Powered By Blogger

சனி, 9 மார்ச், 2013

மன்னிப்பா, அப்படீன்னா?


பிரிட்டிஷ்   வரலாற்றிலேயே  நடந்த  மிக  மோசமான சம்பவம் இதுதான். இதைப்பற்றி அப்போதே வின்ஸ்டன் சர்ச்சில் மிகச் சரியாக அசுரத்தனமான செயல் என்று கண்டித்து இருந்தார். இங்கே நடந்ததை நாம் எப்போதும் மறக்கக் கூடாது. அமைதிப் போராட்டங்களுக்கான உரிமையை பிரிட்டன் எப்போதும் காக்கக் கூடிய நிலைக்கு  நாமெல்லாம் உறுதி ஏற்க வேண்டும். ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான், 20 பிப். 2013 அன்று எழுதியது...

அமிர்தசரஸ் நகரம் அன்று இருந்த நிலையை உணர்ந்த பலர், நான் செய்தது சரியென்று சொல்கிறார்கள். நிறையப் பேர் நான் மாபெரும் தவறு இழைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள். நான் இப்போது சாக விரும்புகிறேன். மேலுலகம் சென்று என்னை படைத்தவனிடம் நான் செய்தது சரியா, தவறா என்று கேட்கப்போகிறேன்.’ மரணப்படுக்கையில் ஜெனரல் டயர் சொன்ன வாசகம் இது. பாரிசநோய் தாக்கியிருந்ததால், அப்போது பேசுவதற்கே மிகவும் சிரமப்பட்டார். உயிரைவிடும் கடைசி நொடியிலும் கூட அவருக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை மட்டும் மறக்கவேயில்லை.

டயரால் மட்டுமல்ல, ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. இருந்தும் இன்னும் இந்தியர்களால் மறக்க முடியாத, ஜீரணிக்க முடியாத துயரச் சம்பவம் அது.

முதல் உலகப்போரின்போது, சுமார் பன்னிரெண்டு லட்சம் இந்தியர்களை ராணுவ வீரர்களாகவும், தொழிலாளர்களாகவும் போரில் ஈடுபடுத்தியது பிரிட்டிஷ் அரசு. மனிதவளம் மட்டுமின்றி உணவு, செல்வம் என்று போருக்காக இந்தியாவின் வளங்கள் சுரண்டப்பட்டன. வங்காளத்திலும், பஞ்சாப்பிலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த அநியாய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. போரின் முடிவில் 43,000 இந்தியர்கள் பிரிட்டனுக்காக போர்க்களத்தில் உயிரிழந்தார்கள் என்கிற தகவலை பொதுமக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இப்படிப்பட்ட கொந்தளிப்பான சூழலில் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள் போடவோ, போராட்டங்கள் நடத்தவோ தடை விதித்திருந்தார்.

1919 ஏப்ரல் 13. பாரம்பரியமாக கொண்டாடப்பட்டுவரும் பைசாகி பண்டிகைக்காக அமிர்தசரஸ் நகரின் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என்று மும்மதத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சுமார் இருபதாயிரம் பேர் கூடியிருந்தார்கள்.  மாலை 4.30 மணிக்கு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெனரல் டயர், சுமார் 100 வீரர்களோடு மைதானத்துக்கு வந்தார். அவர்களில் 50 பேர் ஆயுதம் தரித்திருந்தார்கள். மெஷின்கன் ஏந்திய இரண்டு வாகனங்களும் வந்தன. ஆனால், மைதானத்துக்குள் நுழையும் பாதை குறுகியதாக இருந்ததால், அவ்வாகனங்கள் உள்ளே நுழைய முடியவில்லை.

மக்களை கலைந்து போகச் சொல்லி அவர் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. பிற்பாடு விசாரணையின்போது, இதற்கு அவர் சொன்ன விளக்கம் வேடிக்கையானது. ‘கூட்டத்தைக் கலைக்க நான் அங்கே செல்லவில்லை. அவர்களது ஒழுங்கீனத்துக்காக தண்டிக்க மட்டுமே விரும்பினேன்.’

சுடுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டார். துப்பாக்கிகள் வெறித்தனமாக 10 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக முழங்கிக்கொண்டே இருந்தன, தோட்டாக்கள் தீரும் வரை. மொத்தமாக 1,650 ரவுண்டுகள். முதற்கட்டமாக பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் உயிரிழந்தனர். எங்கும் மரண ஓலம். சுற்றி வளைக்கப்பட்டு விட்டதால், தப்பிக்க வழியே இல்லை. உயிர் பிழைக்க வழி தெரியாமல் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த கிணற்றுக்குள் நிறையப் பேர் குதித்தார்கள். துப்பாக்கிக் குண்டுக்கு தப்பி, நெரிசலில் இறந்தவர்களும் கணிசமானவர்கள்.

‘துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்துவிட்டதால் மட்டுமே என்னால் நடவடிக்கையை தொடரமுடியவில்லை. அவை இன்னும் கூடுதலாக இருந்திருந்தால், தீரும் வரை சுட்டுக்கொண்டே இருந்திருப்பேன்’. லண்டனில் நடந்த கமிஷன் விசாரணையில், ஜெனரல் டயர் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இச்சம்பவத்தை விவரிக்கும்போது, சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல மாதங்களுக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அந்த மரணக் கிணற்றில் இருந்து மட்டுமே 120 உடல்கள் எடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்திருந்த கண்துடைப்பு விசாரணைக்குழு, மொத்தமாக 379 பேர் மட்டுமே மரணித்தார்கள் என்று அநியாயமாகப் புளுகியது. பிற்பாடு அக்குழுவில் இருந்த ஒருவரே, உண்மை எண்ணிக்கை பலமடங்கு அதிகம் என்று ஒப்புக்கொண்டார்.

கூடியிருந்த மக்களின் எண்ணிக்கையையும்  சுடப்பட்ட ரவுண்டுகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால், அரசு சொல்லும் எண்ணிக்கை நம்பவே முடியாதது. எனவே, இந்திய தேசிய காங்கிரஸ் இப்படுகொலைகளை விசாரிக்க, தனியாக ஒரு குழுவை நியமித்தது. 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், தோராயமாக 1,000 பேர் உயிரிழந்ததாகவும் அக்குழு சொன்னது.

இந்திய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரியளவிலான இந்தப் படுகொலைகளை மூடிமறைக்க இங்கிருந்த ராணுவ அதிகாரிகள் எவ்வளவோ முயன்றனர். பிரிட்டனுக்கே கூட 6 மாதங்கள் கழித்து, டிசம்பரில்தான் விஷயம் தெரிந்தது. நம்மூர் தலைவர்களுக்கே கூட உடனடியாக தெரியவில்லை. கல்கத்தாவில் இருந்த தேசியக்கவி தாகூருக்கு, சம்பவம் நடந்து 40 நாட்கள் கழித்து 22 மே 1913 அன்றுதான் தெரிந்ததாம்.

தனது மேலதிகாரியாக பஞ்சாப்பை ஆண்டுகொண்டிருந்த கவர்னர் மைக்கேல் ஓட்வையருக்கு, ஜெனரல் டயர் இச்சம்பவம் குறித்த ஓர் அறிக்கையை அளித்திருக்கிறார். அதில், இந்தியர்கள் புரட்சிகர ராணுவத்தைக் கட்டமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினேன் என்று தன் வீரபிரதாபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இவ்விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், நீங்கள் செய்ததுதான் சரி என்று ஒப்புக்கொண்டு டயரைப் பாராட்டியும் இருக்கிறார். பிற்பாடு 21 ஆண்டுகள் கழித்து இச்செயலுக்காக லண்டனில், பஞ்சாப்பைச் சேர்ந்த உத்தம்சிங் எனும் வீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார் ஓட்வையர்.

வின்ஸ்டன் சர்ச்சில்,ஹென்றி அஸ்க்வித் போன்ற பிரிட்டன் தலைவர்கள் அப்போதே இப்படுகொலைகளை கடுமையாகக் கண்டித்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. படுகொலைகளை விசாரிக்க, பிரிட்டிஷ் அரசு நியமித்த ஹண்டர் கமிஷனால் உருப்படியான நியாயம் இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை. ஜெனரல் டயர் மட்டும் பணியிலிருந்து ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டார். படுகொலைகளுக்குக் காரணமானவர்களுக்கு அரசியல் அழுத்தம் காரணமாக எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை.

ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்தே 66 ஆண்டுகளும் ஆகி விட்டன. ஆனால், அதற்காக இங்கிலாந்து மன்னிப்புக் கேட்குமென்று இந்தியர்கள் இன்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இங்கிலாந்து ராணி எலிசபெத், சுதந்திரத்துக்குப் பிறகு 1961லும், 1983லும் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அப்போது ஜாலியன் வாலாபாக் குறித்து எதுவுமே பேசவில்லை. பிறகு 1997ல் வந்தபோது, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மவுன அஞ்சலி செலுத்தினார். நம் கடந்தகாலத்தில் எவ்வளவோ கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம், ஜாலியன் வாலாபாக் மாதிரி. வரலாற்றைத் திரும்பவும் மாற்றி எழுத முடியாது. வரலாறு ஏராளமான வருத்தங்களும், ஏராளமான மகிழ்ச்சிகளும் நிறைந்தது. வருத்தங்களைப் பாடமாகப் படித்து, எதிர்காலத்தில் மகிழ்ச்சியைக் கட்டமைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னதாக இதைப் பற்றிப் பேசினார். இது நேரடி மன்னிப்பு இல்லையே என்று அப்போதே  இந்தியர்கள் அங்கலாய்த்தார்கள்.

இப்போதும்  அதேமாதிரிதான். பிரிட்டனின் பிரதமர் ஒருவர், ஜாலியன் வாலாபாக்குக்கு வருகை புரிந்தது இதுதான் முதல்முறை. வருகைப் பதிவேட்டில் வருத்தம் தெரிவித்திருக்கிறாரே தவிர, மன்னிப்புக் கேட்கவில்லை என்று மீண்டும் குரல்கள் உயரத் தொடங்கியிருக்கின்றன.

எலிசபெத் ராணி மன்னிப்புக் கேட்கவில்லை என்று வருத்தம் பரவியபோது, இந்தியப் பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் சொன்னதை நாம் நினைவுறுத்திப் பார்ப்போம். தாம் பிறப்பதற்கு முன்பாகவே நடந்த சம்பவங்களுக்கு, இப்போது இருப்பவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டுமா என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக