜயகாந்த் உள்பட 10 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

2.     கர்நாடக சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த லட்சுமணன் சவாதி, சி.சி.பட்டீல், கிருஷ்ணன் பாலேமர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

2.     மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ. ராசா இருந்த போது, அவர் வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஏலத்தின் மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டது.

9.      பாரிமுனை செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியை  உமா மகேஸ்வரி (வயது 39), 9-ஆம் வகுப்பு மாணவனால் கொலை செய்யப்பட்டார்.

13.      வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் ரூ. 24.50 லட்சம் கோடி என சி.பி.ஐ. இயக்குனர் அமர் பிரதாப் தெரிவித்தார்.

15      .கொல்லம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 இந்திய மீனவர்கள், இத்தாலிய மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

15.     சென்னை கீழ்கட்டளை அருகே உள்ள வங்கியில் பட்டப்பகலில் ரூ. 14 லட்சம் கொள்ளை போனது.

15.     எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட ஜாம்பாவன்களுக்கெல்லாம் அம்மாவாகவும் 1,500 படங்களில் நடித்த பெருமை கொண்டவருமான பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்.

23.     வேளச்சேரியில் பதுங்கியிருந்த வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

25.     சென்னையில் இரண்டு மணி நேரம், பிற மாவட்டங்களில் நான்கு மணி நேரம் என தமிழகத்தில் மின்வெட்டு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மார்ச்

3.     இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் விக்ரம் சிங் நியமனம்.

4.     பீகாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்திய மகளிர் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

5.    தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி மாலுமிகளை சிறையிலடைக்க திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

5.     ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் தேர்வு.

6.     உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி ஆட்சியைப் பிடித்தது. மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. உத்தரகாண்டில் சுயேச்சை ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. பஞ்சாபில் அகாலிதளம்-பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

8.     ஐ.நா. சபை மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இலங்கை போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

9.     ‘இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்’ ராகுல் திராவிட் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

10.   உ.பி. முதல்வராக முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் தேர்வு.

12. திண்டுக்கல்லில் உள்ள லாட்ஜில் பதுங்கியிருந்த தீவிரவாதி சுட்டுக் கொலை.

14. ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது. மம்தாவின் எதிர்ப்பால் கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டது.

16.     மத்திய பட்ஜெட் தாக்கல். 46 ஆயிரம் கோடிக்கு வரி விதிப்பு. வருமான வரி உச்ச வரம்பு  2 லட்சமாக உயர்த்தப்பட்டது.

18.     மம்தாவின் எதிர்ப்பால் மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா.

19.     கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.

20.     மத்திய ரயில்வே அமைச்சராக முகுல்ரா பதவியேற்பு.

21.     நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ. 10.60 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக தலைமை தணிக்கை கணக்கு அதிகாரி அறிக்கை.

21.     சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முத்துச்செல்வி (அதிமுக) வெற்றி.

22.     இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

29.    முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை.

30.    தமிழகத்தில் மின் கண்டனம் அதிரடியாக உயர்த்தப்பட்டது.

ஏப்ரல்

1.     புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர். இ.கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் பலி.

1.  மியான்மர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஆங் சாங் சூயி உள்பட அவரது ஐனநாயக கட்சியினர் 44 இடங்களில் வெற்றி பெற்றனர்.

4.      மத்திய அரசுக்குத் தெரியாமல் தில்லியில் ராணுவம் குவிக்கப்பட்டதாக பரபரப்புச் செய்தி வெளியானது.

19.     கண்டம் விட்டு கண்டம் பாயும்  ‘அக்னி - 5’ ஏவுகணை சோதனை வெற்றி.

21.    சத்தீஸ்கரில் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றனர்.

26.     மாநிலங்களவை எம்.பி.யாக சச்சின் தெண்டுல்கர் நியமனம்.

27.     மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டார்.

28. போலி ஆயுத பேர ஊழல் வழக்கில் முன்னாள் பா.ஜ. தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு தில்லி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

மே

5.     மதுரை ஆதீன மடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை.

13.     நாடாளுமன்றத்தின் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் உரையாற்றினர்.

14.     நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 தமிழர்கள் உள்பட 12 இந்தியர்கள் பலி.

15.     ஸ்பெக்ட்ரம் ஊழலில் 15 மாதங்கள் சிறையிலிருந்த ஆ. ராசாவுக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

22.     நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக மத்திய அரசு மீது புதிய புகார் கூறப்பட்டது.

23.     பெட்ரோல் விலை அதிரடியாக உயர்வு. லிட்டருக்கு ரூ 7.50 உயர்த்தப்பட்டது.

24.     உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி.

27.     ஐபிஎல் சீஸன் 5 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

30.     விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் போட்டியில் போரிஸ் கெல்பாண்டை வீழ்த்தி 5வது முறையாக சர்வதேச சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

ஜூன்

6.     புதிய தலைமை தேர்தல் கமிஷனராக வி.எஸ். சம்பத் நியமனம்.

11.     கர்நாடகத்தில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு அம்மாநில அரசு சீல் வைத்தது.

15.     காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி என சோனியா காந்தி அறிவிப்பு.

15.     புதுக்கோட்டை இடைத்தேர்தலில் கார்த்திக் தொண்டைமான் (அதிமுக) வெற்றி.

19.     நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை, பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

20.     ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்குவதற்கு ரூ 5 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. நீதிபதி பட்டாபி ராமாராவ் கைது.

21.     பாகிஸ்தான் பிரதமராக பர்வேஸ் அஷ்ரப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

25. மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி தில்லியில் கைது.

ஜூலை

1.     யூரோ கால்பந்து போட்டியில் மூன்றாவது முறையாக ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.

4.     நீச்சல் புயல் என அழைக்கப்பட்ட அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். (ஒலிம்பிக்கில் இவர் இதுவரை 22 பதக்கங்களை கைப்பற்றியுள்ளார்).

18.     தமிழக அமைச்சரவையில் இருந்த கே.ஏ.செங்கோட்டையின் பதவி பறிக்கப்பட்டு, தோப்பு வெங்கடாசலம் புதிய அமைச்சராக நியமனம்.

18.     இந்திப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா மரணம்.

22.     ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி அபார வெற்றி.

23.   நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ராணுவப்படையில் இருந்த கேப்டன் லட்சுமி செகல் மரணம்.

25 .  இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி (வயது 76) பதவியேற்றுக் கொண்டார்.

25.     தாம்பரம் முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த 2-ஆம் வகுப்பு மாணவி ஸ்ருதி,  தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியானார்.

27.     லண்டனில் ஒலிம்பிக் 2012 போட்டிகள் துவங்கியது.

30.     தில்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலி.

ஆகஸ்ட்

12.     தர்மபுரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 2 தேர்வு வினாத்தாளுடன் வந்தவர் கைது.

13.     ஆறரை லட்சம் பேர் எழுதிய குரூப் - 2 தேர்வு ரத்து.

17.    நிலக்கரி ஒதுக்கீடு உள்பட மூன்று திட்டங்களில் மத்திய அரசுக்கு ரூ. 3 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை கணக்கு அதிகாரி அறிக்கையால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு.

17.     அசாம் மாநிலக் கலவரம் தொடர்பாக வதந்திகள் பரவியதை அடுத்து தென்மாநிலங்களில் உள்ள அசாம் மாநிலத்தவர்கள் உடனடியாக தங்கள் மாநிலத்திற்கு திரும்பினர். இதனால், எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு கட்டுபாடு விதிக்கப்பட்டது.

18.     சீனாவைச் சேர்ந்த வென் ஜியா உலக அழகியாக தேர்வு செயப்பட்டார்.

18.     சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வி.வி.எஸ். லட்சுமண் அறிவித்தார்

25.     தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றதில் 6.75 லட்சம் ஆசிரியர்களில் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

26.     முதன் முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் (வயது 82) மரணம்.

26. 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸி. அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

செப்டம்பர்

4.    அரசுப்பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

8.     சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

9.     இந்தியாவின் 100-வது ராக்கெட்டான ‘பி.எஸ்.எல்.வி. - சி21’ வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.

9.     வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வர்க்கீஸ் குரியன் மரணம்.

10.     கூடங்குளம்  அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மீனவர் அந்தோணி ஜான் பலி.

13. டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது.

14.     ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து டெக்கான் அணி நீக்கம்.

13.     காந்தஹார் விமானக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாவத் என்ற மெஹ்ரஜீதீன், 13 ஆண்டுகளுக்குப்பின் ஸ்ரீநகரில் கைது.

14.     சில்லறை வணிகத்தில் 51% நேரடி அந்நிய முதலீடு, சிலிண்டருக்கு கட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு மத்திய அமைசரவை ஒப்புதல் அளித்தது.

17.     இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயராஜ் தீக்குளித்து இறந்தார்.

18.    டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணியிலிருந்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் விலகியது.

20.    தில்லியில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இலங்கை அதிபர் ராஜபக்சே சந்திப்பு.

24.     பிரபல மலையாள வில்லன் நடிகர் திலகன் மரணம்.

29. தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியிலிருந்து டி. ஜெயக்குமார் ராஜினாமா.

அக்டோபர்

2.     அன்னா ஹசாரே குழுவில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.

3.     தமிழக அமைச்சராக இருந்த சி.வி. சண்முகத்தின் பதவி பறிக்கப்பட்டது. புதிய அமைச்சராக ப. மோகன் நியமனம்.

7.     சர்வதேச 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

9.     பாகிஸ்தான் தீவிரவாதிகளால் பள்ளிச் சிறுமி மலாலா சுடப்பட்டாள்.

10.     தமிழக சட்டசபை சபாநாயகராக தனபால் பதவி ஏற்பு.

12.    இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டது.

15.    சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

19.    இளைய ஆதீனப் பதவியிலிருந்து நித்யானந்தா நீக்கம்.

26.    மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

27.    தமிழக சட்டமன்ற துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு.

27.    மத்திய அமைச்சரைவை மாற்றி அமைக்கப்பட்டது. புதுமுகங்கள் 22 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

31.   நீலம் புயலால் சென்னை கடற்கரையில் பிரதீபா காவேரி கப்பல் கரை தட்டியது. இதிலிருந்து தப்ப முயன்ற 6 பேர் பலி.

நவம்பர்

6.     ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ விருது சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது

9.     சுவிட்சர்லாந்து வங்கியில் கருப்புப்பணம் பதுக்கிய இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.

13. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

15.     அயர்லாந்தில் வசித்து வந்த டாக்டர் சவீதாவின் வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டது. அதை கருக்கலைப்பு செய்ய அந்நாட்டு சட்டம் இடம் கொடுக்காததால், மரணமடைந்தார்.

17.     சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம்.

21.     மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.

24.      மத்திய அரசால் வழங்கப்படும் மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பும் திட்டம் ஜனவரி 1-முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது.

25.     இந்தியாவில் நடைபெற்ற பார்முலா1 கார் பந்தயத்தில் ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார்.

24.     அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சிக்கு ‘ஆம் ஆத்மி’ என்று பெயரிட்டார்.

30.     தமிழக சட்டசபையின் வைர விழா நடைபெற்றது.

30.     முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மரணம்.

டிசம்பர்

4.       பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களை அனைத்து விதமான பணிகளிலும் வேலைக்கமர்த்துவதை தடை செய்யும் மசோதா தாக்கல் ஆனது.

4.       இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்தது.

5.       சில்லறை வர்த்தகம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது.

10.     உலக ஸ்குவாஷ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை தீபா பல்லிகல் பெற்றார்.

12.     பாரத ரத்னா விருது பெற்ற சிதார் இசை மேதை பண்டிட் ரவிசங்கர் அமெரிக்காவில் மரணம்.

13.     ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 920 கோடி முதலீட்டில் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

16.     தில்லியில், ஓடும் பேருந்தில் பிசியோதெரபி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். இதனையடுத்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

21.     உலகம் (டிசம்பர் 21,  2012) இன்றைய தினம் அழிந்து விடும் என்ற மாயன் காலண்டரின் கணிப்பு பொய்யானது.

23.     சச்சின் தெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சினிமா

    59-வது தேசிய விருது வழங்கும் விழாவில் தமிழில் ‘வாகை சூட வா’ சிறந்த படமாகவும், சிறந்த பொழுது போக்குப் படமாக ‘அழகர்சாமியின் குதிரை’யும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அப்புக்குட்டி சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார். தியாகராஜன் குமாரராஜா சிறந்த அறிமுக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.

ஒலிம்பிக்

 லண்டனில் (ஜூலை 27 - ஆகஸ்ட் 12) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வழக்கம்போல பதக்கப்பட்டியலில் அமெரிக்கா (104 பதக்கங்களுடன்) முதலிடத்தை பிடித்தது. 2 வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்களோடு பதக்கப்பட்டியலில் 55-வது இடத்தைப் பிடித்தது இந்தியா. இப்போட்டியில் 204 நாடுகள் கலந்து கொண்டன.

பிரபலங்கள் - 2012


பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி (வயது 76) ஜூலை 25 அன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன் மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். 40 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். வரலாறு, அரசியல் அறிவியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டங்களும், சட்டத்தில் பட்டமும் பெற்று பத்திரிகையாளராக வாழ்க்கையை துவக்கியவர் பிரணாப்.

அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற சமாஜ்வாதிக் கட்சி ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் முதல்வர் பொறுப்பை ஏற்காமல் தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார். அகிலேஷ் யாதவ் (வயது 39) ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

நரேந்திர மோடி

குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நான்காவது முறையாக அம்மாநில முதல்வர் பதவியில் அமர்ந்தார். நடுத்தர வர்க்கத்தில் பிறந்த இவர், இளம் வயதிலிருந்தே அரசியலில் தீவிரம் காட்டினார். இவர் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

அர்விந்த் கெஜ்ரிவால்

அன்னா ஹசாரே குழுவில் இருந்த இவர், அக்குழுவிலிருந்து பிரிந்து வந்து ‘ஆம் ஆத்மி’ என்ற பெயரில் புதுக்கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். இவர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி உள்ளிட்டோர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த தகவல்களையும் வெளியிட்டவர் இவர்.

ராகுல் திராவிட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மார்ச் 9-ஆம் தேதி அன்று ராகுல் திராவிட் (வயது 39) அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்பட்ட திராவிட் 1996-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமானார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். 12 ஒரு நாள் சதத்தையும், 36 டெஸ்ட் சதத்தையும் எடுத்துள்ளார் ராகுல் திராவிட்.

சச்சின் தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் சச்சின் தெண்டுல்கர் (வயது 39) சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டிசம்பர் 23 அன்று அறிவித்தார். இதுவரை மொத்தம் 463 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18,426 ரன்களைக் குவித்துள்ளார்.  இவற்றில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலில் இரட்டைச் சதம் அடித்த பெருமை இவரையே சேரும்.

சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவழி பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவில் பணியாற்றி வருகிறார். இவர் 7-வது முறையாக விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 44 மணி நேரத்தில், தொடர்ந்து 6 முறை நடைப்பயணம் செய்த விண்வெளி வீராங்கனை என்ற புதிய சாதனையை சுனிதா படைத்துள்ளார்.

சிறுமி மலாலா

பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கூடாது என்று தாலீபான் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை எதிர்த்து குரல் கொடுத்த மலாலா தீவிரவாதி ஒருவனால் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி சுடப்பட்டாள். உயிருக்குப் போராடிய மலாலாவை லண்டனுக்கு வரவழைத்து அந்நாட்டு அரசு சிகிச்சை அளித்து காப்பாற்றியது. துணிச்சல் மிக்க இச்சிறுமியை கௌரவிக்கும் விதத்தில் நவம்பர் 10-ம் தேதி ‘மலாலா தினம்’- ஆக கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக