Powered By Blogger

வெள்ளி, 30 நவம்பர், 2012


அண்மைக் காலமாகச் செய்திகளில் அடிபடும் கறுப்புப் பணம் என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது? எங்கு சேமிக்கப்படுகிறது?

வெளிநாட்டு வங்கிகளில் ரூ.6,000 கோடி கறுப்புப் பணத்தை 700 இந்தியர்கள் போட்டு வைத்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாயின.இதற்கும் முன்னதாக, 2010-ஆம் ஆண்டிலேயே வாஷிங்டனில் உள்ள பன்னாட்டுக் கொள்கை மையத்தின் நிதி ஆராய்ச்சிப் பிரிவான ஜி.எஃப்.ஐ. (Global Financial Integrity) என்ற அமைப்பு இந்தியாவில் இருந்து ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 240 கோடி ரூபாய் சட்ட விரோதமாக வெளியேறுவதாக தகவல் வெளியிட்டது.

இந்திய அரசியலை, மக்களை ஆட்டிப்பார்க்கும் இந்தக் கறுப்புப் பணம் என்றால் என்ன?
வரி கட்டாமல் மறைக்கப்படும் பணமே, கறுப்புப் பணம் அதாவது கணக்கில் காட்டப்படாத பணம். (கணக்கில் காட்டினால்தான் வரி கட்ட வேண்டுமே).

இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? இதன் ஊற்றுக் கண் என்ன?
லஞ்சம், வெளியில் தெரியாத கமிஷன், அரசாங்கத்திற்கு அல்லது ஒரு நிறுவனத்திற்குப் பொருட்கள் வாங்கும்போது நடக்கும் பேரம், அந்தப் பொருட்களின் விலையை இன்வாய்சில் கூடுதலாகக் காண்பித்து பெறும் உபரியான லாபம், ஹவாலா பணப் பரிமாற்றங்கள், வரி ஏய்ப்பு போன்ற குற்ற நடவடிக்கைகள் மூலம் சம்பாதித்து பதுக்கி வைக்கப்படும் பணமே கறுப்புப் பணம்.

இந்தக் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு வெளியே சில வங்கிக் கணக்குகளில் போட்டு வைக்கிறார்கள். அந்த வங்கிக் கணக்குகள் பல நேரம் நேரிடையாக பணத்திற்கு உரிமை கொண்டாடுபவர்களின் பெயரில் இராது. புனைப் பெயர்கள், குறியீட்டுப் பெயர்கள், பெயர்களின் முதலெழுத்து இவற்றின் அடிப்படையில் அமைவது வழக்கம்.

இப்படிக் கணக்குகள் துவக்கிக்கொள்ள சில நாட்டு அரசுகள் வங்கிகளை அனுமதிக்கின்றன. கணக்கு துவக்கியுள்ளவர்களின் பெயர்களை ரகசியமாகக் காக்கின்றன. சுவிட்சர்லாந்து, மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மனி அருகேஉள்ள லீக்டான்ஸ்டைன் போன்ற நாடுகள் இதற்கு ஓர் உதாரணம். மொரிஷியஸ், ஐல் ஆஃப் மான், செயிண்ட்கிட்ஸ் போன்ற அரசுகள் போலி நிறுவனங்களைத் துவக்கி நடத்தவும் அனுமதிக்கின்றன. இவற்றை வரிப் (ஏய்ப்புக்கான) புகலிடங்கள் (Tax Havens) என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த அரசுகள் இதை ஏன் அனுமதிக்கின்றன?
இந்த நாடுகள் சிறிய நாடுகள்.இவற்றில் பல தீவுகள் அல்லது பனிபடர்ந்த மலைப் பிரதேச நாடுகள்.தொழில் துவக்கி நடத்துவதற்குரிய இயற்கை வளங்களோ, வேளாண்மையில் ஈடுபடுவதற்குரிய நிலப்பரப்போ, பருவ நிலையோ கொண்டிராதவை. இந்த நாடுகளின் பொருளாதாரம், வங்கி, சுற்றுலா, ரியல் எஸ்டேட் தொழிலைச் சார்ந்து உள்ளன. பணக்கார நாடுகளான பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, போன்ற பணக்கார நாடுகளுக்கு அருகில் இவை அமைந்திருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து முதலீட்டை ஈர்க்க இந்த நாடுகள் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. விளம்பரங்கள் மூலம் மற்ற நாடுகளின் கறுப்புப் பணத்தை தங்கள் வங்கிகளில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்களைத் தேடுகின்றன. தேவையானால் நேரடியாகவே தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி, முதலீட்டை பெற்றுக்கொள்கின்றன. முதலீடு செய்தவர்களுக்குப் பணம் தேவைப்படும்போது, இந்த வங்கிகளின் பிரதிநிதிகள் நேரடியாகவே அவர்களைச் சந்தித்து பணத்தை அளிக்கின்றன.

இப்போது உலகமெங்கும் இது போன்ற நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கணக்கு வைத்திருப்போரின் பெயரை வெளியிட வேண்டும் என வற்புறுத்துகின்றன. ஜி.20 நாடுகள் வரி ஏய்ப்புப் புகலிட நாடுகளின் கறுப்புப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்கா இந்தப் பரிவர்த்தனைகளுக்கு எதிராக சட்டம் இயற்றியிருக்கிறது. ஜெர்மனி, சட்டம் இயற்ற உத்தேசித்திருக்கிறது. இதுகுறித்து பல நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக இந்திய அரசு சொல்கிறது.

ஆனால் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, மேற்கு ஐரோப்பாவில் உள்ள லீக்டான்ஸ்டைன் போன்ற நாடுகளில் கறுப்புப் பணத்தை சேமித்து வைத்திருக்கும் இந்தியர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட மத்திய அரசு மறுத்துவருகிறது. 2008-ஆம் ஆண்டில் இதுபற்றிய விவரங்கள் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை அறிவிக்கப்பட்டபிறகு, வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கி திரும்பவும் இந்தியாவுக்கே கொண்டு வருவதும் சாத்தியமாகியிருக்கிறது.

 2009-ல் மத்திய அரசு, பங்குச் சந்தைகளில் பங்கேற்புப் பத்திரங்கள் மூலம் (Participatory notes) முதலீடு செய்யும் முறையை அனுமதித்தது. வெளிநாட்டிலிருந்து நிதி நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும். முதலீடு செய்பவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாது. இந்த வகையான பத்திரங்களில் முதலீடு செய்து வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற கறுப்புப் பணத்துக்கு கடிவாளம் இடும் அமைப்புகள் இல்லையா? சில வகைகளில் இதைக் கட்டுக்குள் கொண்டு வர கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் சில உதவும்.

கறுப்புப் பணத்துக்கு எதிரான ஒப்பந்தம்:
2003-ல் கறுப்புப் பணத்துக்கு எதிரான ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டது. அதில் இந்தியா உள்பட 140 நாடுகள் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை இந்திய அரசு கேட்டால், சம்பந்தப்பட்ட நாடு அதை இந்தியாவிடம் அளிக்கவேண்டும். இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கவேண்டும். 2004வரை ஆட்சியில் இருந்த பாஜக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. 2004-ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி இதுவரையிலும் ஒப்புதல் அளிக்கவில்லை.

மத்திய புலனாவுக் கழகம் (CBI)
தில்லி ஸ்பெஷல் போலீஸ் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. சமூகக் குற்றங்கள், பெரும் மோசடிகள், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குற்றங்கள், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல், கள்ளச்சந்தை போன்றவற்றை சி.பி.ஐ. புலனாய்வு செய்யும். மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC)
அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழல் போன்ற குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிப்பதற்காக 1964-ல் உருவாக்கப்பட்ட அமைப்புதான் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம். அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இல்லாமல் சுயேச்சையாகச் செயல்படக்கூடிய இந்த அமைப்பில், லஞ்சம் குறித்து பொதுமக்கள் புகார் தரலாம். இந்த அமைப்பின் தலைவராக ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமிக்கிறது. ஆனால், இது ஒரு புலன் விசாரணை அமைப்பல்ல. தன்னிடம் வரும் புகார்களை விசாரிக்கும்படி சிபிஐயிடம் கூறலாம் அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுத்துறைக்குப் பரிந்துரைக்கலாம்.

மத்திய தணிக்கை அமைப்பு (CAG)
 மத்திய, மாநில அரசுகள், அரசு நிதி உதவி பெறும் அமைப்புகளின் வரவு-செலவுகளைத் தணிக்கை செய்வதற்காக அரசமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. இதன் தலைவரை இந்திய குடியரசுத் தலைவரே நேரடியாக நியமிக்கிறார். ஊழல் நடந்திருப்பது தெரிந்தாலும், இந்த அமைப்பால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. இதன் அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். நாடாளுமன்றக் குழு (பொதுக் கணக்குக் குழு) இந்த அறிக்கையைப் பரிசீலிக்கும். மாநில அரசுகள் சம்பந்தப்பட்டதாக இருந்தால் மாநிலச் சட்டமன்றங்களில் இதன் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.

ஊழல் தடுப்புச் சட்டம்
பொதுத்துறை ஊழியர்கள் (Public Servant) ஊழல் செய்தால், அவர்களைத் தண்டிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது ஊழல் தடுப்புச் சட்டம். அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதமர் போன்றவர்கள் பொதுத்துறை ஊழியர்கள் என்று உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. ஆனால், இச்சட்டத்தின் 19-வது பிரிவு, பொதுத்துறை பணியாளர்கள் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் அவரை நீக்கும் அதிகாரம் கொண்டவர்களிடமிருந்து முன் அனுமதி பெறவேண்டும் என்று பொடிவைத்துள்ளது.

லோக்பால், லோக் அயுக்த்
 1966-ல் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission) ஊழலைத் தடுக்க மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் அயுக்த் மசோதா கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரைத்தது. 1969-ல் லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேறியது. அது சட்டமாக வரவேண்டுமானால், மாநிலங்கள் அவையிலும் ஒப்புதல் பெறவேண்டும். 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2011 எனப் பலமுறை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

லோக்அயுக்தா மசோதா இதுவரை 19 மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC)
குறிப்பிட்ட ஒரு விவகாரத்தை விசாரிப்பதற்காக நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்படுகிறது. இதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருப்பார். குறிப்பிட்ட விவகாரம் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பார்வையிடவும், தேவையானால் வழக்குப் பதிவு செய்யவும் இந்தக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)
 அரசுத் துறைகள் மற்றும் அரசு அமைப்புகளிடம் உள்ள ஆவணங்களையும், தகவல்களையும் சாமானிய மக்களும் பெறும் வகையில் 2006-ல் கொண்டு வரப்பட்டதுதான், தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றுகிறது. நாட்டின் பாதுகாப்பு போன்ற காரணங்களைக்காட்டி சில அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த அமைப்புகளைப் பற்றிய தகவல்களை பொதுமக்கள் பெற முடியாது.

வரித் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் (Tax Information Exchange Agreement)
கறுப்புப்பணத்தை அடியோடு வேரறுக்க இந்தியா, பஹாமா, பர்முடா, மோனாக்கோ, அர்ஜென்டினா, மார்ஷல் தீவுகள் உள்ளிட்ட 10 நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் வரி தகவல் பரிமாற்ற ஒப்பந்தம். இந்த ஒப்பந்தப்படி, 2011, ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து தன்னிடம் கணக்கு வைத்துள்ள இந்திய முதலீட்டாளர்களைப் பற்றிய தகவல்களை தவறாமல் வழங்க சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டது.

ஊழலை ஒழிக்க, கறுப்புப் பணத்தை தடுக்க நாட்டில் எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவற்றிலுள்ள ஓட்டைகளைப் பெரிதாக்கி, குற்றவாளிகள் எப்படியோ தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

உலக அளவில் நடவடிக்கைகள்
அமெரிக்காவின் உலக நிதி ஒழுங்குநிலை (ஜி.எஃப்.ஐ.) அறிக்கைப்படி, 1948 முதல் 2008 வரையிலான 60 ஆண்டு காலத்தில் சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சட்டத்துக்குப் புறம்பான வழியில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாகக் கடத்தப்படும் அந்தப் பணம், லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, கமிஷன், குற்ற நடவடிக்கைகள் போன்ற முறைகேடுகள் மூலம் சம்பாதித்த பணம் என்கிறது அந்த அறிக்கை.

 2001-ல் நியூயார்க்கில் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டபிறகு, பயங்கரவாதச் செயல்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று அமெரிக்கா சந்தேகப்பட்டது. கறுப்புப் பணத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் நாடுகள் எந்தெந்த நாடுகளிலிருந்து இந்தப் பணம் வருகிறது போன்ற தகவல்களைத் தன்னிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்கா சட்டமியற்றியது. 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுவிஸ் வங்கியான UBS AG மீது அதனிடம் உள்ள 52 ஆயிரம் அமெரிக்கர்களின் கணக்கு பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும்படி கேட்டு வழக்குப் போட்டது. 2009-ஆம் ஆண்டு ஏப்ரலில் லண்டனில் கூடிய ஜி20 நாடுகள் கறுப்புப்பணத்தை வரவேற்கும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிப்பது உள்ளிட்ட ஏழு அம்சத் திட்டங்களைத் தயாரித்தன. அதற்கு நல்ல பலன் கிடைத்தது.  அதற்குப் பிறகு, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் வரி ஏய்ப்பாளர்களிடமிருந்து பல கோடி டாலர்களை மீட்டன.

இந்தியா ஜி20 நாடுகளில் ஒன்றாக இருந்தபோதும், எந்த நாட்டோடும் வரித் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் எதையும் இதுவரை செய்துகொள்ளவில்லை. 2009-க்குப் பிறகு மற்ற நாடுகள் துரிதமாகச் செயல்பட்டு தமக்குரிய பணத்தை மீட்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இந்தியா மட்டும் செயலில் இறங்காமல் சாக்குப்போக்குச் சொல்லி வருகிறது.

இந்தக் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கே திரும்பக் கொண்டுவந்தால், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக