Powered By Blogger

சனி, 9 பிப்ரவரி, 2013

மின்னுவதெல்லாம்..


செய்கூலி இல்லை. சேதாரம் இல்லை என்று அடிக்கடி ஊடகங்களில் நகைக்கடைகளின் விளம்பரங்கள் வருகின்றன. சேதாரம் இல்லாமல் நகைககள் செய்ய இயலுமா? நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் சமயத்தில் சேதாரத்திற்கான விலையை, வாங்குவோர் தலையில் சுமத்தாமல் நகைக் கடைகளே அந்தச் சுமையை  ஏற்றுக் கொள்ளுவது என்பது  சாத்தியமா? அப்படிப்பட்ட தியாகிகளா அவர்கள்? தங்களைத் தற்காத்துக்கொள்ள நுகர்வோர்கள் செய்ய வேண்டியது என்ன? இந்த விஷயங்களை ஆராயக் களம் இறங்கியது ‘புதிய தலைமுறை’.   

சேதாரம் என்றால் என்ன?
இயந்திரம் மூலமாகவோ, கைவேலைப்பாடாகவோ தங்கத்தில் நகைகள் செய்யும்போது சிதறும் அல்லது வீணாகும் தங்கமே சேதாரம் என்று சொல்லப்படுகிறது.

சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியுமா?  
முடியாது. சிறிது கூட தங்கம் வீணாகாத அளவுக்கு நகை செய்யும் அளவிற்குத் தொழில் நுட்பம்  முன்னேறியிருக்கிறது. ஆனால், அது இங்கு இன்னும் பரவலாகவில்லை. நகைசெய்யும்போது சேதாரம் வரத்தான் செய்யும்.

சேதாரம் எதில் அதிகம்? மனிதர் செய்வதிலா? இயந்திரம் செய்வதிலா?
பட்டறையில் மனிதர்களால் செய்யப்படும் நகைகளில்தான் சேதாரம் அதிகமாகும். இயந்திரங்களின் மூலம் மோல்டு செய்யப்படும் நகைகளில் அந்த அளவு சேதாரம் ஏற்படாது. எனினும் அந்த நகைகளை ஃபினிஷிங் செய்வது மனிதர்கள்தான். அப்போது சிறிய அளவில் சேதாரம் உண்டாகும். சேதாரம் டிசைன்களைப் பொருத்து மாறுபடும்.

கல் வைத்த நகைகள் செய்தால், சேதாரம் அதிகமாகுமா?
கல் நகைகள் செய்யும்போது அதிகளவில் சேதாரம் ஏற்படும். அதன் மீது செய்யப்படும் அதிக வேலைப்பாடு காரணமாக அதிகளவு சேதாரம் ஏற்படுகிறது.மோல்டிங், பின்னர் அளவு தட்டி ராவி சுத்தம் செய்தல், பம்பிங், கல் வைத்து செதுக்கல் எனப் பல நிலைகளை அந்த நகைகள் உருவாகும்போது சந்திக்கின்றன. இவையெல்லாம் ஒவ்வொரு இடத்தில் செய்யப்படும்போது ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும்.

916 கே.டி.எம். என்பது என்ன?
24 கேரட் உள்ள நகைகளே சுத்தத் தங்கம் அல்லது சொக்கத் தங்கம் எனப்படும். சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது. கொஞ்சம் செம்பு அல்லது காட்மியம் கலந்தால்தான் நகையாக்க முடியும். கிராம் தங்கத்தில் எவ்வளவு செம்பு/ காட்மியம் கலக்கப்படுகிறது என்பதைப் பொருத்து தங்கத்தின் சுத்தத் தன்மை மாறுபடுகிறது.

916 தங்கம் என்பது, 100 கிராம் தங்கத்தில் 91.6 கிராம் சொக்கத் தங்கம் இருக்கும். இதுவே 22 கேரட் ஆபரணத் தங்கமாகும். காட்மியம் என்பதன் சுருக்கமே, ‘கே.டி.எம்.’ இந்தக் காட்மியத்தை பயன்படுத்தித்தான் நகைகளை ஒட்ட வைக்கிறார்கள்.

தங்கம், வெள்ளி, செம்பு என்ற மூன்று உலோகக் கலவைகளின் பொடியால்தான் அந்தக்காலத்தில் நகைகளை ஒட்டி வந்தார்கள். இவ்வாறு ஒட்டப்பட்ட நகையை உருக்கும்போது கிடைக்கிற தங்கம் சுத்தமாக இருக்காது. ஆனால், காட்மியம் உபயோகித்து ஒட்டிய தங்க நகையை உருக்கும்போது சுத்தமான தங்கம் கிடைக்கிறது. ஒட்டி முடித்தவுடன் காட்மியம் ஆவியாகிவிடுவதே இதற்குக் காரணம். ஆனால், சில நாடுகளில் கே.டி.எம். தடை செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு ரசாயனம்.

ஹால்மார்க் என்பது என்ன?
விற்பனைக்கு வரும் நகைகள் தரமான தங்கத்தில் செய்யப்பட்டதுதானா எனச்சோதித்து, அதற்கு முத்திரையிடும் பணியை இந்திய தர நிர்ணய அமைப்பு செய்கிறது. அப்படி இடப்படும் முத்திரைக்குப் பெயர்தான் ஹால்மார்க். ஆனால், இந்த ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படாததால், ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளும் முத்திரை இல்லாத மற்ற நகைகளும் ஒரே கடையில் விற்கப்படுகின்றன. ஆனால், அந்தக் கடை ஒட்டுமொத்தமாக இது ஹால்மார்க் முத்திரைக் கடை என்று தனது கடையை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. எனவே, எந்தெந்த நகைகள் ஹால்மார்க் முத்திரையுடன் உள்ளன என்பதை விழிப்புடன் பார்த்து வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும்

ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளிலும் கூட பல இடங்களில் ஏமாற்று வேலை நடப்பதாகச் சொல்லப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தர நிர்ணய அமைப்பு, நாடு முழுக்க உள்ள நகைக் கடைகளில் 120 தங்க நகைகளை எடுத்து சோதனை செய்தது. இதில் 14ல் மட்டுமே சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் சொன்ன அதே தரம் இருந்தது. இதைத் தொடர்ந்து நுகர்வோருக்கு தரமான தங்க நகைகள் கிடைப்பதை உறுதி செய்ய, தேசிய அளவில் பிரத்யேகக் கமிட்டி அமைய வேண்டும் என்று பேச்சு கிளம்பியது. ஆனால், இன்றுவரை அது செயல்வடிவம் பெறவில்லை.

வெளிநாடுகளில் தங்கத்தின் தரம் எப்படி?
பல நாடுகளில் தரம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே நகைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.  மொத்த வியாபாரிகள், தொழிற்சாலைகளிலிருந்து நகைகள் வாங்கும்போது அதில் ஏதேனும் ஒரு நகையின் தரத்தை சோதனை செய்து, பின்னர் வாங்குவதே அமீரகத்தில் நடந்துகொண்டிருக்கும் வழக்கம்.

அமீரக அரசாங்கத்தின் தங்கக் கட்டுப்பாட்டு வாரியம் மூன்று மாதத்திற்கொருமுறை ஒவ்வொரு கடைக்கும் வருகை தந்து, அங்குள்ள நகைகளில் சிலவற்றை இவர்களின் பரிசோதனைக்கு எடுத்துச் செல்வார்கள். அப்படி எடுத்துச் செல்லும் நகைகளில் தரம் குறைவாக இருந்தால், அந்த நகைகள் அனைத்தையும் உருக்குவதற்கு கட்டளையிடுகிறார்கள். இரண்டாம் முறையும் தரம் குறைவு என்றால், அபராதமும் ஒரு மாத காலம் கடையடைப்பும் செய்வார்கள். மூன்றாம் முறை கடையின் லைசென்சை ரத்துசெய்து விடுவார்கள். இந்தக் கட்டுப்பாட்டினால் தங்கத்தின் தரம், அமீரகத்தில் இன்றுவரையில் தலைதூக்கி சர்வதேசச் சந்தையில் பெயரும் பெற்றுவருகிறது.

சேதாரம் அதிகம் வாங்கினால், நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்க முடியுமா?
சேதாரம் அதிகம் வாங்கியதாக நேரடியாக குறைதீர்மன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. ஆனால், 916 என்று கூறுவார்கள். ஆனால், 91.6 டச்சுக்குப் பதிலாக 85 டச்தான் இருக்கும். அதுபோன்ற சமயங்களில் அதை ஆதாரத்துடன் குறைதீர்மன்றத்தில் புகாரளித்து தீர்வு காணலாம். தங்கத்தின் தரத்தை ஆய்வகத்தில் கொடுத்து, சான்றிதழ் வாங்கி அதனை ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.

இங்கு உடனடியாக என்ன செய்யலாம்?  
புதுச்சேரியில் நகை விற்பனை செய்யப்படும்போது வழங்கப்படும் ரசீதில் சேதாரம், செய்கூலி ஆகியவற்றைத் தனித்தனியாக குறிப்பிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மனிதத் தன்மை நுகர்வோர் மைய அமைப்பின் தலைவர் உத்திரேஸ்வரன் புதுவை முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார். அதில், ‘புதுச்சேரியில் உள்ள நகைக் கடைகளில் நகை விற்கும்போது அவர்கள் கட்டாயமாக பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை வாங்கி, பில்லில் குறிப்பிட வேண்டும். அவர்கள் அளித்த துல்லிய எண்ணையும் குறிப்பிட வேண்டும். அதேபோல் பில்லில் நகை வாங்குபவர்கள் எவ்வளவு எடை நகை வாங்குகிறார்கள், அதற்குரிய தொகை எவ்வளவு, நகைக்கான கூலி எவ்வளவு, வரிகள் எவ்வளவு என்பதையும் தனித்தனியாகக் குறிப்பிட வேண்டும். எஸ்டிமேட் பில்களை உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது. இதனால், அரசுக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்படும். இவ்வாறு எஸ்டிமேட் பில்களை உபயோகிக்கும் நகைக் கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதை நாடு முழுக்கப் பின்பற்றலாம்.

உலகிலேயே அதிக அளவில் தங்க ஆபரணங்களைப் பயன்படுத்துபவர்கள் இந்தியப் பெண்கள். இந்த நிலையில் தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் வைப்பதும், தரமான தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் சந்தைக்கு வருவதை உறுதி செய்வதும் அரசின் கடமையாகும்.

ஒளிவு மறைவு ஏன்? ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், யோசிக்க நிறைய இருக்கிறது.


அரசால் அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பிரபலப் பாடகி திருமதி. எஸ். ஜானகி ஏற்க மறுத்து விட்டார். இப்படி ஓர் அரசு கௌரவத்தை ஒருவர் ஏற்க மறுப்பது இது முதல் முறையல்ல என்பதால் இது ஆச்சரியமளிக்கவில்லை. ஆனால், பத்ம விருதுகள் குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன.

ஒருவர் எந்த அடிப்படையில் பத்ம விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது இதுவரை விடுபடாத புதிர். விளங்கிக் கொள்ள முடியாத மர்மம்.

தகுதியுள்ள பலருக்கு ஆண்டுக்கணக்கில்- சில சமயம் அவர்கள் ஆயுள் முழுதும் கூட- பத்ம விருதுகள் அளிக்கப்படுவதில்லை. ஆனால், வேறு சிலருக்கு என்ன காரணத்தினாலோ அந்த கௌரவம் எளிதாகக் கிட்டிவிடுகிறது.

2009ம் ஆண்டே ஐஸ்வர்யா ராக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவிக்கு வழங்கப்படுகிறது. ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் ஜஸ்பால் பட்டிக்கு அவர் மறைவிற்குப் பின் பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. திறமையான நடிகர் என அனைவராலும் ஏற்கப்பட்ட நாகேஷுக்கு அவர் வாழ்ந்தபோதோ, மறைந்த பின்னரோ பத்ம விருதுகள் அளிக்கப்பட்டதில்லை.

பாட வந்த இரண்டாண்டுகளுக்குள்ளாகவே உதித் நாராயணுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு விடுகிறது. ஆனால், 55 ஆண்டுகளாக, 800 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள திரு.எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இதுவரை (அவருக்கு வயது 84) பத்ம விருதுகள் ஏதும் வழங்கப்படவில்லை.

‘பத்ம விருதுகளுக்காக நான், கடந்த ஆண்டு அவர்கள் (விஸ்வநாதன் -ராமமூர்த்தி) பெயரைப் பரிந்துரைத்தேன். ஆனால், மாநில அரசு மீது விரோத மனப்பான்மை கொண்டுள்ள மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை’ என்று தமிழக முதல்வர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

திரைக் கலைஞர்கள் மட்டுமல்ல, தகுதி வாய்ந்த பலர் கண்டு கொள்ளப்படாமலே இருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால், அது அரசாங்கத்திற்கு இழுக்கு என்பதை அரசு உணர வேண்டும்.

ஒவ்வொரு செப்டம்பர் மாதமும், மாநில அரசுகள், கலாசார அமைப்புகள், விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்புகள், முன்பு பத்ம விருதுகள் பெற்றவர்கள் ஆகியோரிடமிருந்து விருதுக்குத் தகுதியானவர்களின் பெயர்கள்  பெறப்படுகின்றன. பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலர், மத்திய அமைச்சரவைச் செயலர், உள்துறைச் செயலர், குடியரசுத் தலைவரின் செயலர் ஆகியோரையும், அதிகாரிகளாக இல்லாத சிலரையும் கொண்ட ஒரு குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

மாநில அரசுகளின் பரிந்துரைகள் பல நேரங்களில் ஏற்கப்படுவதில்லை. உதாரணமாக பீகார் மாநில அரசு 2009ல் 11 பெயர்களைப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஒருவரைக் கூட விருதுக்குத் தேர்ந்தெடுக்கவில்லை. இந்த ஆண்டு 39 பெயர்களை கேரள அரசு பரிந்துரைத்திருந்தது. ஒரே ஒருவரது பெயர் மாத்திரம் ஏற்கப்பட்டது. சில சமயம் யாரும் பரிந்துரைக்காத பெயர்கள் விருதுப்பட்டியலில் இடம் பெறுகின்றன. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டபோது அவரது பெயரை எந்த சங்கமும் பரிந்துரைத்திருக்கவில்லை.

தேர்வு முறை திறந்த வெளிப்படையான விதத்தில் நடைபெறாதவரை இந்த விருதுகள் கௌரவமல்ல, அவமானம்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

தங்க இறக்குமதியைக் குறைப்பது சரியா?


தங்க இறக்குமதியைக் குறைப்பது சரியா?


ரிசர்வ் வங்கி துணை கவர்னர் கே.சி. சக்ரபர்த்தி, மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்திடவேண்டும்; தங்க இறக்குமதி அதிகரித்துக்கொண்டே போவது, நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என சில தினங்களுக்கு முன் கூறியுள்ளார். அவர் அப்படி கூறியதற்கு என்ன காரணம்?

அரசின் நடப்புக் கணக்கு (Current Acount Deficit) 38.7 பில்லியன் டாலரை எட்டி இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சொன்னால், சுமார் இரண்டு லட்சத்து பனிரெண்டாயிரத்து எண்ணூற்று ஐம்பது  கோடி ரூபாய். இப்படி ஒரு நிலைமை ஏற்படக் காரணம் என்ன? இந்தியாவின் ஏற்றுமதி மிகவும் குறைந்து, இறக்குமதி அதிகரித்துவிட்டதுதான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்குக்  காரணம்.

இந்த நிதி ஆண்டில் இந்தியாவில் இதுவரை 800 டன்னுக்கும் அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.  ஒரு பக்கம் தங்கத்தின் விலை கடுமையாக உயருகிறது. இன்னொரு பக்கம் தங்கம் இறக்குமதி அதிகரித்துக்கொண்டே போகிறது. பொதுவாக ஒரு பொருளின் விலை உயர்ந்தால், அதை வாங்குவதைக் குறைத்துவிடுவோம். அது தங்கத்துக்குப் பொருந்தவில்லை. காரணம், நம் நாட்டில் தங்கத்தை வெறும் உலோகமாகப் பார்ப்பதில்லை. அது நம் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்துவிட்ட சென்டிமெண்ட் உலோகம்.

சமீப காலமாக ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது. இந்த நிதி ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை விட கூடுதலாக 2.12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை இறக்குமதி செய்துள்ளோம்.

இது நமது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜி.டி.பி.) 4.6 சதவிகிதம் ஆகும். குறிப்பாகச்  சொல்லப்போனால், நாம் இறக்குமதி செய்துள்ள மொத்த மதிப்பில், தங்கத்தின் மதிப்பு மட்டும் 1.11 லட்சம் கோடி ரூபாய் ஆகும். கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதி  ஆண்டின் முதல் 6 மாதங்களில் நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி 7.4 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேநேரம் இறக்குமதி  4.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதில் தங்க இறக்குமதிக்கு முக்கியப் பங்குண்டு.

ஏற்றுமதி குறைந்ததற்குக்  காரணம், நம் பொருட்களை வழக்கமாக இறக்குமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதுதான். அந்த நாடுகளின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது! ஆனால், இறக்குமதியைக் குறைப்பது நம் கையில்தானே உள்ளது?

நல்லவேளையாக, அன்னிய நேரடி முதலீடுகளும் அன்னிய நிறுவன முதலீடுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், இந்தியாவில் கடும் நிதி நெருக்கடி ஏற்படாமல் தப்பித்துக் கொண்டோம்.

கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் தங்கக் கட்டிகளுக்கான இறக்குமதி வரியை 2 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்த்தினார். இதனால், நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் தங்கம் இறக்குமதி 30 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்நிலையில் ருசி கண்ட பூனைபோல், தற்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தங்க இறக்குமதி வரியை மேலும் உயர்த்தப் போகிறார் என்று தெரிகிறது.

தங்கக் கடத்தலுக்கு வழிவகுக்கும்

அதேநேரம் நாம் ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது. தங்கம் மீது அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தப்படுவது அதிகரிக்கும். இன்னும் சொல்லப்போனால், கடந்த நான்கு மாதங்களில் தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளது என்பதே  இதற்குச் சான்று.

இதைச் சுட்டிக் காட்டினால், வரியை உயர்த்தாவிட்டாலும் கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்கிறார் நிதி அமைச்சர்.

ஆக, இறக்குமதி தங்கத்தின் விலை விரைவில் அதிகரிக்கும் என்பது தெளிவு.

ரிசர்வ் வங்கியும் களம் இறங்குகிறது!

தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு, மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் அணுகுமுறை இதுவென்றால், ரிசர்வ் வங்கியும் தன் பங்குக்கு இது விஷயத்தில் விரைந்து செயல்படத் தொடங்கிவிட்டது. இதற்காக கே.யூ.பி.ராவ் (ஆலோசகர் - பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறை, ரிசர்வ் வங்கி) தலைமையில் ஒரு செயற்குழுவை ஏற்கெனவே அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் என்னவெனில், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களை உருவாக்கவேண்டும் என்பதே. உதாரணமாக, தங்கம் சார்ந்த வங்கி டெபாசிட்கள், தங்கப் பத்திரங்கள், வருவாய் வரி விலக்கு, வீட்டிலும் பாதுகாப்புப் பெட்டகங்களிலும் உறங்கிக் கொண்டிருக்கும் தங்கத்தை பொருளாதாரத்துக்குப் பயன்படக்கூடிய வங்கி முதலீடுகளாக, புதிய அம்சங்களுடன் கூடிய புதுமையான பத்திரங்களாக வடிவமைக்கவேண்டும் என்பதே குழுவின் பரிந்துரைகளின் சாரம்.

கடந்த கால அனுபவம்!

கடந்த காலங்களில் வங்கிகள் அறிமுகம் செய்த தங்கம் தழுவிய டெபாசிட்கள் போனி ஆகவில்லை என்பதுதான் உண்மை. பொதுமக்களிடமிருந்து கணிசமான அளவில் தங்கத்தை இந்த முதலீட்டுத் திட்டங்கள் திரட்டிட இயலவில்லை.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி 1999ம் ஆண்டில் தங்க டெபாசிட்டை அறிமுகம் செய்தது. கடை விரித்தேன், கொள்வாரில்லை‘ என்கிற நிலை இருந்ததால், அத்திட்டம் திரும்பப் பெறப்பட்டது. மீண்டும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2009ல் அதே வங்கி சில மாற்றங்களுடன் தங்க டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்தது. அப்போதும், திருப்பதி தேவஸ்தானம் போன்ற பெரிய, பெரிய கோயில்கள், அறக்கட்டளைகள் மற்றும் பெரும் செல்வந்தர்களிடமிருந்து ஓரளவு தங்கம் திரட்ட முடிந்ததே தவிர, அந்தத் திட்டமும் வெற்றி பெறவில்லை. வெறும் 36 டன் தங்கம் மட்டுமே 1996 வரை இத்திட்டத்தின் மூலம் திரட்ட முடிந்தது. அப்போது இருந்த தங்க ஸ்டாக்கில் இது 0.4 சதவிகிதம் மட்டுமே என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பொதுவாக இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்திட வேண்டுமெனில், குறைந்த பட்சம் 200 கிராம் (25 பவுன்) முதலீடு செய்யவேண்டும் என்பது விதிமுறை. அதேபோல், முதிர்ச்சி காலம் 3 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகம். இந்த மாதிரியான விதிமுறைகள் தளர்த்தப்பட்டால்தான் அது மக்களைக் கவரும்.

டெபாசிட் செய்யப்படும் தங்க நகைகள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்படுகின்றன. தங்கத்தை டெபாசிட் செய்தால், அதே நகை தங்களுக்கு மீண்டும் கிடைக்கவேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு.

 E.T.F. (Exchange Traded Fund) திட்டத்தில் சேர்ந்துள்ள தங்கத்தை தேவையானபோது வாங்கிக் கொள்ளலாம் என்கிற வசதியை ஏற்படுத்தினால், இந்தத் திட்டம் மேலும் நல்ல வரவேற்பைப் பெறும். ஏற்கெனவே, தங்க E.T.F. திட்டத்தில் 12,000 கோடி ரூபாய் புரளுகிறது. இது தற்போதைய சந்தை விலையின்படி 40 டன் தங்கத்துக்குச் சமம்.

கைகொடுக்கும் நகைக்கடன்!

அவசரத் தேவைக்கு நகையை அடமானமாக வைத்துக் கடன் வாங்குவது நம் நாட்டில் சர்வ சாதாரணமாக உள்ளது. ஏழை, பணக்காரர், நகரவாசி, கிராமவாசி என்ற எந்த பேதமும் இல்லாமல் எதிர்பாராத தேவைக்கு நகைக்கடன் வாங்கும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கிறது. வங்கிகளிலும், வங்கி சாராத ஃபைனான்ஸ் கம்பெனிகளிலும் 1.21 லட்சம்  கோடி  ரூபாய் அளவுக்கு தங்கக்கடன் கொடுத்திருக்கிறார்கள். 2012ம் ஆண்டு நிலவரப்படி, இதற்கு 621 டன் தங்கம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. இந்த அளவு பரவியுள்ள நகைக்கடன் வசதியை தொடரத்தான் வேண்டும். இப்படி அமைப்பு ரீதியாக இயங்கும் தங்கக் கடன் வசதி இல்லையெனில், தன் வீட்டுக் கல்யாணத்துக்கு ஒரு 5 பவுன் தங்கம் வாங்கவேண்டுமானால், ஏழை, எளிய குடும்பம் தங்கள் வாழ்க்கையையே அடமானம் வைக்கவேண்டும்.

கட்டுப்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் சராசரி இந்தியன் தனது சேமிப்புக்கு பாதுகாப்பாகக் கருதுவது தங்கத்தை மட்டுமே என்பதால், தங்கத்திற்கான தேவை அதிகரிக்குமே தவிர குறையாது.

ஓர் ஆண்டுக்கு இந்தியாவில் 80,000 முதல் 90,000 திருமணங்கள் நிகழ்கின்றன. அதன் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளில் திருமணங்களுக்காக மட்டும் எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஆக, நடுத்தர மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வது தங்கத்தின் மீதுள்ள மோகத்தால் அல்ல; அது தரும் பாதுகாப்பு உணர்வால்தான்!

தேவை புதுமையான திட்டங்கள்!

இதையெல்லாம் கருத்தில்கொண்டு, தங்கம் முற்றிலுமாக நகைகளிலும் லாக்கர்களிலும் முடங்காமலும் தேவையானபோது, தங்கமாகவே திரும்பக் கிடைக்கும் வசதியுடனும் புதுமையான  வழிமுறைகளுடனும் தங்க டெபாசிட்கள் வடிவமைக்கப்படவேண்டும். அப்படிச் செய்தால், அவை வெற்றி பெறக்கூடும்.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தங்க டெபாசிட்கள் வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதுபோன்ற திட்டத்துக்கு நடுத்தர மக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வையும் உருவாக்கவேண்டியது அவசியமாகும். அப்போதுதான் நீண்டகால அடிப்படையிலாவது தங்க இறக்குமதியை படிப்படியாகக் கட்டுப்படுத்தி, பொருளாதாரம் மேம்படுவதற்கு உதவிடமுடியும். மாறாக, அரசின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை உடனடியாக குறைக்கவேண்டும் என்ற நோக்கில், தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த முயல்வது நடைமுறை சாத்தியமா என்பது கேள்விக்குறியே!

மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள்




இன்சுலின், இனி ‘அவுட்’சுலின்!

சர்க்கரை நோய்க்குத் தரப்படும் இன்சுலின், செல் மூலக்கூறில் சென்று எப்படி செயல்படுகிறது என்பதை ஆஸ்திரேலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் முடிவு, சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையைத் தந்திருப்பதுடன் தினமும் இன்சுலின் தேவைப்படும் லட்சக்கணக்கானவர்களுக்கு அதன் தேவையையும் முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவுகளை பிரதான ஆராய்ச்சியாளர் மைக் லாரன்ஸ், சர்வதேச மருத்துவ இதழான, ‘நேச்சர்’ (nature) ல் வெளியிட்டு உள்ளார். ‘இன்சுலினை செலுத்தியவுடன் மூலக்கூறுகள் எப்படி உடல் செல்களைத் தூண்டி, இன்சுலின் ஹார்மோனை சுரக்க வைக்கிறது என்பது இவ்வளவு நாட்களாக புதிராக இருந்தது. 20 ஆண்டுகளாக ஆராய்ந்து கண்டுபிடித்த இந்த முடிவுகள், சர்க்கரை நோய்க்கு தற்போது இருப்பதைவிட அதிக சக்தி வாய்ந்த புதிய மருந்துகள் கண்டுபிடிக்க உதவும்’ என்கிறார் மைக் லாரன்ஸ்.

பக்கவாதத்துக்கு பை... பை!

பக்கவாதம் வந்தவர்களை மீண்டும் எழுந்து நடக்க, புதிய மாத்திரைகளை கண்டுபிடித்துள்ளார், அமெரிக்க ஆராய்ச்சியாளரான பேராசிரியர் பிராங்க் லோங்கோ. உடல் இயக்கம் முற்றிலும் நின்றுபோன சுண்டெலிகளுக்கு இந்த மருந்தைக் கொடுத்ததில் அவை  நடக்கத் தொடங்கியதோடு, நீச்சல் பயிற்சியைப்போல சில உடல் அசைவுகளையும் செய்து, விஞ்ஞானிகளை வியப்படையச்  செய்துள்ளன. கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்தப் பேராசிரியர்,  சுண்டெலிகளை வைத்து பரிசோதித்த மருந்தின் பெயர் LM11A-31. அடிபட்ட 4 மணி நேரத்தில் ஒருமுறையும் அதன்பின் தினமும் 2 வேளை வீதம் 42 நாட்கள் தொடர்ந்து இந்த மருந்தைக் கொடுத்து சோதித்தபோதுதான் பக்கவாதம் பாதித்த சுண்டெலிகள்  நடக்க ஆரம்பித்தன. இது  மனிதர்களுக்கும் கொடுத்துப் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும்.

புற்றுநோய் பாதிப்பை ஆர்.என்.ஏ. மூலம் அறியலாம்!

ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, ரத்தப் பரிசோதனை மூலம் கண்களைப் பாதிக்கும் புற்றுநோயைக் கண்டறிய முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர், சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். இதனால், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. கண்களில் கட்டி இருக்கும் இடத்தில் உள்ள ரத்தத்தைப் பரிசோதித்து, அதில் உள்ள மைக்ரோ ஆர்என்ஏ (micro-RNA)அளவை வைத்து புற்று நோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்.  ‘‘கீமோதெரபி கதிரியக்க சிகிச்சையை மேற்கொள்ளும் நோயாளிக்கு, புற்றுநோய் பாதிப்பு எந்த அளவு இருக்கிறது என்பதைத் தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சையை தொடரவும் இந்தக் கண்டுபிடிப்பு உதவும்’’ என்று இந்த ஆராய்ச்சியின் திட்ட இயக்குநர் டாக்டர். எஸ். கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

என் ஜன்னலுக்கு வெளியே...ஒளியும் இருளும்




ன்னும் என் ஜன்னலுக்கு வெளியே இன்றைய செய்தித்தாள் வந்து விழவில்லை. செய்திகள் சலிப்பேற்றும்போதெல்லாம் வாழ்க்கையை வாசிக்க நான் முக நூல் (face book) முன் வந்தமர்வது வழக்கம். அதுவும் என் ஜன்னலைப்போல அறியாத முகங்களை வாசிக்கவும் நேசிக்கவும் உதவும் ஓர் சாதனமாக இருக்கிறது.

தன்னுடைய படங்கள், தனக்குப் பிடித்த படங்கள், சத்தான மேற்கோள்கள், சாரமற்ற வெற்று அரட்டைகள், முறுவலிக்கச் செய்யும் துணுக்குகள், முகம் சுளிக்கச் செய்யும் ஆபாசங்கள், கை குலுக்கல்கள், கண் சிமிட்டல்கள் எனக் கலகலவென கல்யாண வீட்டைப்போல ஆகிவிட்டது முக நூல். அந்தக் கலகலப்பிற்கு நடுவே யாராலும் கண்டுகொள்ளப்படாமல் (அபூர்வமாக) கசிந்து ஓடும் சங்கீதத்தைப்போல முக நூலிலும் அவ்வப்போது சிந்தனைக்குப் பொறி கொடுக்க சில விஷயங்கள் கிடைப்பதுண்டு.

அப்படி ஒன்று இன்று கிடைத்தது. உண்மையா, பொய்யா என உறுதி செய்துகொள்ள இயலவில்லை. ஆனால், சுவாரஸ்யமாக இருந்தது. தமிழக முதல்வராய் இருந்தபோது ஒரு முறை திருச்சிக்குச் சென்ற காமராஜரை மாலை அணிவித்து வரவேற்கப் பலரும் மாலைகளுடன் காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் பள்ளி ஆசிரியர். அவர் ஆசிரியர் என்பதை அறிந்த காமராஜர், ‘பசங்களுக்குப் பாடம் நடத்துவதை விட்டுவிட்டு  எனக்கு ஏன் மாலை போட வந்தீர்கள்?’ எனக் கடிந்துகொண்டார் என்கிறது அந்தத் துணுக்கு.

இன்று வகுப்பறைக்கு வந்து, பாடம் கற்பிப்பதைத் தவிர வேறு எத்தனை பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதை அறிய நேர்ந்தால், காமராஜர் கண்ணீர் சிந்தியிருப்பார் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனால், இன்று அரசுப் பள்ளிகளில் வீழ்ந்து கிடக்கும் கல்வித் தரத்தையும் அதற்குக் காரணமான ஆசிரியர்களையும் காண நேர்ந்தால், அவர் ரௌத்திரம் பழகியிருப்பார் என்பது நிச்சயம்.

ஒன்றாம் வகுப்பில் இருக்கும் மாணவர்களில் 45 சதவிகித மாணவர்களால்தான் தங்கள் தாய் மொழியில் உள்ள எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. 2 சதவிகித மாணவர்களாலேயே இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தைப் படிக்க முடிகிறது என்று அதிர வைக்கிறது ஆண்டுதோறும் வெளியாகும் அசர் அறிக்கை. தமிழிலேயே இந்த நிலை என்றால், ஆங்கிலத்தைப் பற்றி அதிகம் கேட்க வேண்டாம். கணிதத்தின் நிலை இன்னும் மோசம். ஐந்தாம் வகுப்பில் உள்ள 13 சதவிகித மாணவர்களால்தான் வகுத்தல் கணக்கைப் போட முடிகிறது. தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிக்கும் திறன் குறைந்துள்ளதாகவும் கூறுகிறது ஆய்வு.

இது ஏதோ அறிக்கை சொல்கிற புள்ளி விவரம் என்று அலட்சியப்படுத்திவிட முடிவதில்லை. குரல் வலை என்ற வலைப்பதிவில் ஒருவர் எழுதியுள்ள அனுபவத்தை ஆசிரியர் குரல் என்ற முக நூல் வழியே வாசிக்கும்போது, இந்தப் புள்ளி விவரம் அத்தனை பொய்யானதல்ல என்றே தோன்றுகிறது.

நான் டியூஷன் எடுக்கும் காலத்தில் எங்களிடம் ஒரு மாணவன் வந்தான். அவன் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய அப்பா, என் அண்ணனிடம் ‘இவனை எப்படியாவது எட்டாவது பாஸ் பண்ண வெச்சிருங்க’ன்னு கெஞ்சிட்டுப் போனார். எங்களிடம் வந்தபோது, அந்தப் பையனுக்கு தமிழ் எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியாது. ஆங்கிலம் கேட்கவே வேண்டாம். அதே சமயத்தில் எங்களிடம் அருகிலிருந்த சில மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்களும் இருந்தார்கள். அவர்களில் மூன்றாம் வகுப்பு மாணவன் இவனை விட நன்றாக தமிழும் ஆங்கிலமும் ஏன் ஹிந்தியும் கூட வாசித்தான். இன்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகக் குறைவாகவே சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் அரசுப் பள்ளிகளை விட நன்றாக இருக்கிறது என்று ஒத்துக்கொண்டுதானாக வேண்டும்" என்று எழுதுகிறார் வலைப்பதிவர்.

ஆசிரியர்களைப் பற்றி இப்படிப் பொத்தாம் பொதுவாக நாம் பேசிவிட முடியாது என்பதே, ‘புதிய தலைமுறை’யின் அனுபவம். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரையன்குளம் ஒத்தப்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தங்களது சொந்தச் செலவில் வல்லுநர்களை நியமித்து, ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களைப் பற்றி, ‘புதிய தலைமுறை’ தனது இதழில் பதிவு செய்திருக்கிறது. அவர்களைப் போன்ற எத்தனையோ ஆசிரியர்களை என் நினைவிலிருந்து சொல்ல முடியும். ஏனெனில், எங்கள் இதழின் பக்கங்களுக்குக் கனம் சேர்த்த பெரியவர்கள் அவர்கள்.

எளிதாக ஆசிரியர்களை இரண்டு வகையாகப் பகுத்து விடலாம். நாளைய தலைமுறையை நாம் உருவாக்குகிறோம், கோயில் கட்டுவதற்காகக் கல்லுடைக்கிறோம் என அறிவிலே தெளிவும் அகத்திலோர் அன்பின் வெள்ளமும் கொண்ட ஆசிரியர்கள் ஒரு வகை. கூலிக்குக் கல்லுடைக்கிறோம் என்ற பார்வையை குறுக்கிக்கொண்ட ஆசிரியர்கள் மறுவகை.

ஆசிரியர் குரல் என்ற முக நூல், ஒரு சம்பவத்தைப் பதிந்திருக்கிறது. அந்த பள்ளியில் பல வருடங்களாக பணியில் இருந்தபோதும் ஒரு தலைமை ஆசிரியை தண்ணீர் வசதியின்றி அந்தப் பள்ளியின் கழிப்பறைகளைப் பயன்படுத்த வழியின்றி இருந்தபோது, குழாய்க் குறைபாடு என்று சொல்லி தட்டிக் கழித்துவந்திருக்கிறார். இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் பெரிய வயது வந்த பெண்பிள்ளைகள் கூட இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய செய்தி. அடுத்து அவருக்குப் பின் வந்த தலைமை ஆசிரியை, வந்த 2ம் நாளே உள்ளூர் இளைஞர்களை அழைத்து, நீர்க்குழாய்ப் பிரச்சினையை ஆராய்ந்தால், அது ஒரு சாதாரண திருகாணி இல்லா பிரச்சினையாக முடிந்து, உடனே அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது.

கூட்டிக்கழித்துப் பார்த்தால், தங்கள் பொறுப்பை உணர்ந்த மனிதர்கள் இருக்கும் எந்த இடமும் - பள்ளியோ, ஊடகமோ, அலுவலகமோ, இல்லமோ - ஒளிர்கிறது. சுயநலத்தை சுவாசமாகக் கொண்ட எந்த இடமும் இருள்கிறது

முறையற்ற முடிவு


ழைய ஜோக்தான்.  ஆனால், ஒவ்வொரு முறையும் புதுப்புதுக் கோணங்கள் காட்டும் ஜோக் அது. என்னுடைய கஷ்ட காலம் எப்போது தீரும் என்ற கேள்விக்கு ஜோசியர் இன்னும் இரண்டு வருஷம் பொறுத்திருங்கள் எனச் சொல்வதும் அதைத்தொடர்ந்து ஜோசியம் கேட்க வந்தவர் அதன் பின்? என ஆவலாகக் கேட்க, கஷ்டம் பழகிவிடும் என்று முடிப்பதுமான ஜோக்கை பல தருணங்களில் பலர் சொல்லக் கேட்டிருப்போம். டீசல் விலை இனி மாதந்தோறும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைக் கேட்டதும் நம் நினைவுக்கு வருவதும் அந்த நகைச்சுவைத் துணுக்குதான்.

மறுபடியும் விலை உயர்வா என மருள்கிற மக்களுக்கு இந்த விலை உயர்வு மாதம் 50 காசுதான் என்று சமாதானம் சொல்கிறது அரசு. ஆனால், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் விலை உயர்வு மட்டுமல்ல. டீசல் விலை உயர்வு மற்ற எல்லாவற்றின் விலையையும் அதிகரிக்கச் செய்து, விலைவாசியைஉயரச் செய்துவிடும். விலைவாசி உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும், இறுதியில் பொருளாதாரம் முடங்கும் என்பதால், இதுவரை டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசு தன் வசம் வைத்திருந்தது. இப்போது டீசல் விலையை அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே 50 காசு வரை உயர்த்திக்கொள்ளலாம் எனச் சொல்லியிருப்பதன் மூலம் அரசு அந்த அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டது.

இல்லை, நாங்கள் அப்படி ஒப்படைத்து விடவில்லை, அந்த அதிகாரம் இன்னும் எங்களிடம்தான் இருக்கிறது என்கிறார் அமைச்சர். கெட்டிக்காரத்தனமான சமாளிப்புதான். ஆனால்,  2010ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி, டீசல் விலை நிர்ணயத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்த அரசு கொள்கை முடிவு எடுத்தது என்பதை அமைச்சரால் மறுக்க முடியுமா?

இந்த மாதந்தோறும் விலை உயர்த்தும் முடிவுகூட மத்திய அமைச்சரவையில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதே அதிகாரம் கைமாறிய உண்மையை உடைத்துச் சொல்லும்.

இப்படி ஒரு விலை உயர்வு வரவிருக்கிறது எனத் தெரியாமல், ரயில்வே அமைச்சர் அதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான் ரயில்வே கட்டணங்களை உயர்த்தினார். இந்த விலை உயர்வு 4,000 கோடி ரூபாய் அளவிற்கு ரயில்வேவிற்குச் சுமை ஏற்றும் என்பதால் மீண்டும் ஒரு ரயில் கட்டண உயர்வு வரக் காத்திருக்கிறது.

 இந்த முடிவு உணர்த்துவது என்ன? அரசு விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கும் தனது பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்கிறது என்பதுதான். விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுப்பதன் மூலம், விலைவாசியையும், மக்களின் நல்வாழ்வையும்,  நாட்டின் பொருளாதாரத்தையும் அவர்கள்  வசம் மறைமுகமாக ஒப்படைத்து விட்டது அரசு.

தங்கள் பொருளுக்கான விலையை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் தந்திருக்கும் அரசு, அதேபோல விவசாயிக்கும் தனது விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்குமா?     

வலுப்பெறும் வாரிசு அரசியல்




ந்தியா தன்னை ஒரு குடியரசாக அறிவித்துக் கொண்டு 62 ஆண்டுகள் ஆகின்றன. குடியரசுக்கும் முடியாட்சிக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் ஜனநாயகம். முடியாட்சியில் தகுதி இருக்கிறதோ இல்லையோ, மன்னர் அல்லது அரசியின் குழந்தைகள் அடுத்தடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பெறுவார்கள். அங்கு வாரிசு உரிமையின் அடிப்படையில் அதிகாரம்  என்பது அங்கீகரிக்கப்பட்ட ஓர் நடைமுறை.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவில் வாரிசு அரசியல் என்பது வலுப்பெற்று வருகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு திமுக தலைவர், ஸ்டாலின் பெயரைக் கட்சித் தலைவர் பதவிக்கு வாய்ப்பு வரும்போது, தானே முன் மொழிவேன் என்று அறிவித்திருந்தார். இந்த வாரம் காங்கிரசின் துணைத் தலைவர் பதவிக்கு - சோனியா காந்திக்கு அடுத்த நிலையில்- ராகுல் காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவர்கள் இருவர் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் கட்சியின் முக்கியமான பொறுப்புகளிலோ அல்லது ஆட்சி அதிகாரத்திலோ இருந்து வருகிறார்கள். காஷ்மீரில் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா, உ.பி.யில் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், ஒடிசாவில் பிஜூ பட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக் ஆகியோர்    முதலமைச்சர்களாக இருக்கிறார்கள். தற்போதைய மகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ்  சௌகானின் தந்தை நேரு, சாஸ்திரி, இந்திரா ஆகியோரது அமைச்சரையில் அமைச்சராக இருந்தவர். பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங் பாதல் துணை முதல்வராக இருக்கிறார். கர்நாடகத்தில், முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மகன் குமாரசாமியும், ஹரியானாவில் முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சௌதாலாவும், மகாராஷ்டிரத்தில் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சௌகானின் மகன் அசோக்ராவ் சௌகானும் முதல்வராக இருந்தனர். பீகார், லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி முதல்வரானதையும் தமிழ்நாடு, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார் முதல்வராகப் பொறுப்பேற்றதையும் கண்டது.

மத்திய அமைச்சரவை, மத்தியில் உள்ள துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அது மிக நீண்டது. ஆட்சி அதிகாரம் கையில் இல்லாவிட்டாலும் கட்சியின் கடிவாளத்தைக் கையில் வைத்திருக்கும் வாரிசுகளும் கணிசமான அளவில் உண்டு.  ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன், சரத் பவாரின் மகள் சுப்ரியா, பால் தாக்ரேயின் மகன் உத்தவ் தாக்ரே, டாக்டர். ராமதாசின் மகன் டாக்டர். அன்புமணி என நாடு முழுவதும் பல உதாரணங்கள் உண்டு.

என்ன காரணம்? ஏன் இந்திய அரசியல் கட்சிகள் வாரிசுகளை கட்சிக்குள் முதன்மைப் படுத்துகிறார்கள்? அதற்கு அரசியல் சமூக வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன.

அரசியல் :
விடுதலை பெற்ற முதல் பத்தாண்டுகளுக்கு தேசியம் என்ற ஒரு கொள்கையை முன்னிறுத்தி, மக்களைத் தங்கள் பக்கம் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. அப்போதே அது தேசியம் என்ற கருத்தாக்கத்திற்கு மாற்றாக மொழி சார்ந்த, மாநிலம் சார்ந்த அடையாளங்களையும் உரிமைகளையும் முன்னிறுத்தி வாதிட்ட அரசியல் இருந்தது. இன்னொரு புறம் உலகு தழுவிய பார்வையோடு , பாட்டாளி வர்க்க நலன்களை முன்னிறுத்திய அரசியல் இயக்கங்கள் வலுவான சக்திகளாக விளங்கின.

இன்று இந்த மூன்று கருத்தியல்களும் அவற்றின் வசீகரத்தை இழந்து விட்டன. இந்தக் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் செய்தவர்கள், தேர்தல் வெற்றிக்காக செய்துகொண்ட சமரசங்கள், ஒரு தலைமுறையை, அந்தக் கட்சிகள் மீது மட்டுமல்ல, அந்தக் கொள்கைகள் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டன. இன்றிருப்பது கொள்கை அரசியல் அல்ல, தேர்தல் அரசியல். மத்திய அரசில் அமைச்சர்களாகப் பங்கு வகித்துக்கொண்டே, அதன் கொள்கைகளான சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களிடம் விட்டுக்கொடுப்பது என்பவற்றை எதிர்த்து அறிக்கை விடும் அரசியலை வேறு எப்படிப் புரிந்து கொள்வது?

தேர்தல் அரசியலின் நோக்கம் வெற்றி. எத்தனை இடங்களைப் பெறுவது என்பது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் பேரம் பேசும் வல்லமை (Bargaining Power) தான் அவற்றின் உண்மையான பலம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்தப் பேரம் பேசும் வல்லமையை அதிகரித்துக் கொள்ள அவை வாக்கு வங்கிகளை உருவாக்கி வைத்துள்ளன. ஜாதி, மதம், பகுதி அல்லது தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையில்  இந்த வாக்கு வங்கிகள் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படுகின்றன. அவை கலைந்து விடாமல் காப்பாற்ற மேலும் அதிகப் பணம் தேவைப்படுகிறது .

அதிகப் பணம் செலவிட்டு உருவாக்கப்படும் இந்தக் கட்சிகளின் பலன் தங்கள் குடும்பத்தாரிடமே இருக்க வேண்டும் எனக் கட்சியைத் துவக்குபவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள் எண்ணுவது மனித இயல்பு.

இன்னொரு புறம், இந்திய ஜனநாயகத்தில் தேர்தலில் போட்டியிடுவது, வெற்றி பெறுவது என்பது நாளுக்கு நாள் பணம் சார்ந்ததாக மாறி வருகிறது. இந்தப் பணத்தை சம்பாதிக்க நம் ஆட்சி அமைப்பில், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் உதவுகின்றன. அப்படி சம்பாதித்த பணம் தங்கள் கையை விட்டு அல்லது குடும்பத்தைவிட்டுப் போவதை யார்தான் விரும்புவார்? சுருக்கமாகச் சொன்னால், அரசியல் கட்சிகள் சமூக அமைப்பு என்ற நிலையிலிருந்து  கார்ப்பரேட் கம்பெனிகள் என்ற நிலைக்கு மாறிவிட்டன. இதற்கு  நம் தேர்தல் முறை ஒரு முக்கியக் காரணம்.

தேர்தல் முறை மட்டுமல்ல, மக்களாகிய நாமும் ஓர் காரணம். மக்கள் பங்கேற்பில்லாமல்; ஏது ஜனநாயகம்? நம் மக்கள், வாக்களிக்கும்போது, ஒரு கட்சியின் கொள்கைகளையோ, பிரச்சினைகளில் அவற்றின் நிலைப்பாடுகளையோ கவனிப்பதில்லை. தலைவர்கள், அவர்களைப் பற்றி உருவாக்கப்பட்ட பிம்பங்கள் இவற்றை மனதில் கொண்டே வாக்களிக்கிறார்கள். அதாவது, அவர்கள் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதில்லை. தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இது ஏன் என்பதை வரலாற்று வெளிச்சத்தில் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படுகிற இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசைக்கும் ஆளும் கட்சி வரிசைக்குமிடையே, தரையில்  சிவப்பு வண்ணத்தில் ஒரு கோடு இருக்கும். அது மட்டுமல்ல, இரண்டு வரிசைகளுக்குமிடையிலான தூரம் இரண்டு வாள்களின் மொத்த நீளத்தை விட சில அங்குலங்கள் கூடுதலாக இருக்கும். என்ன காரணம்? முன்னொரு காலத்தில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே நாடாளுமன்றத்திற்குள்ளாகவே கத்திச் சண்டை நடந்ததுண்டு. அதைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. 1972ல் கூட சோஷலிஸ்ட் கட்சியின் எம்.பி. ஒருவர், உள்துறை அமைச்சரை மூக்கில் குத்திய சம்பவம் நடந்தது. 76ல் ஒரு எம்.பி., காவலரின் கையில் இருந்த செங்கோல் போன்ற ஒன்றைப் பறித்து எதிர்க்கட்சியினர் மீது வீசப்போனார்.

தொழிற்புரட்சி போன்ற புரட்சிகள் ஏற்பட்டு, நிலைவுடைமைச் சமூகம் அழிந்து, தொழிற்சமூகம் உருவானதை அடுத்து, இங்கிலாந்தில் ஜனநாயகம் என்ற கருத்தாக்கம் இயல்பாகவே மலர்ந்தது. அங்கேயே அது இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணம்.

நமக்கோ, இங்கே  நிலவுடைமை அமைப்பு வலுவாக இருந்த காலகட்டத்திலேயே, பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியபோது, ‘இந்தா வெச்சுக்கோ’ எனக் கொடுத்து விட்டுப் போன பரிசு நம் தேர்தல் ஜனநாயகம். எப்படி நிலவுடைமைச் சமூகத்திலிருந்த போது நமக்காக முடிவு எடுக்கும் அதிகாரத்தை ஒரு தனி நபரிடம் - தந்தை, வீட்டுக்குப் பெரியவர், கிராமத் தலைவர், ஜாதித் தலைவர், பெருந்தனக்காரர், நாட்டாமை இப்படி- விட்டு விடுவோமோ அதேபோல நா ம் ஜனநாயகத்தைப் பயன்படுத்தி, நம் அதிகாரத்தையும் உரிமைகளையும் ஒரு தனி நபர் வசம் ஒப்படைக்கிறோம். நாம் இன்னும் அந்த நிலவுடைமைச் சமுதாய மனநிலையில் இருந்து விடுபடவில்லை. நகர்மயமாதலையடுத்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் துவங்கியிருக்கிறோம்.

நமது இந்த மனப்பான்மையைப் பயன்படுத்தி, அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை வளர்த்தெடுத்து அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கிறார்கள்.

நாமோ தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகப் போவதில்லை. வாரிசுகள் வருவதால் நமக்கென்ன நஷ்டம், அது குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? இப்படி ஒரு கேள்வி படித்த நடுத்தர மக்களிடமிருக்கிறது.

வாரிசு அரசியல் நாட்டிற்கு இரண்டு தீமைகளைச் செய்யும். ஒன்று, ஆட்சி அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் கையிலேயே நீடித்திருக்கச் செய்யும். இது லஞ்சம் பெறுவதை வலுப்படுத்தும். அதையடுத்து அந்தக் குடும்பத்திடமே செல்வம் குவியும், அதிகாரமும் செல்வமும் ஓர் இடத்திலேயே குவிவது ஆபத்தானது.

இரண்டாவதாக, அந்தக் குடும்பத்தினரை துதி பாடுவதே அரசியல் என்று ஓர் கலாசாரம் தலையெடுக்கும். துதிபாடிகளே ஆட்சியில் முன்னுரிமை பெறுவார்கள். தகுதி, திறமை என்பது புறக்கணிக்கப்படும். அதனால், நிர்வாகம் சீர்கேட்டையும். தனி நபர் புகழ்ச்சி என்பது மாற்றுக் கருத்து என்பதற்கு இடமில்லாமல் செய்து, ஆணவத்தை வளர்க்கும்.

அதன்பின் சர்வாதிகாரம்தான்.

ரிப்போர்ட் கார்டு : ராகுல் காந்தி

பெயர்                    : 
ராகுல் காந்தி
பிறந்த தேதி       : 
19 ஜூன் 1970
வயது    : 
42
கல்வி :     
ஃபுளோரிடாவில் (அமெரிக்கா) உள்ள ரோலின்ஸ் கல்லூரியில் பி.ஏ.     பட்டம். கேம்பிரிட்ஜ்  டிரினிடி கல்லூரியில் எம்.பில்.

சொத்து மதிப்பு :  (31.03.2009 நிலவரம்)

அசையும் சொத்துக்கள்    :  30.71 லட்சம்
அசையா சொத்துக்கள்    :  2 கோடியே 2 லட்சம்

திருமணம் :  
இன்னும் திருமணமாகவில்லை. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, வெனிசுலா  நாட்டில் கட்டிடக் கலைஞராக (ஆர்க்கிடெக்ட்)  பணியாற்றும்  வெரோனிகா  கார்ட்டெல் தனது கேர்ள்பி ஃரண்ட் என்று 2004ம் ஆண்டு ஒரு பேட்டியின்போது தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற  வருகைப் பதிவு :
41 சதவிகிதம் (தேசிய சராசரி 77%). அண்மையில் செயல்பாடு : நடந்துமுடிந்த குளிர்காலக் கூட்டத்தில் வருகை 25%தான்.  விவாதத்தில் பங்கேற்றது : 1

கேள்விகள்: 0  

அரசியலுக்கு  வெளியே அனுபவம்:
மானிட்டர் குரூப் என்ற கன்சல்டிங் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினார். பேக்அப்ஸ் என்ற அவுட்  சோர்சிங் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார்.

அரசியல் அனுபவம்:
2004ல் தந்தையின் அமேதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006ல் காங்.பொதுச் செயலாளர். 2009ல் மீண்டும் எம்.பி. 2013ல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்.

அரசியலில் சாதனைகள்:
2009 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் அவரது யோசனையின்படி தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் அங்குள்ள 80 இடங்களில், 21 இடங்களைக் கைப்பற்றியது (அதற்கு முன் அது அங்கு 9 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது). ஆனால், 2012 சட்டமன்றத் தேர்தலில் அந்த மேஜிக் எடுபடவில்லை. காங்கிரஸ் முன்பிருந்ததைவிட 6 இடங்கள் மட்டுமே கூடுதலாகப் பெற்றது. மொத்தமுள்ள  403 இடங்களில் 28 இடங்களை மட்டுமே பெற்று, 4வது  இடத்திற்கு வந்தது).

குற்ற வழக்குகள்  :  ஏதுமில்லை

சர்ச்சைகள்:
ஊழலை விசாரிக்கும் லோக்பால் நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சொன்னதற்காக அன்னா ஹசாரேவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். லோக்பால் மசோதா சட்டமாவது தாமதமாக ராகுல்காந்திதான் காரணம் என்று அன்னா குற்றம் சாட்டினார்.

‘ எல்லா நேரங்களிலும் தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை’  ('Terrorism is something that it is impossible to stop all the time.') என்று மும்பை குண்டு வெடிப்பின்போது  சொன்னது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கிடு கிடு எதிர்ப்பு

காங்கிரஸ் சிந்தனை அமர்வை தொடங்கிவைத்து சோனியா காந்தி பேசிய சில மணி நேரத்தில் ட்விட்டர் வலைத்தளத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதற்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டு இருந்தனர். கட்சியின் எம்.பி., சாந்தாராம் நாயக் தன்னுடைய கையடக்க கணினியில் (டேப்லெட்), இதைக் காட்டினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் ராகுல்.

அம்மா அழுதார்

நேற்றிரவு நீங்கள் ஒவ்வொருவரும் என்னை வாழ்த்தினீர்கள். என்னுடைய அம்மா, என் அறைக்கு வந்தமர்ந்து அழுதார். ஏனென்றால், அதிகாரம் என்பது விஷம் என்று அவருக்குத் தெரியும்."
- ஜெய்ப்பூர் சிந்தனை அமர்வில் ராகுல்